Friday, July 21, 2017

பிட்ச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே.



இளையராஜாவின் இசை - பாடல்களில் பௌத்த கூறுகள் – 3 

பிட்ச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே. 

இரண்டாம் பகுதியை படித்து விட்டு எதிர் கேள்வியும், நயத்தக்க பாராட்டையும் வழங்கிய தோழர். சக்திவேலுக்கு நன்றி சொல்லி 3 ஆம் பாகத்தை துவங்குகின்றேன். 

மகாயான பௌத்தம்

       இந்திய தத்துவ மரபில் புதிய வெளிச்சம் பாய்ச்சிய பௌத்த தத்துவத்தின் அடுத்த பரினாமம் கி.மு. இரண்டாம் நுாற்றாண்டில், ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் அருகில் நாகார்ஜுனகொண்டா என்று அழைக்கப்படும் இடத்திற்கு அருகில் வசித்த ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்த நாகர்ஜீனர்.  இவர் தம்மை இரண்டாம் புத்தர் என்று அழைத்துக் கொண்டார். இவரைப் பின்பற்றியவர்களும் அவ்வாறே ஒப்புக் கொண்டு பௌத்தத்தின் புதிய பரிணாமத்தை துவக்கினார்கள், தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் மகாயானம் என்னும் பௌத்த பிரிவை துவங்கினார். அத்துடன் இவர் பல தென்னிந்திய மன்னர்களையும், ஏராளமான பிராமணர்களையும் பௌத்தம் ஏற்க்கச் செய்ததுடன்,[1] வெளிநாடுகளிலும் மகாயான பௌத்தம் பரவ காரணமாக இருந்தார்.
(நாகார்ஜீணரின் சிலை. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இனையத்தளத்திலிருந்து எடுத்தது. அவருக்கு நன்றி)

மகாயான பௌத்தத்தின் முதன்மை நோக்கம்.

      தேரவாத பௌத்தத்தின் படி குடும்பம் என்னும் அமைப்பைத் துறந்து பிக்கு அல்லது பிக்குனிகளாக உள்ளவர்களே, உடல் துறத்தல் (நிர்வாணம்) பெற்று பின்னர் முழுமையான துறத்தலுக்கு (உடல் மற்றும் உயிர் துறத்தலுக்கு) தகுதியானவர்களாக தீர்மானிக்கப்பட்டிருந்ததால், அனைத்து மக்களும் முழுமையான துறத்தல் கிடைக்கச் செய்ய இயலாத குறைபாடான கோட்பாடுகளை கொண்டிருக்கின்றன என்னும் கருத்தோட்டத்தின் படி உருவானதுதான் மகாயானம் என்னும் பௌத்த பிரிவு.

      காலத்திற்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளாத எதுவுமே வீழ்ச்சிபெறும் அல்லது மறு உருவாக்கம் பெறும் என்னும் அறிவியல் நிலைப்பாட்டின் படி புத்தரின் முழு துறத்தலுக்குப் பின் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப காலத்தின் கட்டாயமாக உருவெடுத்ததுதான் மகாயான பௌத்தம். அதன் படி புத்தர் நம்மிடம் இருந்து மறைந்தார் என நாம் நினைக்கத் தேவையில்லை, எத்தனையோ புத்தர்கள் இருந்தார்கள், மறைந்தார்கள், மீண்டும் வருவார்கள், மீண்டு வருவார்கள் என புத்தர் தற்போது நம்மிடம் இல்லை என்னும் கருத்தில் இருந்த மக்களிடம் புத்தர் மீண்டும் வருவார் என புத்தெழுச்சியை உருவாக்கியது மகாயானம்.


அத்துடன், பௌத்தம் ஏற்று ஞானம் அடைந்தால் நீயும் புத்தனே, புத்தரை வெளியில் எங்கும் தேட வேண்டாம், உணக்குள்ளும் புத்தர் இருக்கின்றார். மற்றவர்களுக்குள்ளும் புத்தரைப் பார்க்கலாம்.  நீ பார்க்கும் எல்லாமே புத்தரின் வடிவங்கள் என புத்தரின் உருவத்துக்கும், கருத்தியலுக்கும் புது விளக்கம் அளித்து, புத்தரை பொதுமைப் படுத்தியது மகாயான பௌத்தம். இந்த கருத்தாக்கமே பிற்பாடு இந்து மதத்துக்குள் நுழைந்து அத்வைதத் தத்துவமாக மலர்ந்தது.

மகாயான பௌத்தத்தின் சிறப்புகள்

       தத்துவத்தின் அடிப்படையில்
1.     'அனைவருக்கும் மோட்சம்'
2.     'ஊக்குவிப்பு
3.     'கருணை'
சமயத்தின் அடிப்படையில்
4.     'இறை நிலையை உணர்தல்'
5.     'இறை நிலையோடு இரண்டற கலத்தல்'[2]
என தத்துவமாக மட்டுமே தனித்து இயங்காமல், சமயமாக மட்டுமே தெய்வங்களை சார்ந்து இராமல், தத்துவம் மற்றும் சமயம் இரண்டின் கலவையாக உருவானதுதான் மகாயான பௌத்தம். மகாயான பௌத்தம் குறித்த எளிய அறிமுகத்தை இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன்.

கள்ள புத்தர் அல்லது கபட புத்தர் என்றழைக்கப்பட்ட கௌடபாதர்

       மகாயான பௌத்த பிக்குவாக ஆரம்பத்தில் இருந்தவர், பின் கௌதம புத்தரைப் போலவே தத்துவ விசாரனையில் ஈடுபட்டு, பதஞ்சலி முனிவரிடம் (இவர் வேறு பதஞ்சலி முனிவர்) யோகச்சாரம் பயின்றவர். அதன் பின் தான் கற்ற பௌத்த சூத்திரங்களை (அப்போதிருந்தது வேத மதம் படிப்பவரின் புரிதலுக்காக இந்து மதம் என்றே இக்கட்டுரை முழுவதும் குறிப்பிடுகின்றேன்.) இந்து மதத்தில் இனைத்து சூத்திரங்களுக்கு இந்து மத நோக்கில் உரை இயற்றியவர். இவர் உத்திர கீதை என்னும் நுாலுக்கு உரையாசிரியராக கருதப்படுகின்றார்.[3]

      மகாயான தத்துவங்களை இந்து மதத்தில் இனைத்து உரையெழுதி அதற்கு அத்வைதம் எனப் பெயரிட்டவர். அவ்வாறு இவர் மகாயானத்தில் இருந்து இந்து மதத்துக்கு கொண்டு வந்த தந்துவங்களுக்கு இவர் வைத்த பெயர். மண்டுக காரிகை. மண்டுகம் என்றால் தமிழில் தவளை என்றுப் பொருள். தவளயைப் போல ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தாவிக் கொண்டிருக்கும் கருத்தியல் என்பதே அதற்கான விளக்கம்[4]

                                 ( கபட புத்தர்)[5]

      இருப்பினும் அக்காலத்தில் வீழ்ச்சியுற்றிருந்த இந்து மதத்திற்கு ஒரு புதிய கருத்தியல் தேவைப்பட்டதாலும், செல்வாக்கு பெற்றிருந்த பௌத்தத்தின் கோட்பாடுகளை இந்து மதத்திற்கு கொண்டு வந்ததாலும் மண்டுக காரிகை மிக முக்கியத்துவம் வாய்ந்த நுாலாக இருந்தது அந்த காலத்தில் இந்து மதத்தின் ஆதரவாளர்களுக்கு.

      வரலாற்றில் எப்போதுமே சமயங்கள் மறையும் ஆனால்  சமயக் கருத்துக்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டேயிருக்கும். இதுதான் நடைமுறையில் உள்ள உண்மை. உதாரணமாக அப்போது வீழ்ச்சிக் கண்டுகொண்டிருந்த பௌத்த சமயம் மறைந்தாலும் அதன் சமயக் கருத்துக்களை இந்து மதம் உள்வாங்கிக் கொண்டதைப் போலவே எல்லா நாட்டிலும் நிகழ்ந்திருக்கின்றது. நாகர்ஜீணர் தமது மகாயான பௌத்தத்தை பரப்பிய சீனம், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளிலும், அப்போது அங்கு வீழ்ச்சியுற்றுக் கொண்டிருந்த சமயங்களின் கருத்துக்களையும் கடவுளையும் உள்வாங்கிக் கொண்டே மகாயான பௌத்தம் கட்டமைக்கப்பட்டது. அதேதான் இந்தியாவிலும் நிகழ்ந்தது.

      ஆனால் பௌத்த கருத்துக்களை உள் வாங்கி இந்து சமயம் வளர்ந்த பொழுது, அதன் முக்கியமான சாரத்தை விட்டு விட்டு சக்கையைக் கொண்டே வளர முயற்சித்தது. தேரவாதம், மகாயானம், மற்றும் வஜ்ஜிரயான ஆகிய 3 முக்கியப் பிரிவுகளின் மொத்த கருத்துக்களை ஒரு வரியில் சொல்வதாயின், பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே, மனிதர்களில் உயர்வுதாழ்வு என்பது அவரது நடத்தையாலே தீர்மானிக்கப்படுகின்றது ஒழிய பிறப்பின் அடிப்படையில் இல்லை என்பதே ஆகும். நேரடியாக சொல்வதாயின் பௌத்தம் எந்த நிலையிலும் சாதி மற்றும் வருணப் பாகுபாடுகளை பார்ப்பதில்லை, உயர்வுத்தாழ்வு பார்ப்பதில்லை. அவ்வாறு சாதி பார்த்தால் அவர் பௌத்தர் இல்லை.

      ஆனால் பௌத்த கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு மீண்டும் புத்துயிர் பெற்ற இந்து சமயம், பௌத்தத்தின் உயிர் தத்துவமான பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்னும் கருத்தியலை கை விட்டு, பிறப்பின் அடிப்படையில் மனிதனை பிரிக்கின்ற நான்கு வர்ணத்தைத் தக்க வைத்துக் கொண்டு, பௌத்தம் கருத்துக்களுக்கு மண்டூக காரிகையில் இந்து மத நோக்கில் உரையெழுதிய காரணத்தாலே அவர் கபட புத்தர் என அழைக்கப்பட்டார்.

இவரது இந்த மனதை புரிந்து கொண்டதால்தான், பௌத்தர்கள் (அப்போது பௌத்தத்தை ஏற்றுக்கொன்டு, இப்போது இழி நிலையில் தள்ளப்பட்டிருக்கும் சேரி மக்கள்) பொய்யர்களுக்கும், பொய் பேசும் நபர்களுக்கும் கபடன் என அழைக்கலாயினர். கபடதாரி, கபட நாடகம் என்றெல்லாம் அவர்களின் பேச்சு வழக்கில் வருகின்ற சொல்லாடல்களாகும். அவ்வாறு கபடன் என அழைக்கப்படும் நபரின் வழியாக சுட்டிக்காட்டப் படுபவர்  கபட புத்தர் ஆவார். கேரளத்தில் இவரை கள்ள புத்தர் என்றே அழைக்கின்றனர். ( இந்த தகவலை வாய் மொழியாக தெரிவித்தவர். பேராசிரியர். வேதசகாயக் குமார். அவருக்கு நன்றி) 

கபட புத்தர் எவ்வாறு பௌத்த மதக் கருத்துக்களை இந்து மதத்தோடு இனைத்தார் என்பதை, ஆய்வாளர் திரு. மயிலை. சீனி வெங்கட்டச்சாமி அவர்களின் நுாலான பௌத்தமும் தமிழும் என்பதில் இருந்து சில பகுதிகளை சுட்டிக் காட்டுவதன் வழியாக விளக்க இயலும் என என்னுகின்றேன்.
             ஆய்வறிஞர். மயிலை. சீனி. வெங்கட்டசாமி.

பௌத்த மதக் கருத்துக்களை இந்து மதத்தில் நுழைத்த பின்னும் பௌத்தமும் பௌத்த கருத்துக்களும் மக்களிடம் செல்வாக்கோடு இருந்தது. மேலும் புத்தரின் உருவ வழிபாடும் மக்களிடம் செழித்திருந்தது. எனவே பௌத்த கருத்தியலோடு பௌத்த நிறுவனரான புத்தரையும் தன்னுள் இனைத்துக் கொண்டது இந்து மதம்.

      திருமாலிய பிரிவினர். புத்தர் திருமலின் பல அவதாரங்களுள் ஒருவர் என உரிமை கொண்டாடியது. சிவனிய பிரிவினர் சிவ கனங்களுள் ஒருவராக புத்தரை இனைத்துக் கொண்டது, அவ்வாறு இனைக்கப்பட்ட சிவ கனங்கள் தனித்து தெரிவதற்காக, சாஸ்த்தா என அழைக்கப்படும் ஐயப்பன் மற்றும் ஐய்யனாரை புத்தராக இனைத்துக் கொண்டது. பின்னர், முருகன் மற்றும் வினாயகரையும் புத்தராக இனைத்துக் கொண்டது. புத்தருக்கு தருமராசன் என்றொரு பெயரும் உண்டு. அந்த பெயரில் இருந்த கோவில்களையெல்லாம், மகாபாரதத்தில் வரும் தருமராசன் கோயிலாக மாற்றியது.

      பௌத்த மதத்தின் சிறு தெய்வங்களான, மணிமேகலை, சம்பாபாதி, தாரா தேவி ஆகியோரை, இந்து மதத்தில் காளி, பிடாரி, திரௌபதை அம்மன் என்ற பெயர்களில் கிராம தேவதைகளாக மாற்றப்பட்டு வழிபாடு நிகழ்த்தப்பட்டனர். ஐம்பெரும் காப்பியங்களுள் பௌத்த காப்பியமான மணிமேகலையின் தலைவி மணிமேகலையின் சிற்பம்தான் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் இருக்கும், அன்னபூரணி அம்மன் என்றும் காமாட்சி அம்மன் கோயிலே, பௌத்த சிறு தெய்வமான, தாராதேவியின் ஆலயம் என்றும் தமது ஆய்வுகளின் வழியாக நிறுவுகின்றார். அறிஞர். மயிலை. சீனி. வெங்கட்டசாமி.

      அத்துடன் அதுவரையிலும் இந்து மதத்தில் இல்லாது இருந்த சங்கம் என்னும் கட்டமைப்பையும் (மடங்களையும்) உருவாக்குகின்றனர். அதுதான் பிற்காலத்தில் பீடங்களாக உருமாறியது. சங்கர மடம், ஆதீன மடங்கள் எல்லாம் பௌத்தத்தை பார்த்து உருவாக்கிய சங்கம் வகையை சேர்ந்த நிறுவனங்களாகும். பல இடங்களில் பௌத்தர்களின் சங்கங்களை (நிறுவனங்களை) கைப்பற்றிக் கொண்டனர். இந்து சமயத்தின் சொத்துக்காளக (நிறுவனங்களாக ) பாவித்தனர்

      அதை அடுத்து கபட புத்தர் செய்ய மிக சிறப்பான பணி. இந்து மதத்தில் இருந்து வேள்வி, யாகங்களை ஒழித்து, பிராமணர்களை சைவ உணவுக்கு மாற்றியது. அதன் பின் போதி மரத்தை தொழுவதை பின்பற்றி அரச மரத்தை சுற்றச் செய்ததும், பௌத்தத்தை பின்பற்றி, ஸ்தல விருட்சங்களை உருவாக்கி அதனை வழிபடச் செய்தது. 

      கபட புத்தரின் மண்டூக்க காரிகை, அத்வைத தத்துவத்தின் முதல் நுாலாகும். இந்நுால் பௌத்தத்தின் வழி நின்று, பட்டறிவு மற்றும் பகுத்தறிவு இவை இரண்டின் வழியாக நின்று இறைவன் ஒருவனே. அந்த இறைவனே, எல்லா உயிர்களிடத்தும், எல்லா இடத்திலும் நிறைந்திருக்கின்றான் என்னும் நோக்கத்தை நிறுவ எழுதப்பட்டதாகும். இது பிரகரணங்கள் என அழைக்கப்பட்டு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை்.
1.   ஆகமப் பிரகரணம்
2.   வைதத்தியப் பிரகரணம்
3.   அத்வைதப் பிரகரணம்
4.   ஆலதசந்திப் பிரகரணம். 
   
           இவை முறையே 29,38,48,100 ஆகிய எண்ணிக்கையிலான சுலோகங்களால் இயற்றப்பட்டது.[6] ,இவை நாம் இந்த கட்டுரையின் துவக்கத்தில் பார்த்த மகாயான பௌத்தத்தின் சிறப்பு இயல்புகளாகப் நாம் பார்த்த ஐந்து கருத்தாக்கங்களின் சுருக்கமே ஆகும்.

கபட புத்தரின் சீடர்களுள் முதன்மையானவர். கோவிந்த் பாகவத் புத்தர் இந்து மதத்திற்கு வந்த பிறகு கோவிந்த பாகவத பாதர்.என தனது பெயரை மாற்றிக்கொண்டார். இவரது சீடர்தான் ஆதி சங்கரர்.
ஆதி சங்கரர்.

( ஆதி சங்கரர் தனது சீடர்களுடன். ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியத்திலிருந்து எடுத்தது)


       ஆதிசங்கரர் இன்றைய கேரள மாநிலத்திலுள்ள காலடி  என்னும் ஊரில் பிறந்தார். இவரது தாயார் பெயர் ஆர்யம்மாள். தந்தை பெயர் சிவகுரு. இவரது காலம் குறித்து கனிப்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடம் குழப்பம் உள்ளது. ஒரு சிலர் இவர் கி.மு. நான்காம் நுாற்றாண்டு என்றும், மற்றும் சிலர் கி.பி. ஏழாம் நுாற்றாண்டு எனவும் இவரது காலத்தை கணிக்கின்றனர். தமிழறிஞர். மயிலை. சீனி.வெங்கட்டசாமி. இவர் கி.பி. ஏழாம் நுாற்றாண்டைச் சேர்ந்தவர் என்னும் கருத்தை ஆதரிப்பவராக இருக்கின்றார்.


      ஆதி சங்கரர் ஆரம்ப காலத்தில் கபட புத்தரின் சீடரான கோவிந் பாகவத் புத்தரிடம் தத்துவம் பயின்றார். அப்பொழுது இவரது பெயர் சங்கர பாகவத் புத்தர் என்றே அழைக்கப்பட்டார். ஆரம்ப காலத்தில் ஆதி சங்கரர் தன்னை தத்துவ வாதியாகவே நிலைப்படுத்திக் கொண்டார். அதன் அடிப்படையில் இந்து மதத்தின் மிக முக்கிய தத்துவங்கள் மற்றும் வேதாந்தங்கள் என்று அழைக்கப்படுகின்ற உபநிஷங்களுக்கு உரையெழுதினார். அவ்வாறு அவர் உரையெழுதிய உபநிஷங்களையே பதினென் உபநிஷங்கள் என்று அழைக்கின்றனர். அவை.


1.   ஈச உபநிடதம்
8.   மாண்டூக்ய உபநிடதம் (கபட புத்தரின் மகாயான பௌத்த தத்துவம்)
12. கௌசீதகி உபநிடதம்
13. பிரம்ம்பிந்து உபநிடதம்
14. மைத்ராயணி உபநிடதம்
15. நாராயண உபநிடதம்
17. ஆருணிக உபநிடதம்

 

பிரம்ம சூத்திரம்.


      ஆதி சங்கரர் இந்து மதத்தின் முந்நெறிகள் என அழைக்கப்படுகின்ற உபநிஷத்துகள். பிரம்ப சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகிய மூன்று நுால்களுக்கும் உரையெழுதி ஆரம்ப காலங்களில் தம்மை இந்து சமய தத்துவ வாதியாக பாவித்துக் கொண்டார்.

      பிரம்மஞானம் என அழைக்கப்படும் பிரம்ம சூத்திரத்துக்கு மூவர் உரையெழுதுகின்றனர். அவர்களுள் முதலாவதாக உரையெழுதியவர். ஆதிசங்கரர். அவ்வாறு உரையெழுதி அவரது தத்துத்திற்கு அவர் இட்டபெயர் மனீஷா பஞ்சகம்  இது அத்வைதம் என்னும் தத்துவ வகையாக வகைப்படுத்துகின்றார். இரண்டாவதாக உரையெழுதியவர் வைணவ மதத்தைச் சேர்ந்த இராமனுாஜர். அவர் உரை எழுதி அதற்கு ஸ்ரீ பாஷ்யம் எனப் பெயரிடுகின்றார். அவரது தத்துவத்திற்கு விசிஷ்டாத்வைதம் என பெயரிடுகின்றார்.[8] மூன்றாவதாக உரையெழுதியவர் மத்வர். இவர் எழுதிய உரைக்கு விஜாதீய பேதம்  எனப் பெயரிடுகின்றார். அவரது தத்துவத்திற்கு துவைதம் எனப் பெயரிடுகின்றார்.[9]

      இவ்வாறு ஒரே உரைக்கு 3 நபர்கள் உரையெழுத நேர்ந்ததன் காரணத்தை அறிஞர். மயிலை. சீனி. வெங்கட்டச்சாமியின் நுாலான பௌத்தமும் தமிழும் என்ற நுாலில் இருந்து எடுத்தாளப்படும் மேற்கோலில் இருந்து அப்படியே எடுத்துக்காட்ட விழைகின்றேன். “ வைணவ ஆசாரியருள் தலைசிறந்தவரும். ஸ்ரீபாஷ்யம் அருளிச்செய்தவருமான இராமாநுசர், சங்கராச்சாரியரின் அத்வைத மதத்தைப் பிரசன்ன பௌத்தம். அதாவது மாறுவேடம் பூண்டுவந்த பௌத்தம் என்று கூறுயிருக்கின்றார். துவைத மதத்தின் தலைவராகிய மத்வாச்சாரியாரும் அவ்வாறே சங்கரரின் அத்வைத மதத்தைப் பிரசன்ன பௌத்தம் என்று கூறியிருக்கின்றார். பதுமபுராணத்தின் உத்திரகாண்டத்திலும் சங்கராச்சாரியாரின் மாயாவாத மதம் பிரசன்ன பௌத்தம் என்றே கூறப்படுகின்றது. இதனால் அத்வைத மதத்தின் அடிப்படையான கொள்கைகள் பௌத்த மதத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பது நன்கு விளங்குகின்றது. [10]
  
                                  இராமானுஜர்.
      வைதிக சமயங்களான இந்து சமயத்தின் பிரிவுகளுக்குள் பௌத்த சமயத்தின் நிறுவனங்களான கோயில்கள், மடங்கள், கடவுள்கள் இவைகளை தன்வயப்படுத்தி வளர நினைத்ததின் விளைவாகவே, பௌத்ததிலிருந்து புத்தரின் சூத்திரங்களை மொழிபெயர்த்து வெவ்வேறு பெயர்களும் விளக்கமும் அளிக்கின்றனர் என்பததான் இதுவரையிலும் சொல்ல வந்த கருத்தின் சுருக்கம். அதில் முதலில் மொழிபெயர்ப்பு செய்த ஆதிசங்கரின் அத்வைத தத்துவத்தை மற்ற இருவரும் மாறுவேடம் பூண்டு வந்த பௌத்தம் என மாறி மாறி குற்றம் சொல்கின்றனர். இதனை ஆதிசங்கரரின் வார்த்தையில் சொல்வதென்றால், “ ஹுதர நிமித்தம் பஹுக்ருத வேஷம்” ( வயிற்றை நிரம்ப இவ்வளவு வேஷம் போடுகிறான் மனிதன்)

                                மத்வாச்சாரியார்
அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய மூன்று தத்துவங்களுமே மாறுவேடம் பூண்டு வந்த பௌத்தக் கருத்துகளே. அதனால்தான் ஒருவரை ஒருவர் குறை சொல்லி எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போல உண்மையை உளரிகொட்டியதை வரலாறு சொல்கின்றது.

ரமண மகரிஷி

       ரமண மகரிஷி 1879 ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் நாள் தற்போதைய விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், திருச்சுழி ஒன்றியத்திலுள்ள திருச்சுழியில் பிறந்தார். சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் வெங்கட்டராமன். பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். பிறப்பின் அடிப்படையில் வெங்கட்டடராமன் திருமாலிய வழிபாட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்.


      ஆன்மீக ஈடுபாட்டின் காரணமாக, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என அவரது உறவினர்களில் ஒருவர் சொல்ல, அந்த திருவண்ணாமலையை தரிசிக்க வேண்டும் என நினைத்து தனது பதினேழாம் வயதில் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். இவர் ஆதிசங்கரரின் அத்வைத மரபை பின்பற்றுபவராகவே இருந்தார். அதிலும் அவரது நான் யார் என்னும் கேள்வியும் அதற்கான பதிலுமே அவரை பிரம்மஞான தேடுதலுக்கு இட்டுச் சென்றது. அதன் பின் அவர். தாம் அறிந்த பிரம்மஞானத்தை அனைவருக்கும், அனைத்து உயிரினங்களுக்கும், ( மனிதர்களுக்கும், ஆடு , மாடு, மயில், குரங்கு, அணில் ) என புவியில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களையும் ஒன்றாகவே கருதி, தனக்கு சமமாகவே பாவித்தார், அவ்வாறே நடத்தினார்.
     

இவருக்கு மக்கள் இட்ட பெயர், பிரம்மஞான சுவாமி, அதுவே நாளடைவிலும், பேச்சு வழக்கிலும் பிராமண சுவாமி என்று மருவியது. இவருடைய சீடரான கணபதி முனி என்னும் சமஸ்கிருத புலவர், இவருக்கு இரமண மகரிஷி என்னும் பட்டப் பெயரைச் சூட்டினார். இரமணர் என்னும் பெயருக்கு இரண்டு பொருள் உண்டு. 1. எல்லையில்லா ஆனந்தத்தை அருளுபவர். 2. பிறவி தளையை அறுப்பவர் என இரு பொருள்கள் உண்டு.

      மற்ற துறவிகளில் இருந்து இரமண மகரிஷி முற்றிலுமாக வேறுபடுகின்றார். 1. தனக்கென தான் அணிந்திருந்த வேட்டி மற்றும் கோவணத்தை தவிர எந்த சொத்தும் சேர்த்துக் கொள்ளாதவர். 2. தன் இறுதிக் காலம் வரை காசு, பணத்தை தன் கைகளால் தொடாமலே வாழ்ந்தவர். 3. அனைத்து உயிரினங்களையும் எல்லையில்லா அன்புடன் நேசித்தவர்.
·            ஆதி சங்கரரின் ஆக்கமான 'ஆத்ம போதம்' தனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.
·         உபதேச உந்தியார்
·         உள்ளது நாற்பது
·         உள்ளது நாற்பது அனுபந்தம்
·         ஏகான்ம பஞ்சகம்
·         ஆன்ம வித்தை
·         உபதேசத் தனிப்பாக்கள்
·         ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை
·         ஸ்ரீ அருணாசல அஷ்டகம்
·         நான் யார்?
·         விவேகசூடாமணி அவதாரிகை
·         பகவத் கீதா ஸாரம்
·         குரு வாசகக் கோவை
·         ஸ்ரீ ரமண நூற்றிரட்டு
·         ஸ்ரீ ரமணோபதேச நூன்மாலை - விளக்கவுரை[11] ஆகிய நுால்களை எழுதி தன்னனை தத்துவ வாதியக நிலை நிறுத்திக் கொண்டவர். ஆதி சங்கரரைப் போல், தத்துவ வாதியாக இருந்து பின் சமய வாதியாக மாறாமல், இறுதி வரையிலும் தத்துவ விசாரணயைாளராகவே தன் வாழ்நாளைக் கழித்தவர்.

பிரம்ம ஞானம்

      பிரம்மஞானம் என்னும்  கருத்தை தமிழகத்தில் மக்களிடம் மிக நெருக்கமாக அனைத்து தரப்புக்கும் கொண்டு சென்றவர்கள் 3 ஞானிகள். திரு. ரமண மகரிஷி, திரு. யோகிராம்.சுரத்குமார். திரு. அருள்தந்தை. வேதாத்திரி மகரிஷி, இவர்கள் மூவரின் பிரம்ம ஞான கருத்தையும் வழிமுறையும் மிக நெருக்கமாக ஆய்வு செய்து, பயின்றவர். நமது இசைஞானியார். இவர்களில் இரமணரை. தனது குரு என்றும். ஞான தந்தை என்றும் அழைத்து ரமணரை பெருமை படுத்துகின்றார். தனது ராஜாவின் ரமண மாலை ஒலிநாடாவில் நமது இசைஞானி. பிரம்ம ஞானம் என்பது குறித்து கதை வழியாக விளக்க விரும்புகின்றேன். இந்த கதை ஆதிசங்கரரின் வாழ்வில் நடந்தது,

      வரணாசிக்கு அருகில் ஆதிசங்கரர் வாழ்ந்து வந்த காலத்தில், ஒரு நாள் காலை கங்கை நதியில் இருந்து குளித்து முடித்து விட்டு, புதிய ஆடை அணிந்து காசி விசுவநாதரை தரிசிக்க வேண்டும் என்னும் ஆவல் மிகுதியால், கரையேறும் போது, எதிரில் ஒரு சண்டாளன், ( பஞ்சமர் ஆணுக்கும், பார்ப்பண பெண்ணுக்கும் பிறந்தவர்களை சண்டாளர்கள் என அழைப்பர். )  தனது நாய்களுடன் அவர் கரையேற நினைக்கும் இடத்தில் நின்று கொண்டிருக்க தனது பார்ப்பன ஆசாரம் கெட்டுவிடும் என்னும் எண்ணத்தில், அவரை விலகியிருக்கச் சொல்கின்றார். அந்த உரையாடலை அப்படியே பார்ப்போம்.


சங்கரர். “ கொஞ்சம் விலகி வழி விடுங்கள்,
சண்டாளர், ஏன் இருக்கின்ற வழியில் நீங்கள் போகலாமே,
சங்கரர். இல்லை நான் குளித்து விட்டு வருகின்றேன். தங்கள் சுவாசித்த காற்று என்மீது பட்டால் தீட்டு, அதனால் விலகி இருக்க சொல்கின்றேன்.
சண்டாளர். காற்றில் என் சுவாசக் காற்று, உங்கள் சுவாசக் காற்று என பிரித்து பார்க்க இயலுமா என்ன. என் சுவாசக் காற்று, அப்படியே வேறு எதனுடம் கலக்காமல் இருக்குமா, அல்லது நீங்கள் சுவாசித்த காற்று உங்களுடையதுதான் என உங்களால் உறுதி பட சொல்ல இயலுமா.
சங்கரர்.  எனக்கு உன்னுடன் பேச நேரமில்லை, சற்று நகர்ந்து நில்,
சண்டாளர். நகர்ந்து என்றால், நான் நகர வேண்டுமா, என் மனம் நகர வேண்டுமா, நான் நகர வேண்டும் எனில் என் மனம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும், என் மனம் நகர வேண்டும் எனில் என் உடல் ஒத்துழைக்க வேண்டும். இதில் எதனை தாங்கள் நகரச் சொல்கின்றீர்கள். அவ்வாறு. தாங்கள் உன் உடலை நகரச் சொன்னால், என் மனம் உங்களைச் சுற்றி வந்தால், அதற்கு தீட்டு கிடையாதா. என் மனதிற்கு தீட்டு இல்லையெனில், என் மனதை சுமந்திருக்கும் உடலுக்கு மட்டும் எங்கிருந்து தீட்டு வந்தது என்கின்றார்.

( இந்த பதிலால் ஆதி சங்கரர் சற்று திடுக்கிட்டாலும், தொடர்ந்து சமாளித்து, )
சங்கரர். கொஞ்சம் தெற்கு திசையாக நகர்ந்து நில்லேன், என்கின்றார்.
சண்டாளர். அப்படியெனில் தெற்கு திசை தீட்டுப்பட்டால் பரவாயில்லையா, நான்கு திசைகளில் ஒரு திசை தீட்டானால் உங்களுக்கு சம்மதமா, எல்லா திசைகளிலும் என் போன்ற இழிசாதியினர் வாழ்ந்து வருவதால், நாங்கள் வசிக்காத திசையிருந்தால் சொல்லுங்கள் அங்கே நகர்ந்து நிற்கின்றேன், என்கின்றார்.

அவருடைய அந்த பதிலைக் கேட்டு சங்கரருக்கு உதித்த ஞானமே, பிரம்ம ஞானம். உயிர்கள் அனைத்தும் இறைவனின் படைப்பு, இதில் உயர்வு தாழ்வு கிடையாது என்னும் ஞானமே பிரம்ம ஞானம். எனக்குள் இருக்கும் இறையாற்றலே, சண்டாளனுக்குள்ளும் இருக்கின்றது, அவர் கையிலிருக்கும் நாய்க்குள் இருப்பதும் இறையாற்றலே, என்ற தனது தத்துவ தேடலை முடிவுக்கு கொண்டு வந்து, அந்த சண்டாளனின் பெயராலே, மனீஷா பஞ்சகம் பாடினார் என்பது வரலாறு.

எல்லா இடங்களிலும் எக்காலத்திலும் எல்லாப் பொருட்களிலும், உயிர்களிலும் இறைநிலையை உணரக்கூடிய பேரறிவுதான் பிரம்மஞானம், அண்டவெளிதான்  இறைநிலைஅதுதான் கடவுள். கடவுளுக்கு உடலும் குடலும் இல்லை, உருவம் இல்லை, எல்லோரும் உணரக்கூடிய ஒரு பேராற்றல். எல்லா உயிர்களையும் நிபந்தனையற்று நேசிக்க வேண்டும் என்பதே பிரம்மஞானம்,

ரமணர் தன் இறுதிக்காலம் வரை, ஆடு, மாடுகளையும் தனது பிள்ளைகள் என்றே அழைத்து, அவர்களுக்கும் ஞானத்தை போதித்து மோட்சம் பெற காரணமாக இருந்தார் என அவரது வரலாறு சொல்கின்றது. எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும் என இந்து மதம் உபதேசம் செய்யும். ஆனால் மனிதர்களை உயர்சாதி, கீழ்சாதி என பாகுபாடு பார்த்து பிரித்து வைக்கும். இந்த போக்கைத்தான் பிரசன்ன பௌத்தம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.  எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும் என சொல்லி விட்டு உயர்வு தாழ்வு பார்ப்பது இறைநிலையில் எந்த வகையில் தகும். .இன்றைய இந்து மத ஞானங்கள் இதைத்தான் போதிக்கின்றன. இதைத்தான் கற்பிக்கின்றன. உயர்சாதி, கீழ்சாதி என சாதி பேதம் பார்க்காத ஒரு இந்துவை இங்கே காட்ட இயலுமா என்ன.

பிட்ச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே.

      நான் இங்கே பேசு பொருளாக எடுத்துக் கொண்டது, ராஜாவின் ரமணமாலையில் வரும், பிட்ச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே, என் அய்யனே, பாடலை. ஆனால் இதுவரையிலும் எழுதியது. அந்த பாடலுக்கான முன்புலச் செய்திகள். இந்த முன்புலச் செய்திகள் புரியாமல் இந்த பாடலை கேட்க்கும் எவருக்கும் இசைஞானியாரின் எல்லையில்லா ஆன்ம ஞானமும், தேடலும் புரியாமலே போய்விடும் என்பதால் எழுத நேர்ந்தது. படிப்பவருக்கு இது மிக நீளமாகத் தோன்றும். உண்மையில் மிக சுருக்கமாகவே இதனை பகிர்ந்திருக்கின்றேன் என்பது வரலாற்றுடன் பொருத்திப் பார்ப்பவருக்கு எளிதில் புரியும்.  

அதே பாடல் சிற்சில மாற்றங்களுடன் “ பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே” என நான் கடவுள் படத்தில் இடம் பெற்றது. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை படிப்பவருக்கு உணர்த்த வேண்டிய தேவையுள்ளது.
            முதலில் பிச்சை என்பதற்கும் பிட்சை என்பதற்குமான வேறுபாடுகளை விளங்கி கொள்ள வேண்டும். பிச்சை என்பது சாமானியர்கள் யார் வேண்டுமானாலும் பெறுவது. இல்லாதவன் இருப்பவனிடம் கெஞ்சி, கூத்தாடி, கதறி, கண்ணீர் விட்டு இரந்து பெறுவது பிச்சை. இதற்கென எந்த விதமான நிபந்தனைகளும், கட்டுப்பாடும் கிடையாது. 
பிட்சை என்பது உயர் ஞானம் எய்திய ஞானிகள் தமக்கான உணவு, உடை, மற்றும் அவசியத் தேவைகள் எதற்காகவும் சாமானியர்கள் யாரிடமும் கையேந்த மாட்டார்கள். தனக்குத் தேவையானவைகளை இறைவன் அவர்களுக்கு அளிப்பான் என்பது அவர்களின் நம்பிக்கை. எங்காவது ஓரிடத்தில் பிச்சைப் பாத்திரத்தை வைத்துவிட்டு காத்திருப்பார்கள். அதில் விழுவதை இறைவன் இன்று அவருக்கு அளித்ததாக நினைத்து மகிழ்ந்து உண்பார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு அன்று கிடைத்ததும் பிட்சைப் பெறுவதை நிறுத்திவிட்டு, இறைவனை தியானிக்கத் துவங்கிவிடுவார்கள். 

ஒரு வேலை அன்றைய உணவு பிட்சையாகக் கிடைக்கவில்லை என்றாலும் அதற்காக வருத்தப்பட மாட்டார்கள். அப்பொழுதும் இறைவனை நோக்கிய சிந்தனை, உடல், மனம், என புறவயம் மற்றும் அக நோக்கிலேயே, காலத்தையும், பொழுதையும் செலவிடுவார்கள். தேவைக்கு மேல் எதிர்பார்க்காதது பிட்சை, தேவை அடங்காமல் யாசிப்பது பிச்சை.

இந்து மதத்தில், இறைவனை தோழனாகப் பார்ப்பவர்கள், கண்ணனை வழிபடுவார்கள். இறைவனை தந்தையாகப் பார்ப்பவர்கள், சிவனை வழிபடுவார்கள். இறைவனை தாயாகப் பார்ப்பவர்கள் சக்தியை வழிபடுவார்கள். இறைவனை மகனாகப் பார்ப்பவர்கள் முருகனை வழிபடுவார்கள். இறைவனை எல்லோருக்கும் பொதுவாகப் பார்ப்பவர்கள் சூரியனை வழிபடுவார்கள். இதுதான் இந்து மத கடவுள்களின் வழிவாட்டு உளவியல். இறைவனைத் துாதராக பார்ப்பவர்கள் நபியை வணங்குகின்றார்கள், இறைவனை மீட்ப்பராகப் பார்ப்பவர்கள் இயேசுவை வணங்குகின்றார்கள். இதுதான் பொதுவான மதம் சார்ந்த வழிபாட்டு உளவியல்.

இந்த உளவியல் வழிபாட்டுப் பின்புலத்தில், நமது இசைஞானி, ஒலிநாடாவில் உள்ள வேறொரு பாட்டின் வழியாக ரமணரை தமது ஞானத் தந்தை என்கின்றார். எனவே இந்த பாடல் ஒரு மகன் தந்தையிடம் பேசுவது போல அமைக்கப்பட்டிருக்கின்றது. அதுவும் அவரின் தந்தை ஞான தந்தை என்றானபின், ஞானத் தேடல் நோக்கிலேயே இது அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டு இந்த பாடலை விளக்க விரும்புகின்றேன்.

பிட்சைபபிட்ச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிட்ச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு, பிட்ச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

சிவனிய மதத்தில் உடலை, குறித்து மற்ற இறை ஆளுமைகள் குறிப்பிட்டிருப்பதை இங்கே ஒப்பிட வேண்டும். தனது உடலை, புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடியது என்கின்றார். மாணிக்க வாசகர். திருவாசகத்தில். உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன். என ஞானம் அடைவதற்கு முன் உடல் ஒரு அசிங்கம் என்கின்றார். திருமூலர். நுன்மான் நுழை புலம் இல்லையெனில் மனித உடல், எலும்பும் தோலும் போர்த்தப்பட்ட பொம்மை என்கின்றார். திருவள்ளுவர்.
ஆனால் நமது இசைஞானியார் மட்டும் தனித்து, இந்த உடலை ஒரு பிச்சைப் பாத்திரம் என்கின்றார். அதையும் மூன்று முறை வெவ்வேறு பொருளில் பதிவிடுகின்றார். முதல் முறை தனது ஞான தந்தையிடம் நீ எனக்கு கொடுத்திருக்கும், எலும்பு, உடல், சதை, நரம்பு, ரத்தம் என்று சொல்லப்படும் பஞ்சேந்திரியங்கள் அனைத்துமே எனக்கு நீங்கள் பிட்ச்சையாக அளித்தது. என்கின்றார்.

இரண்டாவது முறையாக, இந்த உடலும், மனமும் நீங்கள் எனக்கு அளித்த பிட்ச்சை என்கின்றார். மூன்றாவது முறையாகவும், பிட்ச்சை என்னும் போது, போதும் எனக்கு இந்த மனிதப் பிறவி என்னும் பிட்ச்சை இதனுடன் நான் துன்பப்பட விருமப்பவில்லை என்கின்றார்.

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததா
தெய்வீக ஆற்றலான அம்மை அப்பானால் ( சிவன் பார்வதி) இந்த பிறவி கிட்டியதா, அல்லது மனித ஆற்றலான தாய் தந்தையின் ( ராமச்சாமி, சின்னத்தாயம்மாள்)  வழி இந்த பிறவி கிட்டியதா என்கின்றார். அல்லது எனது முன் பிறவியின் வினைப் பயனால் வந்ததா என அவரை அவரே கேட்டுக் கொள்கின்றார்.
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிட்ச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிட்ச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
           
எதனால் இந்த பிறவி என்பதே நான் அறியாதது, மீண்டும் மனிதனாக  இப்பிறவி எதனால் எனக்கு வந்தது என்பது நான் அறியாதது. ஆயினும் சின்ன பொம்மையைப் போல் இயக்கமில்லாமல் இருந்து உனது இயக்கம் என்னும் பேரண்டத்தின் சுழற்சி, மற்றும் அதன் விரிவாக்கம் இவற்றை குறித்து அறிந்து கொள்ள இந்த உடல் மனம் ஆகியவற்றின் வழியாக முயற்சிக்கின்றேன். அப்பா என்கின்றார்.

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிட்ச்சைக்கு செல்வது எவ்வ விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிட்ச்சைக்கு செல்வது எவ்வ விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்
·         செல்வங்களை பொதுவாக இரண்டு வகையாகப் பிரிப்பர். ஒன்று அருட் செல்வம், மற்றொன்று பொருட்செல்வம். இதனை பதினாறு வகையாகப் பிரிப்பர்.
1.   கல்வி
2.   புகழ்
3.   வலி
4.   வெற்றி
5.   நன் மக்கள்
6.   பொன்
7.   நெல்
8.   நல்லூழ்
9.   நுகர்ச்சி
10. அறிவு
11. அழகு
12. பொநுமை
13. இளமை
14. துணிவு
15. நோயின்மை
16. வாழ்நாள்

அதனால்தான் ஒருவரை வாழ்த்தும் போது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்பர். அதைப் போல், அருட் செல்வம், பொருட்செல்வம் என இரண்டையும் நீயே வைத்துக் கொண்டால் நான் எங்கு சென்று யாரிடம் பிட்சை கேட்ப்பது, உன்னிடம் தானே கேட்டக்க வேண்டும். உன் கையில் நான் ஒரு கருவியாக மட்டுமே இருக்கின்றேன். என்னை இயக்குவது நீயாக இருக்கின்றாய் என்கின்றார்.

ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினைய பழ வினையா
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
      இந்த உடல் எத்தனையோ பிறவிகள் எடுத்து, மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கின்றதே, என் முன் வினைப் பயனும், பின் வினைப் பயனும் நொடி தோறும் என்னை துன்பத்துக்குள்ளாக்க வைத்திருக்கின்றதே, இது சரியா என்கின்றார்.

பொருளுக்கு அலைந்திடும் போருளட்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் நிறையும் அருனையே
ரமணர் என்னும் கருனையே
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

           
நம்மில் பலரும் பொருளுக்கு அலைந்திடும் அந்த உழைப்பை அல்லது வாழ்வை, பொருளற்ற வாழ்வு என்கின்றார். இறைவனின் அருளை நாடும் மனம் நிறைவு பெறாமல் பிதற்றுகின்றது என்கின்றார். ரமணர் என்னும் கருனையே என்னை ஆதரித்து அருள் தருக என இறைஞ்சுகின்றார்.
பிட்ச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிட்ச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

      அண்மையில், இசைஞானியாரின் பிறந்தநாளின் போது, இரமண மாலை மற்றும் இரமண கீதம் ஆகிய இரண்டு ஒலிநாடாக்களின் உரிமையை இரமணாசரமத்திற்கே எழுதி கொடுத்து விட்டு வந்தார் நம் இசைஞானி, தனது 73 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, அதன் விற்பனை வழியாக வருகின்ற வருமானம் ரமணாசரமத்திற்கே செல்ல வேண்டும் என எழுதி தந்து விட்டு வந்தவர் இளையராஜா.

      உன்னதமான ஆன்மீக தத்துவக் குவியலாய் இரமணமாலை ஒலித்தொகுப்பு உள்ளது, அதிலும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடல் ஆன்மீக தத்துவ விசாரனையாகவும், விடையாகவும், உள்ளது. இதைப் போல என்னற்ற பாடல்களை இறைநிலையில் இருந்து இசையமைத்து கொடுத்து நம்மை மகிழ்விக்கும் இசைஞானிக்கு நாம் என்ன கைமாறு செய்ய இயலும். அவர் பாடலை கேட்க்கும் போது ஒரு கனமாவது, அவர், குரு அருளாலும், திரு அருளாலும், உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம் பெற்று நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என பகவான் புத்தரிடம் ( அவரவர் அவரவர் வழிபடும் தெய்வங்களிடம் வேண்டுவதைத் தவிர.

      இந்தப் பாடலின் இசையைப் பொறுத்த வரை, பாடலின் பொருளை உணர்த்தும் விதமாகவே இசை அமைப்பு இருக்கும். சங்கு, சிகண்டி, புல்லாங்குழல், தவில், என்னும் பௌத்த இசைக் கருவிகளுடன், வயலின் இசையும் கலந்து ஒலிக்கும் போது, பாடலின் உருக்கத்தில் நம்மை மெய் மறக்கச் செய்து தாயின் கருவரையில் இருந்த அமைதியை உணரச் செய்கின்றார் இசை ஞானி. பாடல் துவங்கும் போதே, சாவுக்கு ஒலிக்கும் சங்கு, சிகண்டி, இசையை தவழச் செய்து, இசை மரபுகளை இதிலும் உடைக்கின்றார். நம் இசை ஞானி.

      நிறைவாக. இசைஞானியாரின் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் என்னும் பாடல் பௌத்த தத்துவமான பிரம்மஞானம் என்னும் தத்துவத்தின் அடிப்படையில் இயற்றி இசையமைக்கப்பட்ட ஒரு உயர் தத்துவப் பாடலாகும்.
தொடரும்…,

Saturday, July 15, 2017

ஆயிரம் தாமரை மொட்டுகளே..,


இளையராஜாவின் இசை பாடல்களில் பௌத்த கூறுகள் – 2

ஆயிரம் தாமரை மொட்டுகளே.., 

இசைஞானி என அழைக்கப்படும் இளையராஜா என்னும் இசை உளவியலை குறித்து எழுதும் போது அதீத எச்சரிக்கையோடும் அதிகமான தரவுகளோடும் எழுத வேண்டும். ஏனெனில் இளையராஜாவின் இசையில் பௌத்த கூறுகள் என்பது எவரும் தொடாத கருத்தோட்டம்.  இதை முதன் முதலில் எழுத முனைந்ததற்காக பாராட்டுகின்றேன். எனினும் தரவுகளை அதிகம் தாருங்கள் என இந்த கட்டுரையின் முதல் பகுதியை படித்து பின்னுாட்டத்தை அலைபேசி வழியாக தந்த கவிஞர். யாழன் ஆதி தோழருக்கு நன்றி சொல்லி அடுத்த பாகத்தை துவங்குகின்றேன்.

       பொதுவில் பௌத்தத்தை 3 வகையாகப் பிரிக்கலாம், என்னற்ற துனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவைகள் 1. தேரவாதம். 2. மகாயானம் அல்லது பெருவழி 3. வஜ்ஜிரயானம் அல்லது தாந்தீரிகம் ஆகிய 3 பிரிவுகளாகும்.

·         தேரவாதம்.

1.   பாலி மொழியை முதன்மையாக் கொண்டது, அனைத்து போதனைகளுக்கும், தரவுகளுக்கும் பாலி மொழியை மட்டுமே தரவகளாக ஏற்றுக் கொண்டது.

2.   புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, மற்றும் சங்கம் சரணம் கச்சாமி, என்னும்  3 சரணங்களை ஏற்றுக் கொள்ளுதல்.

3.   இந்த உலகில் துண்பம் இருக்கின்றது, துன்பத்திற்கான காரணம் இருக்கின்றது, துன்பத்தை நீக்க முடியும். இந்த உலகில் மனிதர்களுக்கு உள்ள துன்பம் நீக்கம் பெறுகின்றது என்னும் நான்கு உன்னத வாய்மைகளை ஏற்றுக் கொள்வது.

4.   உயிர்களை துன்புறுத்தாமல் வாழ்வது, அடுத்தவரின் உடைமைகளின் மீது ஆசைப்படாமல் இருத்தல், மனைவியோடு மட்டும் மகிழ்ந்திருப்பது, உண்மையை மட்டுமே பேசுவது, மது, புகையிலை, பீடி, சிகரெட் மற்றும் போதை பழக்கத்தை பொருட்களை தவிர்ப்பது என்னும் ஐந்தொழுக்கப் பண்பாட்டை பின்பற்றி வாழ்வது.

1.   நல் உணர்வு
2.   நல் நினைவு
3.   நல் வாய்மை
4.   நற்செயல்
5.   நல் வாழ்க்கை
6.   நல் முயற்சி
7.   நல் மனம்
8.   நல் அமைதி என்னும் எண் வழிப் பாதையை கடைப்பிடித்து ஒழுகுதல்.

இவற்றுடன் பத்து வாழ்க்கை நெறிகளான.
1.   தனி மனித ஒழுக்கம்
2.   பிறர் தேவைக்கான தானம்
3.   விருப்பு வெறுப்பற்ற தன்மை
4.   துன்பத்திலும் இன்பத்திலும் சுய கட்டுப்பாடு
5.   விடா முயற்சி
6.   சகிப்புத் தன்மை
7.   வாய்மை
8.   உள்ள உறுதி
9.   அன்பு
10.  மைத்திரி. ( எல்லா உயிர்களையும் நிபந்தனையற்று நேசித்தல்) ஆகிய நெறிகண்டு தெளிதலும்.

இவற்றுடன் படிமங்களான அல்லது காட்சிகளாக

·         புத்தரின் பாதங்கள்
·         தாமரை
·         வெள்ளையானை
·         குடை
·         மான்
·         புத்தரின் கரங்கள்
·         புத்தரின் தலை முதலியவற்றை தொழுவதும் வணங்குவதும் வழிபடுவதும்

தேரவாத பௌத்தத்தின் சாரமாகவும் பௌத்தர்களின் கடமையாகவும் இருக்கின்றது.

மகாயான பௌத்தம்.

1.   சமஸ்கிருத மொழியை முதன்மையாக கொண்டது.
2.   திரி சரணங்களை ஏற்றுக் கொண்டது
3.   நான்கு உன்னத வாய்மைகளை ஏற்றுக் கொண்டது
4.   ஐந்தொழுக்க நெறியை பின்பற்றுவது
5.   எண்வழி மார்க்கத்தை ஏற்றுக் கொள்வது,
6.   புத்தரின் முழு உருவ சிலைக்கு வழிபாடு செய்வது
7.   ஜாதக கதைகளுக்கும் சடங்குகளுக்கும் முக்கியத்துவம் தருவது.
8.   இவை மகாயான பௌத்தத்தின் சாரமாக இருக்கின்றது.

வஜ்ஜிராயானம்

1.   தேவநாகிரியை முதன்மை மொழியாக ஏற்றுக்கொண்டது
2.   மும்மணிகள் என்றழைக்கப்படும் திரி சரணங்களையும்
3.   நான்கு உன்னத வாய்மைகளையும்
4.   ஐந்தொழுக்க நெறியையும்
5.   எண்வழி மார்கத்தையும்
6.   முத்திரைகளையும்
7.   மந்திரங்களையும்
8.   தியானங்களையும்
9.   பலவிதமான புத்தரையும் ஏற்றுக்கொண்டு வழிபாடு நிகழ்த்துவது. வஜ்ஜிரியான பௌத்தமாகும்.

பௌத்தமும் தாமரையும்

       தாமரை மலர், பௌத்தத்தில் ஞானம், அறிவு, மாசற்ற மனம் மற்றும் மன அமைதியின் குறியீடாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. புத்தரின் தாயார் மகாமாயா தனது தாய்வீட்டிற்கு செல்லும் வழியில் கபிலவஸ்த்து என்னும் இடத்தில் உள்ள நந்தவனத்தின் அழகை கண்டு அங்கு சற்று இளைப்பாற எண்ணிய போது பேறுகால வலி உண்டானதால் அங்கிருந்த சால் மரத்தின் கிளைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டே சித்தார்த்தரை நின்ற நிலையிலேயே பெற்றெடுத்தார் என புத்தரின் வரலாறு சொல்கின்றது.[1]

       அவ்வாறு குழந்தையாக பிறந்த புத்தர் ஏழு அடிகள் நடந்து சென்று தன் தாய்க்கு வணக்கம் சொல்லி தன்னை இப்பூவுலகுக்கு அளித்ததற்கு நன்றி சொல்லியது என்றும், அந்த ஞானக் குழந்தை காலடி வைத்த இடங்களில் எல்லாம் வெண் தாமரை முளைத்தது என்றும் புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சொல்லும் ஜாதக கதைகளில் படித்திருக்கின்றோம்.[2]


சித்தார்த்தர் புத்தகயாவில் உள்ள போதி மரத்தின் கீழ் ஏழுவாரங்கள் தியானம் செய்கின்றார் முதல் வாரம் உட்கார்ந்த நிலையில் தியானம் செய்து ஞானம் அடைகின்றார், இரண்டாவது வாரம் உட்கார்ந்திருந்தாலும் விழி இமைக்காமல் தியானம் செய்கின்றார். (மன உறுதி பெறும் பொருட்டு தனக்கு ஞானம் கிடைக்க காரணமாக இருந்த போதி மரத்துக்கு நன்றி சொல்லும் நோக்கம்)



       மூன்றாவது வாரம் உடலும் மனமும் ஒத்து போகும் வகையில் நடை தியானம் மேற்கொள்கின்றார், அவ்வாறு அவர் நடை தியானம் மேற்கொண்ட போது, அவர் பாதம் பூமியில் பட்ட இடங்களில் எல்லாம் தாமரை மலர்கள் முகிழ்ந்து எழுந்ததாகவும், வரலாறு சொல்கின்றது. [3] மேலும் அவ்வாறு புத்தர் நடை தியானம் பயின்று தாமரை மலர்கள் முகிழ்ந்த இடத்தில் அசோகர் நினைவுத் துான் நிறுவியதாக அசோக வந்தனம் தெரிவிக்கின்றது.

       மேலும் நடை தியானம் முழுதும் பயின்று ஞானம் பெற்றவர்கள் நடக்கும் போது தாமரை மலர்கள் அவர்களைத் தாங்கும் என்றும் பௌத்த தியானம் என்னும் நுாலில் விளக்கப்பட்டிருக்கின்றது. புத்தர் ஞானம் பெற்ற பிறகு அமர்ந்திருக்கும் எல்லா இடங்களிலும் சிலைகளிலும் தாமரை மலரின் மீதே அமர்ந்திருப்பது போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும். கரங்களில் தாமரை தாங்கிக் கொண்டிருப்பது போலவும், இதயத்தில் தாமரை மலர்ந்திருப்பதைப் போலவும் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது, தாமரை என்பதை அன்பு, கருனை, ஞானம், செல்வம், மன அமைதி போன்றவற்றின் குறியீடாக பௌத்தம் கட்டமைத்த காரணத்தால் பௌத்தத்தில் தாமரை மிகு முக்கியத்துவம் பெறுகின்றது.

       மகாயான பௌத்ததை உருவாக்கிய அவலேகோஸ்வர் என்னும் அகத்தியரும் தாமரை மலருடன் நிற்ப்பது போலவே அஜந்தா குகை ஓவியங்களும், சித்தன்னவாசல் குகை ஓவியங்களும் உள்ளது.

      
புத்தர் போதித்த என்பத்து நான்காயிரம் சூக்தங்களுள் தாமரை சூக்தம் மிகு முக்கியத்துவம் பெறுகின்றது. அவ்வாறு முக்கியத்துவம் பெற்றதனாலே அது முடிவுறா சூக்தமாக நிற்கின்றது. அடுத்து வரும் மைத்திரேய புத்தர் அதனை நிறைவு செய்வார் என மகாயான பௌத்தம் உறுதிபட நம்புகின்றது.



      
பௌத்தத்தை உள்வாங்கி இந்து மதத்துடன் இனைப்பு வேலைகள் நடைபெற்ற போது, புத்தர் மற்றும் பௌத்த மத பெண் தெய்வங்களை அப்படியே தாமரையோடு ஏற்றுக் கொண்டது இந்து மதம். மகாயான பௌத்த பெண் தெய்வங்களான தாரா இந்து மதத்தில் சரஸ்வதியாக வெண் தாமரையோடு இனைத்துக் கொண்டது. பௌத்ததில் செல்வத்துக்குரிய தேவதையை திருமகளாக செந்நிற தாமரையோடு ஏற்றுக் கொண்டது. இந்து தெய்வங்களின் சிலைகளுக்கு கீழ் பீடத்தில் தாமரை செதுக்கப்பட்டிருந்தால் அது பௌத்த தெய்வங்கள் என்பதை உறுதிபடச் சொல்ல இயலும்.
       
இந்திய சட்டத்தை வடிவமைத்த போதிசத்வா. அம்பேத்கரும், இந்திய தேசத்தின் தேசிய மலராக தாமரையை தீர்மானித்து அதை சட்டமாக இயற்றினார். தாமரை மலருக்கு இத்தகைய முக்கியத்துவத்தை பௌத்தம் அளித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டவே இந்த குறிப்புகளை தர நேர்ந்தது.

பௌத்த மந்திரங்கள்



       
ஓம் மணி பத்மே ஹூம் என்பது பௌத்தத்தின் மிக புகழ்பெற்ற மந்திரங்களில் ஒன்றாகும். இதை மணி மந்திரம் எனவும் அழைப்பர். இந்த ஆறெழுத்து  மந்திரம் (ஷடாக்ஷர மந்திரம் அவலோகிதேஷ்வரருடன்  தொடர்புடையது. அதிலும் குறிப்பாக நான்கு கைகள்(சதுர்புஜ ரூபம்) கொண்ட அவலோகிதேஷ்வரருக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே தான் நான்கு கைகள் கொண்ட அவலோகிதேஷ்வர் ஷடாக்ஷரி (ஆறெழுத்துகளின் அதிபதி) என அழைக்கப்படுகிறார்.[4]  


பௌத்தத்தின் மந்திரங்களையும் இந்து மதம் தனக்கானதாக உள்வாங்கிக் கொண்டு, ஐந்தெழுத்து மந்திரம் சிவாய நம என்றும் அது சிவனுக்கு உரியது எனவும், ஆரெழுத்து மந்திரம் சரவண பவ என்பது முருகனுக்கு உரியது என்றும் புனைந்துள்ளது. உண்மையில் முருக வழிபாடு என்பது குழந்தையாய் இருந்த புத்தர் என்றே வரலாற்றாய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் உண்மை விளக்கம் அறிய விரும்புவோர். பழனிக்கு செல்லும் பட்சத்தில் பழனி முருகனின் சிலையின் காதுகளில் பெரிய துளையை காணலாம். இது புத்தரின் அடையாளம். எந்த இந்து தெய்வத்தின் காதுகளில் பெரும் துளை இருந்தாலும் அது புத்தர் மற்றும் பௌத்த தெய்வங்கள் என நாம் உறுதிபட சொல்ல வேண்டும்.
              

ஓம்_மணி_பத்மே_ஹூம் என்னும் மந்திரம் வஜ்ஜிராயான பௌத்தர்களுக்குரியது என்றாலும், நடப்பில் அனைத்து பௌத்தர்களும் பயன்படுத்தும் அதி சிறப்பு வாய்ந்து மந்திரமாகும். இந்த மந்திரத்தை மன அமைதிக்காகவும், மனம் துன்பம் நீங்கி உற்சாகம் அடைவதற்காகவும் பௌத்தர்கள் உச்சரிக்கின்றனர். போதிசத்வா. அம்பேத்கரும் இம் மந்திரத்தை உச்சரிப்பவராகவே, அம்பேத்கர் திரைப்படத்தின் வழியாக சுட்டிக்காட்டப் படுகின்றது.
       
ஓம்_மணி_பத்மே_ஹூம் என்னும் தேவநாகிரி சொல்லுக்கான சரியான தமிழ் பொருள் மனதில் ஆயிரம் தாமரைகள் மலரட்டும் என்பதே. உண்மையில் மன மகிழ்வும், ஞானமும் பெற்று வாழ்பவர்களின் இதயம் ஆயிரம் தாமரைகளால் நிரம்பி வழியட்டும் என்பதன் பொருளே, ஓம்_மணி_பத்மே_ஹூம் (மனதில் ஆயிரம் தாமரைகள் மலரட்டும்.)

பௌத்தம் என்னும் கருத்தியல் பன்னெடுங்காலமாக பட்டியலின மக்களின் மரபில் கலந்து வழிவழியாக இயற்கையாகவே முன்னெடுக்கும் வாழ்வியலாக உள்ளதாலும், யாரும் சொல்லாமலே சேரி சனங்களால் ஐந்தொழுக்க பன்பாட்டின் படி வாழ்க்கையை அமைத்து கொள்ள முடிகின்றது. பட்டியலின மக்களின் வாழ்க்கையில் பௌத்த கூறுகளை நாம் தனியாக தேட முடியாது ஏன் எனெனில் அவர்களின் அக வாழ்வும், புற வாழ்வும், பௌத்த அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.
       
அதைப் போலவே, இசைஞானியாரின் இசையில் உள்ள கட்டுடைத்தலும், புதியனவற்றை இனைத்தலுமே பௌத்த கூறுகளாகும். அதிலும் அவரின் இசையே பௌத்த உளவியலை உள்வாங்கி அமைக்கப்பட்ட ஒன்றாகும்.
      
மன அமைதியும், உற்சாகமும், வேண்டுவோர், நாள் முழுவதும் அமர்ந்து ஓம்_மணி_பத்மே_ஹூம் என்னும் மந்திரத்தை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது தாந்திரிக ( வஜ்ஜிராயான பௌத்தர்களைப் போல் ) கைகளில் உருளை மணி வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் ஒலிநாடாவில் இந்த மந்திரத்தை கேட்ப்பதெனில் இரண்டு மணி நேரம் கேட்க்க வேண்டும்.
       
இவை எதுவும் இல்லாமல் வெறும் நான்கே நிமிடங்களில் இசைஞானியால் இந்த மந்திரத்தின் அடிப்படையில் அமைந்த பாடலொன்றின் வழியாக கேட்ப்பவரின் மனதில் உற்ச்சாகத்தை தன்னுாத்தாக கொப்பளிக்க வைக்க இயலும். அந்த பாடல் ” ஆயிரம் தாமரை மொட்டுகளே. ” பௌத்தம் முழுவதையும் அறிந்து, பௌத்த தியானங்களை முற்றிலும் கற்று தெளிந்த இசை ஞானியரால், ஆயிரம் தாமரை என்றதும், ஓம்_மணி_பத்மே_ஹூம் என்னும் மந்திரமே நினைவுக்கு வந்ததால், அந்த பாடலின் வரிகளை  ஓம்_மணி_பத்மே_ஹூம் என்னும் கட்டமைப்பிலே அமைத்திருப்பார். அந்த பாடலின் வரிகளை துாக்கி விட்டு அப்படியே ஓம்_மணி_பத்மே_ஹூம் என்று உச்சரித்தாலும், அந்த பாடலின் இசையும் வடிவம் எள் முனையளவும் மாறாது. அது தரும் உற்சாகமும் குறையாது.
       

இசை வல்லுனர்கள் அது காவடிச் சிந்து வடிவத்தில் அமைக்கப்பட்டது எனலாம், நாட்டுப்புற ஆய்வாளர்கள் அது தெம்மாங்கு பாட்டு எனலாம், அல்லது கிராமப்புற பாட்டு என்று கருத்துச் சொல்வோரும் உண்டு. உண்மையில் இவை எல்லாவற்றிற்க்கும் வரலாற்றின் துவக்கமாக இருந்தது பௌத்தம், உண்மையில் காவடி என்பது தாந்தீரிக பௌத்தர்களின் உடமைகளையும், புத்தருக்கு படைக்க வேண்டிய பொருட்களை இரண்டு பக்கமும் மூங்கில் பெட்டிகளாக செய்து அதனை சுமந்து செல்வதாகும்.

சுமைதாங்கி அதனை சுமந்து செல்லும் போது சுமை தெரியாமல் இருக்க பாடிய பௌத்த செவ்வியல் பாடல். அதன் திரிபு, கிராமங்களில் பாடப்படும், கும்மிப் பாடலும், வேலை செய்யும் போது வலி தெரியாமல் இருக்க பாடும் தெம்மாங்கு பாட்டும் என்பதை நாம் மீள் நினைவு கூறும் போது. இசைஞானியாரின் இசையில் உள்ள பௌத்த கூறுகளை உணர இயலும்.
       

பட்டியலின மக்களின் வாழ்வியலோடு பௌத்தம் கலந்தது எனில் அவர்களின் இசையில் பௌத்தம் கலக்காமல் தனித்திருக்குமா என்ன.
தொடரும். . . .



[1]  புத்தரும் அவர் தம்மமும். பக்கம் 5
[2]  புத்த ஜாதக கதைகள்
[3] The Life of Buddha. Edward J.Thomas. Page 55
[4] https://ta.wikipedia.org/wiki/ ஓம்_மணி_பத்மே_ஹூம்


Tuesday, July 11, 2017

ஜனனி ஜனனி பாடல்.

இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள்


ஜனனி ஜனனி பாடல்.


பொதுவில் இசை குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. இருப்பினும், இளையராஜாவின் இசையில் பௌத்தம் குறித்து எழுத வேண்டிய தேவை இருப்பதால் இந்த முயற்சியை தொடங்க வேண்டிய தேவை. அதனால் துவங்கி விட்டேன். ஒரு வேலை என்னுடைய இந்த கட்டுரைக்குப் பின் இசை குறித்தும் இசைஞானியாரைக் குறித்தும் மிக அதிகம் தெரிந்தவர்கள் எவராவது எழுதுவார்களாயின் மிக மகிழ்வேன். அந்த நோக்கத்திலேயே தமிழ் சமூகத்துடன் எனது உரையாடலை துவங்குகின்றேன்.

  • பொதுவில் பௌத்தம் மனிதர்கள் இல்லை உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவானது.
  • இளையராஜாவின் இசை குறித்த கருத்தான, ”இசை அனைவருக்கும் பொதுவானது. அதில் எந்த பாகுபாடும், யாருடைய உரிமை கோரலும் இல்லை என்பதே.” பௌத்த அடிப்படையிலான எண்ணம்.
  • பௌத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு குறிப்பாக புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு, ஆதரவில்லாதவர்களுக்கு எப்பொழுதும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும், புத்தரின் காலத்தில் இருந்து சம காலம் வரை.
  • இளையராஜாவின் இசையில் அண்ணக்கிளி முதல் அண்மைக்கால படம் வரை, உழைக்கும் மக்களின் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும், அதிலும் பெரும்பாலான பாடல்களில் மண்ணின் மைந்தர்களின் இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
  • பௌத்தின் அடிப்படை கருத்தாக்கம் என்பது, இந்த சமூகம் உருவாக்கி வைத்திருந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாத கட்டமைப்புகளை உடைத்தல்,
  • இளையராஜாவின் இசையிலும் இசை குறித்தான அனைத்து விதமான வரையறைகளுக்கான கட்டமைப்பு உடைக்கப்பட்டிருக்கும்.
  • பௌத்தம் ஒரு தனி நபரிடம் இரண்டு வகையான மாற்றத்தை உருவாக்கும், ஒன்று தன்னை மாற்றும், அதன்பின் சமூக மாற்றத்தை உருவாக்கும்.
  • இளைராஜாவின் இசையும் முதலில் தனக்கு ( கேட்பவருக்கு) மகிழ்ச்சியை உருவாக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் . அதன் பின் அந்த பாடல் குறித்த சிலாகிப்பு சமூகத்தில் பிரபலாமாகும்.
  • இந்த பொதுவான புரிதல்களோடு, இரண்டு பாடல்களின் இசை எவ்வாறு பௌத்தத்தை பிரதிபலிக்கின்றது என எடுத்துக் காட்ட விழைகின்றேன்.
முதலில்
  • ஜனனி ஜனனி பாடல்.
    • ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம் பாடலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பாடல் என அவர் பல முறை பல நேர்காணல் மற்றும் செவ்வியில் கூற கேட்டிருப்போம்.
    • உண்மையில் ஆதி சங்கரர் மற்றும் இராமானுஜர் ஆகிய இருவருமே புத்தரின் கருத்துக்களை இந்து மதத்திற்குள் கொண்டுவந்தவர்கள். இந்த பின்புலத்தில் ஆதி சங்கரரின் ஆதி தத்துவம் பௌத்தம் என்றாகின்றது.
    • அவரது பஜ கோவிந்தம் பாடல், புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்னும் திரி சரணத்தை அடிப்படையாக கொண்டே கட்டமைக்கப்பட்டது.
    • ஜனனி ஜனனி பாடலும், புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்னும் மூன்று சரணத்தையும் மீண்டும் மீண்டும் சொல்வதை போலத்தான் கட்டமைக்கபட்டிருக்கும்.
    • வரிகளை கவனிக்காமல் தாளம், இராகம் இவற்றை கவனிக்கும் பௌத்தர்கள் இதை உணர முடியும்.
    • இதை பின்பற்றி இதே ராகம், மெட்டு தாளத்தில் பிற்பாடு அவர் இசையமைத்த அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலிலும், புத்தம் சரணம் கச்சாமி, தாள கதியிலே அமைக்கப்பட்டிருக்கும்.
    • தொடரும்.


Monday, June 5, 2017

இசை ஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

பண்ணைபுரத்து
மண்ணதிர
வந்துதித்த
இசைஞானிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....


இதையும் படியுங்கள்