Saturday, May 3, 2014

பௌத்த வாழ்வியல்


உலகில் தோன்றிய மதங்களுள் உன்னதமானது  பௌத்தம். உலகில் உள்ள  மற்ற எல்லா மதங்களும் தன்னை மறுசீரமைப்புக்கு அல்லது காலத்திற்கு தகுந்தாற்போல் தம்மை புதுப்பித்துக் கொள்ள தயாராக இல்லாத போது பௌத்தம் மட்டுமே எப்பொழுதும் தன்னை மறுசீரமைத்து காலத்துக்கு தகுந்தாற் போல் தன்னை தகவமைத்து அதன் சாரம் கெடாமல் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இதற்கு உதாரணமாக ஒன்றை சொல்ல இயலும்.

புத்தரின் அறவழி போதனையான எண்வழி மார்கம்

1.   நல் உணர்வு - Right  view

2.   நல் நிணைவு - Right Intention

3.   நற் பேச்சு -  Right Speech

4.   நற் செயல் -  Right Action

5.   நல் வாழ்வு - Right Livelihood

6.   நல் முயற்சி - Right Effort

7.   நல் மனம் - Right Mindfulness

8.   நல் நிணைவு - Right Concentration

நல்லுணர்வு என்பது நான்கு உண்ணத வாய்மைகளை உணர்தலாகும். அவற்றை அறிவது மட்டுமல்ல, படிப்பது மட்டுமல்ல, பின்பற்றுவது மட்டுமே போதுமானதல்ல, மாறாக அவறின் உண்மையை உணர்ந்து இருத்தல் வேண்டும். நல்லுணர்வைப் பெற மனம் மாசற்றதாக இருக்க வேண்டும். இதனையே வள்ளுவரும், மனத்துக்கன் மாசிலன் ஆதல் அணைத்துக்கன் ஆகுல நீரபிறஎன்பார்.


தெளிந்த மனம் குழம்புவதில்லை, தெளிந்த மனதில் சந்தேகங்கள் தோன்றுவதில்லை, தெளிந்த மனதில் அவ நம்பிக்கைகள் குடியிருப்பதில்லை, அதற்க்கு மனம் உண்மையை பேச வேண்டும், உண்மையை விரும்ப வேண்டும். உண்மையாக இருத்தல் வேண்டும். இதனையே வள்ளுவப் பெருந்தகையும், ” உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் என்பார். அவ்வாறு உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதலே நல்லுணர்வு ஆகும்.


இன்னும் விளக்கமாக சொல்வது என்றால், மண்ணில் பிறந்த அணைத்தும் ஒரு நாள் இறந்தே தீரும், என்பதும், உருவாக்கிய அணைத்தும் ஒரு நாள் அழிந்தே தீரும், என்பதும், எல்லாவற்றிற்க்கும் வளர் சிதை மாற்றம் என்பது உண்டு என்பதை ஒப்புக் கொள்வதும் உணர்ந்து இருந்தலுமே நல்லுணர்வு ஆகும். இதனை மார்க்சும்மாற்றம் ஒன்றே நிலையானது என்பார். ”


புத்தரும் எல்லோருக்கும் முன்பாக மாற்றம் நிலையானது அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்வழி மார்கத்தில் கூறி சென்றுள்ளார். அவ்வாறு மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனமே உண்மையை உண்மை என்று உணரும் ஏற்றுக் கொள்ளாத மணம் பற்று அல்லது ஆசை என்னும் துன்பச் சகதியில் உழலும்.


இது புத்தர் பெருமான் கூறிச் சென்ற நல்லுணர்வு இன்றைய விஞ்ஞான உலகில் உணர்வு மேலாண்மையாக   ( Emotional Management)  காலத்திற்க்கு ஏற்றார் போல் தன்னை தகவமைத்துக் கொண்டு, அறிவியல் வழி நின்று வளர்ந்து வருகின்றது. இவ்வாறு அறிவியல் வழி நின்று வளர்வதால்தான் பௌத்தம் இன்று  வெள்ள முடியாத மதமாக வாழ்வியலாக, நெறிமுறைகளாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றன.

 இதில்  தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியலோடு ஒன்றி கலந்த நெறிமுறையாக பௌத்தம் எப்போதும் இருந்திருக்கின்றது. வரலாற்றில் சமுகம் எப்பொழுதும் மதத்தை கொண்டாடியது இல்லை, ஆனால் மத கோட்பாடுகளை, மத கருத்துக்களை எப்பொழுதும் கொண்டாடிக் கொண்டிருக்கும், அதை காலத்திற்க்கு தகுந்தாற்போல் தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கின்றது. அதற்க்கு நல்ல உதாரணம் பௌத்த மதம் மட்டுமே.

பௌத்த மதக் கோட்பாடுகளை மற்ற மதங்கள் குறிப்பாக இந்து மதம் திருடிக் கொண்டாலும், அல்லது தன் வயப்படுத்திக் கொண்டாலும், பௌத்தம் வீழ்ந்து விடவில்லை, அது இந்தியாவில் தோன்றி, கிழக்காசிய நாடுகள் வரையிலும் பல்கி பெருக அதனுடைய அறிவியல் தன்மை வாய்ந்த கொள்கைகளும் கோட்பாடுகளுமே காரணம்.

      இந்தியாவில் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்கள் பண்டிதர் அயோத்திதாசரும், புரட்சியாளர் அம்பேத்கரும். ஆயினும் இருவரது பார்வைக்கும் பெருத்த வேறுபாடுண்டு. பண்டிதர் அயோத்திதாசர் முன் மொழிந்த பௌத்தமானது. அன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் இருந்த சூழ்நிலைக்கு மாற்றானது.

      அயோத்திதாசரின் காலமான மே 20, 1845 - 1914;  வெள்ளார்களின் எழுச்சிகாலமாக இருந்தது. தமிழிலக்கியங்கள் மற்றும் தமிழ கலாச்சாரத்திற்க்கு சைவ, திருமாலிய சமய சாயங்கள் வலிந்து திணிக்கப்பட்ட நேரமாக அது இருந்தது. தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடிக் கொண்டிருந்த காலமது. தமிழர்களின் வரலாறு, சாதிய வரலாறாக திரிக்கப்பட்டிருந்த காலத்தில், இத்தகைய திரிபு, புரட்டு ஆகியவற்றிற்க்கு மாற்றாக, அவர் பௌத்தத்தை முன் மொழிந்தார்.

      குறிப்பாக, தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வியல் சைவத்தை சார்ந்தது என்ற புரட்டுக்கு எதிராகவும், சாதிய கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைக்கவுமே அவர் பௌத்தத்தை முன் மொழிகின்றார்.. குறிப்பாக அப்போது ஓலைச்சுவடியில் இருந்து அச்சுக்கு கொண்டு வரப்பட்ட அணைத்து இலக்கியங்களையும் சைவ சமய சாயத்துடனே கொண்டு வந்தனர்.
மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, ஆகிய நுால்களைத் தவிர்த்து, ஏனைய நுால்களை சைவ , வைணவ சாயல்களில் கொண்டு வந்து, சைவம் தான் தமிழை வளர்த்துது, என்ற நிலைப்பாட்டை நிறுவ அப்போதிருந்த தமிழ் அறிஞர்கள் முனைந்து நின்ற காலத்தில்தான், அயோத்திதாசர் சைவ புரட்டுக்கு எதிராக பௌத்த உண்மையை கொண்டு வந்தார்,

      சைவர்கள் மட்டும் தமிழை வளர்க்கவில்லை, பௌத்தர்களும் தமிழை வளர்த்தனர். என்று நிலை நிறுத்தினார், அதே கண்ணோட்டத்திலேதான், அவர் சமணத்தையும் பாரத்தார். தமிழ் இலக்கியத்தில் மற்றும் தமிழ் வளர்ச்சியில் பௌத்தர்களின் பங்களிப்பு மற்றும், சமணர்களின் பங்களிப்பை உலகுக்கு உணர்த்துவதே அவர்தம் முதற்பணியாக இருந்தது.

சைவத்துக்கு எதிரான  நிலைப்பாட்டை கொண்டிருந்ததால் பௌத்தம், மற்றும் சமணம் ஆகிய இரண்டையும் அவர் ஆதரித்தார், சாதிகளை முன் மொழியாத காரணத்ததால் சைவத்துக்கு எதிராக பௌத்தம் மற்றும் சமணத்தை ஒருங்கிணைத்தார்.  அதே பார்வையில் பார்த்ததாலேதான் அவரால் சமணம் மற்றும் பௌத்தம் ஆகிய இரண்டும் ஒன்றே என்றார்.

பண்டிதரின் பார்வையில், மொழி மற்றும் இலக்கிய சூழலில் நிலவிய சைவர்களின் ஆதிக்கத்திற்க்கு மாற்றாக பௌத்தத்தை முன் மொழியும் பணி அயோத்திதாசரின் பணியாக இருந்தது.

புரட்சியாளர் அம்பேத்கர் முன்நிறுத்திய பௌத்தமானது, இந்து மதத்திற்க்கு எதிரானது, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்யக்கூடியது. சுயமரியாதைக்கான வித்தாக போற்ற வேண்டியது. சாதிய பாகுபாடு, மற்றும், சமுக ஏற்றத்தாழ்வுகளின் மூலாதாரம் வரை சென்று ஆய்ந்து தீர்வை முன் மொழிந்தது.

தாழ்த்தப்பட்ட மக்கள் சுயமரியாதையோடும், தன்மானத்தோடும் வாழவே அம்பேத்கர் பௌத்தம் தழுவினார். தான் மட்டும் தழுவியதோடு அல்லாமல் தன் மக்களையும் பௌத்தம் ஏற்க வைத்ததார்.

இன்றைய நிலையில், தமிழகத்திற்க்கு, அயோத்திதாசரின் பார்வையில் இலக்கண இலக்கியங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தி, சைவ வைணவத்திலிருந்து, பௌத்த நோக்கில் இலக்கியங்களை உருவாக்கவேண்டிய தேவையும், ஏற்கனவே உள்ள இலக்கியங்களை மீள் வாசிப்பிற்க்கு உள்ளாக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.

அதே வேளையில் அம்பேத்கரின் சுயமரியாதை எழுச்சியை சேரிகள் தோறும் உருவாக்க வேண்டிய தேவையும் உள்ளது. சேரிகள் தோறும் உள்ள தீண்டத்தகாத மக்கள் பௌத்தம் ஏற்று தங்களை தீண்டத்தகாதவர்கள் இல்லை, என்று பறைசாற்ற வேண்டிய தேவையும் இருப்பதால், அயோத்திதாசர், மற்றும் அம்பேத்கரின் நோக்கில் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டியது, சேரிமக்களின் தலையாய கடமையாக உள்ளது இன்றைய நிலையில்.

      - நன்றி. சமுகப் பயணம் மாத இதழ் -மே 2014

Wednesday, January 29, 2014

எட்டுமா இயற்கை விவசாயம் ஏழைக்கு?

எட்டுமா இயற்கை விவசாயம் ஏழைக்கு?

இயற்கை விவசாயம் என்றொரு சொல் இப்போது பரவலாக ஒளித்துக் கொண்டிருக்கின்றது தமிழகம் எங்கெங்கும். உண்மையில் இயற்கை விவசாயம் செயற்கை விவசாயம் என்றொரு சொல் தொடருக்குப் பின் இருக்கின்ற உண்மைகளை உணர்ந்து இருக்கின்றோமோ என்று தெரியவில்லை.

இந்திய திருநாட்டில் விவசாயம் என்பது தொழில் அல்ல வாழ்க்கை முறை, அந்த வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றமே விவசாயத்திலும் எதிரொலித்தது. நமக்கு உணவே மருந்து மருந்தே உணவு. என்பதுதான் நமது பாரம்பரியம். அதற்கேற்ற பயிர்களை பயிர்செய்தோம், உழவு கருவிகளையும் கையான்டுாம். ஆனால் இந்த வாழ்க்கை முறையில் இருந்து பிழன்று, வீரிய வகைக்கு தாவியதன் பயனாக, வீரியத்திற்காக இயற்கை உரத்தினின்று செயற்கை முறைக்கு அரசாங்கமே முன்னின்று இந்த மக்களை மாற்றியதுதான் பசுமை புரட்சி.

பசுமை புரட்சியின் பயனாக மண் மலடாகிப் போனதும், செயற்கை உரங்களுக்கு அடிமையாகிப் போனதும் தான் நடந்தது. ஆனால் இந்த நிலையில் இயற்கை விவசாயம் என்று பேசுகின்றனர். அதற்கென இயற்கை அங்காடி முதல் அணைத்தையும் வணிக நோக்கில் நின்று செயல்படுத்துகின்றனர்.
 தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு அடி மண்ணுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு என்று” இதன் பொருள் உழவு செய்து விளைச்சலுக்கு உள்ளாக்கும் பொருட்கள் அணைத்தும் அடிப்பகுதி நிலத்தில் வெயில் படாமல் இருந்து மண் வறண்டு போவதை தடுத்து மண்ணின் அடிப்பகுதியில் நுன்னயிர் பெருக்கத்தை தக்க வைத்துக் கொள்ள இந்த யுக்தியும்.

விளைவித்த பயிர்களின் அடிப்பாகம் மண்ணுக்கு  என்று அடிப்பாகத்தை விட்டு விட்டு நடுப்பாகத்தை விவசாயத்துக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கும் கால்நடைகளுக்கு தீணியாக, தீவனமாக பயன்படுத்துவதுதான் நடு பாகம் மாட்டுக்கு, மிஞ்சிய நுனி பாகத்தில் விளைச்சல் இருப்பதால் அதை வீட்டுக்கு என்று சொலவடை உள்ளது.. இதுதான் இயற்கை விவசாயத்தின் தாரக மந்திரம்...

இந்த முறைப்படி பயிர் செய்த உழவர்களால் உழவு முறையில் லாபம் எஞ்சியது. கால்நடை களும் வீட்டில் தேவைக்கு அதிகமாக இருந்தது. அதனால் மனிதனும் கால்நடைகளும் பயிர்கள் என ஒன்றை ஒன்று சார்ந்த உயிர் சங்கிலி அறுபடாமல் இருந்ததால் அணைவருக்கும் லாபமும் நன்மையும் கிட்டியது.

அடி மண்ணுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு என்ற வகைப்பாட்டின் படியே பழைய நெல் பயிர்கள் விளைவிக்கப்ட்டன. அதை மெய்பிக்கும் வகையில் யானை நின்றாலும் மறைக்கும் உயரத்தில் நெல் விளைந்ததாக தமிழிலக்கியத்தில் இருந்து தெரிந்து கொள்கின்றோம்.  இந்த உயிர்சங்கிலி அருபட்டால்தான் வெள்ளையர்களின் வீரிய உரமும் விவசாய கருவிகளும் இந்திய விவசாய சந்தையில் விற்பனைக்கு போகும் என்று தெரிந்து கொண்டு அதற்கென முதலில் அவர்கள் கொண்டு வந்தது.

உயரம் குறைந்த நெல் பயிர்கள் அதை பயிரிட்டோம் அந்த பயிர் விளைந்து அறுவடைக்கு வந்ததும் நமது பழமொழியின் படி பயிர்  மண்ணுக்கும் போக வில்லை, மாட்டுக்கும் போக வில்லை, மனிதனுக்கும் போதவில்லை. மனிதனுக்கு போத வேண்டும் என்றால் உரங்கள் போட வேண்டும் என்று உர விற்பனையை அதிகமாக்கி, நமது உயர் சங்கிலியை அறுத்ததன் வாயிலாக இன்று நாம் சுவாசிக்கின்ற காற்றிலிருந்து குழந்தையின் தாய் பால் வரை மாலதியான் மருந்து கலந்து ஒரு நாடே விசத்தை உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என்பதுதான் யதார்தமான உண்மையாக இருக்கின்றது.


ஆனால் இன்று இயற்கை விவசாயம் என்று பேசுவோர் நமது பழைய முறைப்படி உயரமான நெல் வகைகளை உருவாக்கி மீண்டும் நமது உயிர்சங்கிலியின் தொடர்பை உறுதி படுத்தாமல், அதை ”பஞ்ச காவ்யா”, பசுந்தீவனம், ஆசோலா, என்றெல்லாம் வணிகப்படுத்துகின்றனரே ஒழிய இயற்கை விவசாய முறையின் உயிர் நாடியான சிறுதானிய உற்பத்தியில் மறைந்து போன சிறு தானியங்களை மீண்டும் கொண்டு வந்து விளைவிப்பதில் ஆர்வம் இல்லை. நமது மண்ணுக்கேற்ற ஊடு பயிர் விவசாயத்தில் ஆக்கரை காட்டுவதில்லை.

பண்டைய விவசாய முறையில் நிலமுடையவர்களில் பணக்கார்களால் நீர் தேவை மிகுந்த பயிர்களான நெல் வழை மஞ்சள் முதலிய பயிர்கள் பயிரிடப்பட்டன. ஏழை விவசாயிகளால் கம்பு,கேழ்வரகு,சோளம், வரகு, எள், கொள்ளு, என சிறு தானியங்கள் பயிரிட்ப்பட்டன அதனால் ஏழை விவசாயிக்கும் பணக்கார விவசாயிக்கும் ஒரு வகையில் பண்டமாற்றுகூட நிகழ்ந்தன. இதனால் அவர்களும் ஒற்றுமையாக இருந்தனர்.

இதை எதுவுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இயற்கை விவசாயம் என்று பேசுவது எதிர்வினையான விளைவைத்தான் உருவாக்குமே ஒழிய இயற்கை விவசாயத்தை வளர்க்காது...

Sunday, December 29, 2013

தாய்வீடு திரும்பா தலித்துகள்...

தமிழகத்தில் உள்ள அணைத்து சமுக இயக்கம், மற்றும் அரசியல் கட்சிகளின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அனைத்திலும் தலித்துகளின் பங்களிப்பு மிகுதியாகவே இருந்திருக்கின்றது....
ஆரம்ப காலத்தில் நீதி கட்சியில் படித்த தலித்துகள் தங்களை பெருமளவில் இணைத்துக் கொண்டு பங்காற்றியிருக்கின்றனர்...

அதற்கு பின் வந்த திராவிட இயக்கத்திலும், தலித்துகள் தங்களை பெருமளவில் இணைத்துக் கொண்டு களப்பணியாற்றினார்கள்...

பேராய கட்சிக்கு ஒரு காலத்தில் தீண்டத்தகாதவர்களின் கட்சி என்றே பெயர் இருந்திருக்கின்றது... காந்தி, நேரு, பட்டேல், போன்ற பார்பன, பணியா தலைவர்கள்... சொல்லுக்கு செத்து மடிந்தது தலித்துகளாகவே இருந்திருக்கின்றனர்....
அவர்களுக்குப் பிறகு பொதுவுடைமை கட்சி வந்த போது, அதிலும் உயிர் நீத்தவர்களும் களப்பணி செய்து கடைசி வரை தொண்டனாக இருந்தவர்களும் தலித்துகள் தான், தலைவர்களாக பார்பணர்களும், பணியாக்களும் தங்களை நிலை நிறுத்திக் கொண்டு நிறுவனமயமாக்கினர் அந்த கட்சிகளை.
திராவிட முன்னேற்ற கழகத்தின், சின்னமே தலித்துகளின் சின்னம்தான்... அந்த கட்சியிலும் ஆரம்ப காலங்களில் பெருமளவு தன்னை இணைத்துக் கொண்டு களப்பணியாற்றியவர்களும் பலியானவர்களும் தலித்துகள்தான்... அதில் தலைவர்களாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டவர்கள் பிற்படுத்தப்பட்ட சாதியினர்...
அடுத்து வந்த அணைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் பெருவாரியாக இணைந்ததும், இருப்பதும் தலித்துகள்தான்... ஆனால் அந்த கட்சிக்கு இப்போ தேவர்களின் கட்சி என்ற  பெயரும் வந்து விட்டது...

மதிமுக வில் முதல் பலியானதும் தலித்துதான்... ஆனால் அந்த கட்சியின் தலைவர் நாயுடு... அவர் தமிழர்களின் நலன் குறித்து பேசுவார், ஆனால் தலித்துகளின் நலன் குறித்து எதுவும் பேசமாட்டார்....
தேமுதிகாவில் கூட முதல் பலி தலித்துதான்... அவருடைய கட்சியில் உள்ள இளைஞர்கள் பெரும்பாலும் தலித்துகள்தான்... ஆனால் அவருக்கு தலித்துகளின் பிரச்சனையே தெரியாது...

இங்கு சொல்ல வந்த செய்தி தலித்துகள் அந்த கட்சியில் இருப்பதல்லல, தலித்துகளைப் போலவே மற்ற சாதியினரும் அந்த அந்த கட்சிகளில் பெருமளவில் தங்களை இணைத்துக் கொண்டு ஆரம்ப காலங்களில் செயல்பட்டவர்கள்தான், காலப்போக்கில் அவர்களிடம் இரண்டு விதமான மாற்றங்கள் நிகழ்ந்தது... அவர்களில் பெரும்பாலோனோர் ஏதேனும் ஒரு பதவியை பெற்றுக்கொண்டு தலைமைக்கு நெருக்கமானார்கள்... மாவட்ட செயலாளர்கள் ஆணார்கள்... மந்திரி ஆனார்கள்.. இது எதுவும் நடக்க வில்லை அல்லது அந்த கட்சியில் தங்களின் சாதிக்கு முக்கியத்துவம் இல்லை என்றால் மற்ற கட்சிகளுக்கு தாவினார்கள்....
ஆனால் தலித்துகள் மட்டுமே தாங்கள் கட்சி மற்றும் தலைவர்மீது கொண்ட விசுவாசத்திற்காக, அந்த கட்சி தொடர்ந்து தங்களுக்கு அநீதி இழைத்தாலும், பலியிட்டாலும் தொடர்ந்து அதே கட்சியில் தொடர்வது ஏன்...
இவர்களுக்கு ஏன் தலித் கட்சிகள் மீது நம்பிக்கை வருவதில்லை, இன்று மற்ற கட்சிகளில் இருக்கும் தலித்துகள் தங்களது தாய்வீடான, தலித்கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டாலே 48 சட்ட மன்ற உறுப்பினர்கள் நமக்கானவர்களாக இருப்பார்களே... தாய்வீடு திரும்ப மறந்த தலித்துகளால் அவர்களுக்கும் அவர்களது சமுகத்துக்கும் என்ன பயன்...?

Sunday, November 17, 2013

ஏழைகளுக்கான மது கொள்கை


ஏழைகளுக்கான மது கொள்கை

அரசாங்கம் அதிகாரம் யாருக்கானது, இந்த கேள்வி எப்பொழுதும் என் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும், இன்று அரசு அரிசி முதல் அனைத்தையும் இலவசமாக கொடுப்பதன் நோக்கம் சலுகை என்பதல்ல, விளிம்பு மக்களின் வாழ்க்கை நிலை அரிசி வாங்க கூட இயலாத வகையில் இருப்பதுதான் யதார்தமான உண்மை.
கிராமப்புறங்களில் வயிற்றுக்குப் போராடும் மக்களை தனது ஓட்டு வங்கியாக்கி கொள்ள இலவச அரிசி திட்டம் என்றால், நகர்புறத்திலுள்ள உடலுழைப்பு மக்களை தன் வசமாக்கி கொள்ள அம்மா உணவகம் என்னும் பெயரில் மலிவு விலை உணவகங்களை அரசு திறந்திருப்பதன் நோக்கமும், ஏழை எளியவர்களை மனதில் வைத்துதான்.
அவ்வாறாயின் இந்த அரசாங்கம் ஏழை எளிய மக்களை மனதில் கொண்டு நடைபெறுகின்றதா, இது ஏழைகளின் அரசாங்கமா என்னும் கேள்வி உங்களுக்குள் எழுந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. இந்த அரசாங்கம் மட்டும் அல்ல, தமிழகத்தில் நடந்த எந்த அரசாங்கமும் ஏழைகளுக்கான அரசாங்கம் இல்லை.
ஏழைகள் என்பதை வேறு வகையாக சொல்வது என்றால், நிலமுடையவர்கள் பணக்காரர்கள், நிலமற்றவர்கள் ஏழைகள். அவ்வாறாயின், நிலமற்றவர்களின் வாக்குகளை பெற்று நிலஉடைமையாளர்கள் ஆட்சிக்கு வருகின்றனர். ஆட்சிக்கு வந்ததும், நில உடைமையாளர்களின் அரசாங்கமாக உருமாறுகின்றது எல்லா ஆட்சிகளும், அரசாங்கங்களும்.
நில உடைமையாளர்களின் தேவைக்கான திட்டங்களே இங்கு சட்டமாக்கப் படுகின்றது. உடன் பெரு முதலாளிகளும், சிறு முதலாளிகளும் கை கோர்த்துக் கொண்டு தனக்கான அரசை நிறுவுகின்றனர். தனக்கான லாபங்களை முன் வைத்தே அரசின் திட்டங்களை வரையறுக்கின்றனர். நான் சொல்வதற்க்கு நல்ல உதாரணம், வேண்டும் என்றால் அரசின் மதுக் கொள்கையை சொல்ல இயலும்.
500 நபர்கள் இருந்தால் அந்த பகுதியை ஒரு தனி ஊராட்சியாக அறிவிக்கலாம் என்னும் அரசின் சட்டத்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனி பஞ்சாயத்துகளை இந்த அரசாங்கத்தால் உருவாக்க இயலவில்லை. 500 நபர்கள் ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தால் அவர்களுக்கென பகுதி நேர நியாய விலை கடைகளை அரசாங்கத்தால் முழு அளவில் திறக்க இயலவில்லை. 500 நபர்கள் இருந்தால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகளுக்னெ அங்கன்வாடி பள்ளிகளை திறக்க இயலவில்லை,
500 நபர்கள் இருந்தால் அவர்களுக்கென ஒரு மேல்நிலை தொட்டி அமைத்து அந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்ய இயலவில்லை,
ஒரே பகுதியில் 500 நபர்களுக்கு மேல் இருந்தால் அந்த பகுதி மக்களுக்கான ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை உருவாக்க இயலாத அரசு.. 500 நபர்கள் இருந்தால் ஒரு அரசு மதுக் கடையை திறப்பதை இலக்காக கொண்டு தனது மது விற்பனை கொள்கையை வகுத்திருப்பது யாருக்கு லாபம் தரக்கூடிய திட்டமாக இருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். 


பொதுவாகவே உடலுழைப்பு தொழிலாளர்கள் மட்டுமே தனது உடல் வலிக்காககவும்,  காலந்தோறும் கஷ்டப் பட்டும் தங்களின் சமுக நிலை உயராத மன அழுத்தம் ஆகிய காரணங்களுக்காக மது அருந்துகின்றனர். ஆனால் தற்போதுள்ள அரசின் மது கொள்கையானது, ஏழைகளுக்கான மது திட்டமாக இல்லாமல் பணக்காரர்களின் மது திட்டமாக உள்ளது.
இதனால் ஒரு ஏழை தனது உடலுழைப்பில் ஈட்டும் வருமானத்தில் 90 விழுக்காட்டுக்கு மேல் மதுவுக்கு என செலவிட வேண்டிய தேவையும் உள்ளது. வருமானத்தில் பாதிக்கு மேல் குடிக்காகவே செலவிட வேண்டிய தேவையிருக்கின்றது ஒரு உடலுழைப்பாளிக்கு.
மேலும் தற்போது அரசின் மது கடைகளில் கிடைக்கின்ற மது வகைகள் யாவும் உடல் நலத்தை அழித்து, மது அருந்தும் மக்களை குடி நோயாளியாக்கும் வகையில் இருக்கின்றது. இதனால் மது அருந்தும் மக்களின் உடல் நலம் கெட்டு, ஒரு சமுகத்தின் அல்லது ஒரு தலைமுறையின் ஆரோக்கியத்தை கேள்வி குறிக்குள்ளாக்குகின்றது இந்த அரசாங்கம்.

 ஆனால் அரசின் தற்போதைய மது கொள்கை ஏழைகளுக்கானதாக இல்லை. மது விலக்கை பற்றி பேசுவது ஒரு வகை இது என்ன ஏழைகளுக்கான மது கொள்கை என்று ஒரு வகை யான திட்டத்தை பற்றி இந்த கட்டுரை பேசுகின்றதே என்ற வினா உங்களுக்குள் வருமாயின் அது உண்மைதான்,
ஒவ்வொரு வாடிக்கையாளனுக்கும், தனக்கு வேண்டியதை தேர்ந்தெடுத்து வாங்கும் அல்லது பயன்படுத்தும் உரிமை இருக்கின்றது அல்லது இருக்க வேண்டும் இதுதான் நுகர்வோருக்கான உரிமை.
மது அருந்து வோருக்கு அத்தகைய உரிமை இருக்கின்றதா என்றால் உறுதியாக இல்லை, ஏன் என்றால் இன்று அரசின் மதுக் கடைககளில் கிடைப்பது யாவும் IMFL ( Indian Made Foreign Liquor )அதாவது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட அயல் நாட்டு மது  வகையை சார்ந்த மது மட்டுமே கிடைக்கின்றது.  
அதிலென்ன என்போருக்கு, அயல் நாட்டு மது வகை என்றால், அயல்நாட்டு மக்களின் உணவு பழக்கம் அங்கு நிலவும் தட்ப வெப்பத்துக்கு ஏற்ற வகையில்தானே அந்த மது வகைகள் தயாரிக்கப்பட்டு இருக்கும். சமுக நிலையிலும் உடல் நலத்தை பொருத்த வகையிலும் அது அயல்நாட்டு குறிப்பாக குளிர் பிரதேசத்து மக்களின் உடல்நலம் மற்றும் சமுக நலத்தை தானே பிரதி பலிக்கும்.
பொதுவாகவே நமது பழக்கம், உணவே மருந்து, மருந்தே உணவு என்பதுதான், அதனால்தான் நம் வீட்டு சமையலறையில் நாம் சமைக்கப்ப பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் ஒரே நேரத்தில் உணவாகவும் மருந்தாகவும் செயல்பட்டு நமது உடல் நலத்தை காப்பாறுகின்றன.
இந்த இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மது வகைகள் என்பது ஒரு உணவு பொருளும் அல்ல. மருந்து பொருளும் அல்ல, அது ஒரு போதை பொருள், பழங்கள், கோதுமை, பார்லி, போன்ற பொருட்களை நொதிக்கச் செய்து. அதாவது கெட்டு போகச் செய்து பின் அதற்க்கு போதை ஊட்டப்படுகின்றது.
பொதுவாக நாம் நமது குழந்தைகளுக்கும் அல்லது நமக்கும் அழுகிப் போன பழங்களை சாப்பிட கொடுப்பதில்லை,  நாமும் சாப்பிட மாட்டோம், ஆனால் நமக்கு அரசின் மது கடைகளில் கிடைக்கும், இந்திய தயாரிப்பு அன்னிய மதுவகை அழுகிப்போன பழங்கள், திராட்சை, ஆரஞ்சு, கரும்பு, கோதுமை, பார்லி, போன்றவைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
இது உடல் நலத்துக்கு மிகவும் கேடு உருவாக்க கூடியது. இந்த வகையான மதுவை தொடர்ந்து அருந்து வோருக்கு இரைப்பை கல்லீரல், இரத்த குழாய்கள், சிறுநீரகம், நரம்பு மண்டலம், ஆகிய உடல் உறுப்புகளும் பகுதிகளும் பாதிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இளமையிலேயே மரணம் ஏற்பட்டு தனது வாழ்வை முடிக்கச் செய்ய கூடியது.
எனவே தமிழகத்தை போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிக்கும் மனிதனுக்கு எந்த வகையில் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற அயல்நாட்டு மது வகை உடல் அளவிலும், சமுக அளவிலும் ஒத்து போகும். என்ற கேள்வியோடும், ஏன் ஒரு குடிநோயாளிக்கு அல்லது குடிமகனுக்கு தனக்கு வேண்டிய அல்லது தனக்கு விருப்பமான மது வகைகளை தேர்ந்தெடுத்து அருந்தும் வாய்ப்பை வழங்காமல், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மது வகைகளை இந்த அரசாங்கம் கட்டாயப்படுத்தி திணிக்கின்றது என்பதே எனது கேள்வி..
நம்நாட்டுக்கு தேவையான மக்களின் சமுக பொருளாதார நிலையோடு ஒத்து போன கள் மது வகையை சார்ந்தது என்றாலும் அதனை தொழிற்சாலை அமைத்து உற்பத்தி செய்ய வேண்டிய தேவையில்லை, ஒரு பணைமரமோ, தென்னை மரமோ, அல்லது ஈச்ச மரமோ இருந்தாலே போதும், கள் உற்பத்தி செய்ய இயலும், இதனால் மேற்கூறிய மரம் புவைத்திருக்கும், சிறு மற்றும் குறு விவசாயிகள் பலன்பெறுகின்றனர். கள் உற்பத்தியாளர்களாக இவர்களும், மரமேறிகளும் நேரிடையாக பலன் பெறுகின்றனர்.
கள்ளின் விலையோ மிகவும் குறைவு, மேலும், அயல்நாட்டு மது வகைகளைப் போல பாதிப்பும் மிக குறைவு. கள் என்பது இந்த மண்ணுக்கு ஏற்ற ஒரு உணவு அது மருந்து வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால் எளிய போதை பொருள். இதை சார்ந்திருப்பவர்களும், பயன்படுத்துபவர்களுமே எளிய மக்கள்தான்.
இன்று நவின இளைஞர்கள் டின்னில் கோக், டின் பீர் ஆகியன அருந்து வது போல் டின்னிலும் கள் கிடைக்கின்றது இலங்கை மற்றும் சிங்கப்புர் ஆகிய நாடுகளில் இதுதான் ஏழைக்கு ஏற்ற மது கொள்கை.
நான் கள்ளுக்கு வக்காலத்து வாங்க இதனை எழுதவில்லை, மாறாக ஒரு குடிமகனுக்கு தனக்கு விருப்பமான ஒன்றை, அல்லது தன் வருமானத்துக்கு ஏற்ற ஒரு மது வகையை தேர்ந்தெடுத்து குடிக்கும் உரிமை வேண்டும். அத்தகைய உரிமையின் வெளிப்பாடாக அரசு மதுபான கடைகளிலும், கள், பட்டை சாராயம் போன்ற மது வகைகள் விற்பனைக்கு வர வேண்டும் என்பதே எனது கோரிக்கை.
சமுக நிலையில் இந்த கோரிக்கை பொருளற்றதாகவும், அர்த்தமில்லாததாகவும் தோன்றும், உண்மை அதுவல்ல, இப்பொழுது கிடைத்துக் கொண்டிருக்கின்ற இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுவகைகள் நமக்கு கிடைத்துக் கொண்டிருப்பதுதான் பொருளற்றதாகவும், சமுகத்துக்கு ஒத்து போக இயலாததாகவும் உள்ளது. இதன் உள்ளே சென்று பார்த்தால்,
குடிப்பவர்கள் நிலமற்றவர்கள், சமுக நிலையில் தாழ்ந்து கிடப்பவர்கள் என்பதாலும், மது வகைகளை உருவாக்குவோர்கள், பெரு முதலாளிகள் என்பதாலும் தேர்தல் செலவுகளுக்கு கட்சிகளின் பண தேவைக்கு புரவலர்களாக இருப்பவர்கள் இந்த இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மது வகைகள் உற்பத்தியாளர்களே. மேலும் இந்த வகை உற்பத்தியாளர்கள், பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் மந்திரிகளே ஆகவும் இருப்பதால் கட்சிக்கும் அதிகாரத்தில் உள்ள அமைச்சர்களுக்கு மட்டுமே இலாபம்.

ஆனால் கள் உற்பத்தியால் மக்கள் அணைவருக்கும் லாபம், ஒரு மரமேறி கள் உற்பத்தி மட்டும் செய்வதில்லை, பனை வெல்லம், மற்றும் ஓலை அதை சார்ந்த பொருள் என பனை மரத்திலிருந்து கிடைக்க கூடிய 113 வகையான பொருட்களும் மக்களுக்கு எப்போதும் கிடைக்க காரணமாக இருக்கின்றார். பலபேருக்கு நேரிடையாகவும் மறைமுகமாகவும் விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்பை உறுதி செய்கின்றது, பனை, தென்னை மற்றும் ஈச்சமரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கள் வகைகளால், இத்தகைய மரத்தை வைத்துள்ள விவசாயிகளுகக்கும் இதனால் லாபம் கிடைக்கின்றது.
தமிழகத்தின் தேசிய மரமான பனை இன்று பராமரிப்பு இன்றி அழியும் மர வகைகளுள் ஒன்றாக உருமாறி வருகின்றது. எனவே கள் உற்பத்தி என்பது ஏழைகளுக்கான மது கொள்கையாக இருப்பதுடன், இயற்கைக்கும் சுற்றுசூழலுக்கும் ஏற்ற ஒன்று என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். மது விலக்கு பற்றி பேசுவதறக்கு முன்னர் ஏழைகளுக்கான மது கொள்கைகளை பற்றி பேச முன் வர வேண்டும் நமது அரசியல் கட்சிகள்.

  

Saturday, September 14, 2013

வாழ்க்கை பயணம்...



கடந்து போகும்
பாதையெல்லாம்
கடல் அலை
தாலாட்ட
நடப்பதோன்றும்
கடற்கரை அல்ல...

கல்லும் முல்லும்
காலுக்கு மெத்தை
என்று சொல்லி
நடக்க இது ஒன்றும்
சபரிமலை அல்ல..

நடந்த பாதையில்
நலமாய் திரும்ப
இது ஒன்றும்
மகிழுந்து பயணம் அல்ல...

வாழ்க்கைப் பயணம்....

அது எப்படி இருக்கும்...

ஆள் நடமாட்டம்
இல்லாத
அனுபவமில்லாத
காட்டை அழித்து
பாதை செய்வது....

முள் கிழிக்கும்,
கல் அடிபடும்...
கால் வைத்த இடமெல்லாம்...
நெருஞ்சி குத்தும்...

உடலெங்கும் காயம்
எஞ்சியிருக்க
மனம் எங்கும்
முள் குத்திய வலியும்
தனிமையின் தவிப்பும் தகிக்க
ஒரு வழி பாதையாய்
பயணம் தொடர
எனக்கு பின் வருபவனுக்கு
சுகமான பாதை
கிடைக்கும்....

பாதை போட்டவனக்கு
என்ன கிடைக்கும்...
அசிங்கம்...
அவமானம்...காயம்...
வலி... வேறென்ன...
இதுதானே வாழ்க்கை பயணம்...

யாரேனும் தப்ப இயலுமா என்ன
இந்த பயனத்திலிருந்து...

இன்று எனக்கு
எதுவோ அதே தானே,
நாளை எனக்கு பின் வருபவனுக்கும்...
இடமும், களமும் மாறுபடும்...
அவ்வளவுதானே...
அதுதானே வாழ்க்கை பயணம்...

Tuesday, August 20, 2013

குட்பை குப்பை

ஒவ்வொரு நகராட்சி, பேருராட்சி, மாநகராட்சி என அனைத்து ஊர்களிலும் தலையாய சிக்கலாக இருப்பது. சந்தேகமே இல்லாமல் குப்பைகள்தான், இந்த குப்பை என்றதும், இந்த தேசத்தில் கழிவுகள் மற்றும் குப்பைகள் இவற்றை நீக்குவது எல்லாம் தலித்துகளின் வேலை என்று,ஒரு பொதுபுத்தி மட்டும் இருக்கின்றது எல்லோருக்கும், அரசுக்கும்.  அதைப் போலவே இன்று தேசமெங்கும், மனிதக் கழிவு, மருத்துவக் கழிவு, மின்பொருள் கழிவு, என கழிவுப் பொருட்களை பல வகைப்படுத்தினாலும், எல்லாமே குப்பைதான். இரண்டு வரியில் சொல்வதென்றால், மக்கும் குப்பை, மக்கா குப்பை. இவைதான் நிதர்சனமான உண்மை.

இவைகளை அகற்றும் பணியை அரசு தலித்துகளுக்கு மட்டுமே வழங்குகின்றது. இதுவும் ஒரு வகையான சாதிய பாகுபாடுதான். குப்பைகளை அள்ளுவதால் தலித் சமுகத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்பும், உளவியல் பாதிப்பும். சொல்லி மாளாது. எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களும், தமது கழிசடை நாவலில் இவர்களது வலியை சொல்லி இருப்பார். ஆனால் இங்கு நான் சொல்ல வந்த செய்தி அதுவல்ல.

ஊர் சுத்தமாக இருக்க குப்பைகளை அள்ளும் தலித் தொழிலாளியின் வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியானதாக இல்லை. காலை விடிந்ததும், நமக்கு நமது தெரு சுத்தமாக பளிச்சென்று இருக்கும், அதற்காக துப்புரவு தொழிலாளி படும் துயரம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இரவெல்லாம் தெருவை கூட்ட வேண்டும், பெரும்பாலும் பெண் பணியாளர்கள்தான் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ஆண் பணியாளர்கள் வண்டியி்ல் சென்று குப்பைத் தொட்டியில் இருக்கும், குப்பைகளை எடுத்துக் கொண்டு குப்பையைத் கொட்டும் இடத்தில் கொட்டுவார்கள். இவர்களின் பணியும் விடியற்காலை நேரத்தில் இருக்கும். பகல்பொழுது இவர்களுக்கு நரகமாக இருக்கும். ஊதியமும் மிக குறைவாகவே இருக்கும். அதனால் இவர்களின் குடும்பங்ள் வறுமையில் உழலும்.
கழிவுநீக்கும் பணியில் உள்ள அணைத்து துப்புரவு தொழிலாளிக்கும் தமது இழி நிலையை எண்ணியும், குப்பைகள், கழிவுகளின் குமட்டலை குறைக்க மது பழக்கமும் இவர்களிடம் காணப்படும். நாளடைவில் இவர்களை இந்த தொழில் குடி நோயாளிகளாக உருமாற்றி, குடும்பத்தை குலைத்து, ஏழையாகவே இறந்து போவததான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது இந்த தேசத்தில்.
இவர்களின் ஏழ்மை நிலையை மாற்றி இம்மக்களையும் ஒரு பெரும் வணிகர்களாக உருவாக்க இயலும், சற்றே மாற்றி சிந்தித்தால் போதும்.
எந்ததொழிலை குலத்தொழிலாகவும், இழிவுத் தொழிலாக பொது சமுகம் கட்டமைத்து இருக்கின்றதோ, அதே தொழிலில் இருந்து நாம் நமக்கான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்..

முதலில் துப்புரவு பணியில் உள்ள அணைத்து தொழிலாளர்களும், தமக்கென ஒரு கூட்டுறவு சங்கத்தை ஆரம்பிக்க வேண்டும். குப்பைகள கொட்டுவதற்கு பதிலாகவும், அல்லது எரிப்பதற்கு பதிலாகவும் தங்களுக்கான வருமானத்திற்கான வாழ்வியல் ஆதாரமாக அந்த பணியையும், குப்பையையும் பயண்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்.

அந்த சங்கம் இரண்டு வகையான பணிகளை செய்ய வேண்டும்.

  1. மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரங்களை தயாரிக்க வேண்டும், அதை அவர்களுடைய கூட்டுறவு சங்கங்கள் வழியாவே விற்பனை செய்ய வேண்டும். அதன் வழியாக வருகின்ற லாபம் பகிர்ந்தளிக்கப் பட வேண்டும்.
  2. அல்லது குப்பையில் இருந்து தயாரிக்கின்ற இயற்கை உரத்தை, விவசாயம், மற்றும். இயற்கை உரங்கள் தயாரிக்கின்ற உர நிறுவனங்களுக்கு கொடுக்கலாம். அவை இயற்கை உரங்களுடன் கலந்து தயாரிக்கப் பயன்படும். உதாரணம், வேப்பம் புண்ணாக்குடன் இத்தகைய உரங்களை கலந்து தயாரித்தால் உயிர் சத்து மிகுந்த உரமாக இருக்கும். பயிரும் நன்கு விளையும்.
இந்த தொழில் நுட்பத்தை இந்த மக்களுக்கு விவசாய கல்லுாரியினரும், மற்ற நபர்களும் கற்றுத் தர வேண்டும். அல்லது அவர்களாகவே கற்றுக் கொண்டு தமது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள மாற்று வழியில் முயற்சிக்க வேண்டும்.
  1. இரண்டாவதாக,மக்காத குப்பைகளில் இருந்து மின்சாரம்தயாரிக்கும் தொழில் நுட்பத்தையும், வாய்ப்புகள் மற்றும் வசதிகளையும் அரசிடம் இருந்து கேட்டு பெற்று, அதன் வழியாக கிடைக்கின்ற மின்சாரத்தை அரசிற்கே கொடுக்கலாம். இதன் வழியாக பொருளாதாரம் கணிசமாக உயரும்.
  2. எந்த தொழிலை இந்த சமுகம் இழிவாக  நிணைக்கின்றதோ, அந்த தொழிலையே தமக்கான முன்னேற்றத்துக்கு பயன்படுத்தும் யுக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  3. இவ்வாறு நாடு முழுவதும் செய்யும் போது, எங்கும் குப்பைகள் இருக்காது. மாறாக குப்பைகளில் இருந்து துப்புறவு தொழிலாளிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும்...
  4. இதை தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதாக சொல்லும் அணைத்து அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்கள், சமுக இயக்கங்கள் ஒருமித்து குரல் கொடுத்து செயல்படுத்த வேண்டும்..

Tuesday, August 13, 2013

நடுங்கும் நிலம் நடுங்கா மனம் - நூல் மதிப்புரை

நடுங்கும் நிலம் நடுங்கா மனம் - நூல் மதிப்புரை

மா. அமரேசனின் 'நடுங்கும் நிலம் நடுங்கா மனம்' நூலை இயற்கை வளங்கள், சூழல், விளிம்பு நிலை மக்கள் என மூன்று தளங்களில் இயங்குவதாக வரையறுக்கலாம்.

பாலாறு குறித்தும், தண்ணீர் வியாபாரம் மற்றும் நீரை பற்றிய நான்கு கட்டுரைகளும், கவந்தி வேடியப்பன் மலை, சவ்வாது மலையின் பாதிப்புகள் என நான்கு கட்டுரைகளும், தலித் மக்கள் சமகாலத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அரசியல் சார்ந்த கட்டுரைகள் என மொத்தம் 18 கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ளன.

சமூகத்தின் செயல்பாடுகள், சூழலியல் தன்மைகள் மற்றும் அதன் பாதிப்புகளை விளிம்பு நிலை மனிதனின் தெளிந்த பார்வையில், துணிவு மிக்க வார்த்தைகளோடு பதிவு செய்துள்ளார் நூல் ஆசிரியர்.

இன்றைய தமிழகத்தில் சமவெளி பிரதேசத்தில் மட்டுமல்லாது கடல், மலை சார்ந்த பகுதிகளில் வாழும் விளிம்பு நிலை மக்களும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

காடுகளின் பரப்பளவு 17%-ல் (சமன்நிலைக்கு 33% தேவை) ஆரம்பித்து, புலிகளின் அழிவு, யானைகளின் இறப்பு, பலவகை பறவைகளின் அழிவு மற்றும் அதன் வாழிட அழிப்பு, கிரானைட் என்ற பெயரில் மலைகளை தகர்த்தல், குவாரி என்ற பெயரில் ஆறு, ஏரிகளை சாகடித்தல், விளைநிலங்களை விட்டு விவசாயிகளை துரத்தியடித்தல், கடற்கரையை அழகு செய்தல் என்று மீனவ மக்களை வேரோடு பிடுங்கி எறிதல், கல்பாக்கம், கூடங்குளம் என 'அழிவுக்கான அறிவியலை' மக்கள் தலையில் திணித்தல், நீயூட்ரினோ ஆலை அமைத்து பேராபாய சங்கு ஊதுதல், 560-க்கும் மேற்பட்ட மீனவ சொந்தங்கள் இறந்தும் மயான அமைதி காத்தல், ஈழத்தில் இனப்படுகொலையில் 1.5 லட்சம் சொந்தங்கள் இறப்பு என தமிழகம் மற்றும் உலகம் முழுக்க வாழும் தமிழர்களின் அவல நிலை எட்டு திக்கும் தொடர்கிறது.

இவற்றில் இருந்து தமிழ்ச் சமூகம் எப்படி மீள்வது? என புரியாத ஒரு நிலையே இன்று அனைத்து தளங்களிலும் உள்ளது. இந்த அடிப்படையிலேயே அமரேசனின் நூலை நோக்க வேண்டியுள்ளது.


இன்று தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் மிகவும் முதன்மையானது 'தண்ணீர்' பிரச்னை. இதனை, 1. அண்டை மாநிலங்கள் நியாயமாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை விடாமல் துரோகமிழைப்பது, 2. தமிழகத்தில் உள்ள நீராதாரங்களை பாதுகாக்கத் தவறுவது மற்றும் கழிவு நீர் குட்டைகளாக மாற்றுவது, 3. ஆறு, ஏரி, குளங்களை வீட்டு மனைகளாக (Real Estate) மாற்றுவது, 4. நிலத்தடி நீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது என நான்கு வகைகளாக பிரிக்கலாம்.

ஒரு பொருளைத் தயாரிப்பதில் இருந்து அதனை சந்தைப்படுத்துவது வரையிலான தொடர் செயல்பாடுகளின் போது பயன்படுத்தப்படும் தண்ணீர், 'புலப்படாத தண்ணீர்' என்ற புதிய கருத்தாக்கத்தை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

இந்த அடிப்படையில் கேரளாவுக்கு நம் மாநிலத்தில் இருந்து தினந்தோறும் செல்லும் அரிசி, முட்டை, காய்கறிகள் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும், உற்பத்தியில் ஈடுபடும் போது செலவாகும் தண்ணீரையும் சேர்த்து விலை நிர்ணயிக்க 'புலப்படாத தண்ணீர்' என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஒரு திட்டத்தை முன்வைக்கிறார். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் செல்கிறது. அவர்களுக்கு அதனை தயாரிக்கும் போது ஏற்படும் தண்ணீர் இழப்பு மற்றும் செலவு இதனால் மிச்சமாகிறது. அப்போது நமது தயாரிப்பு செலவுடன் தண்ணீருக்கான அடக்க விலையையும் சேர்த்து சொல்வது சரியான முடிவாகவே இருக்கும் என்பதை நூலாசிரியர் முன்வைக்கிறார். இந்த செயல்முறையை சர்வதேச நாடுகள் நடைமுறைப்படுத்துவதாக விளக்கமளிக்கிறார். நமது அரசியல்வாதிகள் இதனை கருத்தில் கொண்டால் நல்லது.


இயற்கை வளங்களில் ஒன்றான, பல்லாயிரம் வருடங்களில் உருவான மலைகள், இன்று கனிம வளத்திற்காகவும், கிரானைட் கற்களுக்காகவும் முற்றாக அழிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க கவுந்தி வேடியப்பன் மலையை ஜிண்டாலுக்கு ஒப்படைத்து கொள்ளைக்கு துணை போகும் அரசின் கயமையை 'வெடிக்கும் வேடியப்பன் மலை...' என்ற கட்டுரையில் தோலுரித்துக் காட்டுகிறார்.

சுற்றுலா என்பது சுரண்டலுக்கு முதல்படி. பெரு நிறுவனங்களுக்கும், பன்னாட்டு குழுமங்களுக்கும் நமது இயற்கை வளங்களை சுரண்ட கிடைத்திருக்கும் துருப்பு சீட்டுதான் 'சுற்றுலா' என்ற வார்த்தை. காடு, மலை சார்ந்து பல்லாண்டு காலமாக வாழ்ந்து வந்த மக்களை அப்புறப்படுத்திவிட்டு யாருக்காக 'சுற்றுலா' பகுதியாக மாற்றுகிறார்கள் என்ற உள் அரசியலை 'சுரண்டலுக்கு முதல் வழி சுற்றுலா' என்ற கட்டுரையில் பதிவு செய்கிறார் நூலாசிரியர் மா. அமரேசன்.

சுற்றுலாவினால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள், சூழல் சீர்கேடுகளை பட்டியலிடுகிறார். நம்முடைய பண்பாடு சீரழிவதையும் சுட்டிக் காட்டுகிறார்.


பஞ்சமி நிலங்கள் மீட்பது குறித்தும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உண்மை முகம் குறித்தும் தனது கூர்மையான அறிவாற்றல் மூலம் ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

வியாபார உலகில் அன்னை தினமும் ஒன்று தான், காதலர் தினமும் ஒன்று தான். சந்தையை குறிவைத்து இயங்கும் இத்தகைய கூட்டத்திற்கு இன்றைய இளைஞர்கள் தொடர்ந்து பலியாகி கொண்டிருக்கிறார்கள். ஒரு வருடத்தின் அத்தனை நாட்களையும் ஏதாவதொரு நாளாக கொண்டாட தயாராகி உள்ள பெரு நிறுவனங்களை எதிர்த்தும் குரலெழுப்பியுள்ளார் ஆசிரியர்.

சூழலில் தொடங்கி நூலின் பயணம் காடு, மலை, சமவெளி பிரதேசம் என பயணப்பட்டு பெண்ணியத்தை தொட்டு இளைஞர்களின் நலன் பேசி முடிகிறது.

எளிமையான எழுத்து நடையால் வாசகரிடம் நெருங்கி சென்று தன் கருத்தை அவர்களின் மனதில் விதைக்கிறார்.

நூலின் அட்டை வடிவமைப்பும், உள்ளடக்கமும் சிறந்த முறையில் அமைந்துள்ளது. அதே வேளையில் நூல் முழுதும் நிறைந்துள்ள எழுத்து பிழையை நீக்கியிருந்தால் நூல் வாசிப்பு முழுமையடைந்திருக்கும். மா. அமரேசனிடம் இருந்து இன்னமும் சிறந்த படைப்புகளை எதிர்பார்க்க வைக்கிறது 'நடுங்கும் நிலம் நடுங்கா மனம்'.



நூலின் பெயர் - நடுங்கும் நிலம் நடுங்கா மனம்-(நிலம், வனம், சூழலியல்-தலித்தியப் பார்வை)

ஆசிரியர் - மா. அமரேசன்

வெளியீடு - நெய்தல் வெளி
153C, ஈத்தாமொழி சாலை, நாகர்கோவில் - 629002.

தொலைபேசி - 04652-265655.
(0) 9442242629

பதிப்பு - டிசம்பர் 2011.

மின்னஞ்சல் - neidhalveli2010@gmail.com

விலை . ரூ. 85.00


ஏ.சண்முகானந்தம்,
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்.

நன்றி

திரு.ஏ.சண்முகானந்தம்,
காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்.
http://www.thadagam.com/index.php/books/bookscategories/bookreviews/827-nadungumnilamnadungamanam

தடாகம் இணையத் தளம் 

Thursday, August 8, 2013

தலித் கூட்டுறவு விற்பனை மையம்.

இன்றுள்ள தாராள மயம், தனியார் மயம், யாரையும் பணக்காரர்களாக விடாது. அவ்வாறு யாராவது பணக்கார்களாக தம்மை காட்டிக் கொண்டால், அது நேர்மையான வழியில் வந்த பணமாக இருக்க இயலாது. அவ்வாறு திடிர் பணக்காரர்களின் பணத்துக்குப் பின்னால் நிச்சயம், ஒரு குற்றம் அல்லது பல குற்றங்கள் மறைந்திருக்கும். அந்த பணத்தில் இரத்தக்கறை படிந்திருக்கும். இது யாரே ஒரு அறிஞர் பணம் குறித்து சொல்லும் போது சொன்னது.

அவரின் கூற்று அப்படியே தலித் சமுகத்துக்கும் பொருங்தும், தலித் சமுகத்தில் ஆணுக்கு நிகராக, பெண்ணும், பெண்ணுக்கு நிகராக, ஆனும் சேர்ந்தே உழைக்கின்றனர். ஆயினும் பொருளாதார நிலையில் அவர்களால் முன்னேற்றம் காண இயலவில்லை.

இன்று கணவன் மணைவி இருவருமே சேர்ந்து உழைத்தாலும், சேமிக்க முடிவதில்லை, மிச்சம் பிடிக்க முடியாமல், பற்றாக்குறைக்கு ஆளாகி, கடன் வாங்க வேண்டிய தேவையில் உள்ளோம். இந்த நிலை பொருளாதாரத்தில் மிக பின்தங்கி உள்ள தலித் மக்களிடம் அதிகமாகவே காணப்படுகின்றது. இதை மாற்ற என்ன செய்யவேண்டும் என்று இம்மக்கள் அதிகமாக சிந்திக்க வேண்டும்.

உதாரணமாக, பணம் ஒரு வழியில் வந்தால் பல வழிகளில் செலவாகின்றது. முதலில் நாம் செலவழிக்கும் பணம் எங்கு செல்கின்றது, ஏன் செலவாகின்றது என்று பார்க்க வேண்டும்... இன்று நாம் செலவழிக்கும் பணம் யாவுமே, பண்ணாட்டு நிறுவனங்களிடம் சென்று சேர்கின்றது. அவர்கள்தான் நாம் அன்றாடம் பயன்படுத்தும்  பொருட்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு அழகழகாய் அடுக்கி வைக்கின்றார்கள். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்குவதால் அந்த பணம் அவர்களிடம் சென்று குவிகின்றது. அந்த பணம் மீண்டும் நம்மிடம் திரும்ப வராது. எனவே நாம் மீண்டும் மீண்டும் ஏழைகளாக்கப்படுகின்றோம்.

அந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் வாங்குவதால், இடைகழிவு, விற்பனை லாபம் யாவும் கடையின் உரிமையாளருக்கு சென்று சேர்கின்றது. எந்த வகையிலும் ஒரு பொருளை கடையில் இருந்து வாங்கும் போது, ,நாம் நட்டமடைகின்றோமே ஒழிய, லாபம் அடைவதில்லை . இந்த நிலை மாறி கடையில் இருந்து ஒரு பொருளை நாம் வாங்கும் போது நாம் லாபம் அடையும் வகையில் இருக்க வேண்டும் அப்போதுதான் நாம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண இயலுமு்.

உண்மையில் மக்கள் பணம் மக்களிடமே சுழல வேண்டும், அல்லது உழல வேண்டும். அப்போதுதான் மக்களிடம் வறுமை அண்டாது. மாறாக மக்களின் பணம் அனைத்தும் ஒரே இடத்தில் குவியும் போது. தனிநபர்  பணத்தில் குளிக்கலாம், ஆனால் ஒட்டு மொத்த சமுகம் ஏழை சமுகமாக இருக்கும். இதைத்தான் இன்றைய இந்திய பொருளாதார மேதைகளும், அரசியல் வாதிகளும் ஆட்சியாளர்களும் செய்கின்றனர். மக்களால் பொருளாதார மேம்பாடு அடைய முடியமல் தவிக்கின்றனர்.

இந்த நிலை தலித் சமுகத்துக்கு இன்னும் அதிகமாகவே உள்ளது. எனவே இவற்றை தவிர்க முதலில் மக்கள் பணத்தை மக்களிடமே, சுழலச் செய்ய வேண்டும்.

அதற்காக சேரிகள் தோறும் உள்ள வீடுகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்று அந்த தொகையை முதலீடாகவும், முலதனமாகவும் கொண்டு ஒரு கூட்டுறவு விற்பனை மையத்தை தொடங்க வேண்டும், அதில் தற்போதுள்ள எல்லா பன்னாட்டு வணிகர்களின் பொருளாக இருந்தாலும் சரி, உள்ளுர் வணிகர்களின் பொருளாக இருந்தாலும் சரி நாம் விற்பனைக்கு வைக்கவேண்டும், நம் மக்களும் குண்டுசி முதல் அனைத்து பொருட்களையும் அந்த கடையிலேதான் வாங்க  வேண்டும்.

கிராம அளவில் தலித் மக்கள் உற்பத்தி செய்யும் காற்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை கூட தலித் கூட்டுறவு விற்பனை மையத்திலே விற்று தனக்கு வேண்டிய பொருட்களை அந்த விற்பனை மையத்திலிருந்தே பெற்றுக் கொள்ளலாம். இதன் வழியாக பொருளாதார மேம்பாடு அடைய எளிமையான வழி கிடைக்கும். இதை ஒரு பெரும் நிறுவனமாக வளர்தெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

 உள்ளுர் விற்பனை விலை, சில்லறை விற்பனை விலைக்கே பொருளைக் கொடுத்தாலும், ஒவ்வொரு பொருள் விற்க்கும் போதும் கடைக்காரருக்கு ஒரு லாபம் உண்டு, அந்த லாபம் முழுவதும் அந்த கடையை நடத்தும் மக்களுக்கு செல்லும், ஆண்டு இறுதியிலோ, அல்லது, ஆண்டிற்கு இரு முறையோ கடை யில் பொருட்களின் விற்பனை வழியாக கிடைத்த லாபம் மக்களிடம் பகிர்ந்தளிக்க வேண்டும்.

இதன் முலம் ஒரு பொருளை வாங்கும் போது கடைக்காரருக்கு கிடைக்கும் லாபம் தலித் மக்கள் அணைவருக்கும் கிடைக்கும். மேலும், காலப்போக்கில், பன்னாட்டு வியாபாரிகளின் பொருட்கள் விற்பனையை நிறுத்தி, அல்லது குறைத்து, உள்நாட்டு வியாபாரிகளின் பொருளை விற்கலாம். அல்லது. தலித்துகள் உற்பத்தி செய்யும் பொருளை தலித் மக்களிடமே, கூட்டுறவு விற்பனை மையத்தின் வழியாக எளிதில் விற்பனை செய்யலாம், இந்த மக்களின் பணம் இவர்களிடமே உழன்று பலருக்கு வேலை வாய்ப்பையும், பொருளாதார மேம்பாடும் அடைய வழி பிறக்கும்.

இதை சேரிகள் தோறும் செய்ய வேண்டும். அப்போதுதான் தலித் மக்களுக்கென விற்பனை நிலையங்கள் உருவாகும். தலித் கூட்டுறவு விற்பனை மையம் என்பது தலித் மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு நிறுவனமாக உருவெடுக்கும். நமக்கான பொருளாதாரத்தை நாமே கட்டமைக்க இயலும்.

இதையும் படியுங்கள்