Wednesday, July 17, 2019

புத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள் 1



புத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள் 1

ரங்கா (1982) தமிழ்த் திரைப்படம்

ரங்கா 1982 ஆம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படமாகும். இது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் 75 ஆவது திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தில் அவருடன் ராதிகா, புன்னகையரசி கே.ஆர். விஜயா, கரத்தே ஆர்.வி.டி. மணி, சில்க் சுமிதா, ரவீந்திரன், தேங்காய் சீனிவாசன் ஏ. ஆர். எஸ் இவர்களுடன் மாஸ்டர் சுரேஷ் மற்றும் பலரும் நடித்துள்ள திரைப்படமாகும். இந்தப் படத்திற்கு இசையமைத்தது, கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ் ஆகும். தயாரித்தது சி. தண்டாயுதபாணி, இயக்கியது ஆர். தியாகராஜன். கதை தேவர் பிலிம்சின் கதை இலாகா, வசனம் எழுதியது. திரு. துாயவன்.

பொதுவில் ரங்கா திரைப்படம் குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள், என அனைத்துத் தரப்பு மக்களும் எப்போது பார்த்தாலும் விரும்பி மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையான திரைப்படமாகும். இதனை ஆங்கிலத்தில் சொல்வதென்றால் கல்ட் மூவி என்று சொல்லாம். ரங்கா திரைப்படத்திற்கு தனிக்கை குழு, வயது வந்தோர்களுக்கான திரைப்படம் என சான்றிதழ் அளித்திருந்தாலும், அந்தத் திரைப்படம் குழந்தைகளையும், பெண்களையும் மிக கவர்ந்து அவர்களை மீண்டும் மீண்டும் பார்க்கச் செய்யததே அதன் வெற்றிக்கான காரணம்.



கதைச் சுருக்கம் :

       ரங்கநாதன் என்கின்ற ரங்கா என்னும் இளைஞன் ( ரஜினி) வேலைத்தேடி சென்னைக்கு வருகின்றார், அவரும் சென்னையில் உள்ள சிறு சிறு திருட்டுகளைச் செய்து வரும் ராஜீவும் ( கரத்தே மணி) ஒரு இரவு ராஜீவின் வீட்டில் தங்குகின்றார், அப்போது இரவில் திருடனாய் இருப்பதன் காரணத்தை ராஜீவும், நல்லவனாய் வாழ்வதில் கிடைக்கும் மன அமைதியை ரங்காவும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொள்கின்றனர், விடிந்ததும், ராஜீவின் பேச்சைக் கேட்டு ரங்கா திருடனாகவும், ரங்காவின் பேச்சைக் கேட்டு ராஜீ நல்லவராகவும் மாறி இருப்பார்கள். இதில் கூடுதலாக, ரங்கா தனது முதல் திருட்டை ராஜீவின் வீட்டிலேயே துவங்கியிருப்பார். அதற்குப் பின் அவர் பணத்துக்காக, அடிதடி, திருட்டு. ஆள்கடத்தல் என எதையும் செய்யும் நபராக மாறியிருப்பார்.
      
சில ஆண்டுகள் கழித்து, ரங்கா, ஒரு வீட்டில் உள்ள குழந்தையை கடத்தி வந்தால், தனது சிறு வயதில் தொலைந்து போன அக்கா (கே.ஆர். விஜயா) எங்கிருக்கின்றார் என சொல்வதாக கூறி ரங்காவை குழந்தைக் கடத்தலுக்கு சம்மதிக்க வைக்கின்றார் ரவி ( ரவீந்திரன்) முதன் முறை குழந்தை கடத்தலுக்கு  முயற்சிக்கும் பொழுது, அந்த வீட்டில் அந்தக் குழந்தைக்கு ( மாஸ்டர். சுரேஷ்) காவலாக இருப்பது ராஜீ என அறிகின்றார். எனவே ராஜீவிடம் நண்பராகப் பழகி, தனது அக்காவின் வீடு என அறியாமலேயே அக்காவின் வீட்டிலேயே ராஜீவின் மூலமாக வேலைக்குச் சேர்ந்து, தனது அக்காவின் குழந்தையை கடத்த முயற்சித்து அதில் வெற்றியும் பெறுகின்றார்.

       இறுதியில் தான் கடத்தியது தனது சொத்த  அக்காவின் குழந்தையைத்தான் என்றும், அந்த குழந்தையைக் கொன்று தனது அக்காவின் சொத்துக்களை அடைய ரவீ திட்டமிட்டிருப்தையும், தான் அதற்கு பலியாக்கப்பட்டிருப்பதையும் உணர்ந்து தனது காதலி ( ராதிகா) மற்றும் தேங்காய் சீனிவாசன் மற்றும் ராஜீ ஆகியவர்களின் உதவியோடு ரவியின் திட்டத்தை முறியடித்து, தனது அக்காவுக்கும் உண்மையை உணர்த்தி அக்காவோடு இனைவதே ரங்கா திரைப்படத்தின் கதை சுருக்கமாகும்.

 ரங்கா திரைப்படத்திலுள்ள புத்தச் சமயக் கருத்தியல்:

       திரைப்படத்தின் துவக்கத்தில் வரும் ரங்கா, ராஜீவின் வீட்டில் தங்கும் அந்த  ஒரே இரவும், அவர்களுக்குள் நிகழ்கின்ற உரையாடலும் மிக முக்கியமான திருப்புமுனைக் காட்சிகள். அந்த காட்சியில் வரும் வசனங்கள் புத்தச் சமய கருத்தியலின் அடிப்படையில் அமைக்கப்பட்ட  மிக முக்கியமான வசனங்களாகும்.  இந்த படத்தின் ஒரு வரிச் செய்தியான “ திருடாதே” முதல் கொண்டு “ மது அருந்தாதே” என்பது வரை அனைத்தும் புத்தச் சமயக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டடது ஆகும்.

       மேலும் அந்த காட்சியில் இடம்பெறும் வசனங்கள் மது அருந்துவோரின் எண்ணிக்கை 92% விழுக்காட்டிற்க்கும் மேலாக உள்ள இன்றைய தமிழகச்சூழலுக்கும் மிகப் பொருந்தும் வகையில் இருப்பதும் அந்தப் படத்தின் கூடுதல் சிறப்பு. அதற்கு முன்னதாக புத்தர் போதித்த 5 ஒழுக்கக் கோட்பாடுகளைப் பற்றி தெரிந்து கொள்வது சிறப்பாக இருக்கும் என்பதால் கீழே 5 ஒழுக்கக் கோட்பாடுகளைப் பட்டியலிடுகின்றேன்.

       ஒரு மனிதன் கீழ் கண்ட செயல்களை தனது வாழ்கையில் தவிர்த்து வாழ்வதே 5 ஒழுக்க கோட்பாடுகள். இந்த செயல்களை தவிர்த்து வாழும் மனிதன் துன்பமில்லாமல் மன நிறைவுடன் வாழ்வான் என்பது பகவான் புத்தரின் போதனையாகும். அடைப்புக் குறிக்குள் இருப்பது பாலி மொழிச் சொல். இதைத்தான் புத்தச் சமயத்தினர் தங்கள் வழிபாட்டின் போது பயன்படுத்துவதால் புரிதலுக்காக இனைத்துள்ளேன்.

1.   கொல்லாமை  - ( சிக்காபதம்)
2.   திருடாமை     - ( அதின்னதானா)
3.   பிறன் மனை விழையாமை – ( காமேசு மிக்காரா)
4.   பொய் சொல்லாமை – (மூசாவாதா)
5.   மது அருந்தாமை -    (மஜப்பமாடத்தானா)

பொதுவில் இந்த 5 ஒழுக்க கோட்பாட்டில், சமுகத்தில் மிக அரிதாக நடைபெறுகின்ற உயிர்கொலை என்னும் கருத்தை முதலில் வைத்து, மிக இயல்பாக, வெகு மக்களால் விரும்பி செய்யப்படுகின்ற “ மனதினை மயக்கும் மது குடி வெறியை” 5வதாக ஏன் புத்தர் சொன்னார் என சிந்திக்க வேண்டும்.

   ஏன் என்றால், மது அருந்தும் ஒருவன் நிச்சயம், மதுவினால் தனது செல்வத்தை இழந்திருப்பான், எனவே மீண்டும் குடிப்பதற்காக வீட்டிலோ, உறவிணர்களிடத்தோ, சமூகத்திலோ நிச்சயம் பொய் சொல்லுவான் ( மூசாவாதா) மேலும் மது அருந்திய ஒருவனுக்கு தனது கண்ணில் படுகின்ற பெண்கள் அனைவருமே அழகானவர்களாகவும், தன்னை உடலுறவுக்கு அழைப்பதாகவுமே தோன்றுவதால் ஆண்களாக இருந்தால், பிறரின் மனைவியின் மீதும் மோகம் கொல்வதும், பெண்களாக இருந்தால் பிறரின் கணவன் மீது மோகம் கொல்வதும் சாதாரணமாக நடக்கும் ஒன்றாகவே உள்ளது.

   உதாரணத்துக்குச் சொல்வதானால், இன்றைக்குச் சமுகத்தில் நடைபெறுகின்ற பாலியல் சீர்கேடுகள், ஒழுக்க பிறழ்வுகள், வன்புனர்வுகள், பாலியல் கொலைகள் இவை அனைத்தையும் செய்யும் நபர், அதைச் செய்யும் முன்போ, அந்த செயலைச் செய்யும் போதோ நிச்சயம் மது அருந்தியவராகவே இருப்பார். இதனை பத்திரிகைச் செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.

   மது அருந்தியதால் செல்வத்தை இழந்த பின் நிச்சயமாக திருடுகின்றான், (அதின்னதானா) அதற்குப் பின் மது அருந்துவதற்காகவும், அதற்குத் தடையாக இருக்கும் நபர்களை கொலை செய்கின்றான் ( சிக்காபதம்) இந்தப் புரிதலின் காரணமாகவே 5 ஒழுக்கக் கோட்பாட்டில், சமூகத்தில் அரிதாக நடைபெறுகின்ற கொலையை முதலிலும், திருட்டுவை இரண்டாம் இடத்திலும், காமத்தை 3 ஆம் இடத்திலும் பொய் பேசுவதை நான்காம் நிலையிலும், இவை எல்லாவற்றிக்கும் அடித்தளமாக உள்ள மது அருந்துதலை 5ஆம் நிலையிலும் வைத்து நமக்கு 5 ஒழுக்க நெறியை போதித்தார் பகவான் புத்தர்.

   இந்த உண்மை ராஜீவுக்கு, ரங்காவின் வழியாக ஒரு குட்டிக் கதையாக வெளிப்படுத்தப்படுகின்றது திரைப்படத்தில், அதாவது ஒருவனிடம் வந்து ஒருவன் ஒரு நிபந்தனையை விதிக்கின்றான், கூடாரத்திலுள்ள பொருளைத் திருட வேண்டும், குழந்தையைக் கொல்ல வேண்டும், பொய் சொல்ல வேண்டும், அழகானப் பெண்னைப் புனர வேண்டும், அல்லது இந்த மதுவை அருந்த வேண்டும், இதில் ஏதாவது ஒன்றைச் செய்தால் உன்னை விட்டுவிடுவேன், இல்லையென்றால் உன்னைக் கொன்றுவிடுவேன் என, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் அந்த ஒருவன்,

   இவ்வாறாக யோசிக்கின்றான், குழந்தையைக் கொல்வது பாவம், கூடாரத்திலுள்ள பொருளைத் திருடுவது கேவலம், பெண்னை புனர்வது ஒழுக்கமில்லாதச் செயல், எதற்காக பொய் பேச வேண்டும், மது அருந்துவதால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, மொத்தப் பாதிப்பும் நமக்குத்தானே, சமூகத்துக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என நினைத்து மது அருந்துகின்றான், மது அருந்தியபின், போதையில், அந்தப் பெண்னைப் புனர்கின்றாரன் ( வன்புனர்வு) அதற்குத் தடையாக உள்ள குழந்தையைக் கொல்லுகின்றான், பின் கூடாரத்திலுள்ள பொருளைத் திருடுகின்றான், இதை எதையுமே தான் செய்யவில்லை என்று பொய் சத்தியமும் செய்கின்றான்.

   தனக்கு மட்டுமே பாதிப்பு, மற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என செய்யும் செயலான மது அருந்துதலால், தானும் பாதித்து, தன்னைச் சுற்றியுள்ளவர்களும் பாதித்து சமூகத்துக்கும் பாதிப்பு உண்டாகின்றது என்பதே ராஜீவுக்கு ரங்கா சொல்லும் கதையின் நீதி.  அது புத்தச் சமயக் கோட்பாடான 5 ஒழுக்க நெறியினைச் உணர்த்துவதாகும்.

   இந்த 5 ஒழுக்கக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த கதைதான் ரங்கா திரைப்படத்தின் கதையாகும்….

-    









No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்