Wednesday, March 6, 2024

திருவண்ணாமலை மாவட்ட புத்தக கண்காட்சி 2024

 


திருவண்ணாமலை மாவட்ட புத்தக கண்காட்சி காந்தி நகர் மைதானத்தில் 07.03.24 முதல் 16.03.24 வரை நடைபெறுகிறது. 


இதில் அறம் பதிப்பகத்தின் அரங்க எண் 75 ல் சமூக நீதி சார்ந்த அனைத்து புத்தகங்களும் கிடைக்கும். நண்பர்களுக்கு பகிருங்கள் நன்றி 


தோழர்கள் திரளாக வருகை தந்து ஏராளமான நூல்களை வாங்கி செல்லுங்கள். தள்ளுபடி உண்டு.

Thursday, September 21, 2023

சாமானனியனின் சந்தேகங்கள்


 அறம் பதிப்பகம்

முற்போக்கு நூல்களின் களஞ்சியம்


"சாமானியனின் சந்தேகங்கள்" ( Doubts of Common Man) 


ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த கேள்வி பதில்களின் தொகுப்பு. தேனி மு. சுப்ரமணியன் எழுதியது. விலை ரூ 370/ கொரியர் செலவுடன் ரூ. 420/ரூபாய் தொகையை ஜி பேயில் எண்: 9150724997

Monday, August 14, 2023

ரோகிணி நதிக்கரையில்

நதியின் நடுவில்

குளம் போல 

தேங்கியிருந்த நீரில்

சித்தார்த்தர் கைகளால் 

மீன் பிடித்து மீண்டும் 

ஆற்றில் விட்டு 

விளையாடிக் கொண்டிருந்தார்


ஆற்றின் இரு கரையிலும்

சாக்கியர்களும் கோலியர்களும்

தமது படைகளுடன்

தாக்குதலுக்கு அணியமாக 

இருந்தனர். 


இளவரசரை தங்கள் 

பக்கம் அழைக்க

இரு படைகளும் 

கத்தி கத்தி

களைத்து போயின

கலைந்தும் போயின


கரையோரப் போன கௌதமரின்

கையிலிந்த மீன் கேட்டது 

ஏன் இந்த மீன் விளையாட்டு என்று

போரில் விருப்பம் இல்லை

பதில் வந்தது கௌதமரிடமிருந்து


இளவரசரின் பதிலைக் கேட்டதும்

கையில் இருந்து 

துள்ளி தாவியது மீன்

விடியலில் கட்டிலில் இருந்து 

கீழே விழுந்தேன் நான். 

Sunday, August 13, 2023

பல்கு நதிக்கரையில்

பல்கு நதிக்கரையில்

அரச மரத்தின் கீழ் இருந்த

மரங்களின் தேவனுக்கு

பால் சோறு படைக்கிறாள் 

பழங்குடி இளவரசி சுஜாதா


துறவி சாப்பிடும் போது

சிந்திய சோற்றுப் பருக்களை

எங்கிருந்தோ வந்த 

காகம் ஒன்று தன்

அலகால் கொத்தி தின்றது


சுஜாதா கையை தூக்கி

காகத்தை விரட்ட எத்தனிக்க

பார்வையால் தடுக்கிறார் சித்தார்த்தர்


கௌதமர் அமர்ந்திருந்த இடத்தை

சுத்தம் செய்த மகிழ்ச்சியை 

கா கா என கத்தி சொன்னது காகம் 

தூக்கம் கலைந்து நானும்

காகா என கத்திக் கொண்டிருந்தேன்

Friday, August 11, 2023

சரயு நதிக்கரையில்


வைகாசி மாதத்தின்

முழு நிலா இரவில்

சரயு நதிக்கரையில்

நானும் ராமனும்

அருகருகே நின்றிருந்தோம்... 


பெண்கள் வரிசையாக வந்து 

நதியில் மூழ்கி மூழ்கி நீராடினர்

நான் பெண்கள் கூட்டத்தில்

சீதையைத் தேடினேன்

ராமனின் கண்களோ 

சூர்ப்பனகையைத் தேடின


சீதையின் பாதம் பணிய

குனிந்த என்னை தடுத்த சீதை

கை குலுக்கி நலம் விசாரித்தார்


ராமனோ சூர்பனகையை 

வானரக் கூட்டத்தோடு

வன்புணர்ந்து கொண்டிருந்தார்


தொலைக்காட்சியில்

செய்தி சேனல்கள்

அலறலில் திடுக்கிட்டு எழுந்தேன்


மணிப்பூர் பற்றி எரிகிறது 

Saturday, July 29, 2023

கோவை புத்தக கண்காட்சி 1






நேற்று கோவை புத்தக கண்காட்சிக்கு எழுத்தாளர் ஜராதுஷ்ட்ரா வந்திருந்தார். அவர் மொழி பெயர்த்த புத்தகத்தை சென்ற ஆண்டு பதிப்பிக்க அறம் பதிப்பகத்திடம் தந்திருந்தார். 

இந்த ஆண்டு அவரது கையில் புத்தகத்தை தந்தேன். மகிழ்ச்சிச்சியை பிரதிபலித்த தருணங்கள் அவை. அவருக்கு நன்றி. 

 

Sunday, April 9, 2023

சுற்றுச்சூழல் பொருளாதாரம் நூல் திறனாய்வு


 வரும் செவ்வாய் கிழமை 11.04.2023 அன்று மாலை 6:00 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்வில் நான் எழுதிய சுற்றுச்சூழல் பொருளாதாரம் என்னும் நூல் திறனாய்வு செய்யப்படுகிறது. நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பிக்க கோருகிறேன் நன்றி


மா. அமரேசன்

எழுத்தாளர், பதிப்பாளர், பௌத்த அறிஞர்

Sunday, August 14, 2022

தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி

 

தமிழக முதல்வருக்கு அறம் பதிப்பகத்தின் நன்றி

26.05.2002 அன்று நான் எழுதிய கடிதத்தை கருத்தில் கொண்டு அதன் கருத்தை ஆய்வு செய்து அவற்றின் நன்மை கருதி உடனே செயல்படுத்திய மாண்புமிகு தமிழக முதல்வர் திருமிகு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அறம் பதிப்பகம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. 

https://tamil.samayam.com/business/business-news/tn-chief-minister-mk-stalin-launched-neithal-uppu-brand-under-tamilnadu-salt-corporation/articleshow/93517297.cms








Thursday, October 14, 2021

அறம் பதிப்பகம் - புத்தகங்களின் தொகுப்பு விவரம்

 புரட்சிப்பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே – லெனின்.










Friday, March 12, 2021

புத்தநெறி மந்திரங்கள் - 4

புத்தநெறி மந்திரங்கள் 4


ஓம் மணி பத்மே ஹூம்

தியான மந்திரங்கள் - 1 

இந்த மந்திரத்தை ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், என எவர் வேண்டுமானாலும், காலை, மாலை, இரவு, நள்ளிரவு, பகல், நண்பகல், என எப்பொழுது வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும், எந்த இடத்திலும் மனதுக்குள்ளும், வாய்விட்டும், உச்சரிக்கவும், ஜெபிக்கவும் தியானிக்கவும் ஏற்ற மந்திரம். 

புத்தநெறி மந்திரங்களுக்குள் மிக சக்தி வாய்ந்த மந்திரம் இது.  இதை மணி மந்திரம் என்றும் அழைப்பர். பண்டையத் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மணி என்கின்ற பெயர் இருக்கும். அதே போல பலரும் தங்கள் வீட்டு நாய்க்கு முன்பெல்லாம் மணி என்றே பெயரிட்டு அழைப்பர்கள். ஏனென்றால் தங்களை காப்பது மணி மந்திரம் என்பதால் தங்களையும் தங்களின் குடும்பத்தையும் காப்பாற்றும் நாய்க்கும் அதே பெயரிட்டு அழைப்பது தமிழரின் மரபாக இருந்தது முன்பெல்லாம். 

அவலோகிதேஷ்வரரின் அவதாரமாக கருதப்படும் தலாய் லாமாவின் பக்தர்களால் இந்த மந்திரம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. மேலும் இந்த மந்திரத்தின் ஆற்றலை அதிகப்படுத்துவதற்காக இந்த மந்திரத்தை திபெத்தியர்கள் பாறைகளில் செதுக்கியும், பிரார்த்தனை சக்கரங்களில் எழுதியும் வைக்கின்றனர். ஒவ்வொரு முறை இந்த சக்கரத்தை சுழற்றும் போது, அது மந்திரத்தின் உச்சரித்ததின் பலனை தருகின்றதென நம்பப்படுகிறது.


இந்த மந்திரம் முதன் முதலின் காரண்டவியூக சூத்திரத்தில் காணப்படுகிறது. இந்த சூத்திரம் திபெத்திய பௌத்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரம் ஆகும். இந்த சூத்திரத்தில் கௌதம புத்தர் இவ்வாறு கூறுகிறார், "இது தான் மிகவும் பயனுள்ள மந்திரம். நான் கூட இதைப் பெற வேண்டி பல புத்தர்களிடம் வேண்டினேன், இறுதியில் இந்த மந்திரத்தை அமிதாப புத்தரிடமிருந்து பெற்றேன் என்கிறார் பகவான் புத்தர். 

இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் பயன்கள். 

1. நமது கர்ம வினைகள் மாறுகின்றன
2. நமது ஆரா சுத்தமாகின்றது. 
4. நமது வாழ்விலும் தொழிலிலும் உள்ள தடைகள் விலகுகின்றது. 
5. மன அமைதி கிடைக்கின்றது
6. உச்சரிப்பவருக்கு என்ன தேவையோ அது நிச்சயம்  நிறைவேறுகின்றது. 
    பணம், பதவி, புகழ், பட்டம், வேலை ஆகிய தேவைகள் நிறைவேறும். 



Monday, February 15, 2021

புத்தநெறி மந்திரங்கள் - 3

பஞ்ச சீலங்கள் - பாளி

ஐந்தொழுக்கங்கள்  

பானாதி பாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

அதின்னதானா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

காமேசு மிச்சா சாரா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

மூசாவாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

சுரா மேரய மஜ்ஜ பமாதட்டான வேரமணி சிக்காபதங் சமாதியாமி

                                                       சாது   சாது   சாது 



பஞ்ச சீலம் - தமிழ்  பொருள்

வழிபாட்டின் போது சொல்லவேண்டியது

  1. நான் உயிர்வதை செய்வதிலிருந்து விலகியிருப்பேன்  என்ற போதனையை ஏற்றுக்கொள்கின்றேன். 
  2. நான் எனக்கு கொடுக்கப்படாததை எடுப்பதிலிருந்து விலகியிருப்பேன் என்ற போதனையை ஏற்றுக் கொள்கிறேன்.
  3. நான் பிழையுறு காமத்தினை பின்பற்றுவதிலிருந்து விலகியிருப்பேன் என்ற போதனையை ஏற்றுக் கொள்கிறேன். 
  4. நான் பொய் பேசுவதிலிருந்து விலகியிருப்பேன் என்ற போதனையை ஏற்றுக் கொள்கிறேன்.
  5. நான் போதையை உண்டாக்ககூடிய பொருளை எடுத்துக் கொள்வதிலிருந்து விலகியிருப்பேன் என்ற போதனையை ஏற்றுக் கொள்கிறேன்.

நேர்மறை சீலம் - தியானத்திற்கு முன் சொல்ல வேண்டியது

  1.  எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி என் உடலைத் துாய்மை படுத்துகிறேன்.
  2. மனமுவந்து தானம் செய்வதன் மூலம் என் உடலைத் துாய்மை படுத்துகிறேன்.
  3. சாந்தம்,எளிமை மற்றும் மனநிறைவுடன் வாழ்ந்து என் உடலை துாய்மை படுத்துகிறேன். 
  4. உண்மை நிறைந்த உரையாடல் மூலம் என் நாவினை துாய்மை படுத்துகிறேன்.
  5. தெளிவு, தீர்க்கம் மற்றும் பிரகாசமான மத்துடன் இருந்து என் மனதை துாய்மை படுத்துகிறேன். 
சிறப்புகள் 

  • புத்தநெறியைப் பின்பற்றும் குடும்பத்தினர்கள் மன அமைதியோடும் மகிழ்வோழும் வாழ்வதற்கு பின்பற்ற வேண்டிய ஒழுக்க கோட்பாடுகள்
  • தனிநபர் ஒருவர் மன அமைதியோடு வாழ்வாரெனில் இந்த உலகம் அமைதியோடு வாழும் என்ற நெறிமுறையின் படி பகவான் புத்தரால் போதிக்கப்பட்ட ஒழுக்க நெறியாகும்.
  • இந்த 5 ஒழுக்க கோட்பாட்டின் படி வாழும் ஒருவர் உயர் ஞானம் பெற்றவராக கருதப்படுவார்.
பயன்கள்

  • மன அமைதியோடு வாழ வழி வகுக்கும்
  • எல்லா உயிர்களையும் நேசிக்கும் எண்ணம் மேலோங்கும்
  • இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து வாழும் எண்ணம் பெருகும்
  • உலகம் அமைதிக்கான அருமருந்து 5 ஒழுக்க கோட்பாடு

இதன் லிங்க் : https://www.youtube.com/watch?v=LMIQVuVf8LU
 

புத்தநெறி மந்திரங்கள் - 2




திரிசரணங்கள் (பாளி மொழி)


புத்தங் சரணங் கச்சாமி

தம்மங் சரணங் கச்சாமி

சங்கங் சரணங் கச்சாமி

 

துதியம்பி புத்தங் சரணங் கச்சாமி

துதியம்பி தம்மங் சரணங் கச்சாமி

துதியம்பி சங்கங் சரணங் கச்சாமி

 

ததியம்பி புத்தங் சரணங் கச்சாமி

ததியம்பி தம்மங் சரணங் கச்சாமி

ததியம்பி சங்கங் சரணங் கச்சாமி

 

இந்த மந்திரம் பொதுவாக புத்த வந்தனத்திற்க்கு (வழிபடுவதற்கு) முன்பாகவும், தியானத்திற்க்கு முன்பும், ஓதப்படுகின்றது. 

 

இதன் பொருள் - தமிழில்

 

நான் புத்தத்தில் சரணடைகிறேன்

நான் தம்மத்தில் சரணடைகிறேன்

நான் சங்கத்தில் சரணடைகிறேன்

 

இரண்டாம்முறை நான் புத்தத்தில் சரணடைகிறேன்

இரண்டாம்முறை நான் தம்மத்தில் சரணடைகிறேன்

இரண்டாம்முறை நான் சங்கத்தில் சரணடைகிறேன்.

 

மூன்றாம்முறை நான் புத்தத்தில் சரணடைகிறேன்

மூன்றாம்முறை நான் தம்மத்தில் சரணடைகிறேன்

மூன்றாம்முறை நான் சங்கத்தில் சரணடைகிறேன்.

பயன்கள்

 

·         வழிபடும் போது மனச்சுத்தி மற்றும் இடச்சுத்திக்காக ஓதப்படும் மந்திரம்

·         தியானம் செய்யும் போது முழுச் சரணடைதலுக்காக ஓதப்படும் மந்திரம்

·         இதை உச்சரிக்கும் ஒருவரின் மனம் புத்தரைச் சரணடையும்

சிறப்புகள்

·         இந்த மந்திரம் திரி சரணங்கள் என தமிழில் அழைக்கப்படுகின்றது

·         இந்த மந்திரம் ஆங்கிலத்தில் Triple Jem என்றும் அழைக்கப்படுகின்றது

·         இந்த மந்திரம் பாளி மொழியில் திரிரத்னா என்றும் அழைக்கப்படுகின்றது.

 

இதன் யூ டியூப் லிங்க் - https://www.youtube.com/watch?v=EOAd-hjzPn0




Friday, February 12, 2021

புத்த பிக்கு முத்துராமலிங்கம் அய்யா

 




சில ஆண்டுகளுக்கு முன்பு

பர்மாவில் இந்தியத் தலைவர்கள் என்னும் பெயருள்ள ஆங்கிலப் புத்தகம் ஒன்றை கணிணி வழியாக வாசித்தேன். அந்த புத்தகத்தின் பெயர் இந்த பொருளிலே இருந்தது. அதில் , தென் தமிழகத்தில் இருந்த சாதியத் தலைவர் ஒருவர், பர்மாவில் வாழ்க்கை மேற்கொண்டபோது, அவருடன் 7 நபர்கள் சேர்ந்து, புத்தச் சமயத் தீட்சை எடுத்துக்கொண்டனர் என்ற குறிப்பையும் படித்து, அவர் யார் என கண்டறிய முயன்று தோற்றுப்போனேன்

சிலநாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர். முத்துராமலிங்கம் அய்யா அவர்களைப் பற்றி பேசும் போது அவர் மியாண்மரில் சிலகாலம் தங்கியிருந்தார் என்ற தகவலைக் கூறினார்

பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் அய்யா அவர்கள், 2 முறை மியாண்மருக்கு சென்றுவந்துள்ளார் என்ற விவரத்தை விக்கிபீடியாவில் கண்டேன்.

1936 ஆம் ஆண்டு மியாண்மரில் ( அப்போதைய பர்மா) இருந்து தாயகம் திரும்பி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு சமூகப் பணிகளில் ஈடுபடுகின்றார்

1955 ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாம் முறையாக மியாண்மர் சென்று  மியாண்மரில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் ஏற்பாடு செய்திருந்த அரசியல் மற்றும் ஆன்மீக நிகழ்வுகளில் கலந்து கொண்டு தாயகம் திரும்புகின்றார். என்ற தகவலை படித்தபோது அந்த ஆன்மீக நிகழ்வு என்பது தேவரின் புத்தசமய தீட்சையாக ஏன் இருந்திருக்ககூடாது என்ற அய்யம் எனக்குள் தோன்றுகின்றது.

காமராஜரால் காங்கிரஸ் கட்சிக்குக்கு கொண்டு வரப்பட்ட முத்துராமலிங்கம் அய்யா அவர்கள் 1956ஆம் ஆண்டு காமராஜரை எதிர்த்து அரசியல் பணிசெய்கின்றார்

1957 ஆம் ஆண்டு முதுகலத்துார் கலவரம் மற்றும் அது சார்ந்த இமானுவேல் சேகரன் அவர்களின் படுகொலைகள் நிகழ்கின்றது. இமானுவேல் சேகரன் அய்யா அவர்களையும் காங்கிரஸ் கட்சிக்கு கொண்டுவந்தவர் காமராஜர் அவர்களே. இதெல்லாம் நாடறிந்த அரசியல் கதை, இதை விவரிப்பதால் பலன் இல்லை

பசும்பொன் முத்துராமலிங்கம் அய்யா அவர்களின் முழு வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகங்களை படிக்க மனம் விரும்புகின்றது.

குறிப்பாக அவருடைய பர்மா பயணம் மற்றும் பர்மாவில் அவர் வாழ்ந்த வாழ்க்கை. அதன் பாதிப்புகள் ஆகியவற்றை குறித்து அறிய விழைகிறேன்.

 

குறிப்பாக பர்மாவில் அவர் கலந்து கொண்ட ஆன்மீக நிகழ்வுகள் குறித்த விவரங்கள் வெற்றிடமாகவே உள்ளது. அதற்கு காரணம் அவர் ஏற்றுக்கொண்ட பௌத்த தீட்ச்சை என்பதால் அது வரலாற்றில் வெற்றிடமாகப் பதியப்பட்டுள்ளது.

 

பர்மிய பயணத்திற்கு பின் அவர் புத்த துறவிகளைப் போல மொட்டை அடித்துக் கொண்டார் என்றும். தமிழ் சூழலுக்கு ஏற்ப பௌத்த கருத்துக்களை மாற்றி பரப்புரை செய்த இராமலிங்கரின் வழியில் தன்னை இணைத்துக் கொண்டதையும் படித்தபோது பௌத்தம் அவருக்குள் நிகழ்த்திய மாற்றம் குறித்து ஏன் இங்கு விரிவான ஆய்வு இல்லை என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது.

 

துறவி வாழ்க்கை என எழுதுவோருக்கு பௌத்த வாழ்க்கை முறை ( ஒரு பிக்குவைப் போல) என எழுத ஏன் மனம் ஒப்பவில்லை என்பது புரியவில்லை.

அவரின் சமயக் கருத்துக்துக்குள் இருந்த புத்த சமயம் குறித்து எவரும் பேசாமல் இருப்பது எனக்கு வியப்பு.

அவரது மரணம் மற்றும் நிணைவு நாளும்கூட புத்தச் சமயத் துறவிகளின் நிப்பான தின நிகழ்வைப் போலுள்ளதும் எனது கருத்தோட்டத்துக்கு கூடுதல் வலுசேர்க்கின்றது.

எனது பார்வையில் அவர் புத்த துறவியாக த் தெரி கின்றார்.

முத்துராமலிங்கம் அய்யாவைக் குறித்த சாதியம் கடந்த தரவுகளுடன் பதிவுகளோ, புத்தகங்களோ ஏதுமில்லை என்பது உண்மையில் பெருங்குறை.

இது குறித்த சரியான புத்தகங்கள் மற்றும் தரவுகள் இருந்தால் பகிரவும். நன்றி


இதையும் படியுங்கள்