Wednesday, July 24, 2019

புத்தச் சமயக் கருத்தியல் திரைப்படங்கள் 2



குங்பூ பான்டா -1 (2008 ஆங்கிலம்)

குங்பூ பான்டா அமெரிக்க கணிணி – இயங்கு (Animation)  வகைத் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை உலகம் முழுவதுமுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பிப் பார்க்கின்றனர். இது டிரீம்வொர்க்  இயங்கு (அணிமேசன்) திரைப்படமாகத்  தயாரிக்கப்பட்டு பாரமவுண்ட் பிக்சர்ஸ்ஆல் வெளியிடப்பட்டது. முதல் பாகம் ஜோன் ஸ்டேவின்சனால் இயக்கப்பட்டது.


இத்திரைப்படக் கதாப்பாத்திரங்களுக்கு ஆங்கிலத்தில் குரல் வழங்கியவர்களின் பட்டியல்:

·         ஜேக் பிளாக்,(  போ – பான்டா கரடி)  
·         டஸ்டின் கொப்மான், ( மாஸ்டர். ஷீபூ - முயல்)
·         ஏஞ்சலினா ஜோலி, (மாஸ்டர். டைகர்ஸ் - பெண் சிங்கம் –)  
·         இயன் மக்கசென், ( தை லாங்க் – பனிச்சிறுத்தை )
·         சேத் ரோகன்,  ( மாஸ்டர்.மன்டிஸ் – வெட்டுக்கிளி)
·         லூசி லியு, (மாஸ்டர். வைப்பர். பச்சைப்பாம்பு)
·         டேவிட் கோஸ், (மாஸ்டர். கிரேன். கொக்கு)
·         ராண்டல் டுக் கிம்,( கிராண்ட் மாஸ்டர் ஊக்வே - ஆமை)  
·         ஜேம்ஸ் காங்,( திருவாளர். பிங்க். போ வின் வளர்ப்புத் தந்தை – வாத்து)
·         ஜாக்கி சான்  (மாஸ்டர். மங்கி – குரங்கு)
·         மைக்கேல் கிளார்க் டங்கன் (கமாண்டர். வசீர் – பனிச்சிறுத்தையை அடைத்திருந்த சிறையின் காவல் அதிகாரி) ஆகிய கதாபாத்திரங்களுக்கு ஆங்கிலத்தில் குரல் அளித்தவர்கள்.


( போ மற்றும் பியூரியஸ் 5 குழுவினர்)

இந்த திரைப்படம் முதலில் அமெரிக்காவில் 6 ஜீன் 2008 அன்று வெளியிடப்பட்டது. அதற்கு பின் இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டபின் குங்பூ பான்டா திரைப்படத்தை அமெரிக்காவில் மேலும் 4,114 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அதற்குப் பின் அதே மாதத்தில் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட அனைத்து உலக மொழிகளிலும் வசூலை வாரிகுவித்தது இந்த திரைப்படம். சீனாவிலும் இந்தத் திரைப்படம் சீனர்களின் கலாச்சாரத்தை உயர்த்திபிடித்த காரணத்தால் வெகுவான வரவேற்பைப் பெற்று வரலாறு படைத்தது.
அமெரிக்காவில் திரையிட்ட முதல் வாரத்தில் 60.2. மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வசூலை வாரிகுவித்தது. இரண்டாவது வாரத்தில் 4,114 திரையரங்குகளில் திரையிட்ட பிறகு 14,642 மில்லியன் அமெரிக்க டாலரை சராசரியாக வசூலித்தது. சீனாவிலும் இந்த திரைப்படம் வெளியிட்ட காலத்தில் இருந்து, 110 மில்லியனுக்கும் அதிகமான யென் வசூலித்தது. சீனாவில் இந்த திரைப்படம், 100 மில்லியன் யென்னுக்கும் அதிகமாக வசூலித்த முதல் அனிமேசன் திரைப்படம் என்னும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

விருதுகள்:

குங்பூ பான்டா திரைப்படம் 14 அன்னி ( Academy Award for Best Animated Feature) விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 11 சர்வதேச விருதுகளைப் பெற்றுக் குவித்தது.

கதைச் சுருக்கம்:

பன்டையச் சீனாவின் அமைதிப் பள்ளத்தாக்கில் தன் தந்தையுடன் நுாடுல்ஸ் விற்பனை செய்துகொண்டிருக்கும் போவுக்கு, தலை சிறந்த குங்பூ வீரனாக வேண்டும்( டிராகன் வாரியர்) என்னும் கனவுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அமைதிப் பள்ளத்தாக்கில் நடைபெறும் டிராகன் வீரருக்கான தேர்வில் போவும் கலந்து கொள்கிறார்.  

(ஊகவே ஷீபூவிடம் போவுக்கு குங்பூ பயிற்சி தரச் சொல்லுதல்)
மூத்த தலைமை ஆசிரியரான ஊக்குவே போவை டிராகன் வாரியராகத் தேர்வு செய்யப்கின்றார். அதன் மூலம் அமைதிப் சமவெளி மற்றும் அதன் மடம், மக்களையும் காப்பாற்றும் பொருப்பும் போ வை அடைகின்றது.
இருந்தும் போவுக்கு குங்பூ தெரியாத காரணத்தால், துடிப்பான 5 வீரர்களிடமும், ( Furious Five) ஷீபூ மாஸ்டரிடமும், அவமரியாதைக்கு உள்ளாகின்றார், இருந்தும், தான் குங்பூ கற்றுக்கொண்டேயாகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். கொழுத்தப் பாண்டாவகை கரடியான போ எவ்வாறு குங்பூ கற்றுக்கொள்ள முடியும் என்ற அவநம்பிக்கையோடு மாஸ்டர் ஷீபூ குங்பூ கற்றுத்தருவதை ஊக்வே கண்டித்து, சிறந்த ஆசிரியரான உங்களால் ஒரு கொழுத்த பாண்டா கரடிக்கு குங்பூ கற்றுத்தர முடியும் என்னும் நம்பிக்கையில்லாமல் பயிற்சியளித்தால், நீங்களும் கற்பிக்க முடியாது. போவும் கற்றுக்கொள்ள இயலாது, எனவே நம்பிக்கையுடன் போவுக்கு குங்பூ கற்றுத்தரச் சொல்கின்றார். அதற்குப் பின், ஷீபூ போவுக்கு ஏற்ற வகையில் குங்பூ கற்றுத்தருகின்றார், போவும் நல்ல முறையில் தேர்ச்சி பெறுகின்றார்,

( குங்பூ பயிற்சியின் போது பான்டா)
கொடுமனம் கொண்ட தாய்லாங் அமைதி பள்ளத்தாக்கில் உள்ள மடத்தையும் டிராகன் சுருளை ( Dragon Scroll) கைபற்றத் துடிக்கின்றார், தன்னை டிராகன் வாரியராக தெரிவு செய்யாததற்காக ஷிபூ மாஸ்டரிடம் கடுஞ்சினம் கொண்டு அவரை தாக்குகின்றார், அதற்குப் பின் போ, தாய்லாங்கிடமிருந்து அமைதி சமவெளியையும், மடத்தையும் டிராகன் சுருளையும் காப்பாற்றுவதே இந்த திரைப்படத்தின் கதை, போவும் மடத்தில் உள்ள மற்ற குங்பூ வீரர்களும் துடிப்பான ஐவர் ( Furious Five) இவர்களைச் சுற்றி நிகழ்வதே கதைகளமாகும்.

குங்பூ பான்டா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புத்தச் சமயக் கருத்துகள்:

குங்பூ பான்டா முழுக்க முழுக்க நகைச்சுவையும் வீரமும் நிரம்பியத் திரைப்படம் என்பது படம் பார்க்கும் அனைவருக்கும் நன்கு புரியும். இருந்தாலும் அந்தப் படம் முழுவதும் புத்தச் சமயக் கருத்துகளால் நிரம்பி வழிகின்ற திரைப்படமாகும்.
திரைப்படத்தின் வசனங்கள், காட்சிகள், குறியீடுகள் என அனைத்தும் புத்தச் சமயக் கருத்துக்களால் நிரம்பியப் படம் குங்பூ பான்டா ஆகும். இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் பெற்றோர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைவருக்கும் அவரவர்களுக்கென கற்றுக்கொள்ள ஒரு தகவலையும் செய்தியையும் வைத்திருப்பது இந்த திரைப்படத்தில் உள்ள புத்தச் சமயத தத்துவ இயல் சிறப்பாகும்.
அடிப்படையில் சீனாவிலும், ஜப்பானிலும் மகாயான புத்தச் சமயப் பிரிவு ஆதிக்கம் செலுத்துவதால், இந்த திரைப்படம் மகாயான புத்தச் சமயப் பிரிவைச் சார்ந்த திரைப்படமாகவே தயாரிக்கப்பட்டுள்ளது. அதிலும் மகாயானப் பிரிவில் உள்ள நிச்சிரென் புத்த சமய (Nichiren Buddhism) கருத்துகளை உள்ளடக்கியதாகும் இந்தத் திரைப்படம்.

நிச்சிரென் புத்தச் சமயம்:

நிச்சிரென் ஜப்பானிய நாட்டில் வாழ்ந்த மகாயானப் புத்த துறவியாவார். ( 1222 -1282) 13ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர். மைத்ரேய புத்தர் மீண்டும் பிறப்பெடுத்து தாமரை சூக்தத்துக்கு ( Lotus Sutra) உரையெழுதுவார் என நம்பும் மகாயான புத்தச் சமயப் பிரிவைச் சேர்ந்தவராக நிச்சிரென் இருந்ததால், தாமரை சூக்தத்துக்கு அவரே உரையெழுதினார். அதனை ஜப்பானிய பிக்குகளும் ஏற்றுக் கொண்டனர்.  தாமரை சூக்தத்தின் கருத்துக்களையே நிச்சிரென் புத்தச் சமயமாக போதித்தார்.
நிச்சிரென் புத்தச் சமயம், ஜப்பான் நாட்டின் புத்தச் சமய இயக்கமாகும். அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக வளர்ந்துவரும் சமயமாகும். அமெரிக்காவில் 6 நபர்களில் ஒருவர் புத்தச் சமயத்தைச் சேர்ந்தவராக இருக்கின்றார், என புள்ளிவிவரம் சொல்கின்றது. இந்த நிச்சிரென் புத்தச் சமயம் அமெரிக்காவிலும் வேகமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.



(ஜப்பானிலுள்ள நிச்சிரென் வெண்கலச் சிலை)


தனிநபரின் ஞானமடைதலும், மன அமைதி பெறுவதுமே உலக அமைதிக்கான வழியாக நிச்சிரென் புத்தச் சமயத்தினர் நம்புகின்றனர்.  மேலும் அவர்களின் நம்பிக்கை இந்த உலகத்திலுள்ள அனைவருக்குள்ளும் புத்தரின் ஞானக் கருத்துகள் உள்ளுனர்வாக உள்ளதால் இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் முழு ஞானம் அடைவது அனைவருக்கும் சாத்தியமே என்பதே நிச்சிரென் புத்தச் சமயத்தினரின் முழு நம்பிக்கையாகும். நிச்சிரென் புத்தச் சமயத்தினரின் கோட்பாடான உடனடி ஞானம் ( Instant Enlightment) த்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படமே குங்பூ பான்டா.

குங்பூ பான்டா 1 திரைப்படத்தில் உள்ள நிச்சிரென் புத்தச் சமயக் கருத்துகள்:

இந்த திரைப்படத்தில், தேரவாத புத்தச் சமயத்தினரின் கருத்துகள், குறிப்பாக தம்மபதத்தின் கருத்துகள், ஷீபு போவுக்கு பயிற்சி அளிக்க தயார்படுத்தும் போது இடம்பெறுகின்றன. அதைத்தவிர, நிச்சிரென் புத்தச் சமயத்தின் 3 கோட்பாடுகள் திரைப்படத்தின் கருத்தோட்டத்திலும், திருப்புமுனையிலும் முக்கியப் பங்களிப்பு செய்கின்றது.

1.   ஷீபுவும் ஊக்வேயும் போவை டிராகன் வாரியராக தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறித்து உரையாடும் போது, ஷீபூ போ டிராகன் வாரியராக தெரிவு செய்யப்பட்டது ஒரு விபத்து என்பார். அதனை மறுத்து உக்வே இந்த உலகத்தில் விபத்து என எதுவும் இல்லை.  விபத்து என எதுவும் இல்லை, விபத்தென எதுவும் இல்லை என 3 முறை குறிப்பிடுவார். அதாவது, இந்த உலகம் பிரபஞ்ச ஒழுங்கு விதிகளின்படி இயங்குகின்றது. அதன்படியே நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் நமக்கும் மற்றவர்களுக்கும் நடக்கின்றது. என்பதை நாம் அதை உணர்ந்து கொண்டோமென்றால், எதையும் ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு வந்துவிடுவோம். இதனை விளக்கவே விபத்து( தற்செயல் நிகழ்வு) என எதுவும் இல்லை எனக் குறிப்பிடுகின்றார்.

2.   போவின் வளர்ப்புத் தந்தையான திருவாளர். பிங்க். தனது மிகச் சிறந்த சுவையான சூப்பின் ரகசியத்தை போவிடம் சொல்லுவார். ரகசியம் என எதுவும் கிடையாது. அதாவது இந்த உலகத்தில் சிறந்ததென எதுவும் இல்லை, நமக்கு கிடைக்கின்ற எல்லாமே சிறப்பானது என நம்பவேண்டும் என்பார்.
(போ தாய்லாங்கை ஸ்கட்டுஸ் முறைப்படி சிறைக்கு அனுப்புதல்)

3.   இதனை போ ஷீபு மாஸ்டர் தனக்கு அளித்த டிராகன் ஸ்குரோலுடன் தொடர்பு படுத்திப் பார்ப்பார். மிகச் சிறந்த ரகசியம் என்று தன்னிடம் அளித்த டிராகன் ஸ்குரோல் காலியாக இருந்ததையும், அதில் தன் முகம் தெரிந்ததையும் வைத்து, தான் சிறந்தவன் என நம்ப வேண்டும், என்றும், அதை உணர்த்துவதே டிராகன் ஸ்குரோல் ரகசியம் என்பதை உணர்ந்து, தன்னால் டிராகன் வாரியராக முடியுமா என்னும் ஐயத்தைக் கலைந்து, தான் டிராகன் வாரியர் என்பதை உணர்ந்து நம்பிக்கையுடன் பனிச்சிறுத்தையான தாய்லாங்குடன் சண்டையிட்டு ஸ்கட்டுஸ் முறையைப் பயன்படுத்தி மீண்டும் அவரை சிறைக்கு அனுப்புவது.
(போவும் ஷீபூவும் இறுதியில் மன அமைதி பெறுவது)

இவையாவுமே, உடனடி ஞானம் என்னும் நிச்சிரென் புத்தச் சமயக் கருத்துகள் ஆகும். இந்த கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதே குங்பூ பான்டா திரைப்படம்.

#Buddhistconceptmovies
#Kungufuponda1
#Magayanabuddhism
#Nichirenbuddhism
#Instantenlightment
#maamaresan






No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்