Saturday, May 3, 2014

பௌத்த வாழ்வியல்


உலகில் தோன்றிய மதங்களுள் உன்னதமானது  பௌத்தம். உலகில் உள்ள  மற்ற எல்லா மதங்களும் தன்னை மறுசீரமைப்புக்கு அல்லது காலத்திற்கு தகுந்தாற்போல் தம்மை புதுப்பித்துக் கொள்ள தயாராக இல்லாத போது பௌத்தம் மட்டுமே எப்பொழுதும் தன்னை மறுசீரமைத்து காலத்துக்கு தகுந்தாற் போல் தன்னை தகவமைத்து அதன் சாரம் கெடாமல் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இதற்கு உதாரணமாக ஒன்றை சொல்ல இயலும்.

புத்தரின் அறவழி போதனையான எண்வழி மார்கம்

1.   நல் உணர்வு - Right  view

2.   நல் நிணைவு - Right Intention

3.   நற் பேச்சு -  Right Speech

4.   நற் செயல் -  Right Action

5.   நல் வாழ்வு - Right Livelihood

6.   நல் முயற்சி - Right Effort

7.   நல் மனம் - Right Mindfulness

8.   நல் நிணைவு - Right Concentration

நல்லுணர்வு என்பது நான்கு உண்ணத வாய்மைகளை உணர்தலாகும். அவற்றை அறிவது மட்டுமல்ல, படிப்பது மட்டுமல்ல, பின்பற்றுவது மட்டுமே போதுமானதல்ல, மாறாக அவறின் உண்மையை உணர்ந்து இருத்தல் வேண்டும். நல்லுணர்வைப் பெற மனம் மாசற்றதாக இருக்க வேண்டும். இதனையே வள்ளுவரும், மனத்துக்கன் மாசிலன் ஆதல் அணைத்துக்கன் ஆகுல நீரபிறஎன்பார்.


தெளிந்த மனம் குழம்புவதில்லை, தெளிந்த மனதில் சந்தேகங்கள் தோன்றுவதில்லை, தெளிந்த மனதில் அவ நம்பிக்கைகள் குடியிருப்பதில்லை, அதற்க்கு மனம் உண்மையை பேச வேண்டும், உண்மையை விரும்ப வேண்டும். உண்மையாக இருத்தல் வேண்டும். இதனையே வள்ளுவப் பெருந்தகையும், ” உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் என்பார். அவ்வாறு உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதலே நல்லுணர்வு ஆகும்.


இன்னும் விளக்கமாக சொல்வது என்றால், மண்ணில் பிறந்த அணைத்தும் ஒரு நாள் இறந்தே தீரும், என்பதும், உருவாக்கிய அணைத்தும் ஒரு நாள் அழிந்தே தீரும், என்பதும், எல்லாவற்றிற்க்கும் வளர் சிதை மாற்றம் என்பது உண்டு என்பதை ஒப்புக் கொள்வதும் உணர்ந்து இருந்தலுமே நல்லுணர்வு ஆகும். இதனை மார்க்சும்மாற்றம் ஒன்றே நிலையானது என்பார். ”


புத்தரும் எல்லோருக்கும் முன்பாக மாற்றம் நிலையானது அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்வழி மார்கத்தில் கூறி சென்றுள்ளார். அவ்வாறு மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனமே உண்மையை உண்மை என்று உணரும் ஏற்றுக் கொள்ளாத மணம் பற்று அல்லது ஆசை என்னும் துன்பச் சகதியில் உழலும்.


இது புத்தர் பெருமான் கூறிச் சென்ற நல்லுணர்வு இன்றைய விஞ்ஞான உலகில் உணர்வு மேலாண்மையாக   ( Emotional Management)  காலத்திற்க்கு ஏற்றார் போல் தன்னை தகவமைத்துக் கொண்டு, அறிவியல் வழி நின்று வளர்ந்து வருகின்றது. இவ்வாறு அறிவியல் வழி நின்று வளர்வதால்தான் பௌத்தம் இன்று  வெள்ள முடியாத மதமாக வாழ்வியலாக, நெறிமுறைகளாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றன.

 இதில்  தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியலோடு ஒன்றி கலந்த நெறிமுறையாக பௌத்தம் எப்போதும் இருந்திருக்கின்றது. வரலாற்றில் சமுகம் எப்பொழுதும் மதத்தை கொண்டாடியது இல்லை, ஆனால் மத கோட்பாடுகளை, மத கருத்துக்களை எப்பொழுதும் கொண்டாடிக் கொண்டிருக்கும், அதை காலத்திற்க்கு தகுந்தாற்போல் தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கின்றது. அதற்க்கு நல்ல உதாரணம் பௌத்த மதம் மட்டுமே.

பௌத்த மதக் கோட்பாடுகளை மற்ற மதங்கள் குறிப்பாக இந்து மதம் திருடிக் கொண்டாலும், அல்லது தன் வயப்படுத்திக் கொண்டாலும், பௌத்தம் வீழ்ந்து விடவில்லை, அது இந்தியாவில் தோன்றி, கிழக்காசிய நாடுகள் வரையிலும் பல்கி பெருக அதனுடைய அறிவியல் தன்மை வாய்ந்த கொள்கைகளும் கோட்பாடுகளுமே காரணம்.

      இந்தியாவில் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்கள் பண்டிதர் அயோத்திதாசரும், புரட்சியாளர் அம்பேத்கரும். ஆயினும் இருவரது பார்வைக்கும் பெருத்த வேறுபாடுண்டு. பண்டிதர் அயோத்திதாசர் முன் மொழிந்த பௌத்தமானது. அன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் இருந்த சூழ்நிலைக்கு மாற்றானது.

      அயோத்திதாசரின் காலமான மே 20, 1845 - 1914;  வெள்ளார்களின் எழுச்சிகாலமாக இருந்தது. தமிழிலக்கியங்கள் மற்றும் தமிழ கலாச்சாரத்திற்க்கு சைவ, திருமாலிய சமய சாயங்கள் வலிந்து திணிக்கப்பட்ட நேரமாக அது இருந்தது. தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடிக் கொண்டிருந்த காலமது. தமிழர்களின் வரலாறு, சாதிய வரலாறாக திரிக்கப்பட்டிருந்த காலத்தில், இத்தகைய திரிபு, புரட்டு ஆகியவற்றிற்க்கு மாற்றாக, அவர் பௌத்தத்தை முன் மொழிந்தார்.

      குறிப்பாக, தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வியல் சைவத்தை சார்ந்தது என்ற புரட்டுக்கு எதிராகவும், சாதிய கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைக்கவுமே அவர் பௌத்தத்தை முன் மொழிகின்றார்.. குறிப்பாக அப்போது ஓலைச்சுவடியில் இருந்து அச்சுக்கு கொண்டு வரப்பட்ட அணைத்து இலக்கியங்களையும் சைவ சமய சாயத்துடனே கொண்டு வந்தனர்.
மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, ஆகிய நுால்களைத் தவிர்த்து, ஏனைய நுால்களை சைவ , வைணவ சாயல்களில் கொண்டு வந்து, சைவம் தான் தமிழை வளர்த்துது, என்ற நிலைப்பாட்டை நிறுவ அப்போதிருந்த தமிழ் அறிஞர்கள் முனைந்து நின்ற காலத்தில்தான், அயோத்திதாசர் சைவ புரட்டுக்கு எதிராக பௌத்த உண்மையை கொண்டு வந்தார்,

      சைவர்கள் மட்டும் தமிழை வளர்க்கவில்லை, பௌத்தர்களும் தமிழை வளர்த்தனர். என்று நிலை நிறுத்தினார், அதே கண்ணோட்டத்திலேதான், அவர் சமணத்தையும் பாரத்தார். தமிழ் இலக்கியத்தில் மற்றும் தமிழ் வளர்ச்சியில் பௌத்தர்களின் பங்களிப்பு மற்றும், சமணர்களின் பங்களிப்பை உலகுக்கு உணர்த்துவதே அவர்தம் முதற்பணியாக இருந்தது.

சைவத்துக்கு எதிரான  நிலைப்பாட்டை கொண்டிருந்ததால் பௌத்தம், மற்றும் சமணம் ஆகிய இரண்டையும் அவர் ஆதரித்தார், சாதிகளை முன் மொழியாத காரணத்ததால் சைவத்துக்கு எதிராக பௌத்தம் மற்றும் சமணத்தை ஒருங்கிணைத்தார்.  அதே பார்வையில் பார்த்ததாலேதான் அவரால் சமணம் மற்றும் பௌத்தம் ஆகிய இரண்டும் ஒன்றே என்றார்.

பண்டிதரின் பார்வையில், மொழி மற்றும் இலக்கிய சூழலில் நிலவிய சைவர்களின் ஆதிக்கத்திற்க்கு மாற்றாக பௌத்தத்தை முன் மொழியும் பணி அயோத்திதாசரின் பணியாக இருந்தது.

புரட்சியாளர் அம்பேத்கர் முன்நிறுத்திய பௌத்தமானது, இந்து மதத்திற்க்கு எதிரானது, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்யக்கூடியது. சுயமரியாதைக்கான வித்தாக போற்ற வேண்டியது. சாதிய பாகுபாடு, மற்றும், சமுக ஏற்றத்தாழ்வுகளின் மூலாதாரம் வரை சென்று ஆய்ந்து தீர்வை முன் மொழிந்தது.

தாழ்த்தப்பட்ட மக்கள் சுயமரியாதையோடும், தன்மானத்தோடும் வாழவே அம்பேத்கர் பௌத்தம் தழுவினார். தான் மட்டும் தழுவியதோடு அல்லாமல் தன் மக்களையும் பௌத்தம் ஏற்க வைத்ததார்.

இன்றைய நிலையில், தமிழகத்திற்க்கு, அயோத்திதாசரின் பார்வையில் இலக்கண இலக்கியங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தி, சைவ வைணவத்திலிருந்து, பௌத்த நோக்கில் இலக்கியங்களை உருவாக்கவேண்டிய தேவையும், ஏற்கனவே உள்ள இலக்கியங்களை மீள் வாசிப்பிற்க்கு உள்ளாக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.

அதே வேளையில் அம்பேத்கரின் சுயமரியாதை எழுச்சியை சேரிகள் தோறும் உருவாக்க வேண்டிய தேவையும் உள்ளது. சேரிகள் தோறும் உள்ள தீண்டத்தகாத மக்கள் பௌத்தம் ஏற்று தங்களை தீண்டத்தகாதவர்கள் இல்லை, என்று பறைசாற்ற வேண்டிய தேவையும் இருப்பதால், அயோத்திதாசர், மற்றும் அம்பேத்கரின் நோக்கில் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டியது, சேரிமக்களின் தலையாய கடமையாக உள்ளது இன்றைய நிலையில்.

      - நன்றி. சமுகப் பயணம் மாத இதழ் -மே 2014

இதையும் படியுங்கள்