Saturday, May 13, 2017

கலத்திற்கேற்ற கருத்தரங்குகள்

தமிழ்நாட்டிற்க்கு தற்போது 4 விதமாக கருத்துத் தலைமை தேவைப்படுவதாக தோன்றுகின்றது. இது சம்பந்தமான படைப்புகளும் கருத்தரங்கு, மற்றும் பயிற்சிப் பட்டறையும் இந்த நிலையில் ஒரு தவிர்க்க இயலாத எழுச்சியை உருவாக்கும்.


1. நீதிக் கட்சி, பேராயக் கட்சி, மற்றும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தலித்துகள் இழந்தது என்ன. என்னும் தலைப்பில் புத்தகமும், கருத்தரங்கும் நாடெங்கும் நடைபெற வேண்டும்.


2. தற்போதைய சூழலில் பட்டியலினம் அதிகாரத்தை கைப்பற்றுவதில் பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கு. ( எப்பொழுதும் அதிகாரத்தை, முக்குலத்தோறும், கொங்கு வெள்ளாளர்களும், படையாச்சிகளுமே கைப்பற்ற வேண்டுமா) சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அதிகாரம் இவர்களிடமே இருக்க வேண்டுமா என்ன. தமிழகத்தில் உள்ள பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து ஒரு பயிற்சி பட்டறையை அவர்களுக்கு நடத்த வேண்டும். இதனால் அவர்களுக்கும் இந்த சமூகம் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றது, என்பது தெளிவாக புரியும். நாம் எதை கேட்க்க வேண்டும், எதை கேட்க கூடாது என்பதும் விளங்கும்.


3. வரலாற்றில் எப்பொழுதுமே, சமயங்கள் மறையும் ஆனால் சமயக் கருத்துக்கள் மக்களாலும், மற்ற சமயத்தாலும் உள்வாங்கி்க் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும். அந்த நோக்கில் பௌத்தம் இழந்ததும் பெற்றதும் என்ன என்பது குறித்தும், மானுட ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெற புத்தர் முன் மொழிந்த விடுதலை சாசனம் என்ன என்பன போன்ற கருத்தரங்குகள் நாடெங்கிலும் நடைபெற வேண்டும். இறுதியாக


4. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் தினைசார் வளச்சுரண்டலில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் விளிம்பு நிலை மக்களை காப்பாற்றும் உத்திகளும் முறைகளும் குறித்து சூழல் பாதுகாப்பு கருத்தரங்குகள் பெருமளவில் நடைபெற வேண்டும். அதற்கென விளிம்பு நிலை மக்களான, சமவெளி பழங்குடிகளான பட்டியலினம், கடற்கரை பழங்குடிகளான கடலோடிகள், மலைவாழ் பழங்குடிகள், திருநங்கைகள், மற்றும் நிலவுடைமை சாதியரிலும் உள்ள நிலமில்லாத வாழ்வாதாரமிழந்த மக்களுக்கான சூழல் பாதுகாப்பு செயல் திட்டத்தை வகுத்து அதனை செயல்படுத்த மக்களை திரட்ட வேண்டியத் தேவையுள்ளது.

தமிழகத்தில் தற்போதுள்ள கருத்து மற்றும் அரசியல் தலைமைகள் தங்களின் இறுதி காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பாதால் மாற்றுப் பார்வையுடன் மாற்றுத் தலைமைக்கு மக்களை அணியப்படுத்த இந்த கருத்தரங்குகள் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயம் வேண்டாம்.


Friday, May 5, 2017

இசை ஞானியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


இனிய பிறந்தநாள் 
வாழ்த்துக்கள்
இசை ஞானியாரே...
காற்றுக்கு உருவம் இல்லை
என கற்பித்தது கல்வி
ஆயினும் 
உங்களின் புல்லாங்குழலில்
இருந்து வரும்
காற்றுக்கு மட்டும்
உயிர் உண்டு
உணர்வு உண்டு
ஐம்புலன் உண்டு
என மெய்பித்ததால் 
இசை ஞானி நீங்கள்...
பட்டி தொட்டியெங்கும்
பாட்டாளியின் ஓசை ஒலிக்கும்,
உங்களின் கைபட்டதால்
அது பாட்டாளியின் இசையானது...
தோலிசை கருவிகளும்
உங்களால் சுரம் பாடியது...

நரம்பிசை கருவிகளும்
குத்துப்பாட்டிற்கு
பயன்பட்டது 
உங்களுக்கு மட்டும்...

இசையை 
புனிதமாக பாவித்தவர்களுக்கு
உன் இசை மொழி
கலக மொழி....

பசியால் வாடிடும் 
மக்களுக்கு
இசை யென்னும்
அமுத சுரபியால்
பசியாற்றிய
எங்கள் பன்னை புரத்து
ஆபுத்திரன் நீங்கள்...


வாழ்க 
வளமுடனும்
நலமுடனும் 
பல்லாண்டுகள்....



தமிழ்நாட்டு தலித் அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்.

தமிழ்நாட்டு தலித் அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்.
·         பகஜன் சமாஜ் கட்சி
·         விடுதலைச் சிறுத்தைகள்
·         புதிய தமிழகம் கட்சி
·         புரட்சி பாரதம்
·         புதிய பாரதம்
·         சமுக சமத்துவப் படை
·         தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு
·         தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
·         தமிழ்நாடு அருந்ததியர் கட்சி
·         அருந்தமிழர் மக்கள் கட்சி


ஆகிய நீங்கள் ஒன்றினைந்தோ அல்லது தனித்தோ அது உங்கள் விருப்பம். தற்போது சட்டமன்ற உறுப்பிணராக உள்ள தனித் தொகுதி வேட்பாளர்களை ஓரணியில் திரட்டுங்கள் அதிகாரத்தில் பங்கெடுப்போம். இப்போதுள்ள இந்த வாய்ப்பை தவறவிட்டால் இருநூறு ஆண்டுகள் போனாலும் இந்த வாய்ப்பே வராது. விழித்துக் கொள்ளுங்கள் தலைவர்களே.

திறந்த கடிதம்

ஆளும் கட்சியின் தனித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன்களுக்கு.

            நீங்கள் முப்பது பேரும் ஓரிடத்திலே இருப்பீர்கள் என்னும் நம்பிக்கையில் இந்த திறந்த மடலை பட்டியலினத்திலிருந்து ஒருவனாக எழுதுகிறேன்.
அண்ணே நீங்கள் அடைபட்டிருப்பதாக அனைவரும் எழுதுகிறார்கள். எனக்கென்னவே நீங்கள் கனவிலும் நினைத்து பார்க்காத வாய்ப்பும் வசதியையும் சொகுசும் உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். அண்ணே நம் தகப்பன்களுக்கும். தாய்க்கும். பாட்டனுக்கும் பாட்டிக்கும் ஏன் நமது பரம்பறைக்கே கிடைக்காத வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்திருக்கின்றது. சில நாட்கள் என்றாலும் சிறப்பாக அனுபவியுங்கள்.
இடையில் எப்போதேனும் உங்களுக்கு சுய நினைவு வரும் போது. சாக்கிய வம்சம். நந்த வம்சம் மகத வம்சம் போன்ற பட்டியலின வம்சங்களின் வீழ்ச்சி எதனால் ஏற்பட்டது என்பதையும் நினைத்துக் கொள்ளுங்கள்.
அரசியலில் நிலைத்த தன்மை என ஒன்று கிடையாது. அதிகாரமும் அரியனையும் வலிமையானவர்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாலும் அதன் முழு பலனும் புத்திசாலிகளுக்கே எப்பொழும் கிடைத்துக் கொண்டிருக்கும்.
இந்த புரிதல் இல்லாத காரணத்தாலே நமது வம்சங்கள் ஆட்சியை இழந்து பட்டியல் இனமானோம். தற்போது முப்பது பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்கள் என எண்ணிக்கை அளவில் ஆக பெரும்பான்மையாக இருந்தாலும் விழிப்பணர்வு இல்லாது இருந்தால் பட்டியில் அடைபட்டிருக்கும் பன்றிகளின் கூட்டத்துக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போகும்.
நீங்கள் முப்பது பேரும் இனி நினைத்தாலும் ஒரிடத்தில் தங்க இயலாது. காலம் இப்போது உங்களுக்கு இந்த வாய்ப்பை இப்போது வழங்கி இருக்கின்றது அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அண்ணே.
முப்பது பேரும் மூன்று நிமிடங்கள் கலந்து பேசினாலும் போதும். நீங்கள் ஒன்றினைந்து எந்த முடிவு எடுத்தாலும் அதிகாரம் உங்களை சார்ந்தே இயங்க வேண்டும் அண்ணே.
ஆளும் கட்சியில் இருந்தாலும் கூடுதல் அமைச்சர் பதவி கேட்க்கலாம். ஏன் துனை முதல்வர் என்னும் நிலையை கூட எட்டலாம். எதுவும் தவறில்லை. நிங்கள் இல்லாமல் ஆட்சி இல்லை என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு பின் சாதி என்னும் பெயரால் நசுக்கப்படும் ஒரு கூட்டத்திற்கான விடியல் இருக்கின்றது. உங்கள் உருவம்தான் வேறே வேறு. ஆனால் அதன் பிம்பம் ஒன்றுதான்.
காவல் துறைக்கு ஒரு அண்ணன் கூடுதலாக அமைச்சரானால் குறைந்தது சில நந்தினியை காப்பாற்ற உங்கள் பெயராவது பயன்படும். ஏன் வாய்ப்புகள் அமைந்தால் தண்டவாளத்தில் இருந்து இளவரசனை கூட எழுப்பலாம். அல்லது இன்னும் நான்காண்டுகளுக்கு ஆனவக் கொலைகளை குறைக்கலாம். ஏன் நீங்கள் மனது வைத்தால் அதை தடுக்கலாம்.
படிக்க செல்லும் நம் பிள்ளைகள் மீதும் தம்பி தங்கைகள் மீதும் திரைப்படம் தினிக்கும் காதல் என்னும் மாயவலையில் சிக்கி சாதியத்தால் பலியாகமல் காப்பாற்றலாம்.
மெத்த படித்த அண்ணன்கள் எவராவது இருந்தால் அண்ணே நீங்க தயங்காமல் கல்வித் துறையை கேளுங்க அரசு பள்ளிகளில் படிக்கும் நம் பிள்ளைகளுக்கு குறைந்தது தரமான துணியும். பாலியில் சீண்டலும் துண்புறுத்தலும் நிற்கும். ஆசிரியரின் எச்சில் பாத்திரம் கழுவுவதாவது இந்த நான்கு ஆண்டுகள் நடக்காமல் இருக்கட்டும்.
உள்துறையை கூட நீங்கள் கேட்க்கலாம் அண்ணே. சேரிகளின் குழாய்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் வரட்டும்.
பொதுப்பணித்துறையை கூட கேட்க்கலாம் மணல் கொள்ளையை தடுக்கலாம் என உங்கள் வருமானத்தை இழக்க சொல்ல மாட்டோம். நீங்கள் நல்லா சம்பாதியுங்கள். சேரிகளுக்கு சாலையாவது கிடைக்கும்.
இந்த வாய்ப்பை நழுவ விட்டால் நீங்கள் அதிகாரத்துக்கு வர இயலாது அண்ணே. உங்களுக்கு ஒட்டு போட்ட நாங்களும் ஊர்ல தலை நிமிர்ந்த நடக்க இயலாது.
இந்த கடிதம் சம்பந்தப் பட்டவர்களை சேரும் வரை சமுக வலைத்தள உறவுகள் தொடர்ந்து பகிர பணிவுடன் கோருகிறேன்.
மா.அமரேசன்
முகநூல் பதிவு
10/02/2017-
பின்னிரவு


இதையும் படியுங்கள்