Friday, May 17, 2013

மாற்றுப் பாதை - பிப்ரவர் 12 தலித் முரசு இதழில் திரு. யாழன் ஆதி அவர்கள் என்னைக் குறித்து எழுதியது.

- பிப்ரவர் 12 தலித் முரசு இதழில் திரு. யாழன் ஆதி அவர்கள் என்னைக் குறித்து எழுதியது.


மாற்றுப்பாதை - மா.அமரேசன்

யாழன் ஆதி செவ்வாய், 21 பெப்ரவரி 2012 14:59

அதி சிறந்த ஒவ்வொரு தருணத்திலும் மானுடத்திற்குத் தேவையான பணிகள் எங்கேனும் ஒரு மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட பணிகள்தான் உண்மையான மக்கள் பணியாளர்களுக்கும் மக்களுக்கும் மிகுந்த நன்மை பயக்கக் கூடியனவாக இருக்கும். அத்தகையதொரு பணியை தொடர்ந்து ஆற்றிவருகிறார் மா. அமரேசன். அமரேசன் அடிப்படையில் ஒரு தொழில் நுட்பவியலாளர். "நடுங்கும் நிலம் நடுங்கா மனம்' என்னும் அவருடைய கட்டுரைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்திருக்கிறது. கட்டுரைகள் என்ற அளவில் இல்லாமல் அவை மக்கள் பிரச்சினையை விரிவாகப் பேசுகின்றன.

தொழிற்கல்வி முடித்த அமரேசன் இளம் வயதிலேயே மார்க்சியம், தமிழ்த்தேசியம் குறித்து ஆழமாகக் கற்றிருக்கிறார். இவருடைய தீவிர வாசிப்பு, பொதுவாக இவரை மற்றவர்களிடமிருந்து விலக்கியே வைத்திருக்கிறது. இவர் பணியாற்றிய நிறுவனத்திலும் இறக்குமதியாகும் எந்திரங்களைக் குறித்த அதிகமான செய்திகளை அவர் தெரிந்து வைத்திருந்ததால், தனது மேலதிகாரிகளிடம் கெட்டபெயர் வாங்குபவராகவே இருந்திருக்கிறார். இதுவே, அவரை மக்கள் பணிக்கு அழைத்து வந்தது.

அமரேசனின் கட்டுரைகள் மிகவும் அவசியமானவை. "புலப்படாத் தண்ணீர் வணிகம்' என்னும் கட்டுரை பல்வேறு தரவுகளைக் கொண்டுள்ளது. தமிழ் நாட்டில் நடப்பது "அரிசி அரசியல்'; ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகியவற்றில் நடப்பது "நீர் அரசியல்' என்று அவர் குறிப்பிடும் சொற்றொடர்களிலிருந்தே நாம் அக்கட்டுரையின் சாரத்தை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு பொருளை ஒரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறோம் என்றால் அதை மட்டும் நாம் ஏற்றுமதி செய்யவில்லை; மாறாக அப்பொருளை உற்பத்தி செய்யப்பயன்படும் நீரையும் ஏற்றுமதி செய்கிறோம்.

ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய நாம் 2000 லிட் தண்ணீரை செலவழிக்கிறோம்; ஒரு கிலோ மாட்டிறைச்சியை உற்பத்தி செய்ய 20,000 லிட்டர் தண்ணீர் தேவை. ஒரு கிலோ முட்டையை உற்பத்தி செய்ய 3300 ரூபாய் தேவைப்படுகிறது. ஆகவே, ஒரு பொருளின் மதிப்பில் புலப்படாத் தண்ணீரின் மதிப்பையும் சேர்க்க வேண்டும் என்னும் கருத்தை வலுவடையச் செய்ய வேண்டும் என்று அக்கட்டுரை பேசுகிறது.

இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, "புலப்படா நீர் வணிகம்' என்ற தத்துவம் இன்று உலகளவில் பேசப்படுகிறது. ஆனால், தலித்துகளாகிய நாம் புலப்படாத மக்களாக இருக்கிறோம். நம்முடைய உழைப்பு நம்முடைய பங்கு என்று எதுவும் நமக்கு இல்லை. அவற்றைக் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது என்றார். இது குறித்து தலித் அறிவுலகம் விவாதங்களைத் தொடங்க வேண்டும்.

அவருடைய நூலில் இருக்கும் இன்னொரு கட்டுரை "தவற விடக்கூடாத தருணம்'. இது, தலித்துகள் நிறுவனமயமாகுவதைப் பற்றியது. அமரேசனின் முனைவர் பட்ட ஆய்வு நுண் நிதியம் தொடர்பானது. "மைக்ரோ பைனான்ஸ்' என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் அத்தகைய நுண் நிதியத் தத்துவத்தின் மூலம் தலித்துகளுக்கான வங்கியை நிறுவ வேண்டும் என்பதும் சிறிய அளவுகளில்கூட அத்தகைய நிதி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்பதும் அதற்கான நிதிக்கட்டமைப்புகளை உருவாக்க வழிவகைகளும் கூறப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள ஆதிக்க சாதிகள் அனைத்திற்கும் வங்கிகள் செயல்படுகின்றன. இந்நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நிதி ஆதாரத்தை ஏன் செயலாக்க முடியாது என்று அவர் வினவுகிறார்.

சுற்றுச் சூழல் குறித்த கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஏரிகளையும் ஆறுகளையும் மாநில அரசின் அதிகாரத்திலிருந்து கிராம நிர்வாகத்திற்குக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் நீர்வளம் பாதுகாக்கப்படும் என்னும் அவர் கருத்தும் மிகவும் ஆராயத்தக்கது. பாலாற்றின் அழிவுகுறித்த எச்சரிக்கை, வனங்களைக் காக்க வேண்டிய அவசியம், அதற்காக அவர் தரும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் முக்கியமானவை.

அமரேசன் தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு திடீரென்று வேறொரு பயிற்சியில் சேர வேண்டி யிருந்தது. அனித்ரா அறக்கட்டளையில் அப்பயிற்சியை நடத்தியவர் இன்பக்குமார். அப்பயிற்சியில்தான் அவருக்கு சாதி மற்றும் அதன் இருப்பு குறித்த விரிவான புரிதல் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முன்பு வரை சாதிய ஆதிக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பை அவர் உணரவில்லை. ஆதிக்கவாதிகளுக்கு எது பிடிக்குமோ அதையெல்லாம் செய்து வந்திருக்கிறார்.

"இந்து கடவுளர்களை வணங்கினால் அவர்களுக்கு பிடிக்கும் என்று எண்ணி இந்து கடவுளர்களை வணங்கினேன்.

அப்படியும் அவர்கள் என்னைத் தனியாகத்தான் பார்த்தார்கள். தமிழ் அடையாளம் நம்மைக் காக்கும் என்று எண்ணி என்னை ஒரு தமிழ்ப் போராளியாக்கிக் கொள்ள முனைந்தேன். ஆனால் அங்கேயும் இதே சாதியப் பார்வைதான் என்மீது விழுந்தது. கடைசியில் அம்பேத்கரைப் படித்து விடுதலைக்கான வழியைக் கண்டுகொண்டேன்'' என்கிறார்.

தலித் விடுதலை என்று எதைக் கருதுகிறீர்கள் என்னும் வினாவிற்கு, சட்டை இல்லாமல் போராடிய காலத்தில் சட்டை போடுவது நமக்கு விடுதலை. இன்று நமக்கு விடுதலை என்பது அடுத்த கட்டத் தேவையை நோக்கி நகர்வதுதான். தீண்டாமை ஓரளவு குறைந்திருக்கிறது ஆனால் சாதி ஒழியவில்லை. தலித்துகள் சாதி ஒழிப்பை முன்வைக்கிறோம். ஆனால், இந்த நவீன சமூகத்தில் தலித்தல்லாத எந்தச் சமூகமாவது சாதி ஒழிப்பைப் பற்றி பேசுகிறதா? இக்கேள்வியை நாம் எழுப்பியாக வேண்டும்.

"நம்மிடையே உறவுமுறைச் சங்கங்கள் தோன்ற வேண்டும். ஒரு பகுதி தலித்துகள் இன்னொரு பகுதி தலித்துகளுக்கு நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும். வசதியுள்ள தலித்துகள் முதலீடு செய்து புதிய பொருளாதார மேம்பாட்டினை உருவாக்க வேண்டும்'' என்கிறார் அமரேசன்.

"பட்ஜெட்டில் தலித்துகளுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தின்படி ஒதுக்கப்படும் நிதி குறித்து நம்முடைய தலைவர்கள் கேட்கிறார்கள். அது மிகவும் சரியே. ஆனால், அந்த நிதியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்னும் திட்டங்களை அரசுக்கு நாம் தருவதோடு, சில நெருக்கடி களையும் உருவாக்க வேண்டும்'' என்கிறார்.

அமரேசனின் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் இன்னொரு குரல் பற்றி நாம் கூறித்தான் ஆகவேண்டும். அது இந்த இயற்கையைக் காக்க எத்தனிக்கும் அவருடைய மனம். அதுவும் ஒரு தலித் குரலாக சூழலையும் இயற்கையையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து அவர் கூறுகின்ற காரணங்கள் ஆழமானவை. தமிழகத்தில் அண்மைக் காலங்களில் பூகம்பங்கள் பதிவான இடங்கள், அதற்கான காரணங்கள் மற்றும் இப்படிப்பட்ட பூகம்பங்கள் வருங் காலங்களில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்னும் கட்டுரை, சுரண்டலுக்கான களமாக சுற்றுலா எப்படி அங்குள்ள பழங்குடி மக்களை சுரண்டுகிறது என்பதை அவருøடய கட்டுரைகள் தெளிவாக விளக்குகின்றன.

குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்தாத சமூகம் வலுவற்றதாக மாறிவிடும். மேலும், குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து என்பது ஏதோ சத்து மாத்திரைகளில் இல்லை; மாறாக அவர்கள் உண்ணும் உணவில் இருக்கிறது. ஆகவே, அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் பத்துவகையான பழமரக்கன்றுகளைத் தரவேண்டும். அதிலிருந்து வரும் பழங்கள் மிகச் சிறந்த ஊட்டமாகவும் அதே நேரத்தில் சூழலைக் காப்பதாகவும் அமையும் என்னும் கட்டுரை, மரங்களையும் மனிதர்களையும் இணைக்கும் முயற்சியாக இருக்கிறது. அது மட்டுமின்றி உணவே மருந்து என்னும் கோட்பாட்டையும் அது வளர்க்கிறது.

பஞ்சமி நிலமீட்பு தொடர்பான கட்டுரை, "ஆண்களின் உலகமடி' "தேவை தொலைநோக்குப் பார்வை' ஆகியவை தன்னம்பிக்கையை தரக்கூடியவையாகும்.

திருவண்ணாமலை மாவட்டம் கரிக்காத்தூர் கிராமத்திலிருந்து இன்றைக்கு எதிர்கேள்விகள் கேட்கும் கூர்மையும் தலித் அடையாளத்தோடு எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் ஆற்றலும், பிரச்சினைகளை ஆய்வுக்கு உட்படுத்தும் அறிவும் ஒருங்கே இணைந்த அமரேசனின் கனவு என்னவாக இருக்கும் என்று கேட்டதற்கு, தலித்துகளுக்கான நிறுவனங்களை உருவாக்கு வதுதான் என்று அடித்துக் கூறுகிறார்.

பல்வேறு தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவக் கூடல் நிறைந்தவரான அமரேசன், தன்னுடைய திறமை, அறிவு ஆகியவற்றை தலித்துகளுக்காகப் பயன்படுத்தும் எண்ணம் கொண்டவராக இருக்கிறார்.

மக்கள் பணி செய்யும் மா. அமரேசனின் எழுத்துகள் இன்றைய தமிழ்ச்சூழலுக்குப் புதிய உரையாடல்களை உருவாக்குவதால் அமரேசன் எல்லா விதங்களிலும் போற்றுதலுக்குரிய வராகவே செயல்படுகிறார்.

அமரேசனைத்
தொடர்பு கொள்ள : 98659 76642 – யாழன்ஆதி

Thursday, April 11, 2013

சோள கொல்லை பொம்மை



பசுமை படர்ந்த
வெளிதனில் 
சிலுவை 
சுமந்த 
சொலகொல்லை
பொம்மைக்கு 
தெரியும் 
தன்னை பற்றி 

சிலுவையில் 
அறைய பட்டதால் 
தான் இயேசு 
அல்லஎன்றும் 

பெரு வெலிக்கு 
காவல் 
நிற்பதால் தான் 
காவல்காரன் 
அல்ல என்றும் 

பறவைகள் 
பயப்பட 
அதனிடம் 
வலை இல்லை 

மனிதர்கள் 
பயப்பட 
அதனிடம் 
மனம் எல்லை 

மன்னர்கள்
பயப்பட 
அதனிடம் 
படையும் நாடும் இல்லை 

ஒன்றும் இல்லாத 
பொம்மைக்கு 
இவ்வளவு பயனா ?

தலைகனம் கொள்ள 
அதற்க்கு
தலை இல்லை 
உறுப்புகள் இல்லை 

அதன் 
அடையாளத்தை 
மட்டுமே கொண்ட 
உடலும் மனமும்
இல்லாத பொம்மை அது 

அதன் மேல்
மற்றவர்களுக்கு 
ஏன் இந்த
கோபமும் வெறுப்பும் 

தன்னைப்போல்
இருப்பதால் 
தன்னை புரிந்து
கொள்ளவில்லை 
என்று 
மனிதனுக்கும் 
மன்னன்க்கும் 

மனம் இல்லா 
பொம்மை 
மண் தானே 
அதை புரிந்து
கொள்வது 
அவ்வளவு கடினமா ?

புகழும் 
பாராட்டும் 
பழியும் 
பாவமும் 
வஞ்சமும் 
காமமும் 
மனம்
உடையவர்களுக்குதானே !

மனம் இல்லாத 
பொம்மை இடம் 
எதிர்பார்ப்பது 
சரியா ?

பொம்மையை 
பொம்மையாக 
பாருங்கள் 

பொம்மைக்கும் 
வாழ்க்கை உண்டு 

அதுவும் தான் வாழ 
இடி மின்னல் 
மழை வெயில் 
காற்று புயல் 
என எல்லாவற்றையும் 
எதிர்து நிற்கிறது 
வாழ்கிறது 

படைப்பின் 
நோக்கத்தை
 புரிந்து 
கொண்டதால் 
அதற்க்கு 
அச்சம்மில்லை 

பறவைகள் 
தன்னைக் கண்டு 
பயபடுவதால் 
பெருமையும் 
இல்லை 

மன்னர்களை
கண்டு 
மகிழ்வதும் இல்லை 


சோளக்கொல்லை பொம்மைகள் 
தங்கள் தொப்பியை 
கழற்றுவது 
இல்லை 
மாண்புமிகு 
மகாராஜாவுக்கு 
முன் ...













Sunday, April 7, 2013

யாழன் ஆதியின் தம்மபதம் – புத்தக விமர்சனம்





கி.பி.623 – ல் வைகாசி விசாக முழுமதி நாளில் முழு நிலவாய் புத்தர் பிறந்தார். தனது 29 ஆம் அகவையில் சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்குமான ரோகிணி நதிநீர் பங்கீட்டில் போரை தவிர்க்க துறவியானார்.
புத்தர் போதனைகள்தம்மம் மூன்று தொகுப்புகளாக தொகுக்கப்பட்டன அவை .
1.   பேருரைப் பகுதி
2.   நன்னடத்தைப் பகுதி
3.   உன்னதக் கோட்பாட்டுப் பகுதி
இந்த 3 பிரிவுகளும் ஒவ்வொரு பகுதியாகவும், அவை பல வகைகளாகவும், பற்பல உட்பிரிவுகளாகவும், விரிந்து கொண்டே செல்கின்றன. அந்த வகையில் தொகுக்கப்பட்ட தம்ம புத்கங்களின் எண்ணிக்கை மொத்தம் 31 ஆகும்.
இவற்றில் பேருரைப் பகுதி என்பது துறவிகளும், குடும்பத்தாருக்கும், பல்வேறு நேரங்களில், காலகட்டத்தில், புத்தரால் நேரடியாக சொல்லப்பட்ட அறிவுரை மற்றும் அறவுரையாகும். இவைகள்.
1.   ஒழுக்கம்
2.   நன்னெறி
3.   சமுக்க் கடமைகள் மற்றும்
4.   வாழ்வியல் பிரச்சனைகளைப் பற்றியதாகும்.
இந்தப் பேருரைகள் 5 வகைகளாகத் பிரிக்கப்பட்டிருக்கின்றன அவை.
1.   நீண்டப் பேருரைகள்
2.   இடைப்பட்ட அளவு பேருரைகள்
3.   உறவுடைக் கூற்றுகள்
4.   படிப்படியான உரைகள் மற்றும்
5.   சிற்றுரைத் தொகுப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சிற்றுரைத் தொகுப்பு மட்டுமே 15 புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. அவற்றில் அணைவராலும் அறியப்பட்ட ஒரு புத்தகம்தான் தம்மபதம் ( தம்மவழி) இது புத்தரின் வாய்மொழியாக வந்தவை.
தம்மபதம் புத்தர் இவ்வுலகில் உள்ள அணைத்து உயிரினங்களின் மீதும், மனிதர்களின் மீதும், கொண்டிருந்த கருணை மற்றும் அவருடைய எல்லையற்ற ஞானத்தையும் உலகுக்கு உணர்த்தும்  சிறிய செய்யுள்களின் தொகுப்பாகும். 26 தலைப்புகளைக் கொண்டது. 423 சிறு செய்யுளைக் கொண்டதாகும்.
இந்தியாவில் தோன்றிய புத்தமதம், இலங்கை, சீனா, சப்பான், பர்மா என எல்லா கிழக்காசிய நாடுகளுக்கும் பரவியது. அவ்வாறு பரவக் காரணமாக இருந்ததில் போதிதர்மர் துவங்கி பல்வேறு தமிழர்களின் பங்களிப்பு இருந்தாலும், 20ஆம் நுற்றாண்டில் இந்தியாவுக்கு வந்ததில்
1.   கர்னல். ஆல்காட்
2.   ராய்ஸ் டேவிட்ஸ்
3.   பால்காரஸ் என்னும் 3 மேலைநாட்டு அறிஞர்களின் வழியாக மேலைநாடுகளுக்கும் இந்தியாவுக்கும் பரவியது.
இவர்களோடு இணைந்து இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பவுத்தம் பரவுவதில் பெரும் பங்கெடுத்தவர். பண்டிதர் அயோத்திதாசர் ஆவார்.
தேரவாத பௌத்தம் உலகின் பழைய பவுத்த முறை என்று போற்றப்படுகின்றது. அந்த பௌத்த முறை பரவியுள்ள  ஆசிய மற்றும் கிழக்காசிய நாடுகளில் தம்மபதமானது, மெய்யறிவு வளரவும், வழிகாட்டுதலுக்கும் ஆதாரமாக அமைந்துள்ளது. தினசரி வாழ்க்கை சிக்கலுக்கு எளிய தீர்வை தரும் தீர்வுப் புத்தகமாகவும், ஒழுக்கத்தை பேணவும், அமைதியான மன நிலையில் வாழவும் அறிவுடையோர் பின்பற்ற வேண்டிய நடைமுறையை தம்மபதம் விவரிப்பதால் இன்று தம்மபதம் திசையெங்கும் தீர்வு சொல்லும் நீதி புத்தகமாக பயணப்படுகின்றது.
தேரவாத பௌத்தக் கொள்கையின் படி தம்மபத ஒவ்வொரு வரியும், ஒரு குறிப்பிட்ட சம்பவம், அல்லது நிகழ்விற்க்கு பதில் தர புத்தரால் சொல்லப்பட்ட வார்த்தையாகும். வரலாற்றில் முதன் முறையாக கி.பி.ஐந்தாம் நுற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த புத்தேகோஷர் உரையெழுதி இருக்கின்றார். அவருக்குப் பின் தம்மத பதம் உலகின் பல பகுதியில் பிரபலமாயுள்ளது.
ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே 40க்கு
மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் உள்ளன. அமெரிக்காவில் இப்போது அதிகமாகப்
பரவி வரும் மதம் பெளத்தமதம் என்கிறார்கள்.
தம்ம பதத்தின் சூத்திரங்கள் படிப்பதற்கு எளிமையானவை. பெளத்த சமயக்
கொள்கைகளும் வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளும் தம்மபதத்தில்
நிறையவே இருப்பதால் அவற்றைப் படித்துத் தெளிந்துகொள்ளலாம்.
இது நமது மொழியிலுள்ள திருவள்ளுவரது திருக்குறளைப் போன்று
அத்துணைச் சிறப்பு வாய்ந்ததுஎன்று தம்ம பதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய நூல் திருக்குறளே என்கிறார் வையாபுரிப்பிள்ளை. தம் இலக்கிய உதயம் பகுதி 11 எனும் நூலில்.
தம்ம பதத்தின் பெருமையை ஹெர்மான் ஓல்டன்பெர்க் எனும் ஜர்மானியப்
பேராசிரியர் இப்படிக் கூறுகிறார்.
பெளத்த சமயத்தைப் பற்றித் தெளிவாய்த் தெரிந்துகொள்வதற்கு பெளத்த
தர்ம ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கும்போதே ஆராய்ச்சியாளனுக்கு ஒரு புனிதமானவரின் கைகளால் தம்மபதத்தை அளிப்பதைவிட மேலான காரியம்  ஒன்றும் இருக்க முடியாது. தம்மபதம் தன்னிரகற்ற அழகுடையது. பொருள் நிறைந்தபழமொழிக்களஞ்சியம்.பெளத்த சமயத்தைத் தெரிந்து கொள்ள உறுதிகொண்ட எவரும் திரும்பத்
திரும்பப் டிக்க வேண்டிய நூல் இது.”
தம்மத்தை முதலில் தமிழிற்க்கு தந்தவர் அய்யன் திருவள்ளுவர். அவருக்குப்பின் பலரும் தம்மத்தை தமிழ்படுத்தினாலும், அவற்றில் குறிப்பிடத்தக்கவர்கள் இலங்கையைச் சேர்ந்த எம். என். மெகைதீன்., பவுத்த துறவி சோமானந்த தேரா, சி.எஸ்.தேவநாதன், மற்றும் பகவான். ரஐனிஸ் ஆகியோர் அடங்குவர். இவர்களில் பகவான் ரசினிஸ் தம்ம பத்த்தை கதைகளாக விளக்கினார். மற்றவர்கள் வசன கவிதை மற்றும் உரைநடைகளாக வெளியிட்டுள்ளனர்.
இவர்களை அடுத்து தமிழ் கவிதைகளில் தனக்கென தனி ஆளுமையை ஏற்படுத்திக் கொண்டுள்ள யாழன் ஆதியும் தம்மபதம் என்னும் அரியதொரு பொக்கிஷத்தை வெளியிட்டுள்ளார். 180 பக்கமுடைய கையடக்கப் பதிப்பாக வெளிவந்துள்ளது. அட்டை படமும், அச்சிட்ட விதமும் மிக அருமை. கவிதைகள் ஆழ்ந்த பொருளை எளிய தமிழில் யாருக்கும் புரியும் வண்ணம் இருக்கின்றன.
கவிதைகள் பிற மொழி சொற்கள் இல்லாமல் எளிய தமிழில் யாருக்கும் புரியும் வகையில் வந்துள்ளது. குழந்தைகளுக்கும் புரியும் விதமாய் உள்ளது.
மனம் முன்னோடி
 மனம் தலைமை
தீயது பேசும்
தீயது செய்யும் மனம்
துன்பத்தால்
தொடரப்படும்
காளையைத் தொடரும்
வண்டியாய் என முதல் கவிதையை துவங்கி கடைசி கவிதையான
அந்த துறவி
தன் பழைய பிறப்புகளை
அறிந்தவர்
மகிழ்வை
துன்பத்தை அறிந்தவர்
பிறப்பின் முடிவை அடிந்தவர்
மேனறிவுடன் இருப்பவர்
முழுமையடைந்தவர்
பற்ற்ற்ற நிலையை அடைந்தவர்
அவரே அறவோர் என்னும் கடைசி கவிதைக்க  வரை, உள்ளங்கை நெல்லிக் கணி போல படிக்கப்  படிக் இன்பம் பயப்பனவாக இருக்கின்றது.
ஒவ்வொரு கவிதையும் சில நேரங்களில் திருக்குறளை புதுக்கவிதையில் வடித்துள்ளோரோ என்னும் உணர்வையும் ஏற்படுத்த தவறவில்லை. இது யாழன் ஆதியின் அற்புதமான படைப்பு என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஏற்கனவே யாழன் ஆதியின் செம்பறை கவிதைப் புத்தகம், பெரியார் பல்களைக் கழகத்தில் பாடப் புத்தகமாக வைக்கப்பட்டிருப்பது போல இந்த தம்மபதம் நுலும் ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் பாநுலாகும்.
இறுதியாக புத்தர் தன்னுடைய ஒளியால் மனிதனின் இருள் விலக பேசிய தம்மபதம், இங்கு யாழன் ஆதிகவிதையால் படிப்பவரின் மனத்தில் தம்மபதம் ஆட்சி செய்யவும், ஆளுமை செய்யவும் புத்தராலேயே அருளப்பட்டிருக்கின்றது.

வெளியீடு – புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை – சென்னை கிளை 
விலை – 100 உருவா.



இதையும் படியுங்கள்