Wednesday, September 5, 2018

நூல் அறிமுகம் -1

இளையராஜாவின் இசை – பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள் :

நூல் அறிமுகம்
இளையராஜாவின் இசை – பாடல்களில்
புத்த சமயக் கோட்பாடுகள் :
நண்பர் மா.அமரேசன், ஆரணியைச் சேர்ந்தவர். புத்தகயாவில் பணியாற்றுகிறார்.
காக்கைச் சிறகினிலே இதழில் ‘ ஞானபூமி புத்தகயா’ என்னும் தொடரை எழுதி வருகிறார்.
‘அறம்‘ வெளியீடாக வெளிவந்திருக்கும், ‘இளையராஜாவின் இசை – பாடல்களில், புத்தசமயக் கோட்பாடுகள் ‘ என்பது அவருடைய 11-வது நூல்.
அவர் புத்தகயாவில் பணியாற்றுவதால், புத்தசமயக் கோட்பாடுகள் பற்றி அதிக அளவில் அறிந்துவைத்திருக்கிறார் என்பது நமக்கு வியப்பேற்படுத்தவில்லை.
ஆனாலும், மற்றவர்கள் தொடத் தயங்கும் ஒரு தலைப்பை, தெரிவு செய்து, கட்டுரைகள் எழுதி, அவற்றைத் தொகுத்து நூலாக்கியிருக்கும் அவரது முயற்சியைப் பாராட்டத்தான் வேண்டும்.
காரணம், ஒருபுறம் இசைஞானி இளயராஜாவின் இசை; இன்னொரு புறம் புத்தசமயக் கோட்பாடுகள். இரண்டுமே ஓங்கி உயர்ந்த இரண்டு சிகரங்கள்; அந்த சிகரங்களின் உச்சியை அடைவது மிகவும் சிரமமான பணி. ஆனாலும், நண்பர் மா.அமரேசன் அதனை முயற்சித்துப் பார்த்திருக்கிறார்.
அந்த முயற்சியில் அவர் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை, இளையராஜாவின் இசையையும், புத்த சமயக் கோட்பாடுகளையும் ஆழமாகக் கற்றுணர்ந்தவர்களால் மட்டுமே சொல்ல இயலும்.
என்னுடைய வாசிப்பில், எனக்குத் தோன்றும் கருத்துகளில் ஒன்றிரண்டை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இளையராஜா இசையமைத்த, ஜனனி ஜனனி, ஆயிரம் தாமரை மொட்டுகளே, பிட்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் அய்யனே, என்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம், என்ன பாட்டு பாட, தும்பி வா, நதியில் ஆடும் பூவனம், எனது உடலும் மனமும் ஆகிய ஏழு பாடல்களை மட்டும் எடுத்துக் கொண்டு அந்த பாடல்களோடு சம்பந்தப்பட்ட புத்தசமயக் கோட்பாடுகளை விளக்கிச் செல்கிறார்.
புத்த மதத்தை, இந்து மதம் அழித்தாலும், மக்களின் மனதிலிருந்து அகற்ற முடியவில்லை என்கிறார்.
/ புத்த சமயத்தினர் வழிபட்ட கடவுள்களை மக்களின் மனதிலிருந்து இந்து மதத்தினால் அழிக்க இயலாததால் அவைகளை இந்து மதம் தன் வசப்படுத்திக் கொண்டது. புத்தரை திருமாலின் அவதாரம் என்று இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவம் தன்னுள் இணைத்துக் கொண்டது. அதே போல் சைவ மதமும் சிவனின் தேவகணங்களில் ஒருவராக புத்தரை ஏற்றுக் கொண்டது. புத்தரின் பல பெயர்களில் ஒன்றான சாஸ்தா மற்றும் அய்யனாரை தன்னுள் இணைத்துக் கொண்டது./
முருகன் வழிபாடு என்பதே, குழந்தை புத்தர்தான் என்றும், பழனி முருகனின் காதில் இருக்கும் பெரிய ஓட்டையே அதற்கு சான்று என்றும் அவதானிக்கிறார்.
“பட்டியலின மக்களின் பவுத்த கூறுகளை நாம் தனியாகத் தேட முடியாது. ஏனெனில், அவர்களின் அகவாழ்வும், புறவாழ்வும் பவுத்த அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது”
“அதைப்போலவே இசைஞானியின் இசையில் உள்ள கட்டுடைத்தலும், புதியவனவற்றை இணைத்தலுமே பவுத்த கூறுகளாகும். அதிலும் அவரின் இசையே பவுத்த உளவியலை உள்வாங்கி அமைக்கப்பட்ட ஒன்றாகும்.”
“ பட்டியலின மக்களின் வாழ்வியலோடு பவுத்தம் கலந்தது எனில் அவர்களின் இசையில் பவுத்தம் கலக்காமல் தனித்திருக்குமா என்ன? என்று சொல்லும் அமரேசன், இசைஞானியின் இசையில் புத்தமதக்கூறுகள் இயல்பாகவே அமைந்திருப்பதற்கும் அதுவே காரணம் என்கிறார்.
கபட புத்தரைப்பற்றிச் சொல்லும் போது, “ பவுத்தத்தின் உயிர்த் தத்துவமான பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்னும் கருத்தியலைக் கைவிட்டு, பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கின்ற நான்கு வர்ணத்தைத் தக்கவைத்துக் கொண்டு, பவுத்த கருத்துகளுக்கு ‘மண்டூகக் காரிகையில் ‘ இந்துமத நோக்கில் உரை எழுதிய காரணத்தாலேயே அவர் கபட புத்தர் என அழைக்கப்பட்டார் .அதிலிருந்து வந்ததுதான் ‘கபடதாரி’ , ‘கபட நாடகம்’ என்னும் சொல்வழக்குகள்” என்று அவர் கூறுவது, புதிய செய்தியாக உள்ளது !
ஜனவரி 2017 ‘ காக்கைச் சிறகினிலே’ இதழில், ‘தைப் பொங்கலும் தமிழ்ப் புத்தாண்டும்’ என்னும் எனது கட்டுரை வெளிவந்தது. அந்த கட்டுரையில் உள்ள ஒரு செய்தியை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
“ பழங்காலத் தமிழகத்தில், போகி அன்று, ஒரு சில கிராமங்களில் ஒப்பாரி வைத்து அழும் வழக்கம் இருந்திருக்கிறது. அது பற்றி அறிஞர்கள் ஆய்வு செய்த போது , அது புத்தர் இறந்த தினம் என்கிற வியக்க வைக்கும் செய்தி தெரிய வந்திருக்கிறது. தமிழ் நிலப்பரப்பில் புத்தமும், சமணமும் செல்வாக்கு செலுத்திய காலத்தில், இந்த பழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.. சைவம் தலையெடுத்து, புத்தமும், சமணமும் திட்டமிட்டு அழிக்கப்பட்ட பிறகு இந்த வழக்கம் மறைந்திருக்கலாம். கூடவே, புத்தர் மறைவு நாள் பற்றிய செய்தியும் காற்றில் கரைந்து போயிருக்கும். “ (ஜனவரி 2017 ‘காக்கை’)
ஆக, பழங்காலத் தமிழகத்தில், பவுத்தம் பரவி, செல்வாக்கு பெற்றிருந்தது என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனாலும், மா.அமரேசன் குறிப்பிடும் இரண்டு செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்று நான் கருதுகிறேன்.
பழங்காலத் தமிழகத்திலேயே, பட்டியலினம் உருவாக்கப்பட்டு விட்டது என்று அவர் கூறுவது, ஒன்று.
இரண்டாவது, பட்டியலின மக்களின் வாழ்வியலில் மட்டுமே புத்தசமயக் கூறுகள் இருப்பதாக அவர் நிறுவ முயல்வது.. அதுதான் உண்மை என்றால், அது எப்படி நேர்ந்தது என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும்.
‘ஆயிரம் தாமரை மொட்டுகளே’ என்னும் பாடலைப் பற்றிய கட்டுரையில், ‘அவர் பாதம் பூமியில் பட்ட இடங்களில் எல்லாம் தாமரை மலர்கள் முகிழ்ந்து எழுந்ததாகவும் வரலாறு சொல்கின்றது “ என்கிறார். இதனை, ‘வரலாறு’ என்று குறிப்பிடுவது, அறிவியல் அடிப்படையில் நெருடலை ஏற்படுத்துகிறது.
“ திருவண்ணாமலை உலகின் மிகப்பழமையான மலை. அதே போல் உலகின் முதன்முதலில் குளிர்ந்த அல்லது உயிரிழந்த எரிமலை என்பதை புத்த சமயத்தவர்கள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்கள்” என்பது அறிவியல் அடிப்படையில் ஏற்கக் கூடியதாக இல்லை.
இந்துமதச் சார்பு உள்ளவர்கள்தான், இதுவரை இப்படிப்பட்ட கருத்தைச் சொல்லி வந்தார்கள். இப்போது, மா. அமரேசனும், புத்தசமய அடிப்படையில் அதே கருத்தை முன்வைக்கிறார்.
ஆக, மதச்சார்பு உள்ளவர்கள் மட்டுமே, திருவண்ணாமலை அவிந்த எரிமலை என்று சொல்லி வருகிறார்கள். மாறாக, இன்று வரை அறிவியல் ஆய்வுகள் எதுவும் திருவண்ணாமைலை, குளிர்ந்த எரிமலைதான் என்று கூறவில்லை என்பது கவனிக்கத் தக்கது.
இந்த நூலை வாசிப்பவர்கள், தேரவாதம், மகாயானம், வஜ்ஜிராயனம் என்னும் பவுத்தத்தின் முப்பெரும் பிரிவுகள் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
மாத்திரமல்ல, சங்கரர், ஆதி சங்கரர், ராமானுஜர், மத்துவாச்சியார், ரமணர், தாராதேவி போன்றோரைப் பற்றிய தகவல்களும் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன.
இசைஞானி இளையராஜாவின் இசை, ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்துத் தரப்பு மக்களையும் கட்டிப் போட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
அந்த பாடல்களில், இயல்பாகவே புத்தசமயக் கூறுகள் கலந்திருக்கின்றன என்பதை இந்நூலின் வாயிலாக வெளிக் கொணர்ந்திருக்கிறார், நூலாசிரியர் மா. அமரேசன்.
புதிய கோணத்தில் சிந்தித்து, கட்டுரைகள் எழுதி, அவற்றைத் தொகுத்து, அச்சு வடிவில் நூலாகக் கொண்டுவந்திருக்கும் நண்பர் மா. அமரேசனுக்கு எனது வாழ்த்துகள்.
சு.இராமசுப்பிரமணியன்,
தோவாளை,
குமரி மாவட்டம்.
mail : srsthovalai@gmail.com
நூல் பற்றிய விபரம்:
வெளியீடு
:
அறம் பதிப்பகம்,
3/584, முல்லை தெரு, கஸ்தூரிபா நகர்,
முள்ளிப்பட்டு கிராமம், ஆரணி வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம் - 632 316
email : ma.amaresan@gmail.com
mobail : 7519413542
பக்கம் 130
விலை ரூ 200-
( நண்பர் அமரேசனின் வேண்டுகோளுக்கு இணங்க, எனது படமும்)

https://www.facebook.com/ramasubramanian.subbiah/posts/909546809239791?__tn__=K-R



No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்