Monday, September 2, 2019

கிராமங்களில் புத்த விகார்.



கிராமங்களில் புத்த விகார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த பின்னும் இந்திய நாட்டு மக்களுக்கு இன்னும் சமத்துவம் வந்து சேரவில்லை. இரண்டாயிரத்து ஐறுாறு ஆண்டுகளுக்கு முன் மனு மையப்படுத்திய பிறப்பின் அடிப்படையிலான சாதிய மற்றும் குல பாகுபாடுகள் அப்படியே நீடித்து இந்திய சுதந்திரம் என்னும் வார்த்தையின் பொருள், சாதிய அடுக்கில் கடை நிலையில் உள்ளவர்களை போய்ச் சேராமல் இன்னும் அன்னியப்பட்டுத்தான் நின்று கொண்டிருக்கின்றது இன்று வரையிலும். 

இந்திய சுதந்திரம் என்பது இன்று வரையிலும், பார்பணர்களுக்கும், அவர்களின் ஆளுமையை ஏற்றுக் கொண்ட இடைநிலைச் சாதிகளின்  அதிகார குவிப்பாகவே இருக்கின்றது.  அவ்வாறு அரசியல் அதிகார குவிப்பை கொண்டவர்கள் தங்களின் அதிகார குவிப்பைத் சோதித்து கொள்வதற்காகவும், பாதுகாத்து கொள்ளவும், பட்டியல் இன மக்களின் மீது தாக்குதல் தொடுப்பதும், பெண்களை வன்புனர்வு செய்வதும், சேரிகளில் உள்ள குடிசைகளை தீயிட்டு கொளுத்துவதும், கைகளால் மலம் அள்ளச் செய்வதும், செத்த பிணத்தை துாக்கச் செய்வதும், தோட்டி வேலை செய்வதும், என இந்த இருபதாம் நுாற்றாண்டிலும், மனித மாண்புகளுக்கு ஒவ்வாத வேலையை செய்ய கட்டாயப்படுத்தப்படுவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.


அவ்வாறு அந்த வேலைகளை செய்ய பழக்கப்படுத்திக் கொண்டவர்களின் மீதும், பழக்கப்படுத்தாமல் பிறப்பின் அடிப்படையிலான சாதிய கட்டமைப்பை எதிர்த்து எழும் பட்டியல் இனத்தவர்கள் என இருவரின் மீதும் இந்து மத அரசியல் அதிகாரம் பாகுபாடில்லாமல் வன் கொடுமைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பதுவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது இன்னும் இந்தியாவில்.
 பொதுவாகவே, எந்த ஒரு செயலுக்கும் பின்புலமாக
·         சமூக ஆதரவு
·         அரசியல் ஆதரவு
·         சமய ஆதரவு -  ஆகிய மூன்று சக்திகளின் ஆதரவின் அடிப்படையில் அமையும்.

அந்த வகையில் பட்டியலின மக்களின் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்கு இந்த மூன்று வகையான பின்புலத்தின் ஆதரவும் மிக எளிதாகவே கை கோர்த்துக் கொள்கின்றன. குறிப்பாக, இந்து சமயத்தின் ஆதரவு மிக எளிதாக இடைநிலை சாதிகளுக்கும் பார்ப்பணர்களுக்கும் கிடைத்து விடுகின்றது, இதன் அடிப்படையிலேதான் அம்பேத்கரும், “ சாதி இந்துக்களும் பார்ப்பணர்களும், நாவிலே இராமனையும், கையிலே கூர் வாளையும் வைத்திருப்பார்கள். யோகிகளைப் போன்று பேசுவார்கள், ஆனால் ஈவிரக்கமற்ற கொலைகாரர்களாக நடந்து கொள்வார்கள் என்றார். 

       உலகம் முழுமைக்கும் உள்ள பொதுவான அரசியல் மற்றும் மத ஆதரவு என்பது, ஒரு வரையறையைக் கொண்டிருக்கின்றது, ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல சமயமும், அரசியலும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத அளவுக்கு இனைந்து செயல்பட்டு  தாக்கத்தை உருவாக்க வல்லவை, அதே நேரத்தில் ஒன்றின் வளர்ச்சிக்கு ஒன்று எப்பொழுதும் துனையாய் நிற்கும்.

 மதத்தை ஆதரிக்காத அரசியல் வெற்றியடையாது, அரசியலை ஆதரிக்காத சமயத்திற்கு அதிகாரம் கிடைக்காது என்பதுதான் அனைத்து மதம் மற்றும் அரசியலுக்கான அடிப்படை சட்டமாக இருக்கின்றது. எவ்வாறெனில் எந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும் அது ஏதாவது ஒரு பெருவாரியான மக்கள் திரளைக் கொண்ட சமயத்தை ஆதரிக்க வேண்டும், அப்பொழுதுதான் அது வெற்றி பெற இயலும், அல்லது எந்த சமயமாக இருந்தாலும் அது ஒரு பெரும்பான்மை கூட்டத்தைக் கொண்ட அரசியலை ஆதரிக்க வேண்டும், இவ்வாறு ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல ஒன்றையொன்று தழுவியும் ஆதரித்துமே வளர்ந்து வந்திருக்கின்றன வரலாற்றில் இன்று வரையிலும்.

இன்னும் சற்று விரிவாகச் சொல்வதென்றால், தேசிய கட்சிகளின் அரசியல் என்பது, மதம், மடம், மற்றும் கோயில் இவைகளைச் சார்ந்து இருக்கும் எப்பொழுதும், மாநிலக் கட்சிகளின் அரசியல் என்பது, வழிபாட்டு முறைகள் ( கோயில்களில் ஆடு, சேவல், மற்றும் உயிர்பலி தருதல்) மற்றும் வழிபாட்டு உரிமைகளைச் ( அனைத்து சாதியினரும் அர்சகர் ஆவது, கோயில் உள்ள தெருவில் அக்கிரகாரத்தில் நடப்பது) சார்ந்து இருக்கும்,

மதத்தின் அடிப்படையில் அரசியலைப் பிரிப்பதாயின், திராவிடக் கட்சிகளின் அரசியல் என்பது, கோயில் நுழைவு உரிமையைக் கோருகின்ற அரசியலாகவே இருக்கின்றது, அவர்களின் நோக்கம் எப்பொழுதும் பார்ப்பணர்களின் இடத்தை பிற்படுத்தப்பட்ட சாதிகள் பங்கிட்டுக் கொள்வது, அதே நேரத்தில் பார்ப்பணர்களின் அதிகாரத்தையும் பங்கிட்டுக் கொள்வது, இதை அவர்கள் எப்பொழுதும் தங்களுக்குள் சண்டையில்லாமல் சமாதானமாகவே செய்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் போராடி பெறுகின்ற உரிமையை தங்களுக்குள் மட்டுமே பங்கிட்டுக் கொள்கின்றனரே ஒழிய, தங்களை விட கீழ்நிலையில் இருக்கும் பட்டியலின சமூகத்தோடு பங்கிட்டுக் கொள்வதும், அல்லது அவர்களையும் இணைத்துக் கொள்வதும் இல்லை, ஏனெனில், பார்பபணர்களுக்கு கீழ் தாங்கள் இருப்பதை எப்படி பெருமையாக கருதுகின்றனரோ, அதைப் போலவே, தங்களுக்கு கீழ் பட்டியலின சாதிகளும் இருப்பதைப் அம்மக்கள் பெருமையாக கருதவேண்டும் என நினைக்கின்றனர், அல்லது அவ்வாறு நினைக்க கட்டாயப்படுத்துகின்றனர். இத்தகைய கட்டாய சாதிய ஆதிக்கத்தை பட்டியலினத்தவர்கள் எதிர்க்கும் பொழுதுதான், சாதியக் கலவரங்கள் உருவாக்கப்படுகின்றது.

இன்றும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சேரிகளிலும், குடிதண்ணீர் பிரச்சனை இருக்கின்றது. சுடுகாட்டு பதை ஆதிக்க சாதியினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்றது, பல கிராமங்களில் சுடுகாடே ஆதிக்க சாதியினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்றது, சேரிகளுக்கான பாதைகள் இல்லாமல் இருக்கின்றது, தெருவிளக்கு இல்லாமல் இருக்கின்றது, பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றது, ஊராட்சி மன்றத் தலைவராக பட்டியலினத்தவர் இருந்தால் அவர் உட்காருவதற்கு கூட இருக்கை தராத ஊராட்சிகள் இருக்கின்றது, ஊர்பகுதியில் வாழ இயலாத மற்றும் வேலை செய்ய இயலாத சூழ்நிலைதான் இருக்கின்றது. இதைப் போல எத்தனையே வன்கொடுமைகளைச் சொல்லிக் கொண்டு போகலாம், ஆனால் கட்டுரையின் பொருள் மாறிவிடும் என்பதால் இத்துடன் இதை நிறுத்திக் கொள்கின்றேன். இத்தகைய வன்கொடுமைகளை உரிமையின்மையை எதிர்த்து பட்டியலினத்தவர் எவராவது குரல் கொடுத்தால் அதை சாதிய கலவரத்தை உருவாக்கி அழிக்கின்றனர்.

அவ்வாறு உருவாக்கப்படும் சாதிய  கலவரங்களில் பட்டியலின மக்களின்  வாழ்வாதரத்தை அழித்து, உயிர்பலி நிகழ்த்தி, குடிசைகளையும், வீடுகளையும் கொளுத்தி அம்மக்களை அனாதைகளாக்கும் பொழுது,  அவர்களுக்கு ஆதரவு தருவதற்கு யாரும் இல்லை, தங்களின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும் வாழ இயலும் என்னும் மனோபாவத்தை பட்டியலின மக்களிடம் உருவாக்குவதற்காகவே சாதிய கலவரங்கள் உருவாக்கப்படுகின்றது.

மேலும், அரசாங்கம் என்பதே, இடைநிலை சாதிகளின் கையில்தான் எப்பொழுதும் இருக்கின்றது, இத்தகைய சாதிய கலவரங்கள் நடக்கும் பொழுது, எல்லா அரசாங்கமும், சாதிய கலவரங்களுக்கு துனை போகின்ற ஒரு அமைப்பாகத்தான் இருக்கும் செயல்படும். அதற்கான அன்மைய உதாரணம், ஆணவக் கொலைகள்,

பொதுவாகவே, இடைநிலைச் சாதிகள் தாங்கள் அனுபவித்து வரும் பொதுச் சொத்துகள், மற்றும் அரசு, அரசியல் அதிகாரத்தில் பட்டியலின மக்களுக்கான பங்கேற்ப்பை விரும்பாதவர்களாக இருக்கும் பொழுது, காதல் திருமணத்தின் வழியாக, தங்களுடைய குடும்பத்திலும், குடும்பச் சொத்திலும் பங்கேற்பதை எப்படி விரும்புவார்கள் அல்லது ஏற்றுக் கொள்வார்கள், அதன் அடிப்படையிலேயே அரசாங்கத்தை தனது கைகளில் வைத்திருப்பவர்களால் இந்த ஆணவக் கொலைகள் தமிழகத்தில் தற்பொழுது முன்னின்று நடத்தப்படுகின்றது.

சாதியம், மதம் மற்றும் அரசியல் இந்த மூன்று கூட்டணியின்  அனுகுமுறைகளின் வழியாகவே நாம் எதையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் பட்டியல் சாதியினரின் அரசியல் மற்றும் சமய அனுகுமுறையை அலச வேண்டியுள்ளது. பட்டியல் இனத்தவர்களின் அரசியல் மற்றும் சமயம் என்பது மதம் மற்றும் அரசியல் பினைப்பை உணராத நிலையிலேயே உள்ளதாகவேத் தெரிகின்றது. மேலும் அது தான் சார்ந்த மக்களுக்கான தொலை நோக்கு கொண்ட இயக்கமாகவும் இயங்கவில்லை. உணர்வு அரசியலாகவும், ஒப்பாரி அரசியலாகவுமே தம்மை இது வரையிலும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றன, அனைத்து பட்டியலின சாதி கட்சியினரும்.

எப்படி பார்ப்பணர்கள் கோயிலை அதிகார மையமாகக் கொண்டு அரசியல் செய்கின்றார்களோ, எப்படி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர், கோயில் நுழைவு, வழிபடும் உரிமை என்ற பின்புலத்தில் அரசியல் தளத்தில் பங்கெடுக்கின்றார்களோ, அதைப் போலவே பட்டியலின மக்களுக்கும் குலசாமி, மற்றும் சோலைக் காடுகள் என உண்டு இதன் அடிப்படையில் இந்த பின்புலத்தில் பட்டியலின சாதியினரின் அரசியல் கட்டமைக்கப்படாமல், இந்து மதத்தின் உதிரிகளாகவே தமது கட்டமைப்பை தொடர்ந்து கொண்டிருப்பது, வடிவேலுவின் வசனமாகச் சொல்வதென்றால், பில்டிங் ஸ்டார்ங் பேஸ்மென்ட் வீக்காகவே இருக்கின்றது.

குலசாமி, சோலைக் கோயில்கள் என்பனவற்றிற்கு மூலதாரமாக பௌத்தம் வந்து நிற்க்கும், இந்த பின்புலத்துடன், பௌத்தத்தின் அடிப்படைக் கோட்பாடே, சகோதரத்துவம் மற்றும் சமத்துவம். ஆகிய இந்த இரண்டு நோக்கங்களின் அடிப்படையில் பொதுச் சமூகத்தில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டே தன்னை கட்டமைத்துக் கொண்டது பௌத்த சமயம்.

அதே போல், போதிசத்வா. அம்பேத்கர் அவர்களும் சமத்துவத்தை கற்பிக்காத இந்து மதத்தில் இனியும் இருந்து பயனில்லை என்ற முடிவின்படி,  இந்தியாவில் தோன்றிய மதங்களில் வயது முதிர்ந்ததும் முழுமையானதுமான பௌத்தம் ஏற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், பட்டியல் இன மக்கள் இன்னும் அம்பேத்கரை பின்பற்றி, பௌத்தம் தழுவி பிறப்பின் அடிப்படையிலான இந்து மத சாதியக் கட்டமைப்பான தீண்டத்தகாத சாதியினர் என்னும் நிலையினையும் மாற்றாமல், இந்து மதம் கட்டமைத்த இழி சாதியினன் அல்லது தீண்டத்தகாதவன் என்னும் நிலையோடு இன்றும் தங்களின் வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்திய சுதந்திரத்தின் தோல்வி மற்றும் அம்பேத்கரின் பௌத்த சமய மாற்றம் ஆகிய இரண்டையும் நாம் இணைத்துப் பார்க்கத் தவறிவிட்டோம்.  இன்றைக்கு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு நமக்குத் தோன்றுகின்ற உணர்வான, நாட்டு மக்களை சமப்படுத்தி, ஒற்றுமை உணர்வுடன் வாழ பழக்கப்படுத்ததாத இந்திய சுதந்திரம் என்பது, அதிகார மாற்றமே தவிர. சமூக மாற்றம் இல்லை என்தை  போதிசத்வா அம்பேத்கர் அப்பொழுதே தெளிவாக சொன்னார்.
தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் அரசியல் பின்னடைவுக்கான காரணங்களாக இருப்பவை.
·         சமூக ஆதரவின்மை
·         சமய ஆதரவின்மை
·         அரசியல் ஆதரவின்மை ஆகிய முப்பெரும் சக்திகளின் ஆதரவை இழந்து அரசியல் களத்தில் எதை சாதிக்க இயலும் என நம்பிக் கொண்டிருக்கின்றனரோ தெரியவில்லை.
1.   தேசிய மற்றும், மாநில கட்சிகளில் இருக்கும் பட்டியலினத்தவரையும், பட்டியலின மக்களின் தலைமை கொண்ட கட்சிக்கு கொண்டு வருவதிலும் அது இன்னும் வெற்றியடையவில்லை. இது அந்த கட்சிகளுக்கு தான் சார்ந்த சமூகத்தின் ஆதரிவில்லை என்பதை காட்டுகின்றது. பிற்படுத்தப்பட்ட மக்கள் பல்வேறு கட்சிகளில் பிரிந்திருந்தாலும் அவர்களுக்கு சமய ஆதரவு மற்றும் சமூக ஆதரவு இருப்பதால், இந்த பிரிவினையும் தங்களுக்கான வளர்ச்சியாகவே அவர்கள் கருதுகின்றனர். அவ்வாறாகவே அது அமைகின்றது.
2.   தமிழகத்தில் பட்டியல் இன அரசியல் குழுக்கள், தங்களின் சமய நெறியாக பௌத்தத்தை ஏற்காமல், தாங்கள் தனித்து நின்று வெற்றிபெற இயலாது என்ற உண்மையை  இதுவரையிலும் உணரவில்லை. மேலும் தனது மக்களை இந்து மதத்தில் இருந்து முழு அளவில் வெளியேற்றி பௌத்தம் ஏற்கச் செய்யும் செயல்திட்டம் எதுவும் இல்லை.

3.   இந்து மதத்தில் இருந்து கொண்டே தனது செயல்திட்டமான அதிகாரப் பங்கீடு, என்பதில் வெற்றியடைய இயலாது என்பதையும் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை. ஏனெனில் இந்து மதம் என்பது வருணாச்சரமத்தை அடிப்படையாகக் கொண்டதால், பார்பணிய, சத்திரிய, வைசிய மற்றும் சூத்திரர்களின் அங்கிகரிக்கப்பட்ட மதமாக இருக்கின்றது, இந்த பட்டியலில் இனையாத பஞ்சமர்களின் மதமாக இந்து மதம் எப்பொழுதும் இருந்ததில்லை.

4.   தங்களுக்கான சமயமாக அம்பேத்கர் காட்டிய பௌத்தத்தை ஏற்றுக் கொண்டு, பௌத்த சமயத்தின் பின் புலத்தில் அரசியல் நிகழ்த்த வேண்டும் என்னும் சமய அரசியல் கூட்டணியை இன்னும் உணர்ந்ததாக தெரியவில்லை.

5.   பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கு சிதறலும், பட்டியலின மக்களின் வாக்கு குவியமும் வெற்றிக்கான முக்கிய காரணிகள் என்பதையும் இன்னும் உணரவில்லை, இதை உணர்ந்து இருந்தால், சேரிகள் தோறும் வாக்கு குவியத்தை உருவாக்கி, பெருமளவில் ஊராட்சி மன்ற தேர்தலில், சட்டமன்ற, பாராளுமன்ற தேல்தலில்  வெற்றி பெற்றிருக்க இயலும்.

இறுதியாக, இந்த நிலையில் மாற்றம் வர வேண்டுமெனில், பட்டியலின சாதியினரும், பட்டியலின சாதிக்கட்சியினரும், தங்களின்
·         சமூக ஆதரவு
·         சமய ஆதரவு
·         அரசியல் ஆதரவு என்னும்  மூன்று நிலைப்பாடுகளையும் வலுவாக்கி கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

அதன் அடிப்படையில் தங்களின் முதன்மை பணியாக, இந்துக்களாக இருக்கின்ற பட்டியலினத்தவரையும், சேரி மக்களையும், போதிசத்வா. அம்பேத்கர். முன் மொழிந்த பௌத்தத்தை ஏற்கச் செய்து, பட்டியலின மக்களுக்கான சமய ஆதரவை உருவாக்கும் தளமாக பௌத்தத்தை உருவாக்க வேண்டும், ஒவ்வொரு சேரிகளிலும் ஒரு பௌத்த விகாரை உருவாக்கி, பட்டியலின மக்களுக்கான சமய அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியது அவசியமான பணியாகும்.

சமயம் என்பதே சமூகங்களின் ஒருங்கினைப்பு என்பதால், சமயத்தின் வழி, சமூக ஆதரவு எளிதாக கிடைக்க செய்ய இயலும், அதன் அடிப்படையில் அரசியல் ஆதரவு என்பது மிக எளிதாக கிடைக்கும். இத்தகைய பின்புலத்தை உணராத பட்டியலின சாதியினரின் அரசியல் என்பது பகல் கனவாகத்தான் முடியும்.

இதை முழுமையாக உணர்ந்த பின்னரே அம்பேத்கரும், இம்மக்களின் சமயமாக பௌத்தத்தை அடையாளப்படுத்தினார். அவருக்கு முன்னரே, பட்டியலின மக்களின் சமயமாக பௌத்தத்தை, பண்டிதர். அயோத்திதாசர், பேராசிரியர். லட்சுமி நரசு, பன்மொழிப் புலவர். கா. அப்பாதுரையார், தந்தை சிவராசு,  போன்றோரும் அவர்காலத்தில் வாழ்ந்த பல பட்டியலின தலைவர்களும், பட்டியலின மக்களின் சமயமாக பௌத்தத்தை முன் நிறுத்தினர், மேலும் பௌத்த சமயத்தின் ஆதரவு என்னும் பின்புலத்தில் தங்களின் அரசியலையும் வடிவமைத்துக் கொண்டனர்.

இன்று சேரிகளில் உள்ள பெருந்தெய்வ கோயில்கள் பார்பணிய, இடைச்சாதிகளின் ஆதிக்கத்தின் அடையாளங்கள் என்பதை சேரி மக்களுக்கு உணர்த்தி. சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமான புத்தரின் விகாரை சேரிகளில் கட்டமைக்க வேண்டும். அல்லது, புத்தர் ஞானம் பெற்றதற்க்கு அடையாளமாக உள்ள அரச மரத்தின் கீழ் இருக்கும் பிள்ளையார் சிலைகளைப் போல, சேரிகள் தோறும் அரச மரத்தின் கீழ் புத்தரின் சிலைகளை வைத்து வழிபாடும், தியானமும் நடைபெற வேண்டும்,

சேரியிலுள்ளவர்கள் வழிபட ஒரு கடவுள் அல்லது சமயத்தை காண்பிக்காதவரை, அம்மக்கள் இந்து மதத்தின் பெருந்தெய்வங்களையும், சிறு தெய்வங்களையும் தனக்கான கடவுளாக பாவித்து வழிபடத்தான் செய்வார். அவ்வாறு வழி படச் செய்யும் போது அவர் இயல்பாகவே பட்டியலின மக்களின் அரசியல் ஆதரவு என்னும் நிலையில் இருந்து இந்து மதம் வழியாக கட்டமைக்கப்பட்ட சமூக மற்றும் அரசியல் ஆதரவாளராகத்தான் தம்மை அடையாளப்படுத்துவார். அவ்வாறுதான் அடையாளப்படுத்த இயலும்.

எனவே இந்த நிலை மாற பட்டியலினத்தவர்கள் தனக்கான சமயமாக பௌதத்தையும், கடவுளாக புத்தரையும் ஏற்க செய்ய வேண்டியது பட்டியலின சாதியினரின் அரசியல் கட்சிகளின் முக்கிய பணியாக மாற வேண்டிய காலத்தேவையும் தற்போது உள்ளது.
  

1 comment:

  1. அருமை உண்மை.நம் மக்கள் விழிப்புணர்வு பெறுவதற்கு கூட்டங்கள் ஏற்பாடு செய்வோம் ஜெய்பீம்!!! நமோ புத்தா🙏🏽🙏🏽🙏🏽

    ReplyDelete

இதையும் படியுங்கள்