Saturday, July 15, 2017

ஆயிரம் தாமரை மொட்டுகளே..,


இளையராஜாவின் இசை பாடல்களில் பௌத்த கூறுகள் – 2

ஆயிரம் தாமரை மொட்டுகளே.., 

இசைஞானி என அழைக்கப்படும் இளையராஜா என்னும் இசை உளவியலை குறித்து எழுதும் போது அதீத எச்சரிக்கையோடும் அதிகமான தரவுகளோடும் எழுத வேண்டும். ஏனெனில் இளையராஜாவின் இசையில் பௌத்த கூறுகள் என்பது எவரும் தொடாத கருத்தோட்டம்.  இதை முதன் முதலில் எழுத முனைந்ததற்காக பாராட்டுகின்றேன். எனினும் தரவுகளை அதிகம் தாருங்கள் என இந்த கட்டுரையின் முதல் பகுதியை படித்து பின்னுாட்டத்தை அலைபேசி வழியாக தந்த கவிஞர். யாழன் ஆதி தோழருக்கு நன்றி சொல்லி அடுத்த பாகத்தை துவங்குகின்றேன்.

       பொதுவில் பௌத்தத்தை 3 வகையாகப் பிரிக்கலாம், என்னற்ற துனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவைகள் 1. தேரவாதம். 2. மகாயானம் அல்லது பெருவழி 3. வஜ்ஜிரயானம் அல்லது தாந்தீரிகம் ஆகிய 3 பிரிவுகளாகும்.

·         தேரவாதம்.

1.   பாலி மொழியை முதன்மையாக் கொண்டது, அனைத்து போதனைகளுக்கும், தரவுகளுக்கும் பாலி மொழியை மட்டுமே தரவகளாக ஏற்றுக் கொண்டது.

2.   புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, மற்றும் சங்கம் சரணம் கச்சாமி, என்னும்  3 சரணங்களை ஏற்றுக் கொள்ளுதல்.

3.   இந்த உலகில் துண்பம் இருக்கின்றது, துன்பத்திற்கான காரணம் இருக்கின்றது, துன்பத்தை நீக்க முடியும். இந்த உலகில் மனிதர்களுக்கு உள்ள துன்பம் நீக்கம் பெறுகின்றது என்னும் நான்கு உன்னத வாய்மைகளை ஏற்றுக் கொள்வது.

4.   உயிர்களை துன்புறுத்தாமல் வாழ்வது, அடுத்தவரின் உடைமைகளின் மீது ஆசைப்படாமல் இருத்தல், மனைவியோடு மட்டும் மகிழ்ந்திருப்பது, உண்மையை மட்டுமே பேசுவது, மது, புகையிலை, பீடி, சிகரெட் மற்றும் போதை பழக்கத்தை பொருட்களை தவிர்ப்பது என்னும் ஐந்தொழுக்கப் பண்பாட்டை பின்பற்றி வாழ்வது.

1.   நல் உணர்வு
2.   நல் நினைவு
3.   நல் வாய்மை
4.   நற்செயல்
5.   நல் வாழ்க்கை
6.   நல் முயற்சி
7.   நல் மனம்
8.   நல் அமைதி என்னும் எண் வழிப் பாதையை கடைப்பிடித்து ஒழுகுதல்.

இவற்றுடன் பத்து வாழ்க்கை நெறிகளான.
1.   தனி மனித ஒழுக்கம்
2.   பிறர் தேவைக்கான தானம்
3.   விருப்பு வெறுப்பற்ற தன்மை
4.   துன்பத்திலும் இன்பத்திலும் சுய கட்டுப்பாடு
5.   விடா முயற்சி
6.   சகிப்புத் தன்மை
7.   வாய்மை
8.   உள்ள உறுதி
9.   அன்பு
10.  மைத்திரி. ( எல்லா உயிர்களையும் நிபந்தனையற்று நேசித்தல்) ஆகிய நெறிகண்டு தெளிதலும்.

இவற்றுடன் படிமங்களான அல்லது காட்சிகளாக

·         புத்தரின் பாதங்கள்
·         தாமரை
·         வெள்ளையானை
·         குடை
·         மான்
·         புத்தரின் கரங்கள்
·         புத்தரின் தலை முதலியவற்றை தொழுவதும் வணங்குவதும் வழிபடுவதும்

தேரவாத பௌத்தத்தின் சாரமாகவும் பௌத்தர்களின் கடமையாகவும் இருக்கின்றது.

மகாயான பௌத்தம்.

1.   சமஸ்கிருத மொழியை முதன்மையாக கொண்டது.
2.   திரி சரணங்களை ஏற்றுக் கொண்டது
3.   நான்கு உன்னத வாய்மைகளை ஏற்றுக் கொண்டது
4.   ஐந்தொழுக்க நெறியை பின்பற்றுவது
5.   எண்வழி மார்க்கத்தை ஏற்றுக் கொள்வது,
6.   புத்தரின் முழு உருவ சிலைக்கு வழிபாடு செய்வது
7.   ஜாதக கதைகளுக்கும் சடங்குகளுக்கும் முக்கியத்துவம் தருவது.
8.   இவை மகாயான பௌத்தத்தின் சாரமாக இருக்கின்றது.

வஜ்ஜிராயானம்

1.   தேவநாகிரியை முதன்மை மொழியாக ஏற்றுக்கொண்டது
2.   மும்மணிகள் என்றழைக்கப்படும் திரி சரணங்களையும்
3.   நான்கு உன்னத வாய்மைகளையும்
4.   ஐந்தொழுக்க நெறியையும்
5.   எண்வழி மார்கத்தையும்
6.   முத்திரைகளையும்
7.   மந்திரங்களையும்
8.   தியானங்களையும்
9.   பலவிதமான புத்தரையும் ஏற்றுக்கொண்டு வழிபாடு நிகழ்த்துவது. வஜ்ஜிரியான பௌத்தமாகும்.

பௌத்தமும் தாமரையும்

       தாமரை மலர், பௌத்தத்தில் ஞானம், அறிவு, மாசற்ற மனம் மற்றும் மன அமைதியின் குறியீடாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. புத்தரின் தாயார் மகாமாயா தனது தாய்வீட்டிற்கு செல்லும் வழியில் கபிலவஸ்த்து என்னும் இடத்தில் உள்ள நந்தவனத்தின் அழகை கண்டு அங்கு சற்று இளைப்பாற எண்ணிய போது பேறுகால வலி உண்டானதால் அங்கிருந்த சால் மரத்தின் கிளைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டே சித்தார்த்தரை நின்ற நிலையிலேயே பெற்றெடுத்தார் என புத்தரின் வரலாறு சொல்கின்றது.[1]

       அவ்வாறு குழந்தையாக பிறந்த புத்தர் ஏழு அடிகள் நடந்து சென்று தன் தாய்க்கு வணக்கம் சொல்லி தன்னை இப்பூவுலகுக்கு அளித்ததற்கு நன்றி சொல்லியது என்றும், அந்த ஞானக் குழந்தை காலடி வைத்த இடங்களில் எல்லாம் வெண் தாமரை முளைத்தது என்றும் புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சொல்லும் ஜாதக கதைகளில் படித்திருக்கின்றோம்.[2]


சித்தார்த்தர் புத்தகயாவில் உள்ள போதி மரத்தின் கீழ் ஏழுவாரங்கள் தியானம் செய்கின்றார் முதல் வாரம் உட்கார்ந்த நிலையில் தியானம் செய்து ஞானம் அடைகின்றார், இரண்டாவது வாரம் உட்கார்ந்திருந்தாலும் விழி இமைக்காமல் தியானம் செய்கின்றார். (மன உறுதி பெறும் பொருட்டு தனக்கு ஞானம் கிடைக்க காரணமாக இருந்த போதி மரத்துக்கு நன்றி சொல்லும் நோக்கம்)



       மூன்றாவது வாரம் உடலும் மனமும் ஒத்து போகும் வகையில் நடை தியானம் மேற்கொள்கின்றார், அவ்வாறு அவர் நடை தியானம் மேற்கொண்ட போது, அவர் பாதம் பூமியில் பட்ட இடங்களில் எல்லாம் தாமரை மலர்கள் முகிழ்ந்து எழுந்ததாகவும், வரலாறு சொல்கின்றது. [3] மேலும் அவ்வாறு புத்தர் நடை தியானம் பயின்று தாமரை மலர்கள் முகிழ்ந்த இடத்தில் அசோகர் நினைவுத் துான் நிறுவியதாக அசோக வந்தனம் தெரிவிக்கின்றது.

       மேலும் நடை தியானம் முழுதும் பயின்று ஞானம் பெற்றவர்கள் நடக்கும் போது தாமரை மலர்கள் அவர்களைத் தாங்கும் என்றும் பௌத்த தியானம் என்னும் நுாலில் விளக்கப்பட்டிருக்கின்றது. புத்தர் ஞானம் பெற்ற பிறகு அமர்ந்திருக்கும் எல்லா இடங்களிலும் சிலைகளிலும் தாமரை மலரின் மீதே அமர்ந்திருப்பது போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும். கரங்களில் தாமரை தாங்கிக் கொண்டிருப்பது போலவும், இதயத்தில் தாமரை மலர்ந்திருப்பதைப் போலவும் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது, தாமரை என்பதை அன்பு, கருனை, ஞானம், செல்வம், மன அமைதி போன்றவற்றின் குறியீடாக பௌத்தம் கட்டமைத்த காரணத்தால் பௌத்தத்தில் தாமரை மிகு முக்கியத்துவம் பெறுகின்றது.

       மகாயான பௌத்ததை உருவாக்கிய அவலேகோஸ்வர் என்னும் அகத்தியரும் தாமரை மலருடன் நிற்ப்பது போலவே அஜந்தா குகை ஓவியங்களும், சித்தன்னவாசல் குகை ஓவியங்களும் உள்ளது.

      
புத்தர் போதித்த என்பத்து நான்காயிரம் சூக்தங்களுள் தாமரை சூக்தம் மிகு முக்கியத்துவம் பெறுகின்றது. அவ்வாறு முக்கியத்துவம் பெற்றதனாலே அது முடிவுறா சூக்தமாக நிற்கின்றது. அடுத்து வரும் மைத்திரேய புத்தர் அதனை நிறைவு செய்வார் என மகாயான பௌத்தம் உறுதிபட நம்புகின்றது.



      
பௌத்தத்தை உள்வாங்கி இந்து மதத்துடன் இனைப்பு வேலைகள் நடைபெற்ற போது, புத்தர் மற்றும் பௌத்த மத பெண் தெய்வங்களை அப்படியே தாமரையோடு ஏற்றுக் கொண்டது இந்து மதம். மகாயான பௌத்த பெண் தெய்வங்களான தாரா இந்து மதத்தில் சரஸ்வதியாக வெண் தாமரையோடு இனைத்துக் கொண்டது. பௌத்ததில் செல்வத்துக்குரிய தேவதையை திருமகளாக செந்நிற தாமரையோடு ஏற்றுக் கொண்டது. இந்து தெய்வங்களின் சிலைகளுக்கு கீழ் பீடத்தில் தாமரை செதுக்கப்பட்டிருந்தால் அது பௌத்த தெய்வங்கள் என்பதை உறுதிபடச் சொல்ல இயலும்.
       
இந்திய சட்டத்தை வடிவமைத்த போதிசத்வா. அம்பேத்கரும், இந்திய தேசத்தின் தேசிய மலராக தாமரையை தீர்மானித்து அதை சட்டமாக இயற்றினார். தாமரை மலருக்கு இத்தகைய முக்கியத்துவத்தை பௌத்தம் அளித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டவே இந்த குறிப்புகளை தர நேர்ந்தது.

பௌத்த மந்திரங்கள்



       
ஓம் மணி பத்மே ஹூம் என்பது பௌத்தத்தின் மிக புகழ்பெற்ற மந்திரங்களில் ஒன்றாகும். இதை மணி மந்திரம் எனவும் அழைப்பர். இந்த ஆறெழுத்து  மந்திரம் (ஷடாக்ஷர மந்திரம் அவலோகிதேஷ்வரருடன்  தொடர்புடையது. அதிலும் குறிப்பாக நான்கு கைகள்(சதுர்புஜ ரூபம்) கொண்ட அவலோகிதேஷ்வரருக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே தான் நான்கு கைகள் கொண்ட அவலோகிதேஷ்வர் ஷடாக்ஷரி (ஆறெழுத்துகளின் அதிபதி) என அழைக்கப்படுகிறார்.[4]  


பௌத்தத்தின் மந்திரங்களையும் இந்து மதம் தனக்கானதாக உள்வாங்கிக் கொண்டு, ஐந்தெழுத்து மந்திரம் சிவாய நம என்றும் அது சிவனுக்கு உரியது எனவும், ஆரெழுத்து மந்திரம் சரவண பவ என்பது முருகனுக்கு உரியது என்றும் புனைந்துள்ளது. உண்மையில் முருக வழிபாடு என்பது குழந்தையாய் இருந்த புத்தர் என்றே வரலாற்றாய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் உண்மை விளக்கம் அறிய விரும்புவோர். பழனிக்கு செல்லும் பட்சத்தில் பழனி முருகனின் சிலையின் காதுகளில் பெரிய துளையை காணலாம். இது புத்தரின் அடையாளம். எந்த இந்து தெய்வத்தின் காதுகளில் பெரும் துளை இருந்தாலும் அது புத்தர் மற்றும் பௌத்த தெய்வங்கள் என நாம் உறுதிபட சொல்ல வேண்டும்.
              

ஓம்_மணி_பத்மே_ஹூம் என்னும் மந்திரம் வஜ்ஜிராயான பௌத்தர்களுக்குரியது என்றாலும், நடப்பில் அனைத்து பௌத்தர்களும் பயன்படுத்தும் அதி சிறப்பு வாய்ந்து மந்திரமாகும். இந்த மந்திரத்தை மன அமைதிக்காகவும், மனம் துன்பம் நீங்கி உற்சாகம் அடைவதற்காகவும் பௌத்தர்கள் உச்சரிக்கின்றனர். போதிசத்வா. அம்பேத்கரும் இம் மந்திரத்தை உச்சரிப்பவராகவே, அம்பேத்கர் திரைப்படத்தின் வழியாக சுட்டிக்காட்டப் படுகின்றது.
       
ஓம்_மணி_பத்மே_ஹூம் என்னும் தேவநாகிரி சொல்லுக்கான சரியான தமிழ் பொருள் மனதில் ஆயிரம் தாமரைகள் மலரட்டும் என்பதே. உண்மையில் மன மகிழ்வும், ஞானமும் பெற்று வாழ்பவர்களின் இதயம் ஆயிரம் தாமரைகளால் நிரம்பி வழியட்டும் என்பதன் பொருளே, ஓம்_மணி_பத்மே_ஹூம் (மனதில் ஆயிரம் தாமரைகள் மலரட்டும்.)

பௌத்தம் என்னும் கருத்தியல் பன்னெடுங்காலமாக பட்டியலின மக்களின் மரபில் கலந்து வழிவழியாக இயற்கையாகவே முன்னெடுக்கும் வாழ்வியலாக உள்ளதாலும், யாரும் சொல்லாமலே சேரி சனங்களால் ஐந்தொழுக்க பன்பாட்டின் படி வாழ்க்கையை அமைத்து கொள்ள முடிகின்றது. பட்டியலின மக்களின் வாழ்க்கையில் பௌத்த கூறுகளை நாம் தனியாக தேட முடியாது ஏன் எனெனில் அவர்களின் அக வாழ்வும், புற வாழ்வும், பௌத்த அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.
       
அதைப் போலவே, இசைஞானியாரின் இசையில் உள்ள கட்டுடைத்தலும், புதியனவற்றை இனைத்தலுமே பௌத்த கூறுகளாகும். அதிலும் அவரின் இசையே பௌத்த உளவியலை உள்வாங்கி அமைக்கப்பட்ட ஒன்றாகும்.
      
மன அமைதியும், உற்சாகமும், வேண்டுவோர், நாள் முழுவதும் அமர்ந்து ஓம்_மணி_பத்மே_ஹூம் என்னும் மந்திரத்தை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது தாந்திரிக ( வஜ்ஜிராயான பௌத்தர்களைப் போல் ) கைகளில் உருளை மணி வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் ஒலிநாடாவில் இந்த மந்திரத்தை கேட்ப்பதெனில் இரண்டு மணி நேரம் கேட்க்க வேண்டும்.
       
இவை எதுவும் இல்லாமல் வெறும் நான்கே நிமிடங்களில் இசைஞானியால் இந்த மந்திரத்தின் அடிப்படையில் அமைந்த பாடலொன்றின் வழியாக கேட்ப்பவரின் மனதில் உற்ச்சாகத்தை தன்னுாத்தாக கொப்பளிக்க வைக்க இயலும். அந்த பாடல் ” ஆயிரம் தாமரை மொட்டுகளே. ” பௌத்தம் முழுவதையும் அறிந்து, பௌத்த தியானங்களை முற்றிலும் கற்று தெளிந்த இசை ஞானியரால், ஆயிரம் தாமரை என்றதும், ஓம்_மணி_பத்மே_ஹூம் என்னும் மந்திரமே நினைவுக்கு வந்ததால், அந்த பாடலின் வரிகளை  ஓம்_மணி_பத்மே_ஹூம் என்னும் கட்டமைப்பிலே அமைத்திருப்பார். அந்த பாடலின் வரிகளை துாக்கி விட்டு அப்படியே ஓம்_மணி_பத்மே_ஹூம் என்று உச்சரித்தாலும், அந்த பாடலின் இசையும் வடிவம் எள் முனையளவும் மாறாது. அது தரும் உற்சாகமும் குறையாது.
       

இசை வல்லுனர்கள் அது காவடிச் சிந்து வடிவத்தில் அமைக்கப்பட்டது எனலாம், நாட்டுப்புற ஆய்வாளர்கள் அது தெம்மாங்கு பாட்டு எனலாம், அல்லது கிராமப்புற பாட்டு என்று கருத்துச் சொல்வோரும் உண்டு. உண்மையில் இவை எல்லாவற்றிற்க்கும் வரலாற்றின் துவக்கமாக இருந்தது பௌத்தம், உண்மையில் காவடி என்பது தாந்தீரிக பௌத்தர்களின் உடமைகளையும், புத்தருக்கு படைக்க வேண்டிய பொருட்களை இரண்டு பக்கமும் மூங்கில் பெட்டிகளாக செய்து அதனை சுமந்து செல்வதாகும்.

சுமைதாங்கி அதனை சுமந்து செல்லும் போது சுமை தெரியாமல் இருக்க பாடிய பௌத்த செவ்வியல் பாடல். அதன் திரிபு, கிராமங்களில் பாடப்படும், கும்மிப் பாடலும், வேலை செய்யும் போது வலி தெரியாமல் இருக்க பாடும் தெம்மாங்கு பாட்டும் என்பதை நாம் மீள் நினைவு கூறும் போது. இசைஞானியாரின் இசையில் உள்ள பௌத்த கூறுகளை உணர இயலும்.
       

பட்டியலின மக்களின் வாழ்வியலோடு பௌத்தம் கலந்தது எனில் அவர்களின் இசையில் பௌத்தம் கலக்காமல் தனித்திருக்குமா என்ன.
தொடரும். . . .



[1]  புத்தரும் அவர் தம்மமும். பக்கம் 5
[2]  புத்த ஜாதக கதைகள்
[3] The Life of Buddha. Edward J.Thomas. Page 55
[4] https://ta.wikipedia.org/wiki/ ஓம்_மணி_பத்மே_ஹூம்


Tuesday, July 11, 2017

ஜனனி ஜனனி பாடல்.

இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள்


ஜனனி ஜனனி பாடல்.


பொதுவில் இசை குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. இருப்பினும், இளையராஜாவின் இசையில் பௌத்தம் குறித்து எழுத வேண்டிய தேவை இருப்பதால் இந்த முயற்சியை தொடங்க வேண்டிய தேவை. அதனால் துவங்கி விட்டேன். ஒரு வேலை என்னுடைய இந்த கட்டுரைக்குப் பின் இசை குறித்தும் இசைஞானியாரைக் குறித்தும் மிக அதிகம் தெரிந்தவர்கள் எவராவது எழுதுவார்களாயின் மிக மகிழ்வேன். அந்த நோக்கத்திலேயே தமிழ் சமூகத்துடன் எனது உரையாடலை துவங்குகின்றேன்.

  • பொதுவில் பௌத்தம் மனிதர்கள் இல்லை உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவானது.
  • இளையராஜாவின் இசை குறித்த கருத்தான, ”இசை அனைவருக்கும் பொதுவானது. அதில் எந்த பாகுபாடும், யாருடைய உரிமை கோரலும் இல்லை என்பதே.” பௌத்த அடிப்படையிலான எண்ணம்.
  • பௌத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு குறிப்பாக புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு, ஆதரவில்லாதவர்களுக்கு எப்பொழுதும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும், புத்தரின் காலத்தில் இருந்து சம காலம் வரை.
  • இளையராஜாவின் இசையில் அண்ணக்கிளி முதல் அண்மைக்கால படம் வரை, உழைக்கும் மக்களின் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும், அதிலும் பெரும்பாலான பாடல்களில் மண்ணின் மைந்தர்களின் இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
  • பௌத்தின் அடிப்படை கருத்தாக்கம் என்பது, இந்த சமூகம் உருவாக்கி வைத்திருந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாத கட்டமைப்புகளை உடைத்தல்,
  • இளையராஜாவின் இசையிலும் இசை குறித்தான அனைத்து விதமான வரையறைகளுக்கான கட்டமைப்பு உடைக்கப்பட்டிருக்கும்.
  • பௌத்தம் ஒரு தனி நபரிடம் இரண்டு வகையான மாற்றத்தை உருவாக்கும், ஒன்று தன்னை மாற்றும், அதன்பின் சமூக மாற்றத்தை உருவாக்கும்.
  • இளைராஜாவின் இசையும் முதலில் தனக்கு ( கேட்பவருக்கு) மகிழ்ச்சியை உருவாக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் . அதன் பின் அந்த பாடல் குறித்த சிலாகிப்பு சமூகத்தில் பிரபலாமாகும்.
  • இந்த பொதுவான புரிதல்களோடு, இரண்டு பாடல்களின் இசை எவ்வாறு பௌத்தத்தை பிரதிபலிக்கின்றது என எடுத்துக் காட்ட விழைகின்றேன்.
முதலில்
  • ஜனனி ஜனனி பாடல்.
    • ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம் பாடலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பாடல் என அவர் பல முறை பல நேர்காணல் மற்றும் செவ்வியில் கூற கேட்டிருப்போம்.
    • உண்மையில் ஆதி சங்கரர் மற்றும் இராமானுஜர் ஆகிய இருவருமே புத்தரின் கருத்துக்களை இந்து மதத்திற்குள் கொண்டுவந்தவர்கள். இந்த பின்புலத்தில் ஆதி சங்கரரின் ஆதி தத்துவம் பௌத்தம் என்றாகின்றது.
    • அவரது பஜ கோவிந்தம் பாடல், புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்னும் திரி சரணத்தை அடிப்படையாக கொண்டே கட்டமைக்கப்பட்டது.
    • ஜனனி ஜனனி பாடலும், புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்னும் மூன்று சரணத்தையும் மீண்டும் மீண்டும் சொல்வதை போலத்தான் கட்டமைக்கபட்டிருக்கும்.
    • வரிகளை கவனிக்காமல் தாளம், இராகம் இவற்றை கவனிக்கும் பௌத்தர்கள் இதை உணர முடியும்.
    • இதை பின்பற்றி இதே ராகம், மெட்டு தாளத்தில் பிற்பாடு அவர் இசையமைத்த அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலிலும், புத்தம் சரணம் கச்சாமி, தாள கதியிலே அமைக்கப்பட்டிருக்கும்.
    • தொடரும்.


Monday, June 5, 2017

இசை ஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

பண்ணைபுரத்து
மண்ணதிர
வந்துதித்த
இசைஞானிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....


Saturday, May 13, 2017

கலத்திற்கேற்ற கருத்தரங்குகள்

தமிழ்நாட்டிற்க்கு தற்போது 4 விதமாக கருத்துத் தலைமை தேவைப்படுவதாக தோன்றுகின்றது. இது சம்பந்தமான படைப்புகளும் கருத்தரங்கு, மற்றும் பயிற்சிப் பட்டறையும் இந்த நிலையில் ஒரு தவிர்க்க இயலாத எழுச்சியை உருவாக்கும்.


1. நீதிக் கட்சி, பேராயக் கட்சி, மற்றும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தலித்துகள் இழந்தது என்ன. என்னும் தலைப்பில் புத்தகமும், கருத்தரங்கும் நாடெங்கும் நடைபெற வேண்டும்.


2. தற்போதைய சூழலில் பட்டியலினம் அதிகாரத்தை கைப்பற்றுவதில் பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கு. ( எப்பொழுதும் அதிகாரத்தை, முக்குலத்தோறும், கொங்கு வெள்ளாளர்களும், படையாச்சிகளுமே கைப்பற்ற வேண்டுமா) சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அதிகாரம் இவர்களிடமே இருக்க வேண்டுமா என்ன. தமிழகத்தில் உள்ள பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து ஒரு பயிற்சி பட்டறையை அவர்களுக்கு நடத்த வேண்டும். இதனால் அவர்களுக்கும் இந்த சமூகம் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றது, என்பது தெளிவாக புரியும். நாம் எதை கேட்க்க வேண்டும், எதை கேட்க கூடாது என்பதும் விளங்கும்.


3. வரலாற்றில் எப்பொழுதுமே, சமயங்கள் மறையும் ஆனால் சமயக் கருத்துக்கள் மக்களாலும், மற்ற சமயத்தாலும் உள்வாங்கி்க் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும். அந்த நோக்கில் பௌத்தம் இழந்ததும் பெற்றதும் என்ன என்பது குறித்தும், மானுட ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெற புத்தர் முன் மொழிந்த விடுதலை சாசனம் என்ன என்பன போன்ற கருத்தரங்குகள் நாடெங்கிலும் நடைபெற வேண்டும். இறுதியாக


4. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் தினைசார் வளச்சுரண்டலில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் விளிம்பு நிலை மக்களை காப்பாற்றும் உத்திகளும் முறைகளும் குறித்து சூழல் பாதுகாப்பு கருத்தரங்குகள் பெருமளவில் நடைபெற வேண்டும். அதற்கென விளிம்பு நிலை மக்களான, சமவெளி பழங்குடிகளான பட்டியலினம், கடற்கரை பழங்குடிகளான கடலோடிகள், மலைவாழ் பழங்குடிகள், திருநங்கைகள், மற்றும் நிலவுடைமை சாதியரிலும் உள்ள நிலமில்லாத வாழ்வாதாரமிழந்த மக்களுக்கான சூழல் பாதுகாப்பு செயல் திட்டத்தை வகுத்து அதனை செயல்படுத்த மக்களை திரட்ட வேண்டியத் தேவையுள்ளது.

தமிழகத்தில் தற்போதுள்ள கருத்து மற்றும் அரசியல் தலைமைகள் தங்களின் இறுதி காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பாதால் மாற்றுப் பார்வையுடன் மாற்றுத் தலைமைக்கு மக்களை அணியப்படுத்த இந்த கருத்தரங்குகள் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயம் வேண்டாம்.


இதையும் படியுங்கள்