Showing posts with label சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும். Show all posts
Showing posts with label சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும். Show all posts

Tuesday, October 22, 2019

சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும் - 4


புத்தச் சமயத் தாவரங்கள் - 3
                                                  
நிகழ்வு – 8

சித்தார்த்தரின் திருமணம்:                   

சித்தார்த்தரின் திருமணம் குறித்தச் செய்திகளை மிக விரிவாக விவரிக்கின்றது லலிதவிஸ்தாரா சூக்தம். இது மகாயான புத்தப் பிரிவைச் சேர்ந்த சூக்தமாகும். முழுவதும் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டதாகும். இந்த சூக்தம் 27 அத்தியாங்களைக் கொண்டது. இந்த சூக்தத்தில் புத்தர் தனது முந்தையப் பிறப்பில் இருந்து சித்தார்த்தராக பிறந்து தனது முதல் போதனையை சாரனாத்தில் போதித்தது வரை இடம் பெற்றுள்ளது. லலிதவிஸ்தாரா சூக்தத்தின் 12 வது அத்தியாயத்திம் சித்தார்த்தரின் திருமணம் குறித்த செய்திகளை மிக  விரிவாக விவரிக்கின்றது.
சித்தார்த்தருக்கு 16 வயது துவங்கியதும் அவருடைய தந்தை சுத்தோதனருக்கு அமைச்சர்களும் அவை மூத்தவர்களும் ஆலோசனை சொல்கின்றனர். திருமண வயதில் திருமணத்தை செய்து வைப்பதால் இளவரசரின் துறவியாகும் எண்ணம் சற்றேத் தள்ளிப்போகும் என்கின்றனர். அவர்களின் யோசனை, தன் பிரியத்துக்குரிய மகன் எங்கே தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவானோ என்னும் அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த சுத்தோதனருக்கு சற்றே மகிழ்ச்சியளித்தது. அதன்படி அவருக்கு சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். அந்த சுயம்வரத்தில் 500 இளம்பெண்கள் சாக்கிய நாட்டிலிருந்தும் பக்கத்து தேசமான கோலியத் நாட்டிலிருந்தும் தங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களோடும் கலந்து கொள்கின்றனர். அவ்வாறு கலந்து கொண்டவர்களுக்கு இளவரசர் சித்தார்த்தர் அவரவர் விரும்புகின்ற பரிசுகளையும், துணிகளையும், அணிகலன்களையும், தங்கம், வெள்ளி போன்றவற்றையும் தந்து அனுப்பி வைக்கின்றார்.
இவ்வாறு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் இறுதியாக சாக்கியகுலத்தைச் சேர்ந்த தண்டபானியின் மகளான, கோபா என்கின்ற யசோதராவும் கலந்து கொள்கின்றார். அப்போது பரிசுப் பொருட்கள் அனைத்தும் தீர்ந்த காரணத்தால் பணியாளர்கள் வேறு சிலப் பரிசுப் பொருட்களை கொண்டுவர சென்றிருந்த நேரத்தில் கோபா என்கின்ற யசோதரா பரிசுக்காக வந்து எதையும் சொல்லாமலும் எதையும் கேட்காமலும் சித்தார்த்தரின் அழகையும் கருனை வடிவான அவரது கண்களையும், முகத்தையும் சூரியனைக் கானும் அல்லியைப்போல கண்டு மெய்மறந்திருந்தார். அவரைப் பார்த்ததும் சித்தார்த்தரின் புருவம் விரிந்து அகல கண்கொண்டு இமைக்காமல் கோபாவின் அழகையும், அடக்கத்தையும் கண்ணுற்றுக்கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு தன்னை மறந்து தான் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி, கோபாவுக்கு அணிவித்தார். பின் அவரிடம் இந்தப் பரிசு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றதா எனவும் வினவினார். கோபா வெட்கத்துடனும், நாணத்துடனும். இளநகையுடனும் மெல்ல அங்கிருந்து சென்றார் 

அதன் பிறகு சித்தார்த்தரை, அமைச்சர்களும், தந்தையும், தன் சித்தி, கௌதமியும் வந்திருந்த அழகான பெண்களில் தங்கள் மனம் கவர்ந்தது யார் என வினவ, சாக்கிய குலத்து தண்டபாணியின் மகள் கோபா என்கின்றார் சித்தார்த்தர். அதன் பிறகு, தண்டபானியிடம் தனது மகனுக்கு சித்தார்த்தர் பெண் கேட்ட போது, உங்கள் மகன், எப்போதும், சாமியார், துறவு, தியானம் என சுற்றிக்கொண்டிருப்பவர், அவருக்கு நான் எனது பெண்னை திருமணம் செய்துவித்தால், எனது மகளைக் காப்பாற்றும் அளவுக்கு அவருக்குள்ள ஆற்றலை நிருபிக்கட்டும் அதற்குப் பின் எனதுப் பெண்னைத் தருகின்றேன் என பதிலளிக்கின்றார். அந்த சவாலை சித்தார்த்தர் ஏற்றுக் கொள்கின்றார்.
அதன்படி, தனது அறிவுத்திறன், மொழித்திறன், கலைத்திறன், கணிதத்திறன். என ஆயகலைகள் அறுபத்துநான்கிலும் தான் சிறந்தவர் என நிருபிக்கின்றார். தனது உடல் வலிமையை நிருபிக்க அங்கு கூடியிருந்த 500 இளைஞர்களுடன் மற்போர் புரிந்து வெற்றிபெருகின்றார். இறுதியாக தண்டபானி, சித்தார்த்தரின் வில் வித்தையினை சோதித்து அறிய ஒரு தேர்வு வைக்கின்றார். அது ஒரு பெரிய கடினமான இரும்புப் பாத்திரத்தை அம்பினால் துளையிட வேண்டும். சித்தார்த்தரின் இலக்காக இருந்த கனமான இரும்புப் பாத்திரம் ஒரு சாதாரண மனிதனின் வில்லில் இருந்துப் புறப்படும் அம்பு எவ்வளவு தொலைவுச் செல்லுமோ அதைப் போல எட்டு மடங்கு அதிக தொலைவில் இருந்தது. இருந்தும் சித்தார்த்தர், அந்தப் போட்டியில் கலந்து கொண்டார். தனது தந்தை வழி பாட்டனாரான சிம்மஹனுவின் வில்லில் இருந்து அந்த இலக்கை நோக்கி அம்பெய்தினார். சித்தார்த்தர் எய்த அம்பானது, அந்த கனமான இரும்புப் பாத்திரத்தைத் துளைத்து, அதற்குப் பின்புறத்திலிருந்த 7 பனை மரங்களையும் துளைத்துச் சென்றது.[1],[2] இது பாளி மொழியில் தடா மரம் என அழைக்கப்படுகின்றது. சூக்தத்திலும் இவ்வாறே உள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பில் பனை மரம் என உள்ளது.

நிகழ்வு – 9

கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அனைத்து எழுத்தாளர்களிடமிருந்தும் அயோத்திதாசர் சித்தார்த்தரின் திருமணம் குறித்தான கூடுதல் விவரங்களை தனது ஆதிவேதத்தில் தருகின்றார். அந்த விவரனைகள் சுற்றுச்சூழல் நோக்கில் இருப்பதால், அதனையும் இங்கே பதிவிடுகின்றேன். ஆதி வேதத்தில் அயோத்திதாசர் ஒவ்வொரு சமஸ்கிருதம் மற்றும் பாளி மொழி பெயருக்கு உண்டான தமிழ் பொருளையே இங்கே பெயர்களாக சுட்டுகின்றார். அதனையும் அப்படியேத் தருகின்றேன்.
“ அரசபுத்திரன் எழுந்து, யுத்த சன்னத்தராய் தனியே வெளிவந்ததைக் கண்ட அரசன் பதினாறுவயதுள்ள சிறுவனாச்சுதே என்ன யுத்தஞ் செய்வானென்று பயந்து, ரத கஜ துரக பதாதிகளாகுஞ் சதுரங்க சேனைகளைத் தொடரவிட்டான். அந்த சதுரங்க சேனைகள் யாவையும், முன்னேரவிடாமல், தனியே முன்சென்று சகல அரசர்களையும், விற்போர், வாட்போர், மற்போர், வாகுபோரென்னும் சதுரங்க வீரத்தால் ஜெயித்து அசோதரையைக் கைப்பற்றிக்கொண்டார்.
உடனே மலையரசனாகும் சுப்ரத்தி ( தண்டபானி) மண்முகவாகை            ( சுத்தோதனர்) அனுகி, அரசே எனது புத்திரி அசோதரை பிறந்தகாலத்தில் ஓர் பெரியோன், சாக்கைய கணிதர் வந்து குழந்தை பிறந்த காலவரைகளைக் கணக்கிட்டு, இம்மகவை மணம்புரியும் மணாளன் மனோதிடமும், ஞானோதயனுமாக விளங்குவதன்றி, அவன் கரங்களால் பூமியைப் பரித்து வருத்த வித்தை ( விதைகளை) விதைக்கினும் முளைக்கும். பட்டமரத்தை நட்டினந்துளிர்க்கும். அந்தக் காட்சியே எக்காலத்திலும் நித்திய மங்கலமாக வழங்குமென்று கூறியிருக்கின்றார். அதையும் நான் சோதிக்க வேண்டியிருக்கின்றதே என்றான்.
அப்போது அவ்விடமிருந்தவர்களிற் சிலர் பலதானியங்களையும் வருத்து வைத்துக்கொண்டிருந்ததுடன் பட்ட மரத்திற்கு பதிலாயப் பூணிலா உலக்கையையுங் கொண்டுவந்து சித்தார்த்தி கரத்தில் அளித்து விதைகளை பூமியில் விதைப்பதுடன் இப்பட்டமரமாகும் உலக்கைகோலையும் பூமியில் நட்டுங்கோளென்று வேண்டினார்கள். வாலறிஞன் அவற்றைக் கரத்தில் ஏந்தி பூமியைத் திருத்தி விதைகளை விதைத்து உலக்கையையும் பூமியில் ஊன்றினார். பதின் கடிகைபோதுள் பலதானியங்களும் முளை தோன்றியதுடன் உலக்கையும் கல்லாலிலைக் கொழுந்திட்டு வளர்ந்தது. அதைக்கண்ட அரசர்களும் பெரியோர்களும் ஆட்சரியங்கொண்டு நிற்குங்கால் மணமகன் மணாளியின் கரத்தைப்பற்றி இரதமூர்ந்து நுாதன மாளிகயைச் சேர்ந்தார்.
அவ்விடம் வந்திருந்த பெரியோர்கள் வருத்தவித்து முளைத்ததைப் பாலி என்றும் உலக்கைக் கொழுந்துவிட்டதைப் பிண்டி என்றும் பெயரளித்து பதினாறு வயதுக்கு மேற்பட்ட குமாரனும், பன்னிரெண்டு வயதிற்கு மேற்பட்ட குமாரியும், சுகவாழ்க்கையுற்றதை அனுசரித்து பின்சந்ததியாரும் பதினாறு வயதுக்கு மேற்பட்ட குமரர்களுக்கும், பனிரண்டு வயதிற்கு மேற்பட்ட குமரிகளுக்கும் விவாகம் நியமித்து நவதானிய முளைகள் எழும்பும் பாலிசோதனைகளோடு உலக்கையில் கல்லாலிலைகட்டி மங்கலபீடம் வகுத்துவந்தார்கள்.[3] 
இன்றும் நம்முடைய திருமணச் சடங்கின்போது, நவதானியங்களை முளைவிடுவதையும், அரசாணிக்கால் என்று சொல்லப்படுகின்ற அரசமரம் அல்லது மூங்கிலின் கிளைகளை பூசைசெய்து மங்கல நீரால் கழுவி வழிபடுவதையும் சித்தார்த்தரின் திருமண நிகழ்வில் நடைபெற்ற சுற்றுச்சூழல் நிகழ்விலிருந்து நமக்கு வரலாறாக சுட்டுகின்றார். பண்டிதர் அயோத்திதாசர்.
-    -  தொடரும். 

நன்றி - புதிய கோடாங்கி - அக்டோபர் 2019 இதழ்.














[1] . லலிதவிஸ்தாரா சூக்தம். 12வது அத்தியாயம்.
[2] . The play in full – translated by: the Dharmachakra Translation Committee. Chapter 12
[3] . அயோத்திதாசர் சிந்தனைகள். பாகம் 2. தொகுப்பாசிரியர். ஞான அலாய்சிஸ். பக்கம்
  199 – 201. ( ஆதிவேதம். சித்தார்த்தரின் திருமணக்காதை )


Sunday, September 22, 2019

சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும் – 3

புத்தச் சமயத் தாவரங்கள் 2


நிகழ்வு – 3

சித்தார்த்தரின்ஒன்பதாவது வயதில், தனது தந்தையின் வயலில் நடைபெறும் விவசாயப் பணிகளை வேடிக்கைப் பார்க்கச் சென்றபோது, முதன் முதலாக ஒர் நாவல் மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தார்.[1],[2] என இந்திய புத்தச் சமய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆங்கில புத்தச் சமய எழுத்தாளர்கள் அதை ரோஸ் நிற ஆப்பிள் மரம்[3] என்றும், குறிப்பிடுகின்ற அதே நேரத்தில் வேறு சில புத்தகத்தில் எந்த வகையான மரம் என்பதைச் சொல்லாமலேயே சித்தார்த்தரின் முதல் தியானத்தை பதிவு செய்துள்ளனர்.[4],[5] கொய்யாச் செடி என பதிவு செய்கின்றார்,ராகுல் சாங்கிருத்யாயன்.[6] அவ்வாறு சித்தார்த்தர் முதன் முறையாக மேற்கொண்ட தியானம் மெத்தபாவனா தியானம் எனது புத்தரும் அவர் தம்மமும் நுாலில் பதிவு செய்துள்ளது.
தனது ஒன்பதாவது வயதில் தனது தந்தையின் வயலில் இருந்த நாவல் மரத்தின் கீழ் மெத்த பாவன தியானத்தை நீண்ட நேரம் செய்கின்றார். அவ்வாறு நீண்ட நேரம் தியானம் செய்த போதும், சூரிய வெளிச்சத்தினால் மற்ற மரங்களின் நிழல் நகர்ந்து சென்றபோதும், சித்தார்த்தர் முதன் முறையாக தியானம் செய்த நாவல் மரத்தின் நிழல் எங்கும் நகராமல், சித்தார்த்தரின் தியானம் முடிந்த பிறகே கலைந்து சென்றது என்பதே இங்கு சூழலியல் நோக்கில் பதிய விரும்பும் தகவலாகும்.



நிகழ்வு – 4
ஒருமுறை சித்தார்த்தர் தன் தந்தையின் பண்ணைக்குச் சென்றார். ஓர் இடைவெளியில் ஒரு மரத்தடியில் இயற்கையின் அழகை ரசித்தவாறு , அமைதியையும் அனுபவித்தவாறு இருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் ஒரு பறவை வானத்திலிருந்து அவர்முன் விழுந்தது. அதன் உடலில் அம்பு தைத்திருந்தது. வலியினால் மேற்கொண்டு பறக்க முடியாமல் அது கீழே விழுந்ததை சித்தார்த்தர் உணர்ந்து தானும் வலியால் துடித்தார்.

      அதன் பின் சித்தார்த்தர்  அந்தப் பறவையை தொட்டு எடுத்து, அதன் காயங்களுக்கு மருந்திட்டு, கட்டும் கட்டி அந்தப் பறவையை மெல்ல வலியிருந்து விடுவித்து ஆறுதல் படுத்தினார். பறவைக்கும் சித்தார்த்தரின் அருகாமையும், மருந்தும் மிக்க ஆறுதலாக இருந்தது. சித்தார்த்தரின் மடியிலேயே அது இருந்தது. அப்போது அந்தப் பறவையை வீழ்த்திய சித்தார்த்தரின் அத்தை மகன் தேவதத்தன் அங்கு வந்தார். சத்திரியத் தர்மத்தின் படி வேட்டையில் வீழ்த்தப்பட்ட பறவை வேட்டைக்காரனுக்கே சொந்தம் என தேவதத்தனும், தான் அடிப்பட்ட பறவையைக் காப்பாற்றியதால் கருனையின் அடிப்படையில் பறவை தனக்கே சொந்தம் என சித்தார்த்தரும் வாதிட்டார். இறுதியில் பெரியவர்களிடம் முறையிட்டபோது, சாக்கியக் குலப் பெரியவர்களும் சித்தார்த்தர் சொல்வதே சரியென்றதால் தேவதத்தனுக்கும், சித்தார்த்தருக்கும் நிரந்தரப் பகையாகிப் போனது.[7],[8],[9] என குறிப்பிட்டுள்ளது. இந்த நிகழ்வில் சித்தார்த்தர் அமர்ந்திருந்த மரத்தின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும். ஓவியங்களும், சிற்பங்களும் இந்த நிகழ்வில் சித்தார்த்தர் அமர்ந்திருந்த மரம் மூங்கில் என்றே குறிப்பிட்டுள்ளன.


நிகழ்வு 5
சித்தார்த்தர் துறவியாவதை தடுக்கும் நோக்கில் சுத்தோதனர், மூன்று அரண்மனைகளையும், அவைகளில் இளவரசருக்கு சேவை செய்ய ஆயிரக்கணக்கான பெண்களையும் அமர்த்தியிருந்தார். அவர்களின் முழு நேரப் பணியே இளவரசரை வசியப்படுத்தி, சிற்றின்பத்தில் ஈடுபடுத்தி, துறவு நோக்கத்தை கலைப்பதுதான். அவ்வாறு இளவரசரை வசப்படுத்த முயன்ற பெண்கள், தங்களின் அழகை வர்ணிக்கும் பொழுதும், விரகதாபம் மற்றும் துயரத்தை விவரிக்கும் பொழுதும் சுற்றுச்சூழல் நோக்கிலேயே விவரிக்கின்றனர் என்பது இதுவரை யாரும் கவனிக்காத தகவலாகும். அதையும் இங்கே பதிவு செய்கின்றேன்.
·         இன்னொருத்தி அலைபாயும் கண்களுடன், நீலத்தாமரை  ஒன்றை நுகர்ந்தவளாய் உணர்ச்சி வசப்பட்டுத் தட்டுத் தடுமாறி, கொச்சை மொழி பேசினாள்.
·         அன்புத் தலைவனே, இங்கே பார், தேன் சுவை மலர்களால் மூடப்பட்டுள்ள மாங்கனி – கோகிலப் பறவையின் கானம் – தங்கக் கூண்டில் சிறைப்படுத்தப்பட்டதைப் போல.
·         “ வந்து இந்த அசோக மரத்தைக் காணுங்கள், - இவை காதலர் துயரத்தை அதிகரிப்பவை – தீயினால் தீண்டப்பட்டவைப் போல தேனீக்கள் ரீங்கரிக்கின்றன.
·         இதோ இந்தத் திலக மரத்தைக் காணுங்கள். – இதை மெல்லிய மாங்கிளை தழுவிக்கொண்டுள்ளது. – மஞ்சளுடை தரித்த மங்கை ஒருத்தி வெள்ளுடையில் உள்ள ஓர் ஆணைத் தழுவுவது போல்.
·         இதோ இந்த குருபக மரத்தைக் காணுங்கள். தேன் நிறைந்த மலர்கள் பூத்துக் குலுங்க – பெண்களின் செவ்விய நகங்களைக் கண்டு வெட்கித் தலைக்குனிவது போல் இவை தோன்றவில்லையா.?
·         இதோ இந்த இளம் அசோக மரத்தைக் பாருங்கள் புதியக் கிளைகளால் பூரணமாகியுள்ள இது எங்கள் கைகளின் அழகைக் கண்டு வெட்கியதுபோல் தோன்றுகின்றது.
·         சிந்துவாரப் புதிர்கள் நிறைந்த கரையுள்ள இந்த ஏரியைப் பாருங்கள் வெள்ளுடையில் பொலிந்து தோன்றும் பேரழகுப் பெண்போல் இல்லை.[10].[11],[12] என்பது போன்ற விவரிப்புகளுடன் சுற்றுச்சூழல் தகவலையும், செய்தியையும் சேர்ந்தே பதிவு செய்துள்ளது புத்தரும் அவர் தம்மமும் நுால்.
நிகழ்வு 6
சித்தார்த்தர் முற்றும் துறந்த துறவியாக எண்ணியபொழுது, தனக்கு துறவியாக தீட்சை அளிக்க கபிலவஸ்துவில் ஆசிரமத்திலிருந்த பாரத்வாஜ் அவர்களிடம் தீட்சை பெற்று முற்றும் துறந்த துறவியாகி கபிலவஸ்த்துவை விட்டு வெளியேறி காட்டை நோக்கி நடக்கும் பொழுது, அவருடன் உடன் சென்றவர்கள் அவருடைய பிரியத்துக்குரிய குதிரை கந்தகமும், மற்றும் அவரது தேர் ஓட்டுனர், மற்றும் நண்பருமான சன்னா ஆகியோர் பின் தொடர சித்தார்த்தர் எந்தவிதமான வருத்தமும், புலம்பலும், சோகமும் இல்லாமல் இயல்பான மனநிலையில் நடந்து கொண்டு சென்றவர். அரோமா நதியைக் அடைந்ததும் சற்று நின்றார். அரோமா நதியைக் கடக்கும் பொழுது, ஓவியங்களிலும், சித்திரங்களிலும் இரட்டை அரசமரம் ஒரு கரையிலும் மறு கரையில் அசோகா மரமும், இடம் பெற்றிருக்கும்.[13],[14],[15]
நிகழ்வு 7
சித்தார்த்தரும், மகத அரசரும் முதன் முதலில் சந்தித்துப் பேசிய இடம் பாண்டவ மலையில் உள்ள  லோத்ர மரங்கள் நிறைந்த, வனத்தில், லோத்ர மரத்தின் அடியில், மயிலகவும், ஓசையால் நிரம்பிய அடர்ந்த அவ்வனத்தில், சந்தித்துப் பேசுகின்றனர்.[16],[17],[18]

-    தொடரும்.
         

நன்றி. புதியகோடங்கி - செப்டம்பர்2019 இதழ்



[1] . பகவான் புத்தர். தர்மானந்த கோசாம்பி. பக்கம். 134
[2] .  மஜ்ஜிம நிகாயம். 26 வது சூக்தம் - அரியபரிய சேனா சுக்தம்
[3] . Old Path White Clouds by  Thich Nhat  Hanh. Page No. 71
[4] .  The Life of Buddha, by A. Ferdinand Herold, tr. by Paul C Blum [1922], Page No.24
[5] .  Buddha and His Dhamma by. Dr.B.R.Ambedkar. Page No: 29
[6] . பௌத்த தத்துவ இயல். ராகுல் சாங்கிருத்யாயன். தமிழில். ஏஜி.எத்திராஜீலு. மற்றும் 
  ஆர் பார்த்தசாரதி. பக்கம் 21
[7] . மஜ்ஜிம நிகாயம். 26 வது சூக்தம் - அரியபரிய சேனா சுக்தம்
[8] . புத்தரும் அவர் தம்மமும். தமிழில் பெரியார்தாசன். பக்கம்.12
[9] . Buddha and His Dhamma by. Dr.B.R.Ambedkar. Page No: 30
[10] . Buddha and His Dhamma. B.R.Ambedkar. Page No: 35
[11] . புத்தரும் அவர் தம்மமும் . பீ.ஆர்.அம்பேத்கர். தமிழில். பெரியார்தாசன். பக்கம் 18
[12] . அங்குத்தர நிகாயம்.
[13] . Buddha and His Dhamma. B.R.Ambedkar. Page No: 49 – 52
[14] . புத்தரும் அவர் தம்மமும்.பீ.ஆர்.அம்பேத்கர். தமிழில். பெரியார்தாசன். பக்கம்36 - 40
[15] . அங்குத்தர நிகாயம்
[16] . புத்தரும் அவர் தம்மமும்.பீ.ஆர்.அம்பேத்கர். தமிழில். பெரியார்தாசன். பக்கம்44.
[17] .  Buddha and His Dhamma. B.R.Ambedkar. Page No: 58.
[18] . அஸ்வகோசர். புத்தசரிதம். அத்தியாயம் 7. சுலோகம் 62 - 68

இதையும் படியுங்கள்