Showing posts with label நுால் விமர்சனம். Show all posts
Showing posts with label நுால் விமர்சனம். Show all posts

Wednesday, August 21, 2019

வனத்திலிருந்து வந்தவள் நுால் விமர்சனம்


வனத்திலிருந்து வந்தவள்  நுால் விமர்சனம்

நண்பர் கனியன் செல்வராஜ் அவர்களின் வனத்திலிருந்து வந்தவள் கவிதைப் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு, நண்பர் செல்வராஜ் அவர்களால் சில தினங்களுக்கு முன்பு கிட்டியது. முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை அத்தனை சுவாரஸ்யம். புத்தகத்தை வாசித்து முடித்ததே தெரியவில்லை. அத்தனை ஈர்ப்பு அவரது கவிதைகளில். ஆசிரியராகப் பணி செய்வதாலோ என்னவோ, நண்பர் கனியன் செல்வராஜீக்கு இலகுவான மொழி நடையும் வன்மையான சொற்களும், மென் தென்றலாய் உரசிச் செல்கின்றது அவரது கவிதைகளில். 16 தலைப்புகளில் 76 பக்கங்களில் கவிதை புத்தகத்தை தந்துள்ளார். இவற்றில்



1.   துளியளவேயான மரணம்
2.   புத்தன் ஒரு சகபயணி
3.   பரவும் இனம்
4.   புத்தன் -  

ஆகிய கவிதைகளில் சூபியிசத்தின் சாயலில் புத்த மதத்தின் சாரத்தை வாசகர்களின் மனதில் விதைத்துச் செல்கின்றார். கவிதையளவில் இது ஒரு புதிய முயற்சி என்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது. இருப்பினும் அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றார் ஆசிரியர்.

5.   காடு – காடு காத்து வாழும்
6.   வனத்திலிருந்து வந்தவள் –

இந்த இரண்டு கவிதைகளில் இயற்கை குறித்து ஆழந்த புரிதலுடன் பேசுகின்றார். அதை எளிதாக படிப்பவர்களுக்கும் கடத்துகின்றார். வாழ்த்துகள் கனியன்.

7.   கீழே இறங்கிவா
8.   நாடகக்காரி
9.   அவனுக்கென்ன ராஜாவுக்கு
1 எங்க ஊர் பொதுக்கிணறு –

இந்தக் கவிதைகளில் விளிம்பு நிலை மக்கள் குறித்துப் பேசுகின்றார். அதிலும் விளிம்பு நிலை சிறுவர்கள், கலைஞி, நடுத்தர வர்கத்து கணவன், என பல்வேறு நபர்களின் வாழ்வியல் கனவையும், சூழலையும் மனம் உருகிச் செல்லும் வகையில் படைத்துள்ளார்.

11.  எல்லோரையும் நோக்கிப் பாயும் தோட்டா
12.  அந்த அது
13.  எல்லாவற்றிலும்  -

இந்த தலைப்புகளில் மனித நேயம் குறித்து பேசுகின்றார், கவலைப்படுகின்றார், எந்த நிலையிலும், எக்காலத்திலும் அழியாதது, மனித நேயம் என்பதை பறைசாற்றுகின்றார்.

14.  புராதன ரகசியங்கள் 
15.  சாணக்கியனின் பூனுால்
16.  பூவரசமரமும் நவீன யுவதியும். –

இந்த கவிதைகளில் வரலாற்றைப் பேசுகின்றார், அதிலும் புராதன ரகசியங்கள் கவிதையில், பெண்ணின் பார்வையில் இருந்து வரலாற்றைச் சொல்கின்றார். இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இது வரையிலும் பெண்ணின் பார்வையில் இருந்து வரலாறு படைக்கப்படவில்லை. என்பதை இந்தக் கவிதையை படிக்கும் போது உணர முடிகின்றது.

பூவரச மரமும் நவீன யுவதியும் கவிதையில், மரம், தன் பாட்டி, நவீன யுவதி, ஆகியோரின் மனோபாவம், வாழ்வியல், ஆகியவற்றை இயல்பானச் சொற்களால் மாலைகளாக கோர்த்து தந்துள்ளார்.

இவை எல்லாவற்றையும் விட சிறப்பானது. எங்க ஊர் தெரு கவிதை. வாசிப்பவனை சில நிமிடமாவது தனது ஊரையும் தெருவையும் நினைக்கத் தோன்றும் சிறப்பான கவிதை அது.

மொத்தத்தின் தமிழ் கவிதையார்வலர்கள் தவற விடக்கூடாதப் புத்தகமாக வனத்திலிருந்து வந்தவள் உள்ளது. இதை பதிப்பதவருக்கும். ஆசிரியர் கனியன் செல்வராஜீக்கும், சிறப்பான வாழ்த்துகள். 

புத்தகம் வேண்டுவோர். ஆசிரியரிடம் பேசினால் (கைபேசி எண் – 98435 72355)இலவசமாகவே மின்னஞ்சல் அனுப்பி வைக்கின்றார். வாழ்த்துகள். கனியன். தமிழ் கவிதை உலகில் தரமான முத்திரை பதிக்கின்றது உங்களின் வனத்திலிருந்து வந்தவள் கவிதைத் தொகுப்பு.




Wednesday, November 28, 2018

இளையராஜா வின்.இசை பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள் நூல் விளக்கம்


இளையராஜாவின் இசை பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள் நூல் விளக்கம்
1. ஜனனி ஜனனி
2. ஆயிரம் தாமரை மொட்டுகளே
3. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
4. என்னுள்ளில் எங்கோ.ஏங்கும்
5. என்ன பாட்டு பாட
6. தும்பி வா
7. நதியில் ஆடும் பூவனம்
8. எனது உடலும் உயிரும் பொருளும்
ஆகிய எட்டு பாடல்களின் இசையும். இளையராஜா எழுதிய பாடல்களின் பேசு
பொருளும் எவ்வாறு புத்தசமயக் கோட்பாடுகளை நினைவுபடுத்துகின்றது என்பதுதான் புத்தகத்தின் மைய பொருள். இளையராஜா. அல்ல
மேலும் ஒரு இசை அமைப்பாளரின் இசை கோவையை ஆய்வு செய்த வகையில் தமிழுக்கும் இந்தியாவுக்குமே இது முதல் புத்தகம். இதுதான் இந்த  புத்தகத்தின் சிறப்பு.
இது முதல் பாகம்.. இன்னும் நான்கு பாகங்கள் இருக்கு.
புத்தகத்தை வாங்க புத்தகத்தின் விலை ரூபாய். 200/
அஞ்சல் செலவு 50/
இரண்டையும் சேர்த்து கீழேயுள்ள வங்கி கணக்கில் செலுத்த கோருகிறேன். நன்றி
Amaresan
A/C NO: 107801000007712
IOB Bank
Polur branch
IFSC CODE: IOBA0001078
MICR: 606020007
Cell:9150724997 மற்றும் 7519413542

Wednesday, September 5, 2018

நூல் அறிமுகம் -1

இளையராஜாவின் இசை – பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள் :

நூல் அறிமுகம்
இளையராஜாவின் இசை – பாடல்களில்
புத்த சமயக் கோட்பாடுகள் :
நண்பர் மா.அமரேசன், ஆரணியைச் சேர்ந்தவர். புத்தகயாவில் பணியாற்றுகிறார்.
காக்கைச் சிறகினிலே இதழில் ‘ ஞானபூமி புத்தகயா’ என்னும் தொடரை எழுதி வருகிறார்.
‘அறம்‘ வெளியீடாக வெளிவந்திருக்கும், ‘இளையராஜாவின் இசை – பாடல்களில், புத்தசமயக் கோட்பாடுகள் ‘ என்பது அவருடைய 11-வது நூல்.
அவர் புத்தகயாவில் பணியாற்றுவதால், புத்தசமயக் கோட்பாடுகள் பற்றி அதிக அளவில் அறிந்துவைத்திருக்கிறார் என்பது நமக்கு வியப்பேற்படுத்தவில்லை.
ஆனாலும், மற்றவர்கள் தொடத் தயங்கும் ஒரு தலைப்பை, தெரிவு செய்து, கட்டுரைகள் எழுதி, அவற்றைத் தொகுத்து நூலாக்கியிருக்கும் அவரது முயற்சியைப் பாராட்டத்தான் வேண்டும்.
காரணம், ஒருபுறம் இசைஞானி இளயராஜாவின் இசை; இன்னொரு புறம் புத்தசமயக் கோட்பாடுகள். இரண்டுமே ஓங்கி உயர்ந்த இரண்டு சிகரங்கள்; அந்த சிகரங்களின் உச்சியை அடைவது மிகவும் சிரமமான பணி. ஆனாலும், நண்பர் மா.அமரேசன் அதனை முயற்சித்துப் பார்த்திருக்கிறார்.
அந்த முயற்சியில் அவர் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை, இளையராஜாவின் இசையையும், புத்த சமயக் கோட்பாடுகளையும் ஆழமாகக் கற்றுணர்ந்தவர்களால் மட்டுமே சொல்ல இயலும்.
என்னுடைய வாசிப்பில், எனக்குத் தோன்றும் கருத்துகளில் ஒன்றிரண்டை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இளையராஜா இசையமைத்த, ஜனனி ஜனனி, ஆயிரம் தாமரை மொட்டுகளே, பிட்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் அய்யனே, என்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம், என்ன பாட்டு பாட, தும்பி வா, நதியில் ஆடும் பூவனம், எனது உடலும் மனமும் ஆகிய ஏழு பாடல்களை மட்டும் எடுத்துக் கொண்டு அந்த பாடல்களோடு சம்பந்தப்பட்ட புத்தசமயக் கோட்பாடுகளை விளக்கிச் செல்கிறார்.
புத்த மதத்தை, இந்து மதம் அழித்தாலும், மக்களின் மனதிலிருந்து அகற்ற முடியவில்லை என்கிறார்.
/ புத்த சமயத்தினர் வழிபட்ட கடவுள்களை மக்களின் மனதிலிருந்து இந்து மதத்தினால் அழிக்க இயலாததால் அவைகளை இந்து மதம் தன் வசப்படுத்திக் கொண்டது. புத்தரை திருமாலின் அவதாரம் என்று இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவம் தன்னுள் இணைத்துக் கொண்டது. அதே போல் சைவ மதமும் சிவனின் தேவகணங்களில் ஒருவராக புத்தரை ஏற்றுக் கொண்டது. புத்தரின் பல பெயர்களில் ஒன்றான சாஸ்தா மற்றும் அய்யனாரை தன்னுள் இணைத்துக் கொண்டது./
முருகன் வழிபாடு என்பதே, குழந்தை புத்தர்தான் என்றும், பழனி முருகனின் காதில் இருக்கும் பெரிய ஓட்டையே அதற்கு சான்று என்றும் அவதானிக்கிறார்.
“பட்டியலின மக்களின் பவுத்த கூறுகளை நாம் தனியாகத் தேட முடியாது. ஏனெனில், அவர்களின் அகவாழ்வும், புறவாழ்வும் பவுத்த அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது”
“அதைப்போலவே இசைஞானியின் இசையில் உள்ள கட்டுடைத்தலும், புதியவனவற்றை இணைத்தலுமே பவுத்த கூறுகளாகும். அதிலும் அவரின் இசையே பவுத்த உளவியலை உள்வாங்கி அமைக்கப்பட்ட ஒன்றாகும்.”
“ பட்டியலின மக்களின் வாழ்வியலோடு பவுத்தம் கலந்தது எனில் அவர்களின் இசையில் பவுத்தம் கலக்காமல் தனித்திருக்குமா என்ன? என்று சொல்லும் அமரேசன், இசைஞானியின் இசையில் புத்தமதக்கூறுகள் இயல்பாகவே அமைந்திருப்பதற்கும் அதுவே காரணம் என்கிறார்.
கபட புத்தரைப்பற்றிச் சொல்லும் போது, “ பவுத்தத்தின் உயிர்த் தத்துவமான பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்னும் கருத்தியலைக் கைவிட்டு, பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கின்ற நான்கு வர்ணத்தைத் தக்கவைத்துக் கொண்டு, பவுத்த கருத்துகளுக்கு ‘மண்டூகக் காரிகையில் ‘ இந்துமத நோக்கில் உரை எழுதிய காரணத்தாலேயே அவர் கபட புத்தர் என அழைக்கப்பட்டார் .அதிலிருந்து வந்ததுதான் ‘கபடதாரி’ , ‘கபட நாடகம்’ என்னும் சொல்வழக்குகள்” என்று அவர் கூறுவது, புதிய செய்தியாக உள்ளது !
ஜனவரி 2017 ‘ காக்கைச் சிறகினிலே’ இதழில், ‘தைப் பொங்கலும் தமிழ்ப் புத்தாண்டும்’ என்னும் எனது கட்டுரை வெளிவந்தது. அந்த கட்டுரையில் உள்ள ஒரு செய்தியை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
“ பழங்காலத் தமிழகத்தில், போகி அன்று, ஒரு சில கிராமங்களில் ஒப்பாரி வைத்து அழும் வழக்கம் இருந்திருக்கிறது. அது பற்றி அறிஞர்கள் ஆய்வு செய்த போது , அது புத்தர் இறந்த தினம் என்கிற வியக்க வைக்கும் செய்தி தெரிய வந்திருக்கிறது. தமிழ் நிலப்பரப்பில் புத்தமும், சமணமும் செல்வாக்கு செலுத்திய காலத்தில், இந்த பழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.. சைவம் தலையெடுத்து, புத்தமும், சமணமும் திட்டமிட்டு அழிக்கப்பட்ட பிறகு இந்த வழக்கம் மறைந்திருக்கலாம். கூடவே, புத்தர் மறைவு நாள் பற்றிய செய்தியும் காற்றில் கரைந்து போயிருக்கும். “ (ஜனவரி 2017 ‘காக்கை’)
ஆக, பழங்காலத் தமிழகத்தில், பவுத்தம் பரவி, செல்வாக்கு பெற்றிருந்தது என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனாலும், மா.அமரேசன் குறிப்பிடும் இரண்டு செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்று நான் கருதுகிறேன்.
பழங்காலத் தமிழகத்திலேயே, பட்டியலினம் உருவாக்கப்பட்டு விட்டது என்று அவர் கூறுவது, ஒன்று.
இரண்டாவது, பட்டியலின மக்களின் வாழ்வியலில் மட்டுமே புத்தசமயக் கூறுகள் இருப்பதாக அவர் நிறுவ முயல்வது.. அதுதான் உண்மை என்றால், அது எப்படி நேர்ந்தது என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும்.
‘ஆயிரம் தாமரை மொட்டுகளே’ என்னும் பாடலைப் பற்றிய கட்டுரையில், ‘அவர் பாதம் பூமியில் பட்ட இடங்களில் எல்லாம் தாமரை மலர்கள் முகிழ்ந்து எழுந்ததாகவும் வரலாறு சொல்கின்றது “ என்கிறார். இதனை, ‘வரலாறு’ என்று குறிப்பிடுவது, அறிவியல் அடிப்படையில் நெருடலை ஏற்படுத்துகிறது.
“ திருவண்ணாமலை உலகின் மிகப்பழமையான மலை. அதே போல் உலகின் முதன்முதலில் குளிர்ந்த அல்லது உயிரிழந்த எரிமலை என்பதை புத்த சமயத்தவர்கள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்கள்” என்பது அறிவியல் அடிப்படையில் ஏற்கக் கூடியதாக இல்லை.
இந்துமதச் சார்பு உள்ளவர்கள்தான், இதுவரை இப்படிப்பட்ட கருத்தைச் சொல்லி வந்தார்கள். இப்போது, மா. அமரேசனும், புத்தசமய அடிப்படையில் அதே கருத்தை முன்வைக்கிறார்.
ஆக, மதச்சார்பு உள்ளவர்கள் மட்டுமே, திருவண்ணாமலை அவிந்த எரிமலை என்று சொல்லி வருகிறார்கள். மாறாக, இன்று வரை அறிவியல் ஆய்வுகள் எதுவும் திருவண்ணாமைலை, குளிர்ந்த எரிமலைதான் என்று கூறவில்லை என்பது கவனிக்கத் தக்கது.
இந்த நூலை வாசிப்பவர்கள், தேரவாதம், மகாயானம், வஜ்ஜிராயனம் என்னும் பவுத்தத்தின் முப்பெரும் பிரிவுகள் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
மாத்திரமல்ல, சங்கரர், ஆதி சங்கரர், ராமானுஜர், மத்துவாச்சியார், ரமணர், தாராதேவி போன்றோரைப் பற்றிய தகவல்களும் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன.
இசைஞானி இளையராஜாவின் இசை, ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்துத் தரப்பு மக்களையும் கட்டிப் போட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
அந்த பாடல்களில், இயல்பாகவே புத்தசமயக் கூறுகள் கலந்திருக்கின்றன என்பதை இந்நூலின் வாயிலாக வெளிக் கொணர்ந்திருக்கிறார், நூலாசிரியர் மா. அமரேசன்.
புதிய கோணத்தில் சிந்தித்து, கட்டுரைகள் எழுதி, அவற்றைத் தொகுத்து, அச்சு வடிவில் நூலாகக் கொண்டுவந்திருக்கும் நண்பர் மா. அமரேசனுக்கு எனது வாழ்த்துகள்.
சு.இராமசுப்பிரமணியன்,
தோவாளை,
குமரி மாவட்டம்.
mail : srsthovalai@gmail.com
நூல் பற்றிய விபரம்:
வெளியீடு
:
அறம் பதிப்பகம்,
3/584, முல்லை தெரு, கஸ்தூரிபா நகர்,
முள்ளிப்பட்டு கிராமம், ஆரணி வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம் - 632 316
email : ma.amaresan@gmail.com
mobail : 7519413542
பக்கம் 130
விலை ரூ 200-
( நண்பர் அமரேசனின் வேண்டுகோளுக்கு இணங்க, எனது படமும்)

https://www.facebook.com/ramasubramanian.subbiah/posts/909546809239791?__tn__=K-R



Thursday, December 21, 2017

படிக்கவேண்டிய புத்தகம் :

சேரி ரெண்டுபட்டால் - மா. அமரேசன்

அரசின் சலுகைகள் பல பெற்றும் பிற சமூகங்களைப் போல தலித் மக்களின் நிலை அரசியல், சமூகம், வணிகம் உள்ளிட்டவற்றில் ஏன் உயரவில்லை என்பதை ஆய்வுப்பூர்வமாக அலசும் நூல் இது. பிரச்னைகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு, அதற்கான தீர்வுகளையும் தெளிவாக முன்வைத்து விளக்கிப் புரியவைப்பது ஆசிரியரின் எழுத்தாளுமைக்குச் சரியான சான்று. ...See More

Tuesday, September 13, 2016

நத்தையைக் கொன்ற பீரங்கிகள். நுால் விமர்சனம்


பொதுவில் கதை என்பது புனைவு. சில நேரங்களில் நிகழ்வுகளையும், நிகழ்வுக்குரிய பின்னனியை விவரிப்பதையே கதை என்கின்றோம்.  இத்தகைய நிகழ்வின் பின்னனியை  நகைச்சுவையோடு விவரித்தால் அது நகைக்சுவை கதை என அடையாளப்படுத்தபடுகின்றது. அதுவே, குடும்ப பின்புலமாக இருந்தால், குடும்பக் கதை என்று அழைக்கப்படுகின்றது. சம்பவங்களை சரித்திரப் பின்புலத்தில் விவரிக்கும் பொழுது சரித்திரக் கதை என அடையாளப்படுத்தப்படுகின்றது. பொதுவில் கதைகளுக்கான கருப்பொருள் இவ்வகையிலே அமைகின்றது அல்லது அமைக்கப்படுகின்றது.

மேலும், கதை என்பது ஒரு தலைவன், தலைவி, அல்லது குழு, மக்கள் என்று எவரையேனும் ஒருவரை சுற்றிலும் நிகழும் சம்பவங்களால் விவரிக்கப்பட வேண்டும் என்னும் கதைக்கான வரைவிலக்கணத்தை உடைத்துள்ள கதைதான் நத்தையைக் கொன்ற பீரங்கிகள்.
கதையின் இலக்கணத்தின் படி பார்த்தால், திருவள்ளுவர் மாவட்டத்து சேரி மக்கள்தான் கதை தலைவன், தலைவி, மற்றும் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த 50 ஆண்டுகால வரலாறுதான் கதைகளம். இதை கோபி விவரிக்கும் விவரனைதான் இதுவரையிலும் தமிழ் சமூகம் கடைபிடித்து வந்த கதைக்கான கட்டமைப்பை உடைக்கின்றது.
பொதுவில் தலித்துகளுக்கான அடையாளமாக சொல்லப்பட்டிருப்பதை இங்கு நினைக்கத் தோன்றுகின்றது. ஒரு தலித் என்று தம்மை உணர்பவர், இந்த சமூகம் தலித்துகளின் மீது நிகழ்த்தும் அல்லது , உருவாக்கியுள்ள மதம் மற்றும் சாதி, பொருளியல் , அரசியல் சார்ந்த அனைத்து கட்டமைப்புகளையும் உடைப்பவராக இருக்க வேண்டும், அல்லது கேள்விக்கு உட்படுத்துபவராக இருக்க வேண்டும். என்பதே கௌதம புத்தர் தொடங்கி, புரட்சியாளர் அம்பேத்கர் வரை கற்பித்து சென்றுள்ள பாடமாக இருக்கின்றது.
கட்டமைப்புகளை ஏற்றுக் கொள்ளும் போது, கட்டமைத்தவர்களின் ஆளுகையையும் ஏற்றுக் கொண்டவர்களாக நாம் மாறி விடுகின்றோம், அவ்வாறு  கட்டமைப்புகளை ஏற்றுக் கொள்வதன் வாயிலாக, நாம் பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களின் கருத்தியலான, சாதி மற்றும் மதம் குறித்தான கருத்தியலை ஏற்றுக் கொண்டவர்களாகின்றோம், எனில் நாம் தீண்டத்தகாதவர்கள் என்பதை நாமே ஒப்புக் கொண்டு பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திர சாதிகளின் ஆதிக்கத்துக்கு நம்மை ஆட்படுத்திக் கொள்கின்றோம். என்பதே இங்கு நம்மைச் சுற்றிலும் உள்ள கட்டமைப்புகளை ஏற்றுக் கொள்ளும் போது நிகழும் யதார்தமான உண்மையாக இருக்கின்றது.

அவ்வாறு கட்டமைப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது, இந்த சமூகம் கட்டமைத்துள்ள பிறப்பின் அடிப்படையிலான சாதிய பாகுபாடு மற்றும் இழி நிலைகளையும் ஒப்புக் கொண்டவர்களாக ஆகின்றோம், எனவே, தலித் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் பெரும்பாலும் கட்டமைப்புகளை உடைப்பவர்களாகவே  அறியப்படுபவர்களாக இருப்பார்கள், அந்த வகையில்,
நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள், கதை, இதுவரையிலும் சமூகத்தில் கதை குறித்தான கட்டமைப்பை எந்தவிதமான சமரசமும் இன்றி கட்டுடைக்கின்றது. ஐம்பது ஆண்டுகால வட தமிழகத்தின் ஒட்டுமொத்த சேரியின் வாழ்வியலை கதைக்களமாக கொண்டதால் ஒற்றை நபர்களையோ அல்லது கற்றையான நபர்களையோ சுற்றி கதை பின்னப்படாமல், சேரி மக்களின் வாழ்வியலை கதைகளமாகக் கொண்டதால் சம்பவங்களை எழுத்தின் வழி காட்சிப்படுத்துகின்றார் இயக்குனர். நா. கோபி.
சென்னை தமிழ் என்று மெத்த படித்தவர்களாளும், ஆதிக்க சாதிக்காரர்களாலும் அழைக்கப்படுவதன் உள்ளர்தமாக, தமிழ் மொழியின் இழிநிலைக் குறியீடாக உள்ள சென்னை தமிழ் அல்லது சென்னையின் மொழி நடையிலேயே இந்த கதை முழுவதும் அமைந்திருப்பது, இது வரையிலும் உள்ள பொதுப் புத்தியிலுள்ள தென்னக வட்டார வழக்கு உயர்ந்தது, வட வட்டார வழக்கு தாழ்வானது என்னும் கட்டமைப்பை உடைப்பதாகவே இருக்கின்றது.
உண்மையில் சென்னை தமிழ் அல்லது சென்னை மற்றும் அதை சுற்றிலுள்ள மக்களின் மொழி நடை என்பது மற்ற மாவட்டத்து மக்களின் மொழி நடையை விட எந்த வகையிலும் குறைந்ததல்ல. செமை என்று சொல்லப்படுகின்ற சொல், செம்மை என்னும் தமிழ் சொல்லின் மருவு. இஸ்த்துக்கோ எனும் சொல் இழு என்னும் தமிழ் சொல்லின் பேச்சு வழக்கு, இவ்வாறு விவரிப்பது வேறு ஒரு பொருளுக்கு சென்றுவிடும் என்பதால், இத்துடன் இதை நிறுத்திக் கொள்கின்றேன்.
அத்தகைய சென்னையின் மொழிநடையில் இந்த கதை முழுவதும் சொல்லப்பட்டிருந்தாலும், கதையின் முதல் வரியான அப்பா இதுதான் நத்தையா என்பதில் தொடங்கி, இதையெல்லாம் கேட்டுக் கொண்டு காலணி ஆட்கள் உட்கார்ந்து இருந்தாங்க, என்னும் இறுதி வரி வரையிலும் காட்சிகளாக நம்முன் விரியும் வகையிலேயே அந்த மொழி நடை உள்ளது.
ஒரு கதை என்பது நிகழ்வுகளின் காட்சி பின்னல் அதற்கான கருவிதான் எழுத்து அதில் கதை எழுதும் எவரும் கவனம் செலுத்துவதில்லை என்ற உண்மையை உணர்ந்து  கதைக்கான புது இலக்கணத்தை வகுப்பதாகவே உள்ளது  கோபின் மொழி நடை. கதையென்பது வார்த்தைகளின் பின்னல் என்னும் கட்டமைப்பையும் உடைக்கின்றது, கோபியின் எழுத்தும் அதன் காட்சியாக்கமும்.
இந்த கதையை படிக்கும் அனைவரும், கோபி சொல்கின்ற சம்பவங்களை நடைபெறும் இடங்களிலே உள்ள நபர்களுடன் தாங்களும் கை கோர்த்து நிற்பது போன்ற ஒரு உணர்வை கதையின் முதல் வரியிலேயே நமக்கு ஏற்படுத்தும் எழுத்து சூட்சுமம் கதையாசிரியர் கோபிக்கு மிக இயல்பாக வந்திருப்பதை இந்த கதையை படிக்கும் அனைவருமே ஒப்புக் கொள்வர் என்றால் அது மிகையில்லை.
இந்த கதையில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்களை பட்டியலிடுவதன் வாயிலாக, வட தமிழகத்தின் சேரி மக்களின் 50 ஆண்டு கால வாழ்வியலை பட்டியல் இட இயலும் என நினைக்கின்றேன்
1. உறவு முறைகள் ( தாய் வழி சமூகத்து உறவு முறை)
2. பறையர்களின் வாழ்வியல்
a. பறையர்களுக்கான விவசாய அறிவு
b. பறையர்களின் இயற்கை அறிவு
c. பறையர்களின் மன பாவங்கள்
d. ஆண்டைகளின் அரசியலும், அனுகுதலும்,
e. பறையிசை
3. அம்பேத்கர் இயக்கங்கள் சேரிகளில் ஏற்படுத்திய தாக்கம்,
4. பணத்துக்கும் பொருளுக்குமான மதிப்பீடு
5. கூலி உழைப்பு மூலதன பெருக்கம்
6. சுற்றுசூழலுக்கு எதிரான மக்களும் அரசுகளும்
7. நத்தையை கொல்ல பீரங்கிகளை பயன்படுத்தும் அனுகுமுறை அவமானம்.
என்னும் வகையிலே அமைத்திருக்கின்றார் கோபி.


  கதையென்னவோ திருவள்ளுவர் மாவட்டத்தை சுற்றி நிகழ்ந்தாலும், அது பொருந்தும் தளமாக வட தமிழ்நாட்டின் ஒவ்வொரு சேரியும் உள்ளது. இந்த கதையை ஒவ்வொரு சேரிக்கும் பொருத்திக் கொள்ளலாம், அதில் இந்த கதையில் வரும் ஒவ்வொரு மாந்தர்களும் உயிரோட்டத்துடன் கலந்து வாழ்ந்து மறைந்தவர்களாகவே அல்லது வாழ்கின்றவர்களாகவே இருப்பார்கள்.
சேரிகளில் பறையிசை எங்கு ஒலித்தாலும் இந்த கதையில் வரும் புத்தன் மற்றும் அவனுடைய பறையிசைப் பாடம் நிச்சயம் நினைவுக்கு வரும். ஒவ்வொரு காலணியிலும் சிவலிங்கம் அண்ணன்கள் வாழும் வரலாறாக நிற்கின்றனர். மாட்டுகறி என்று உச்சரிக்கும் அனைவருக்கும், மாடறுப்பது எவ்வளவு நுட்பமான வேலை என்பதை மிக நுனுக்கமாக காட்சிபடுத்தியிருக்கின்றார் இந்த கதையில்.
சேரி மக்களின் கதை என்று சொல்லப்படுகின்ற எதிலும் சேரி மக்களின் உணவு முறை குறித்தான விவரனைகள் இருந்ததில்லை. ஆனால் நத்தையைக் கொன்ற பீரங்கிகள் கதை முழுவதும் சேரி மக்களின் உணவு முறைகள் அதை தயாரிக்கும் முறைகள், அதன் சுவை குறித்தான விவரனைகள் வழியாகவே அவர்களின் வாழ்க்கை முறையை விவரித்துச் செல்கின்றார் கோபி.
அதிலும் மாட்டுக்கறி குறித்தான விவரனையும், அதை பயன்படுத்தும் முறை மற்றும் சமைக்கும் உத்தி சேரி வாழ் மக்களின் கதைகள் எதிலும் சொல்லாத செய்தியாகும். நத்தையை கொன்ற பீரங்கிகள் கதை வட தமிழகத்தின் சேரி மக்களின் 50 ஆண்டுகால வாழ்க்கை முறையை மிகத் துல்லியமாக பதிவு செய்திருக்கின்றது.
இன்னும் சற்று மிகையாகச் சொல்வதென்றால், திரமென்ஹர் எழுதிய செங்கல்பட்டு மாவட்ட பறையர் இன குறிப்புகளை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. கோபியின் நத்தையை கொன்ற பீரங்கிகள் கதை. எழுதிய கோபியையும், வெளியிட்ட தடாகம் பதிப்பகத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தமிழர் மருத்துவம் நுால் விமர்சனம்

ரலாறு என்பதன் வடிவங்களும், வழமைகளும் வெவ்வேறானவையாக இருந்தாலும் அதன் விவரிப்பும் விளக்கமும் இரண்டு வகைப்பாடுகளை கொண்டதாகவே இருந்திருக்கின்றது இதுவரையிலும்.
முதலாவதாக ஆட்சியாளர்களின் வராலாறு, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் அருமை பெருமைகளை பேசும் வரலாறு, இதில் ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோபுரத்தை கட்டியது முதல் போஜராஜன் விக்கிரமாதித்யன் அரியாசனையில் அமர்ந்தது வரை பழம் பெருமைகளை பேசுவது.
இரண்டாவது வகை என்பது உழைக்கும் மக்களின் வரலாற்றை அல்லது ஆட்சி அதிகாரத்தில் இருந்து அன்னியப் படுத்தப் பட்டவர்களின் வரலாற்றை பேசுவது. இந்த வகையான வரலாறு என்பது மக்களின் பார்வையில் இருந்து எழுதுவது, இவைகள் பெரும்பாலும் வாய்மொழிப் பதிவுகளாகவோ, கதைப்பாடல்களாகவோ காலம் காலமாக மக்களின் மத்தியில் பேச்சு வழக்கில், கதை வழக்கில், பாடல்களின் வடிவில் இருந்து கொண்டிருப்பதை எழுத்து வடிவமாக கொண்டு வருகின்ற வகையாகும்.
இவை இரண்டு வகையிலும் இல்லாமல் மூன்றாவதாக ஒரு வகையான வரலாற்றை நமக்கு தெரியப்படுத்தும் இன்னும் கூடுதலாக சொன்னால் தெளிவுபடுத்தும் ஒரு புத்தகம்தான் “தமிழர் மருத்துவம்”  


     புத்தரின் போதனைகளில் ஒன்றான, “ மனிதர்களின் பயமே, அவர்களின் பேராசைக்கு காரணமாக இருக்கின்றது” அதனை யார் புரிந்து வைத்திருக்கின்றார்களோ, இல்லையோ, பன்னாட்டு நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கும் இலுமிணாட்டிகள் மிகச் சரியாகவும், நுட்பமாகவும் புரிந்து வைத்திருக்கின்றனர். 
      அதனால்தான், பன்ணாட்டு நிறுவனங்களின் பொருளை விற்பதற்காக, விளம்பரங்கள் என்னும் பெயரால் நம்மை பயமுறுத்துகின்றனர். உண்மையில் எல்லா விளம்பரங்களின் மையக் கருத்தும் நம்மை அச்சுறுத்துவதாகவே அமைந்திருக்கும், இதனை நாம் மேலோட்டமாக கவனித்தாலே தெரியும், அந்த பயத்தின் அடிப்படையிலேயே, நாம் அவர்கள் சொல்லும் பொருளை வாங்கத் துவங்குகின்றோம்.
      இது ஒரு சிறிய உதாரணத்திற்காக சொல்லப்பட்டது, இத்தகைய பயத்தின் அடிப்படையில் பன்ணாட்டு நிறுவனங்களின் முதலாளிகள், நமது வாழ்வை, கலாச்சாரத்தை, மனோபாவத்தை, மருத்துவத்தை எப்படி மாற்றினார்கள், மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அழுத்தத்தோடும், ஆதங்கத்தோடும் பதிவு செய்யும் நுால்தான் தமிழர் மருத்துவம்.
      நுகர்வு கலாச்சாரத்தின் பின்னே கண்களைக் கட்டிக் சென்று கொண்டிருக்கும் தமிழ் சமூகத்தின் வாழ்வியலை சற்றேனும் திரும்பிப் பார்க்க வைக்கின்ற ஒரு புத்தகம் என சொன்னால் அது “ தமிழர் மருத்துவம்” புத்தகம் மட்டுமே, நேர்காணலாகவும் இல்லாமல், செவ்வி வகையாகவும் இல்லாமல், மருத்துவர். திரு. மைக்கேல் செயராசுடன், ஒரு இயல்பான உரையாடலாக தொடங்கி, வரலாறாக விரிகின்றது இந்நுால்.
      இந்நுாலின் மொத்த பக்கங்கள், 95, இவற்றில் மருத்துவருடன் உரையாடும் போது கேட்கப்பட்ட விளக்கங்களாக உள்ளவை மொத்தம் 81 கேள்விகள்.
·         மூலிகைகள் குறித்து – 03
·         இயற்கை குறித்து    - 10
·         குளியல் குறித்து     - 03
·         ஆளுமைகளை குறித்து – 03
·         இலக்கியம் குறித்து    – 06
·         உணவு முறைகள் குறித்து – 12
·         சித்தர்கள் குறித்து        - 02
·         மருத்துவரது குடும்பம் குறித்து – 02
·         சித்த மருத்துவம் குறித்து – 40 கேள்விகள் என மொத்தம் 81 கேள்விகளுக்கான விடையாக இந்த புத்தகம் இருந்தாலும், இதன் உள்ளடக்கம் என்னவோ தமிழர் மருத்துவம் மற்றும் வாழ்வியலின் மீட்டுருவாக்கமாகவே இருக்கின்றது.
o    சித்த மருத்துவம் தொடர்பான 40 கேள்விகளின் உட்கூறாக
§  மருத்துவ முறைப்பாடுகள் குறித்து – 06
§  மருந்து செய்முறைகள் குறித்து – 05
§  நாட்டு மருத்துவர் என்போரைக் குறித்து – 02
§  போலி மருத்துவர்களைக் குறித்து – 03
§  சித்த மருத்துவர்களைக் குறித்து – 06
§  சித்த மருத்துவம் குறித்து – 18  ஆகிய வினாக்களுக்கான விடைகளாக இல்லாமல் வரலாறாக பதிலளித்திருக்கின்றார் மருத்துவர். மைக்கேல் ஜெயராஜ்.
அறிஞர். கார்ல்டு வெல், மற்றும் மொழிஞாயிறு. தேவநேயப் பாவாணர், ஆகிய இருவருக்குப் பின் அண்மைக் காலத்தில் மருத்துவர். மைக்கேல் செயராசு அவர்கள் மட்டுமே அழுத்தம் திருத்தமாக, இந்திய வரலாற்றை இமய மலையில் இருந்து பார்க்க வேண்டாம், தென் குமரியில் இருந்து பாருங்கள் என சொல்கின்றார். முன்னவர்கள், மானுடவியல் மற்றும் மொழியியல் நோக்கில் கூறியிருக்கின்றனர். ஆனால் மருத்துவர் செயராசு அவர்கள், தாவரவியல் நோக்கிலும், மருத்துவத்தின் அடிப்படையிலும் இந்த கருத்தை ஆணித்தரமாக சொல்லுகின்றார்.
   சுற்றுச்சூழல் நோக்கில் இல்லாமல் தாவரவியல் அடிப்படையில், உயிர்சூழல், பல்லுயிர் மண்டலம், ஆகியவற்றை மரங்கள், ஆறுகள், மூலிகைகள் அடிப்படையில் ஒன்றை ஒன்று சார்ந்து தங்களுக்குள் தாமே எவ்வாறு கட்டமைத்துக் கொண்டன என்பதை இவர் விவரிக்கும் போக்கு படிப்பவர்களையும் தாவரவியல் ஆய்வாரளர்களாகவும் மருத்துவர்களாகவும் உருவாக்கும் வகையில் இருக்கின்றது என்றால் அது துளியும் மிகையில்லை.
இந்தியா முழுமையும் ஆண்ட ஆங்கிலேய அதிகாரிகள் இங்கிலாந்தில் இருந்த அரசியாருக்கும் அவருடைய அதிகாரிகளுக்கும் அனுப்பிய  மாதாந்திர பணி அறிக்கை  (Monthly Work Reports)  மற்றும் தேவை கண்டறியும் அறிக்கை     ( Need Assessment Report)  பிரச்சனைகளுக்கான காரணம் குறித்தான அரசின் நடவடிக்கைக்காக அனுமதி கோரும் அறிக்கை (Special Report with the Issue based)  ஆகிய அறிக்கைகளை தொகுத்த விவரங்களைத்தான் நாம் இன்றும் மெக்காலே கல்வி திட்டத்தில் வரலாறாக படித்துக் கொண்டிருக்கின்றோம்.
   அதையும்தான்டி, 300 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மெய்யியல், மெய்மையியல் அறிவை சுதந்திரத்திற்கு பின்பும் மீட்டெடுக்க முனையாமல் அடிமைகளை தக்க வைத்துக் கொண்டு ஆட்சியாளர்களை மாற்றி விட்டு சென்றாதால் வந்த வினையிது என்பதையும் லேசாகத் தொட்டுக் காட்டுகின்றார்.
   நம்மை விட பாரம்பரியமும், வரலாறும் குறைவுபட்ட நாட்டினரும், மொழியினரும், தனக்கான மெய்யியல் அறிவையும் மெய்மை கோட்பாட்டையும், மருத்துவ மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தையும், தலைமுறை தலைமுறையாக காப்பாற்றிக் கொண்டு வரும் போது, நாம் மட்டும் அவ்வாறு காப்பாற்ற தவறியதன் காரணம் என்ன என்ற கேள்வி அனைவரையும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்ற கேள்வியாக உள்ளது. இந்த புத்தகத்தை படித்து முடித்த பிறகு அனைவருக்கும் தோன்றும் வினாவாக இது உள்ளது.
உதாரணமாக மருத்துவர் சொல்கின்ற பிரண்டையின் வகைகள், மரங்களின் வகைகள், ( சந்தனம், கடம்பு, ) செடிகளின் வகைகள் ( துளசி, நொச்சி) ஆகியவற்றின் தன்மை, மற்றும் பெயர்காரணத்தை நாம் விளங்கிக் கொண்டாலே, நமது பாராம்பரிய தாவரவியல் மதி நுட்பத்தையும் பயன்பாட்டையும் நம்மால் உணர்ந்து கொள்ள இயலும்.
   இந்த நுாலின் மையக்கருத்தாக அமைந்துள்ள விவரங்கள்
·         இயல் தாவரங்கள்
·         அயல் தாவரங்கள்
·         தமிழர் மெய்யியல்
·         தமிழர்களின் தாவரவியல் அறிவு
·         ஐம்பூதக் கோட்பாடு
·         பழங்குடிகளின் மருத்து அறிவு
·         ஆசிவகம்
·         தமிழர்களின் உரிமை கோரும் மனப்பான்மையின்மை ( எனது ஊர் என் மக்கள், என் வரலாறு)  ஆகிய விவரங்களைத் தமது உரையாடல் வழியாகத் தொட்டுச் செல்கின்றார்.
இயல் தாவரங்கள் என்னும் வகைப்பாட்டில் இந்த மண்ணில் இயல்பாக தோன்றிய தாவரங்களை வகைப்படுத்துகின்றார், அதிலும் பெரும்பாலும் தென் பொதிகை மலைச்சாரலில் உள்ள மரம், செடி கொடிகளை முன்னிலைப்படுத்துகின்றார், ஏனெனில் அவைகள் பல்லுயிர் சூழல் பெருக்கத்திற்கும் சித்த மருத்துவத்திற்கும் மிகுதியாகப் பயன்படுவதால்.
   அயல் தாவரங்கள் என்னும் வகைப்பாட்டில் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு இந்த மண்ணில் நடப்பட்டு வளர்ந்துவரும் மர வகைகளான, யூகலிப்பட்ஸ், சீமை கருவேலம், பார்த்தீனியம் செடி ஆகியவற்றையும் அவற்றால் இந்த மண்ணும் மக்களும், எவ்வாறு பாதிக்கப்படுகின்றன, என்பதையும் மிகுந்த வேதனையோடு சுட்டிக் காட்டுகின்றார். அதிலும் இந்துக்கள் அதிகம் வழிபடும் மூலிகை மலையாகக் கொண்டாடப்படும் சதுரகிரி மலையில் உள்ளது யாவும் பார்த்தீனியம் செடிதான் என்றும், அதை கவனிப்பவரும் , களைபவரும் யாரும் இல்லை என்றும் ஆதங்கப்படுகின்றார்.

மெய்யியல் என்பது, நமது உடலுக்கும், இயற்கை சூழலுக்கும் உள்ள தொடர்பை உணர்ந்து ஒத்திசைந்து வாழ்வதாகும், அவ்வாறாக தமிழர் மெய்யியல் என்று மருத்துவர் குறிப்பிடுவது ஆசிவகத்தை பேராசிரியர். நெடுஞ்செழியன் நுால் வழியாக முன் மொழிகின்றார், ஆசிவகம், சமணம், மற்றும் பௌத்தம் ஆகிய மதங்கள் மட்டுமே அறிவியல் நோக்கில் எழுந்த மதங்களாகும், மற்ற வைதீக மதங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்தவைகளாகும்.
 அடிப்படையில் ஆசிவகம், மற்றும் பௌத்தம் ஆகிய மதங்களில் நோய் எனப்படுவது நம் உடலில் உள்ள ஐம்பூதங்களின் குறைபாடுகளே ஆகும். ஐம்பூதங்களை சமப்படுத்துதல் என்பதே இந்த மதங்களின் மருத்துவ முறையாக உள்ளது. சித்த மருத்துவம் என்பதும் ஐம்பூத கோட்பாடு என்பதன் வழியாக சித்த மருத்துவத்தின் பூர்வீகம் சைவ சமயம் அல்ல என்பதையும் விளக்குகின்றார்.
மேலும் பொதிகை மலை பௌத்ததுடன் தொடர்புடைய மலை என்பதையும் ஐயத்திற்கு இடமின்றி சொல்லும் மருத்துவரை நாம் பாராட்டத்தான் வேண்டும். இறுதியாக சித்த மருத்துவம் பயிலுவோருக்கும், மருத்துவத்தின் மீது ஆர்வமுடையயோருக்கும் இந்த நுால் ஒரு நுனுக்கமான கையேடாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
கேள்விகளை கேட்ட திரு. சண்முகானந்தம், மற்றும் தயாளன் அவர்களை பாராட்டுவதோடு, பதிப்பித்த தடாகம் பதிப்பகத்துக்கும் வாழ்த்துக்கள்.
நுாலின் பெயர்  - தமிழர் மருத்துவம் – மருத்துவர் மைக்கேல் செயராசு நேர்காணல்,
பக்கங்கள் 95
விலை 70
பதிப்பகம் – தடாகம் வெளியீடு

  • மருத்துவர் மைக்கேல் செயராசு கை பேசி எண் 

Tuesday, June 7, 2016

புலரும் அறத்தின் காலை – நுால் விமர்சனம்

புலரும் அறத்தின் காலை – நுால் விமர்சனம்
                                                    
அவர்கள் பார்வையில்
எனக்கு –
முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை

அவர்களின் பார்வையில் –
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன.

சமையல் செய்தல்
படுக்கையை விரித்தல்
குழந்தையை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமைகள் ஆகும்.

கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கும்
அவர்கள்
எப்போதும் எனது உடலையே நோக்குவர்

கணவன் தொடக்கம்
கடைக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம்
-    அ.சங்கரி – சொல்லாத சேதிகள் நுாலில்.

இந்த கவிதையின் உரையாடல் வடிவமாகவே பேராசிரியர். அரங்க மல்லிகா அவர்களின் புலரும் அறத்தின் காலை புத்தகத்தை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
பெண்ணியவாதி, கவிஞர், கட்டுரையாளர், எழுத்தாளர், பேராசிரியர், இலக்கிய ஆளுமை, தலித் சிந்தனை மற்றும் செயல்பாட்டாளர் அரங்க மல்லிகா அவர்களை இந்த  சமூகம் எப்படி புண்படுத்தியது என்பதே புலரும் அறத்தின் காலை நுாலின் சாரம். அல்லது இந்த சமூகத்தின் மீது அவருக்கு இருக்கும் கோபமே “புலரும் அறத்தின் காலை” யாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
புலரும் அறத்தின் காலை என்னும் தலைப்பே ஏதே ஒரு கவிதையிலிருந்து எடுத்த தலைப்பை போலவே உள்ளது. இந்த தலைப்பே ஒரு எதிர்மறையான தலைப்பாக இருக்கின்றது நடப்பு சமூகத்துக்கு. பேராசிரியைக்கு அறம் தவறிய இந்த  சமூகத்தின் மீதுள்ள கோபமே புலரும் அறத்தின் காலை என்னும் தலைப்பாக வெளிப்பட்டுள்ளது.
நுாலில் புகுமுன் அறம் என்பது என்ன என்றும் அது எந்த பொருளில் இந்த நுாலில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் அறிய வேண்டியுள்ளது. பொதுவாக அறம் என்றவுடன் “ அறம் செய்ய விரும்பு” என்னும் அவ்வையாரின் ஆத்திச்சூடி முதல்வரியுடன் நிறுத்திக் கொள்கின்றோம். சைவ மத நோக்கில் பொருள் கொள்ளப்பட்ட ஆத்திசூடியின் அறம் செய்ய விரும்பு என்னும் பாடலுக்கு “ தருமம் செய்ய ஆசைப்படு ( ஆசை மட்டுமே பட வேண்டும் செயல் படுத்தக்கூடாது )என்னும் விளக்கம் தரப்பட்டிருக்கின்றது இதுவரையிலும்.
சமண சமய நோக்கில் அறம் என்று கட்டமைக்கப்படுவது, “ அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் இழுக்கா இயன்றது அறம் ( குறள் – 35)
1.   பொறாமை
2.   பேராசை
3.   கோபம்
4.   சுடு சொல் ஆகிய இவை நான்கையும் நீக்கி வாழ்வது  அறம் என வள்ளுவர் வரையறுக்கின்றார்.
பௌத்த நோக்கில் அறம் என்பது ஐந்தொழுக்க நெறிகளுக்கு உட்பட்டு வாழ்வதே அறம் என்று வறையறுக்கப்பட்டுள்ளது. ஐந்தொழுக்கங்களையே பஞ்சசீலம் என்றும் அழைக்கின்றனர் பௌத்த சமயத்தினர். அவை
1.   உயர்வதை புரிவதை தவிர்த்திடும் ஒழுக்கம்
2.   பிறர் பொருளை கவர்தலை தவிர்த்திடும் ஒழுக்கம்
3.   பொய் பேசுவதை தவிர்த்திடும் ஒழுக்கம்
4.   பிறன்மனை நயக்கும் காமத்தை தவிர்த்திடும் ஒழுக்கம்
5.   மனதை மயக்கும் மது, புகையிலை, போன்ற போதை பொருள்களை தவிர்த்திடும் ஒழுக்கம்  ஆகிய ஐந்து ஒழுக்கங்களை வாழ்வில் கடைபிடிப்பதே அறம் என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

பொதுவில் சமய நோக்கமின்றி அறத்தை விளக்குவதாயின், எண்ணம், சொல், செயல் இவைகளில் நீதியையும் நேர்மையையும் கடைபிடித்து வாழ்வதே அறம் என கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றோம். அறத்திற்கான விளக்கமாக இதை சொல்லும் போது அறத்தை போதிக்கும் நுால்கள் என பேராசிரியை பதினென் கீழ் கணக்கு நுால்களையே தமிழ் இலக்கியத்தில் அற நுால்கள் என குறிப்பிடுகின்றார் அவை.
7.     ஏலாதி
16.  [இன்னிலை]]
அறம் போதிக்கும் இந்நுால்கள் கீழ் கணக்கு என வகைப்படுத்தியதில் இருந்து இந்நுால்கள் ஒரு வகையான புறக்கணிப்புக்கு ஆளாகியிருக்கின்றன என்பவற்றை மிகத் தெளிவாக வரையறுக்கின்றார். அவ்வாறாயின் அறத்ததை போதிக்காத மற்றை நுால்கள் பதினென் மேற்கணக்கு என பெயரிட்டழைப்பதன் நோக்கம் என்ன என நோக்கும் போது வரலாற்றில் நெடுங்காலந்தொட்டே, அறம் மற்றும் அறம் அல்லாதவற்றிக்கான போராட்டம் நடந்து கொண்டே இருந்திருக்கின்றது, என்பதை அறம் சார்ந்த நுால்கள் பதினென் கீழ் கணக்கு நுால்களே என்று கூறுவதில் இருந்து அறிய முடிகின்றது.



அறம் குறித்த கருத்துக்கள் மற்றும் நுால்களின் படி இன்றைய நமது வாழ்க்கை முறையானது அறம் சார்ந்த வாழ்க்கை முறையை நாம் வாழவில்லை, மாறாக அறத்திற்க்கு எதிரான ஒரு வாழ்வை நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்று நாம் கடைபிடித்துக் கொண்டிருக்கும் மதம், சாதி, பண்பாடு, ஆகியவைகள் அனைத்தும் அறத்திற்க்கு எதிரானவைகளாகவே இருக்கின்றன. என் மதம் உயர்ந்தது என்றொருவன் சொல்லும் பொழுது இயல்பாகவே அடுத்தவன் மதம் கீழான மதமாகின்றது, என் சாதி உயர்ந்தது என்று சொல்லும் போதும் இதேதான் நிகழ்கின்றது, பண்பாடு என்பது இன்றைக்கு நல்லவனாய் இருப்பதை விட வல்லவனாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன் மொழிகின்றது, இன்னும் தெளிவாக சொல்வதென்றால், “ நாலு பேருக்கு நல்லது என்றால் எதுவும் தப்பில்லை” அதாவது நாலு பேருக்காக நாற்பது பேரையும் கொள்ளலாம், துன்புறுத்தலாம், என்பன போன்ற வன் முறைகளை நியாயப்படுத்தும் சமூகமாகத்தான் இன்றைய சமூகம் இருக்கின்றது.
புலரும் அறத்தின் காலை புத்தகத்தின் மொத்த பக்கங்கள் 130, இதில் உள்ள மொத்த கேள்விகள் 125. இவற்றில் பேராசிரியை அவர்களின்
·         தன் அனுபவ பகிர்வு கேள்விகள் – 39
·         சாதியம் குறித்த கேள்விகள்     - 12
·         பெண்ணியம் குறித்த கேள்விகள் – 20
·         சிறுபத்திரிகை குறித்த கேள்விகள் – 02
·         பௌத்தம் குறித்த கேள்விகள் -     12
·         அரசியல் குறித்த கேள்விகள் –      07
·         இலக்கியம் குறித்த கேள்விகள் -    33
இந்த புத்தகத்தில் உள்ள சற்றேறக்குறைய உள்ள 4420 வரிகளுக்குள் உள்ளவைகள்  யாவும் இரண்டு செய்திகளை சொல்கின்றன. ஒன்று பேராசிரியை அவர்களுக்கு ஆண் சமூகம் தந்த வலி, மற்றொன்று தலித்துகள் மீது நிகழ்ந்த, நிகழும் வன்முறைகளின் வரலாறு என எழுத்துக்களின் இடையே வலியையும் வரலாற்றையும் மறைத்து வைத்திருக்கின்ற புத்தகமாக இது உள்ளது.
      இந்த புத்தகத்தை படிக்கும் எவருக்கும் பேராசிரியை விவரிக்கும் நோக்கில் இயல்பாகவே தன்னையும் பொருத்திப் பார்த்துக் கொள்ள துாண்டுகின்றது, அதுவே இந்த புத்தகத்தின் வெற்றியாக அமைகின்றது. உதாரணத்திற்கு ஒன்றை சொல்ல வேண்டுமெனில், பேராசிரியை அவர்களின் ஆரம்ப கல்வி குறித்து பேசும் போது, தான் நன்றாக படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் தலித் என்பதாலேயே, வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும், மதிப்பெண்கள் குறைத்து போட்டதாகவும் சொல்கின்றார். உண்மையில், அவருக்கு ஏற்பட்ட நிகழ்வு ஆரம்ப கல்வி படித்து கொண்டிருந்த அனைத்து தலித்துக்குமே ஏற்பட்டிருக்கின்றது, ஆனால் அதை படிக்கும் போதுதான் நாம் நமக்கும் இது நிகழ்ந்தது, இப்படி நிகழ காரணமாக இருந்தது, கற்பிப்போருக்குள் இருந்த சாதிய மனோபாவம் என்பதை உணர்கின்றோம்.
      அதே வேலையில் தலித்துகளின் தலைநிமிர்ந்த வாழ்வுக்கு முதல் காரணியாக இருக்கின்ற கல்வியானது, கல்விகூடத்தில் எத்தகைய சாதுர்யத்துடன் மறுக்கப்படுகின்றது, நன்றாக படிக்கின்ற மாணவர்கள் எப்படி திட்டமிட்டே கல்வியின் மீது ஆர்வம் குறையவும், இடைநிற்க்கவும் ஆசிரியர்களால் துாண்டப்படுகின்றனர் என்பதை உள்ளங்கை நெல்லிக் கனி போல விளக்குன்றார். இன்றைக்கும் அரசு பள்ளிகளில் தலித் பிள்ளைகள் நடத்தப்படும் விதம், அவர்களை எடுபிடி அடியாட்களாக ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை, இந்த சூழ்நிலைக்கு பழகாத மாணவர்கள் இடை நிற்க்கும் அவலம் ஆகிய அனைத்தையும் நுாலின் ஆரம்ப அத்தியாங்களிலே நீரோடை போல தெளிவாக சொல்லி நம்மையும் அந்த சூழலுக்கே இட்டு சென்று உணர்த்துகின்றார் ஆசிரியர்.
      அதே போல் தேவதாசி முறை ஒழிந்தது என்று பெருமை பேசிக்கொள்ளும் நபர்களைப் பார்த்து, தேவதாசி முறை ஒழிப்பிற்க்கு முனைப்பு காட்டும் உங்களால் தலித் சமூகத்துக்குள் நடந்து கொண்டிருக்கும் மாத்தம்மா முறையை ஏன் ஒழிக்க முன் வரவில்லை என்று கேள்வியும் கேட்டு விளக்கமாய், தேவதாசி முறை என்பது ஆதிக்க சாதிகளுக்குள் நிகழ்ந்தது, மாத்தம்மா என்னும் பொட்டு கட்டும் முறை தலித்துகளுக்குள் நிகழ்வது, எனவே இந்த சமூகத்தில் தலித் பெண்களுக்கு நிகழும் இழிவை குறித்து யாரும் பேசுவதில்லை என்று எழுத்து சாட்டையால் விளாசுகின்றார்.
      தமிழ் துறை பேராசிரியர் என்பதால் தமிழ் கல்வி குறித்தும் அதிலுள்ள குறைபாடுகள் குறித்தும் கூட பேசுகின்றார். இன்றைய கல்வி முறையில் தமிழில் பேசும் முறை குறித்தும், தமிழில் எழுதும் முறை குறித்தும், கரிசனப்படுகின்றார். தமிழ்நாட்டில் தமிழில் பேசுவதற்க்கும் , எழுதுவதற்க்கும் கூட பயிற்சி அளிக்கப்படவில்லை என்று கல்வி முறையின் அடிப்படை கேளாற்றை எளிதாக  அதே வேலையில் நுட்பமான புரிதலுடன் விளக்குகின்றார்.
      தற்போதுள்ள சமூகங்களை தலித் சமூகம் மற்றும் பொது சமூகம் என இரண்டாக பிரித்து, பொது சமூகத்தின் பத்திரிகைகளை பெரும் பத்திரிகை என்றும், தலித் சமூகத்துக்கான பத்திரிகையை சிறு பத்திரிகை என்றும் பிரித்து பட்டியல் இடுகின்றார். இன்றைய இலக்கிய வாசிப்பு உலகில் பெரும் பத்திரிகை என்பவைகள் பார்பணிய கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கின்ற அமைப்பாகவும், பொய்யுரைத்து புகழ் மற்றும் பணம்  சேர்க்கும் பத்திரிகையாகவும் ஆசிரியர் சுட்டுகின்றார். சிறு பத்திரிகைகள் என்பவை உழைக்கும் மக்களின் கருத்துக்களை கொண்டவை என்பதால் அவற்றில் மக்களின் நலன் சார்ந்த எழுத்துக்களே இடம் பெறுகின்றன என்பதால் சிறு பத்திரிகைகளை வாசிக்க வலியுறுத்துகின்றார். அவ்வாறு  அவர் வாசிக்க முன் மொழியும் சிறு பத்திரிகைகளாக
1.   மேலும்
2.   நிறப்பிரிகை
3.   நிகழ்
4.   தலித் முரசு
5.   புதிய கோடாங்கி
6.   களம்
7.   மந்திரச் சிமிழ்
8.   தடம்
9.   தளம்
10.  யுகமாயினி
11.  கல்குதிரை
12.  கல்வெட்டு பேசுகிறது ஆகிய இதழ்களை வாசகர்களுக்கு படிப்பதற்காகவும் அறிவை பெருக்கிக் கொள்ளவும் முன் மொழிகின்றார்.
நல்ல நுால்களை வாசிப்பவனே நல்ல வாசகன் ஆகின்றான், நல்ல வாசகனே சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் சமூக செயல்பாட்டாளான் ஆகின்றான் என்ற புரிதலோடு சில நல்ல நுால்களையும் வாசகனுக்கு முன் மொழிகின்றார் அவை.
1.   தமிழ் இலக்கியத்தில் பெண்ணியம்
2.   பெண்ணியக் குரல் அதிர்வும் தலித் பெண்ணிய உடல் மொழியும்
3.   வழிகாட்டுதலும் ஆலோசனை கூறுதலும்
4.   நீர் கிழிக்கும் மீண்கள்
5.   பெண்ணின் வெளியும் இருப்பும்.
6.   தலித் பெண்ணிய அழகியல்
7.   தலித் அறம்
8.   கருப்பு பெண்ணியம் ( Aren’t I a women )
9.   Golden Treasury
10.  மரப்பசு
11.  மோகமுள்
12.  செம்பருத்தி
13.   நாளை மற்றொரு நாளே
14.  ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
15.  புளியமரத்தின் கதை
16.  தோட்டியின் மகன்
17.  அஞ்ஞாடி
18.  கோவேறு கழுதை
19.  ஆறுமுகம்
20.  செடல்
21.  கருப்பர் பெண்ணியம்
22.  கவலை
23.  மீண்டும் ஆதியாகி
24.  கருக்கு
25.  ஆனந்தாயி
26.  பழையன கழிதல்
27.  சுவற்றுக்கு வெளியே இருக்கிற கிராமங்கள்
28.  ஆல்பர்ட்
29.  குட்டி இளவரசன் ஆகிய நுால்களை வாசகனுக்கு முன் மொழிகின்றார்.
தன் வாழ்வில் சம்பந்தப்பட்ட நபர்களாகவும், அல்லது தான் வியந்த ஆளுமைகளாக சிலரையும் ஆசிரியர் முன் மொழிகின்றார்.
1.   அம்மா – அஞ்சுகம்
2.   அப்பா – ரெங்கசாமி
3.   அக்கா – செந்தமிழ் செல்வி
4.   அண்ணன் – இராசேந்திரன்
5.   முனைவர். தேவதத்தா
6.   கலைஞர் – கருனாநிதி
7.   மிசோரம் ஆளுனர். அ. பத்தநாபன்
8.   குட்டி ரேவதி.
9.   மாலதி.மைத்திரி
10.  சுகிர்தராணி
11.  முபின் சாதிகா
12.  சில்வியா பிளாத்
13.  ராஜம் கிருஸ்ணன்
14.  ஜெயகாந்தன்
15.  வண்ணநிலவன்
16.  வண்ணதாசன்
17.  நாஞ்சில் நாடன்
18.  நகுலன்
19.  இமயம்
20.  ஸ்ரீதர கணேசன்
21.  பெருமாள் முருகன்
22.  தமிழ் செல்வி
23.  பாமா
24.  சிவகாமி
25.  அழகிய பெரியவன்
26.  ஆ. மார்க்ஸ்
27.  தீபச் செல்வன்
28.  ராஜ்கௌதமன்
29.  பஞ்சாங்கம்
30.  செந்தில் குமார்
31.  யாழன் ஆதி. 
ஆகிய எழுத்தாளர்களை சமூகத்துக்கான எழுத்தாளர்களாக அடையாளப்படுத்துகின்றார்.
.இலக்கியத்தில் அடித்தட்டு மக்களின் பால் கரிசனம் கொண்டவர்களாக அவர்களின் குரலை ஒலித்தவர்களாக
1.   மணிமேகலை
2.   ஓளவையார்
3.   வெள்ளி வீதியார்
4.   நச்செல்லையார்
5.   ஆண்டாள்
6.   குண்டலகேசி ஆகியோர்களை முன்மொழிகின்றார்.

இறுதியாக, இந்த சமூகம் ஆணாதிக்க சமூகமாக உள்ளதால் இயற்கையாகவே இது பெண்களுக்கு எதிரான சமூகமாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற சமூகத்தின் இழிநிலையை ஒளிவு மறைவில்லாமல் உணர்த்துகின்றார். பெண்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சமூகத்தை பெண்ணியம் X தலித் பெண்ணியம் என்ற விளக்கத்தை சொல்லும் போது எளிதாகவும் ஆழமாகவும் விளக்குகின்றார். இந்த புத்தகத்தின் சாரமாக பெண்கள்தான் அறம் என்றும் அவர்கள் மட்டும்தான் அறம் சார்ந்த வாழ்வை வாழ்கின்றனர் என்றும் உணர்த்துகின்றார், ஆயினும் பெண்களுக்கான விடுதலை என்பதே அறத்துக்கான விடுதலை என்ற கருத்தை மிக நுட்பமாக முன்மொழிந்து அனைவரையும் அறம் சார்ந்த வாழ்வை வாழ வலியுறுத்தும் படைப்பாகவே புலரும் அறத்தின் காலை நுால் உள்ளது. கேள்விகளை கேட்ட முபின் சாதிகா அவர்களுக்கும் வெளியிட்ட கலைஞன் பதிப்பகத்தையும் இந்த புத்தகத்துக்காக தமிழ் கூறும் நல்லுலகம் பராட்ட கடமை பட்டிருக்கின்றது.

- நன்றி. காக்கை சிறகினிலே மாத இதழ். பிப்ரவரி 2016 

இதையும் படியுங்கள்