Thursday, December 28, 2017

தும்பி வா பாடல்

இளையராஜாவின் இசை பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள் -  6

தும்பி வா பாடல்  

கௌதம புத்தரின் போதனைகளில் செயலும் அதற்கான விளைவைப் பற்றி போதிப்பதே தேரவாத பௌத்தம். கௌதம புத்தரின் போதனைகளில் செயலுக்கான காரண, காரணியங்களை போதிப்பதே மகாயான பௌத்தம் ஆகும். அதே புத்தரின் போதனைகளில் செயலுக்கான  காரண காரியங்களை மந்திர தந்திரங்களின் படி தீர்க்க இயலும் அல்லது மாற்ற இயலும் என நம்புவதே வஜ்ஜிரயான பௌத்தம். இந்த 3 பெரும் பிரிவுகளுடைய பௌத்தம் பல்வேறு துனை பிரிவுகளாகவும், உப பிரிவுகளாகவும் பரந்து விரிந்து உலகளாவி நிற்கின்றது இன்று வரையிலும்.

தேரவாத புத்த சமயப் பிரிவு

தேரவாத பௌத்த பிரிவினருக்கு எப்போதுமே புத்தர் ஒரு வழிகாட்டி, பேராசான், அவரை அற்புங்கள் எதுவும் நிகழ்த்தாத தத்துவஞானியாகவே ஏற்றுக் கொண்டவர்கள். எந்த  நாளிலும் அவரை கடவுளாகப் பார்க்காதவர்கள் அவர்கள். புத்தருக்கு முன்னும் பின்னும் வேறு யாரும் இல்லை என்பவர்கள்.   அதனிலும் தேரவாத இந்தியப் பிரிவான நியோ பௌத்தர்களுக்கு, பேராசான் புத்தரின் திரி சரணங்கள், நான்கு உன்னத வாய்மைகள், ஐந்தொழுக்க கோட்பாடுகள் இவற்றுடன் போதிசத்வா. அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள்  இவைகள் மட்டுமே அவர்கள் பின்பற்ற வேண்டியவைகள் என்பதில் மிக உறுதியாக இருப்பவர்கள்.

அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள் -

  1. பிரம்மா விஷ்னு சிவன் ஆகிய மூன்றையும் கடவுளாக கருதி வணங்க மாட்டேன்.
  2. ராமன், கிருஷ்ணன் இரண்டும் கடவுளின் அவதாரமென கருதி வணங்க மாட்டேன்.
  3. கணபதி, கௌரி மற்றும் இந்துக் தேவதைகளை தெய்வங்களாக ஏற்று வணங்க மாட்டேன். 
  4. கடவுள் பிறந்ததாகவோ மற்றும் அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன்.
  5. மகா விஷ்னுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை எதிர்த்து முறியடிப்பேன். 
  6. இறப்பு நிகழ்ச்சியில் இந்து மத சடங்குகளைச் செய்ய மாட்டேன். 
  7. புத்தரின் போதனைகளையும் நெறிகளையும் மீற மாட்டேன்.
  8. பார்ப்பணர்களின் எந்த ஒரு ஆச்சாரச் செயலையும் அனுமதிக்க மாட்டேன்.
  9. மானுட சமத்துவத்தை நம்புவேன்
  10. சமத்துவத்தை நிலை நிறுத்த முழு மூச்சாகப் பாடுபடுவேன்.
  11. புத்தரின் எண் வழி மார்கத்தை நம்பிக்கையோடு பின் பற்றுவேன்.
  12. புத்தரின் பத்து தம்ம போதனைகளை ஏற்று செயல்படுவேன்.
  13. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி, பாதுகாத்து, வாழ வைப்பேன்.
  14. பொய் பேச மாட்டேன்
  15. களவு செய்ய மாட்டேன்
  16. உடல் இன்பத்துக்காக தவறுகள் இழைக்க மாட்டேன்.
  17. மது அருந்த மாட்டேன்
  18. புத்தரிக் அன்பு, அறிவு, பரிவு, ஆகிய உயரிய நெறிகளின் அடிப்படையில் என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்வேன்.
  19. மனித நேயத்துக்கு முரனான சமத்துவம் இல்லாத கேடு  கெட்ட இந்து மதத்தை விட்டொழித்து இன்று முதல் மேன்மைமிகு பௌத்தத்தை தழுவிக் கொள்கின்றேன்.
  20. புத்தரும் அவர் தம்மமும் உண்மையான மார்க்கம் என்று உறுதியாக ஏற்கின்றேன்.
  21. இன்று மறுவாழ்வு பெற்றதாக நம்புகின்றேன்.
  22. புத்தரின் கொள்கை கோட்பாடுகளுக்கு ஏற்ப இன்று முதல் செயல் படுவேன்.

 இவர்களின் வாழ்வியல் கோட்பாடுகள் மேலே உள்ளவைகள் மட்டும்தான், பௌத்த தியானங்களில் உச்சபட்சமாக இவர்கள் விபாசன தியானத்தை மேற்கொள்பவர்களாகவே வாழ்கின்றார்கள்.

மகாயான பௌத்த சமயம்

புத்தர் எந்த காலத்திலும் அழிவில்லாதவர் அவர் எல்லா காலத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்,என  மகாயான பௌத்த சூக்தங்கள் கூறுகின்றன. கௌதம குலத்தில் தோன்றிய சித்தார்த்தர் ஞானம் பெற்ற  புத்தரானதைப் போல இந்த பூமியில் 28 புத்தர்கள் அவருக்கு முன்பு வரையிலும் வாழ்ந்தவர்கள் என்பதை மிக உறுதியாக நம்புவது மகயான பௌத்த சமயமாகும். கௌதம புத்தருக்கு பின் அடுத்த புத்தராக  மைத்ரேய புத்தர்  உருவெடுப்பார்  என்றும் அவர் கௌதம புத்தர் போதித்து பாதியில் நிறுத்திய தாமரை சூக்தத்தை நிறைவு செய்வார் என்றும்  அவர் இப்பூமியிலுள்ள அனைவருக்கும் மைத்திரி தியானத்தை கற்பிப்பார் என்றும்  உறுதியாக நம்புகின்றது.

28 புத்தர்களின் பெயர்கள் 

  1.  தன்அங்கர்
  2. மேதங்கர்
  3. சரணங்கர்
  4. தீபங்கர்
  5. கொண்டஞ்ஞர்
  6. மங்கலர்
  7. சுமனர்
  8. ரேவதர்
  9. சோபிதர்
  10. அனோமதஸ்ஸி
  11. பதுமர்
  12. நாரதர்
  13. பதுமுத்தர்
  14. சுமேதர்
  15. சுஜாதர்
  16. பியதஸ்ஸி
  17. அத்ததஸ்ஸி
  18. தம்மதஸ்ஸி
  19. சித்தாத்தர்
  20. திஸ்ஸ
  21. புஸ்ஸ
  22. விபஸ்ஸி
  23. ஷிகி
  24. வேஸ்ஸபூ
  25. ககுசந்தர்
  26. கொன கமனர்
  27. கஸ்ஸபர்
  28. கௌதமர் 
இத்துனை புத்தர்கள் இப்பூவுலகில் பிறந்தார்கள், இனியும் பிறப்பார்கள் என்று நம்புகின்றவர்களாக மகாயான சமயப் பிரிவினரும், வஜ்ஜிரயான புத்த சமயத்தவர்களும் நம்புகின்றனர். இவர்கள் அனைவரும் பொதுவாக நம்பும் மற்றொரு கருத்து. இப்புவியில் பிறந்த மற்றும் பிறக்க இருக்கின்ற அனைத்து புத்தர்களுக்கும் தாயாக தாரா தேவியை வழி படுகின்றனர். 

தாரா தேவி 

புத்த சமயத்தில் உள்ள பெண் தெய்வங்களுள் மிக முக்கியமானவர் தாரா தேவி . 21 வகையான தாரா தேவியை மகாயானம் மற்றும் வஜ்ஜிரயான பௌத்தர்கள் வழிபடுகின்றனர்.
மகிழ்ச்சி, துக்கம், பணம், புகழ், பதவி, அமைதியை பெற்றுத் தருபவராகவும், பயங்களை போக்குபவராகவும் தாரா தேவி கருதப்படுகின்றார்.  தாரா தேவியை வழிபடுவதும், அவரது மந்திரத்தைத் துதிப்பதும், மகாயான பௌத்தர்களின் கடமையாக இருக்கின்றது.

21 தாரா தேவியின் பெயர்கள்

பச்சைத் தாரா தெய்வத்தின் குடும்பத்தைச் சேர்ந்த  பௌத்த பெண் தெய்வங்கள்

  1. கதிரவானி தாரா
  2. வசிய தாரா
  3. அரிய தாரா 
  4. மகத்தரி தாரா
  5. வரத தாரா 
  6. துர்காத்தரனி தாரா
  7. தண்டத் தாரா
  8. ஜங்குலி
  9. பரனாஸ்பரி
வெள்ளைத் தாரா தெய்வத்தின்  குடும்பத்தைச் சேர்ந்த  பெண் தெய்வங்கள்

10. அஸ்தாம் அபையா
11. மிருத்துவ வஞ்சன தாரா
12. சத்ருஜ்ஜா சித்த தாரா
13. சதபுஜ சித்த தாரா
14. விஷ்வாத்மா
15. குருகுலா
16. ஜாங்குரி

மஞ்சள் தாரா  தெய்வத்தின் குடும்பத்தைச் சேர்ந்த  பெண் தெய்வங்கள்

17. வஜ்ஜிர தாரா
18. ஜங்குலி
19. பிரனாஸ்பரி
20. பிர்குட்டி

நீலத்தாரா  தெய்வத்தின் குடும்பத்தைச் சேர்ந்த  பெண் தெய்வங்கள்

21. ஈஜித்தா
22. மகா சீனத் தாரா ( இவர் சீன நாட்டைச் சேர்ந்த, தார தெய்வம், சீனர்கள் 23 தாரா தேவியை வழிபடுகின்றனர்

சிகப்புத் தாரா தேவியின் குடும்பத்தைச் சேர்ந்த பெண் தெய்வங்கள்

23. குருகுலா

ஜாங்குலி பெண் தெய்வத்தை இரண்டு வகையிலும் சேர்த்துக் கொண்டாலும் அது ஒற்றைத் தெய்வம்தான், இரண்டு வகையான பலன்களையும் தருவதால் மஞ்சள் தாராவின் குடும்பத்திலும் பச்சைத் தாராவின் குடும்பத்திலும் இடம் பெற்றுள்ளது.

தென்னகத்தில் தாரா தேவி வழிபாடு

தமிழகம் 

வரலாற்றில் எப்போதும் ஒரு சமயத்தை மற்றொரு சமயம் அழிக்கலாம், ஆனால் சமயக் கருத்துக்களை எப்பொழுதும் அழிக்க இயலாது என்னும் உண்மை  உலகம் அறிந்தது. அதன்படி பௌத்தம் வீழ்ச்சியுற்றிருந்த காலத்தில் அதன் கருத்துக்களை, கொள்கைகளை, புத்த சமயத்தினர் வழிபட்ட கடவுள்களை மக்களின் மனங்களில் இருந்து இந்து மதத்தினரால்  அழிக்க இயலாததால் அவைகளை இந்து மதம் தன் வசப்படுத்திக் கொண்டது. புத்தரை திருமாலின் அவதாரம் என்று இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவம் தன்னுள் இனைத்துக் கொண்டது. அதே போல் சைவ மதமும் சிவனின் தேவகனங்களில் ஒருவராக புத்தரை ஏற்றுக் கொண்டது. புத்தரின் பல பெயர்களில் ஒன்றான சாஸ்த்தா மற்றும் அய்யனாரை தன்னுள் இனைத்துக் கொண்டது.  இதனை தமிழறிஞர். மயிலை. சீனிச்சாமி அவர்கள் பௌத்தமும் தமிழும் என்னும் நுாலில் விரிவாக பேசுகின்றார். அதிலிருந்து சில பகுதிகள்.

" மணிமேகலை, சம்பாபாதி, தாராதேவி முதலிய சிறு தெய்வங்கள் பண்டைக் காலத்தில், பௌத்தர்களால் வணங்கப்பட்டு வந்தன. இந்த தெய்வங்களின் கோயில்களை இந்துக்கள் பிற்காலத்தில் கைப்பற்றிக்கொண்டு இவைகளுக்கு காளி, பிடாரி, திரௌபதை அம்மன் என்னும் புதுப் பெயர்களைச் சூட்டி கிராம தேவதைகளாக்கிக் கொண்டனர். காஞ்சிபுரத்தில் வீடு பேறடைந்த மணிமேகலை என்னும் காவியத் தலைவியாகிய மணிமேகலை ஆலயந்தான் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள அன்னபூரணி அம்மன் என்றும், காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், பௌத்தர்களின் தாரா தேவி ஆலயம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். அவ்வாறே அங்காங்கு திரௌபதையம்மன் ஆலயம் என்னும் பெயருடன் இப்போது இருக்கும் ஆலயங்கள் எல்லாம் பண்டைக் காலத்தில் தாரா தேவி ஆலயங்களாக இருந்தன என்றும் கூறுவர்,  என்கின்றார்.

கேரளம் மற்றும் ஆந்திரம்

கேரளத்திலும் தாரா தேவியின் ஆலயங்களை எல்லாம் பகவதி அம்மன் ஆலயங்களாக இந்து மதம் சுவிகரித்துக் கொண்டது. அதே போல் ஆந்திரத்திலும் பத்மாவதி தாயாராகவும் லட்சுமியாகவும் வழிபடும் தெய்வங்கள் தாரா தேவியின் ஆலயங்களாகும்.

கர்னாடகம் 

அதேபோல் கர்னாடாகாவிலும், உள்ள அம்மன் ஆலயங்கள் யாவும் தாரா தேவியின் ஆலயங்களே, அதிலும் இந்துக்கள் பெரும்பான்மையாக வழிபடும்  கொல்லேகால் மற்றும் கொல்லுாரில் உள்ள அம்மன் ஆலயங்கள்  தாரா தேவியின் ஆலயங்கள் ஆகும்.

குறிப்பாக கொல்லுார் மூகாம்பிகை அம்மன் ஆலயம் பௌத்த தெய்வமான தாரா தேவியின் ஆலயமாகும். சிதிலமைடந்திருந்த பௌத்த விகாரையிலிருந்து பெண்சிலைகளை எடுத்து   ஆதி சங்கரர் இந்த ஆலயத்தை நிறுவினார் என்று வரலாறு சொல்கின்றது.
தென்னகமெங்கும் பௌத்த தெய்வமான தாரா தேவியின் ஆலயங்களே வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு அம்மன் தெய்வங்களாக வழிபடப் படுகின்றது என்பது பௌத்த வரலாறாக இருக்கின்றது.

இந்து மதத்தில் இருந்தாலும் பௌத்தர்களின் நம்பிக்கையின் படி, வேண்டிய வரத்தை தரும் தெய்வமாக தாரா தேவி இருப்பதால் தன்னை வணங்கும் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றி இருப்பதால், இந்து மதத்தால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட தாரா தேவியின் ஆலயங்களுக்கு பக்தர்களின் படையெடுப்பும் வழிபாடும் மிகுதியாக இருக்கின்றது வரலாறு முழுவதும்.

இன்று இந்து மதத்தில் அம்மனாக, காளியாக, பார்வதியாக, சக்தியாக, ஊர்காவல் தெய்வங்களாக வழிபடப்படும் அனைத்து பெண் தெய்வங்களும் புத்த சமயத்தில் மகாயானப் பிரிவு மற்றும் வஜ்ஜிரயானப் பிரிவினரால் வழிபடப் பெற்ற பௌத்த பெண் தெய்வமான தாரா தேவியின் ஆலயங்களே.

தும்பி வா பாடல் 


தும்பி வா தும்பக்குடத்தின் என்னும் பாடல் 1982 ஆம் ஆண்டு வெளியான ஓலங்கள் மலையாளப் படத்தில் இடம் பெற்ற மிகப் புகழ் பெற்றப் மலையாளப்  பாடலாகும். இப்பாடலைப் பாடியவர். எ ஸ்.ஜானகி, இந்தப் படத்தை இயக்கியவர் பாலுமகேந்திரா.

இந்த  பாடலை இயற்றியவர் மலையாள கவிஞரான ஓ.என்.வி.குருப் என்பவராவார். இவர் கேரளத்தில் புகழ்பெற்ற கவிஞர். இவருக்கு இவருடைய எழுத்துப் பணியை பாராட்டி கேரள பல்கலைக் கழகம் கௌரவ டாக்கர் பட்டம் 2007ல் அளித்தது. அதே ஆண்டில் இவருடைய இலக்கியப் பணியைப் பாராட்டி இந்திய ஜனாதிபதியிடம் இருந்தும் விருது பெற்றுள்ளார். 1998 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், பின் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் பெற்றுள்ளார். அனைத்துக்கும் மேலாக இடது சாரி சிந்தனையாளர். கேரளாவின் அனைத்து மாணவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

இத்தகைய உச்சம் பெற்ற ஆளுமையோடு இசை உச்சம் பெற்ற நம் இசை ஞானியும், இனைந்த தும்பி வா பாடல் இளையராஜாவின் இசை ரசிகர்களுக்கு  ஒரு மிகு உச்சமான பாடல் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

 
                                                          தும்பி வா பாடல்
https://www.youtube.com/watch?v=xAl7_PiZV9I



சிருங்கார ராகமான காபி ராகத்தில்  அமைக்கப்பட்ட பாடலாகும். பொதுவாக இந்த ராகம் மாலை வேலையில் பாட ஏதுவான ராகம்.  சதுஸ்ரஜாதி திரிபுடைத் தாளம் மற்றும் திஸ்ரஜாதி ஏக தாளம் என இரண்டு ராகத்தையும் குழைத்து இந்த பாடலை அமைத்திருப்பார் நம் இசை ஞானி.  வீனை, புல்லாங்குழல், தபேலா, பேஸ், கிடார், ஆகிய இசை கருவிகளை பயன்படுத்தி நம் காதுகளையும் மனத்தையும் வசிகரித்திருப்பார்.



கதிரவானி தாரா



நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே 

இந்த மெட்டமைப்பில் அமைத்த தமிழ் பாடல் ஒன்றை  மீண்டும் அதே ஆண்டு வெளியான  ஆட்டோ ராஜா படத்திலும் இடம் பெறச் செய்தார் நம் இசை ஞானி. அதற்க்குப் பின் பாலுமகேந்திரா இயக்கிய நீராக்ஷனா என்னும் தெலுங்குப் படத்திலும் இதே காபி ராகத்தில் அமைந்த இந்த மெட்டமைப்பில் ஒரு பாடலை அமைத்தார். அதே படம் மீண்டும் கண்ணே கலைமானே என தமிழில் மொழி மாற்றம் செய்த போது நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே என்று ஒரு பாடலை அமைத்தார்.

காபி ராகத்தின் அடிப்படையில் அமைந்த தும்பி வா பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி  என பல மொழிகளில் பயணித்து, அந்த ரசிகர்களையும் கவர்ந்தபாடலாக இருக்கின்றது. அத்துடன் இந்த பாடல் இளையராஜாவுக்கு மிகப் பிடித்தமான பாடல் என ஒரு நிகழ்ச்சியில் பாலுமகேந்திரா அவர்கள் சொல்லியும் உள்ளார்.

தும்பி வா பாடலில் அமைந்துள்ள புத்தசமய கோட்பாடுகள்

பொதுவில் நாம் கேட்கும் எந்த ஒரு திரை இசைப் பாடலும் நான்கு விதமான நபர்களை நிறைவு செய்யும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கும்.

  1.  சாதாரணமாக இந்த இசையை அடிக்கடி கேட்க்கும் வாய்ப்புள்ள சாமானிய ரசிகன். இவர் ஒரு பாடலை கேட்க்கும் போது அந்த பாடல் அவருக்கு ஏதோ ஒரு வகையில் மகிழ்ச்சியை, நிறைவை, சந்தோஷத்தை தர வேண்டும் என விரும்புகின்றார். அவர் விருப்பம் நிறைவடைந்தால் அவர் அந்த பாட்டை மிக விரும்பும் நபராகின்றார். அந்த பாடலில் அவர் விரும்பியது எதை எனக் கேட்டால் அவருக்கு பதில் சொல்ல தெரியாது, குரலிசையாக இருக்கலாம், இசைக் கருவிகளாக இருக்கலாம், தாளமாக இருக்கலாம், பாவமாக இருக்கலாம். ஏதாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அந்த இசையும் பாடலும் அவருக்கு பிடித்த பாடலாக இருக்க வேண்டும். அந்த விருப்பம் நிறைவேறும் போது அது அவருக்கு பிடித்த பாடல்.
  2. இரண்டாவதாக அந்த பாடலை உருவாக்கியவர்களுக்கு அந்த பாடல் நிறைவை தர கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு நிறைவை தராத நிலையில் அந்த பாடலை உருவாக்கியவர்கள் மீண்டும் மீண்டும் நிறைவு அடையும் வரையில் அந்த ராகத்தை தாளத்தை, வாத்தியத்தை தமது பாடல்களில் பயன்படுத்துவார்கள்.
  3. மூன்றாவதாக சங்கீதம் என்று சொல்லப்படுகின்ற இசை அறிந்தவர்களை இசையின் தரம், மற்றும் இசைக் கோவையினால் அவர்களையும் வியக்க வைப்பது அல்லது ஏற்க்கச் செய்வது, இந்த வகையில் வருபவர்கள் மிக சொற்பமானவர்களே. இவர்களை   இசையமைப்பில் புதுமைகளை புகுத்து, அல்லது இசையின் கட்டமைப்புகளை இனிமை என்னும் தன்மையைப் புகுத்தி அதன் கட்டமைப்புகளை உடைப்பது போன்ற தன்மைகளை பயன்படுத்தி நம் இசைஞானி ஒவ்வொரு பாடலிலும் இவர்களோடு தமது உரையை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார். 
  4. மற்ற இசையமைப்பாளர்கள் மேலே உள்ள மூன்று கோட்பாடுகளோடு நிற்க்கும் போது , நமது  இசைஞானி தனது ஒவ்வொரு பாடலிலும் இசைமொழியாக தமது உணர்வுகளை புகுத்தி நம்மோடு உரையாடிக் கொண்டிருக்கின்றார். அவ்வாறு அவர் நம்மோடு உரையாடுவதை புரிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் அவரது இசைமொழியை புரிந்து கொள்ள வேண்டும். அத்தகையை இசை மொழியை புத்த சமயக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளும் ஒரு பெரும் முயற்சிதான் இந்த சிறு தொடர். இதற்கான மெனக்கெடலும், தேடலும் மிகப் பெரிது என்பதை இங்கே பனிவோடு சொல்லிக் கொள்கின்றேன். 
வெள்ளைத் தாரா 
மேலே சொல்லிய தாரா தேவிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு மந்திரம் இருந்தாலும் அனைத்து தாரா தேவிக்கும் பொதுவான மந்திரம் “ 

ஓம் தாரே து தாரே துரே சுவா” 
இந்த மிகப் புனிதமான மந்திரம் உலகில் உள்ள புத்த சமயத்தினர் உச்சரிக்கும் மந்திரங்களில் இரண்டாம்  இடத்தில் உள்ளது. இது புத்தசமயத்தினர் மன அமைதிப் பெறவும், பயமின்றி வாழவும், சஞ்சலம், கவலை, கோபம் , முதலிய மன அமைதியை குலைக்கும் தளைகளில் இருந்து விடுபட உச்சரிக்கும் மிக புனிதமான மந்திரமாகும்.  

இசைக்கு தலைவியான வெள்ளைத் தாரா, இவரைத்தான் இந்து மதம் கலைவானி என்று கைகளில் வீனையை தந்து தனதாக்கிக் கொண்டது.

முதலிடத்தில் புத்த சமயத்தினர்  தமது பிறவித் தலையை அறுக்கவும், உயர் ஞானம் அடையவும் உச்சரிக்கும் “ஓம் மணி பத்மே ஓம்” உள்ளது. இந்தப் மந்திரத்தின் அடிப்படையில் ஆயிரம் தாமரை மொட்டுகளேப் பாடலை படைத்திருக்கின்றார். அது குறித்த கட்டுரை இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில் வந்துள்ளது. படிக்காதவர்கள் படித்துக் கொள்ளவும். ஏற்கனவே படித்தவர்கள் மீண்டும் ஒரு முறை படித்துக் கொள்ளவும். 



 தும்பி வா பாடலின்  பின் புலமா இசைஞானி அவர்கள் தான் வணங்கும் தாய் முகாம்பிகா தேவியின் மூலமான தாரா தேவிக்கு நன்றி சொல்லும் விதமாக தாரா தேவியின் மந்திரமான ஓம் தாரே துா தாரே துாரே சுவா என்னும்  இசைக்குறிப்பின் அடிப்படையில் இந்த மந்திர இசை மொழியிலேயே தும்பி வா பாடலை அமைத்திருப்பார். இந்த மந்திரத்துக்கான இசை அட்சரம்( என்றும் ஆங்கிலத்தில் நோட்ஸ் என்று சொல்லப்படுவதும்) பாடலின் பின் புலத்தில் மிக நுட்பமாக பொருந்திப் போகும். 

மேலும் காபி ராகம் ஆண் ராகம், அது வசியப்படுத்தும் ராகம் அத்தகைய ஆண் ராகத்தைக் கொண்டு பெண் தெய்வமான தாரா தேவியை வசமாக்க அவர் செய்த இசை முயற்சியே இந்த பாடல். அத்துடன் காபி ராகம் என்பது வட இந்திய ராகம், வட இந்திய தெய்வமான தாராவுக்கு வட இந்திய ராகத்திலேயே பாடலும் பன்னமைத்ததும் இசை மொழி தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் மிக நுட்பமான வித்தையாகும்.  








Thursday, December 21, 2017

படிக்கவேண்டிய புத்தகம் :

சேரி ரெண்டுபட்டால் - மா. அமரேசன்

அரசின் சலுகைகள் பல பெற்றும் பிற சமூகங்களைப் போல தலித் மக்களின் நிலை அரசியல், சமூகம், வணிகம் உள்ளிட்டவற்றில் ஏன் உயரவில்லை என்பதை ஆய்வுப்பூர்வமாக அலசும் நூல் இது. பிரச்னைகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு, அதற்கான தீர்வுகளையும் தெளிவாக முன்வைத்து விளக்கிப் புரியவைப்பது ஆசிரியரின் எழுத்தாளுமைக்குச் சரியான சான்று. ...See More

Monday, October 16, 2017

என்னப் பாட்டுப் பாட

இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமய கோட்பாடுகள். 5

என்னப் பாட்டுப் பாட, என்னத் தாளம் போட…

      இந்த தொடரை ஏன் நீண்ட காலமாக எழுதவில்லை என தொலைபேசியிலும் நேரிலும் கேட்டுக் கொண்டிருந்த என் மகன் அ.கௌ.கதிரேசனுக்கும். பொருத்தமாக ஜென் கதையை பரிந்துரைத்த  எழுத்தாளர் அண்ணன், பேரா. இராமசுப்பு ஆகிய இருவருக்கும் நன்றி சொல்லி அடுத்த பாடலை துவங்குகின்றேன்.

ஜென் பௌத்தம்:

       ஜென் பௌத்தம் என்பது தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பல்லவ இளவரசரும், பௌத்த பிக்குவுமான போதி தர்மரால், சீனாவில் தோற்றுவிக்கப்பட்டது. சீனாவில் மகாயான பௌத்தத்தை பரப்ப சென்ற போதி தருமர், அப்போது அங்கு கோலோச்சிக் கொண்டிருந்த டவோ மதத்தின் சாரம், மற்றும் மகாயான பௌத்தத்தின் சாரம் இரண்டையும் இனைத்து உருவாக்கியவைதான் ஜென் பௌத்தம் என்பது.

       ஜென் என்பது சீன மொழிச் சொல் என்றே பலராலும் நம்பப்படுகின்றது, அதன் பொருள் தியானம் செய் என்பதாகும், இதனை இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்வதாயின், வாழ்வே தியானம், தியானமே வாழ்வு என்பதாகும். ஜென் மத தத்துவத்தின் படி, புத்தர் எங்கும் எல்லாவற்றிலும் நீக்க மற நிறைந்திருக்கின்றார், என்பதை உணர்ந்து வாழ்தலே ஜென் மத கோட்பாடு. இந்த உண்மையை விளங்கிக் கொள்ள ஒரு எளிய ஜென் கதை.

ஒரு ஜென் கதை,

கடுங்குளிரில் வந்த வயது முதிர்ந்த  ஒருவருக்கு புத்த விஹாரத்தில் தங்க இடம் கொடுக்கப்பட்டது.அன்று இரவு  கடுங்குளிர்..கிழவரால்  குளிரைத் தாங்க முடியவில்லை.மரத்தால் செய்யப்பட ஒரு புத்தர் சிலையை எடுத்து அதை எரித்து குளிர் காய ஆரம்பித்தார்.மரம் எரியும் சப்தம் கேட்ட விஹாரத்தின் குரு ஓடிவந்து புத்தர் சிலை எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.கிழவரிடம்,”நீங்கள் என்ன செய்கிறீர்கள்?உங்களுக்குப் பைத்தியமா?தெய்வத்தையே எரித்து விட்டீர்களேஎன்று கோபத்தில் கதறினார்.உடனே கிழவர் ஒரு குச்சியைக் கொண்டு சாம்பலைக் கிளறினார்.அவர் என்ன செய்கிறார் என்று குரு கேட்டபோது,அக்கிழவர் சொன்னார்,”நான் எலும்புகளைத் தேடுகிறேன்.நான் எரித்தது புத்தரை என்றால் எலும்புகள் இருக்க வேண்டுமே?”கோபத்துடன் குரு அவரை மடத்தை விட்டு வெளியே தள்ளி விட்டார்.

மறுநாள் காலை அக்கிழவர் என்ன ஆனார் என்று வெளியே சென்று பார்த்தார்.அக்கிழவர் அங்குள்ள ஒரு மைல் கல்லின் முன் அமர்ந்து பூக்களைத் தூவி,”புத்தம் சரணம் கச்சாமி,”என்று  பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.குரு அவர் அருகே சென்று,”என்ன செய்கிறீர்கள்?மைல் கல்தான்  புத்தரா?”என்று கேட்டார்.கிழவர் சொன்னார், ”மரம் புத்தராகும்போது மைல் கல் புத்தராகக் கூடாதா?நேற்று நான் புத்தர் சிலையை எரித்து குளிர் காய்ந்தது,என்னுள் இருக்கும் புத்தரைக் காப்பாற்றத்தான்.அந்த மரச்சிலைகள் உயிரற்றவை.அந்த மரப் புத்தரை எரித்ததற்காக நீங்கள் உயிருள்ள புத்தரை வெளியே துரத்தி விட்டீர்களே?’ என்று சொல்லி, தலைமை குருவுக்கு ஞானத்தை போதித்தார், வயது முதிர்ந்த பெரியவர்.

      இந்த கதையின் நீதி, புத்தர் சிலையில் இல்லை, புத்தர் உனக்குள்ளும் இருக்கின்றார், எனக்குள்ளும் இருக்கின்றார், சக மனிதர்களின் துன்பங்களை துயரங்களை போக்குவதே நாம் செய்ய வேண்டிய உயர்ந்த பணி. அவ்வாறு செய்யாமல் வெறும் வார்த்தைகளில் புத்தர் என்று கூறிக்கொண்டிருப்பதால் பலனில்லை என்பதே.

      இந்த கதையிலிருந்தே நமது அடுத்த பாட்டை துவங்க வேண்டிய தேவையுள்ளது. ஒரு இசை அமைப்பாளருக்கு, இசை என்பது வாத்தியக் கருவிகளிலோ, இசைக் கருவிகளிலோ இல்லை, தன்னைச் சுற்றி நிகழும் எல்லா செயல்களிலுமே இசை நீக்கமற நிறைந்துள்ளது. என்னும் உண்மையை உணர்ந்து இருந்தாலே அவருக்கு இசை ஞானம் வாய்த்தவராகின்றார். அதனினும் கொஞசம் உயர்ந்து சொல்ல வேண்டுமெனில், “ காற்றிலிருந்து உருவாகும் இசை காற்றோடு கலக்கின்றது” என்பதே இசை குறித்த ஜென் ஞானம்.

இத்தகைய இசை ஞானம் வாய்க்கப் பெற்றவர்தான் நமது இசை ஞானி, அத்தகைய இசை ஞானத்தை உலகுக்கு உணர்த்திய இசைதான். 1979 ஆம் ஆண்டு நம் இசைஞானியார் இசை அமைக்க கவிஞர். முத்துலிங்கம் அவர்கள் பாடல் எழுதிய என்னப் பாட்டுப் பாட என்னத் தாளம் போட என்னும் பாடல், அந்த பாடல் வரிகள் இதோ.  
என்ன பாட்டு பாட... ம்... என்ன தாளம் போட
            ஒண்ணும் புரியலியே ம்... ( இசை )

            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட

            இசை               பல்லவி

            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
            ... வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம்
            வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம்
            மாடு ரெண்டும் தாளம் போட கொம்ப கொமப் ஆட்டுது
            நிக்காதே ஓது இது சர்க்காரு ரோடு
            நிக்காதே ஓது இது சர்க்காரு ரோடு

            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட

            இசை               சரணம் - 1

            பள்ளிக்கூட நேரம் ஆச்சு வேகமாக போகணும்
            தே... ட்ர்ர்... ர்ர்...
            பள்ளிக்கூட நேரம் ஆச்சு வேகமாக போகணும்
            வண்டி பூட்டுனா சண்டி ஆகுற
            காப்பி ஓட்டல பாத்து நிக்கிற 
            தன்னானே னானா... ... தன்னானே னானா 
            தன்னானே னானா தன்னானே னானா
            வெக்காதே ஆச அது வெங்காய தோச
            வெக்காதே ஆச அது வெங்காய தோச
            அங்கேயும் இங்கேயும் கண்ண நீ வெக்காதே

            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட

            இசை               சரணம் - 2

            கூத்து மேட ஏறினாக்கா நூறு வேஷம் போடலாம்
            ஹாஹ்ஹா ஹாஹ்ஹா ஹாஹ்ஹா ஹா
            கூத்து மேட ஏறினாக்கா நூறு வேஷம் போடலாம்
            மேடை இன்றியே வேஷம் போடுறான்
            ஆளப் போலவே தாளம் போடுறான்
            தன்னானே னானா... ... தன்னானே னானா 
            தன்னானே னானா தன்னானே னானா
            சொல்லாதே ராசா வீண் பொல்லாப்பு வேணா
            சொல்லாதே ராசா வீண் பொல்லாப்பு வேணா
            கண்டாலும் சொல்லாதே சொன்னாலும் கேக்காதே

            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
            என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
            வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம்
            மாடு ரெண்டும் தாளம் போட கொம்ப கொமப் ஆட்டுது
            நிக்காதே ஓது இது சர்க்காரு ரோடு
            நிக்காதே ஓது இது சர்க்காரு ரோடு
            நிக்காதே ஓது இது சர்க்காரு ரோடு
     
      சக்களத்தி திரைப்படத்தில் துவக்க பாடலாக முகப்பிலேயே அமைந்துள்ளது. அப்பொழுதே, முகப்பு பாடலை இசைஞானியார் பாடினால் படம் வெற்றியடையும் என்னும் நம்பிக்கையின் பால் அமைக்கப்பட்ட பாடலாகும்.  தலைவனை ஒரு தலையாக காதலிக்கும் தலைவி, அவனோடு உரையாடிக் கொண்டு செல்ல வேண்டும் என்னும் ஆசையில், ஒரு பாடலைப் பாடச் சொல்லி கேட்க, தலைவனோ, தன்னோடு எப்போதும் பயணிக்கும் மாடுகளிடம் உரையாடிக் கொண்டு மாடுகளிடம் பாடுவது போலவும், பேசுவது போலவும் அமைக்கப்பட்ட பாடல் இது.

       உண்மையில் உழைக்கும் மக்கள் தங்களோடு உழைப்பில் பங்கெடுக்கும் கால்நடைகளோடு பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும் பயணத்தைக் கடப்பதென்பது கிராமப்புறங்களில் இன்றும் நடக்கும். நிகழ்வு. அதற்கேற்றார் போல் நம் இசைஞானியார், மாடுகளின் கழுத்திலுள்ள சலங்கை, மாட்டுக் கொம்பிலுள்ள மணி, மற்றும் மாட்டின் வாலசைவு, உடலசைவு, வண்டிச் சக்கரத்தின் சுழற்சி இவைகளுக்கு ஏற்றவாறு எளிய இசை கருவிகளைக் கொண்டு, இசையமைத்து இருப்பார். உழைக்கும் மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளான, டிரிய், மற்றும், தன்னானே னேன, தே தே, போன்ற வார்த்தைகளையும் பாடல்களோடு பொருந்திப் போக செய்திருப்பதே இப்பாடல் உழைக்கும் மக்களை கிராமப் புற மக்களை வெகு எளிதில் சென்றடைந்து பட்டி தொட்டியெங்கும் பரவி பெரும் வெற்றி அடையக் காரணமாக இருந்தது.



       இந்தப் பாடலைக் காண்பவர்கள் மாடு தலையசைக்கும் போதே, தன்னையும் அறியாமல் தலையசைப்பதுதான் இப்பாடலின் இசை கோவைக்கு கிடைத்த வெற்றி. மாயா கௌலனை ராகத்தின் அடிப்படையில் அமைந்த இந்த பாடலை எளிய மக்களின் உணர்வுகளோடு பொருத்திப் பார்க்கும் போது, எல்லா உயிர்களையும் நேசிக்கும் பௌத்த உணர்வுக்கு நம்மை இட்டுச் செல்லும். 

இதையும் படியுங்கள்