Friday, May 5, 2017

திறந்த கடிதம்

ஆளும் கட்சியின் தனித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன்களுக்கு.

            நீங்கள் முப்பது பேரும் ஓரிடத்திலே இருப்பீர்கள் என்னும் நம்பிக்கையில் இந்த திறந்த மடலை பட்டியலினத்திலிருந்து ஒருவனாக எழுதுகிறேன்.
அண்ணே நீங்கள் அடைபட்டிருப்பதாக அனைவரும் எழுதுகிறார்கள். எனக்கென்னவே நீங்கள் கனவிலும் நினைத்து பார்க்காத வாய்ப்பும் வசதியையும் சொகுசும் உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். அண்ணே நம் தகப்பன்களுக்கும். தாய்க்கும். பாட்டனுக்கும் பாட்டிக்கும் ஏன் நமது பரம்பறைக்கே கிடைக்காத வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்திருக்கின்றது. சில நாட்கள் என்றாலும் சிறப்பாக அனுபவியுங்கள்.
இடையில் எப்போதேனும் உங்களுக்கு சுய நினைவு வரும் போது. சாக்கிய வம்சம். நந்த வம்சம் மகத வம்சம் போன்ற பட்டியலின வம்சங்களின் வீழ்ச்சி எதனால் ஏற்பட்டது என்பதையும் நினைத்துக் கொள்ளுங்கள்.
அரசியலில் நிலைத்த தன்மை என ஒன்று கிடையாது. அதிகாரமும் அரியனையும் வலிமையானவர்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாலும் அதன் முழு பலனும் புத்திசாலிகளுக்கே எப்பொழும் கிடைத்துக் கொண்டிருக்கும்.
இந்த புரிதல் இல்லாத காரணத்தாலே நமது வம்சங்கள் ஆட்சியை இழந்து பட்டியல் இனமானோம். தற்போது முப்பது பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்கள் என எண்ணிக்கை அளவில் ஆக பெரும்பான்மையாக இருந்தாலும் விழிப்பணர்வு இல்லாது இருந்தால் பட்டியில் அடைபட்டிருக்கும் பன்றிகளின் கூட்டத்துக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும்.
நீங்கள் முப்பது பேரும் இனி நினைத்தாலும் ஒரிடத்தில் தங்க இயலாது. காலம் இப்போது உங்களுக்கு இந்த வாய்ப்பை இப்போது வழங்கி இருக்கின்றது அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அண்ணே.
முப்பது பேரும் மூன்று நிமிடங்கள் கலந்து பேசினாலும் போதும். நீங்கள் ஒன்றினைந்து எந்த முடிவு எடுத்தாலும் அதிகாரம் உங்களை சார்ந்தே இயங்க வேண்டும் அண்ணே.
ஆளும் கட்சியில் இருந்தாலும் கூடுதல் அமைச்சர் பதவி கேட்க்கலாம். ஏன் துனை முதல்வர் என்னும் நிலையை கூட எட்டலாம். எதுவும் தவறில்லை. நிங்கள் இல்லாமல் ஆட்சி இல்லை என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு பின் சாதி என்னும் பெயரால் நசுக்கப்படும் ஒரு கூட்டத்திற்கான விடியல் இருக்கின்றது. உங்கள் உருவம்தான் வேறே வேறு. ஆனால் அதன் பிம்பம் ஒன்றுதான்.
காவல் துறைக்கு ஒரு அண்ணன் கூடுதலாக அமைச்சரானால் குறைந்தது சில நந்தினியை காப்பாற்ற உங்கள் பெயராவது பயன்படும். ஏன் வாய்ப்புகள் அமைந்தால் தண்டவாளத்தில் இருந்து இளவரசனை கூட எழுப்பலாம். அல்லது இன்னும் நான்காண்டுகளுக்கு ஆனவக் கொலைகளை குறைக்கலாம். ஏன் நீங்கள் மனது வைத்தால் அதை தடுக்கலாம்.
படிக்க செல்லும் நம் பிள்ளைகள் மீதும் தம்பி தங்கைகள் மீதும் திரைப்படம் தினிக்கும் காதல் என்னும் மாயவலையில் சிக்கி சாதியத்தால் பலியாகமல் காப்பாற்றலாம்.
மெத்த படித்த அண்ணன்கள் எவராவது இருந்தால் அண்ணே நீங்க தயங்காமல் கல்வித் துறையை கேளுங்க அரசு பள்ளிகளில் படிக்கும் நம் பிள்ளைகளுக்கு குறைந்தது தரமான துணியும். பாலியில் சீண்டலும் துண்புறுத்தலும் நிற்கும். ஆசிரியரின் எச்சில் பாத்திரம் கழுவுவதாவது இந்த நான்கு ஆண்டுகள் நடக்காமல் இருக்கட்டும்.
உள்துறையை கூட நீங்கள் கேட்க்கலாம் அண்ணே. சேரிகளின் குழாய்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் வரட்டும்.
பொதுப்பணித்துறையை கூட கேட்க்கலாம் மணல் கொள்ளையை தடுக்கலாம் என உங்கள் வருமானத்தை இழக்க சொல்ல மாட்டோம். நீங்கள் நல்லா சம்பாதியுங்கள். சேரிகளுக்கு சாலையாவது கிடைக்கும்.
இந்த வாய்ப்பை நழுவ விட்டால் நீங்கள் அதிகாரத்துக்கு வர இயலாது அண்ணே. உங்களுக்கு ஒட்டு போட்ட நாங்களும் ஊர்ல தலை நிமிர்ந்த நடக்க இயலாது.
இந்த கடிதம் சம்பந்தப் பட்டவர்களை சேரும் வரை சமுக வலைத்தள உறவுகள் தொடர்ந்து பகிர பணிவுடன் கோருகிறேன்.
மா.அமரேசன்
முகநூல் பதிவு
10/02/2017-
பின்னிரவு


No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்