Sunday, May 8, 2016

காத்திருக்கும் கடமை

சென்ற ஆண்டு நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில்  மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்தது. அதைப் போலவே பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திலும் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு கடைசி இடம்.இந்த புள்ளி விவரத்தை இங்கு பகிர்ந்து கொள்ளும் நோக்கம் என்ன வென்றால். இன்று அரசு பள்ளிகளை பெருமளவு நம்பி இருப்பதும். அரசு பள்ளிகளில் படிப்பதும் விளிம்பு நிலை சமுகம் மக்கள்தான். வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களே இன்று அரசு பள்ளிகளில் பெருமளவுக்கு தங்களது பிள்ளைகளை சேர்க்கின்றனர். அதிலும் குறிப்பாக கிராமப் புறத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளிக்கு அனுப்புகின்றனர்.

அதிலும் திருவண்ணாமலை போன்ற இடம்பெயர்வு மக்கள் அதிகம் இருக்கும் மாவட்டத்தில் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு அரசு பள்ளிகளும், அதன் மதிய உணவும் தான் முதன்மை புகலிடம். இன்று தனியார் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெறுவது என்பது மிகவும் இயல்பான ஒரு செய்திதான் படித்த நடுத்தர மக்கள் தங்களின் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கே அனுப்புகினறனர்.

அரசு பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்து போனதற்க்கு முழு காரணம் ஏற்க வேண்டியது அந்த பள்ளி ஆசிரியர்களும், அந்த கிராம மக்களுமே,                                           

Wednesday, January 27, 2016

போளுர் வரதன் – நினைவு குறிப்பு

போளுர் வரதன் – நினைவு குறிப்பு
      
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டம், கரிக்காத்துார் காலணியில் 25.02.1952 அன்று பிறந்தார். அவர் பிறக்கும் போது திருவண்ணாமலை மாவட்டம் உருவாக்கப்பட வில்லை அப்பொழுது அது வட ஆற்காடு மாவட்டம்.  வசதியானவர்களின் வீட்டில் முதல் பிள்ளையாக பிறக்க வேண்டும், ஏழையின் வீட்டில் கடைசி பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று ஒரு பழ மொழி இருப்பது போல,  ஏழைக் குடும்பத்தில் கடைசி ஆண் மகனாக பிறந்தவர் திரு. வரதன் அவர்கள்.
வரதனின் தந்தை பெயர் திரு. மதுரை.  தாயார் பெயர். திருமதி. முனியம்மாள், தம்பதிகளுக்கு நான்கு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தையும் பிறந்தனர். முதல் மகனுக்கு சுப்பிரமணி என்றும், இரண்டாவது மகனுக்கு இளங்கோவன் என்றும், மூன்றாவது மகனுக்கு ஏழுமலை என்றும், நான்காவதாய் பிறந்தவருக்கு வரதன் என்று தன் தந்தையாரின் பெயரையே சூட்டி மகிழ்ந்தனர் மதுரை, முனியம்மாள் தம்பதியினர். இவரின் தாத்தா பாட்டியின் பெயர் திரு. வரதன் மற்றும் சின்னக்கண்னு என்பதாகும். இவருக்கு இரண்டு தங்கைகள் அவர்களின் பெயர். திருமதி. குப்பு ஆறுமுகம், மற்றொருவர். திருமதி. பார்வதி சின்னக்குழந்தை, தன் உறவுகளை எந்த நிலையிலும் கைவிடாத இயல்பு கொண்டவர் அவர். 
சமூக பின் புலம்:
     இந்தியாவை பிடித்த தீராத நோய் என வருணிக்கப்படும் சாதி மற்றும் ஏழ்மை இரண்டும் தலைவிரித்து ஆடிய காலகட்டத்தில் தான் பிறந்தார் அவர். அவர் பிறக்கும் போது பறையர்களுக்கு மேலாடை அணியும் உரிமை கூட இல்லாமல்தான் இருந்தது கரிக்காத்துாரில். வறுமை தலை விரித்து ஆடிய நிலையில் தான் அவரின் இளமைக்கால வாழ்வு இருந்தது. இதை பின்னாளில் அவர் பேசியும் போக்கியும் இருக்கின்றார்.
குடும்ப பின் புலம் :
     வரதனின் தந்தை திரு. மதுரை மிகச் சிறந்த மனிதர், நெடிய உயரமும் கனத்த உருவமும் கொண்டவர், செக்க செவேல் என்று இருப்பார், கெளுத்தி மீசை வைத்திருப்பார், எப்பொழுதாவது வெற்றிலை போடுவார். கரிக்காத்துார் ஊராட்சி மன்றத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் முதல் பிரதிநிதியாக வரலாற்றில் தம்மை பதிவு செய்து கொண்ட படிக்காத அரசியல் மேதை அவர். மேலும் தபால் நிலையத்தின் ஆயுள் கால சாட்சிய உறுப்பினர் இவர் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் கரிக்காத்துார் காலணியில் குடிநீர் தேவையை நிறைவு செய்ய இரண்டு கிணறு வெட்டினார், அதனை நினைவு கூறும் வித்தில் அந்த கிணற்றின் மீது மதுரை என்று ஆங்கிலத்தில் எழுதி 1959 என ஆண்டையும் எழுதியிருப்பார்.
     வரதனின் தந்தை மிக சிறந்த மதி நுட்பமும், சாதுர்யமும் கொண்டவர், வரும் காலத்தை நிகழ் காலத்திலேயே கனிக்கும் மதி நுட்பம் அவருக்கு இயல்பாய் இருந்தது, அதனால் அவர் கரிக்காத்துார் காலணி மக்களின் நாட்டாமையாக இறக்கும் வரையிலும் இருந்தார், அவருடைய தீர்ப்புகள் எவரையும் திருப்திபடுத்துவதற்காக எப்பொழுதும் இருந்தது இல்லை, அதே நேரத்தில் யாரையும் காயப்படுத்தும் விதத்திலும் இருக்காது. புகார் கொடுத்தவனும், எதிர் வாதி என இருவரும் மகிழும் விதத்தில் தீர்ப்பு சொல்லுவார் அவர். தகப்பனுக்கு கடைசி பிள்ளைமேல் பாசம் அதிகம், தாய்க்கு முதல் குழந்தையின் மேல் பாசம் அதிகம் என்று சொல்வதைப் போலவே மதுரைக்கும் இயல்பாகவே வரதன்  மீது பாசம் அதிகம் இருந்தது, அதற்கு காரணம் அவருக்கு அவரின் தந்தையின் பெயரை சூட்டியதும் ஒரு காரணம். வரதனின் எந்த செயலுக்கும் தடையோ முட்டுக் கட்டையோ எதிர்ப்போ வெளிப்பட்டதில்லை அவரின் தந்தையிடம் இருந்து.

     திரு. மதுரையின் நயத்தக்க பேச்சுக்காகவும், மதிநுட்பமான ஆலோசனைக்காவும், தலித்துகள் மற்றும் ஆதிக்க சாதியினர் கூட இவரிடம் ஆலோசனை கேட்டு செல்வார்கள், மேலும்  இவருடைய தீர்ப்புக்காவே, இவருக்கு மிகப்பெரும் புகழும் செல்வாக்கும் கரிக்காத்துார் மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்களில் எல்லாம் இருந்தது. பேசும் பொழுது கம்பீரமாய் மீசையை வலது கையால் தடவிக்கொண்டே பேசும் பாணி இவருடையது.
 ( போளுர் வரதனின் தந்தை மதுரை மற்றும் தாய் முனியம்மாள், )
     தீண்டாமை கொடுமைகளில் ஒன்றான ஆண்களில் எனில் மேல் சட்டை போடாமலும், பெண்களாயின் ரவிக்கை அணியாமல் இருந்த காலம் அது, அதன்படி  கரிக்காத்துார் பறையர்களில் ஆண்கள் சட்டையணியும் பழக்கம் இல்லாததால் இவர் எப்பொழுதும் தோளில் துண்டுடனும் வெற்று மார்புடனும் கம்பீரமாக காட்சியளிப்பார். அவர் சட்டை அணிந்த ஓரே நிகழ்வு, வரதன் அவர்களின் திருமண நிகழ்வு மட்டுமே. அதுவும் அவர் கரிக்காத்துார் மற்றும் எட்டிவாடி காடுவரையிலும் சட்டையை மடித்து அக்குளிலே வைத்திருந்து பேருந்து ஏறியதும் மிக கட்டாயத்தின் பேரிலேயே சட்டையை அணிந்து இருக்கின்றார். திருமணம் முடிந்து எட்டிவாடியில் இறங்கியதும், முதல் வேலையாக சட்டையை கழற்றி அக்குளில் வைத்துக் கொண்டார் என உறவுகள் இன்றும் அவரைப் பற்றி பசுமையாக பேசிக் கொள்ளும். சாதிய பாகுபாடுகள் குறைய ஆரம்பித்ததும், அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேர்ந்ததால், ஜிப்பா அணிய ஆரம்பித்தார். 
வரதனின் தாயார், மிகுந்த குணவதி, பிள்ளைகளிடம் மிக பாசமானவர், அதே நேரத்தில் கணவரின் குறிப்பறிந்து நடந்து உறவுகளை கட்டி காப்பாற்றியவர். 
ஆரம்ப கல்வி :
     திரு. வரதன் அவர்கள், தனது ஆரப்ப பள்ளி கல்வியை கரிக்காத்துாரில் உள்ள கீற்றுக் கொட்டாய் பள்ளியில் படித்தார், அதன் பின் ஐந்தாம் வகுப்பில் இருந்து பியுசி வரை வடமாதி மங்கலம் அரசு பள்ளியில் படித்தார், தனது கல்லுாரி படிப்பை சென்னையில் உள்ள மாநில கல்லுாரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை முடித்தார். படிக்கும் காலத்தில் எம்.சி.ராஜா விடுதியில் தங்கி படித்ததால் இயல்பாகவே அரசியல் ஆர்வமும், தலித்திய நோக்கும் அவருக்குள் அதிகம் வேர்கொள்ள துவங்கியது. அதற்கு பின், சென்னை சட்ட கல்லுாரியில் சேர்ந்து சட்டம் படித்து தம்மை வழக்கறிஞராக பதிவு செய்து, கொண்டு வழக்கறிஞர் தொழிலும் பார்த்தார்.  படிக்கும் காலத்தில் மிகுந்த சுறு சுறுப்புடனும், புத்தி கூர்மையுடனும் இருந்தார் என்று சொல்லிக் கொள்வார்கள் ஊரில்

கரிக்காத்துார் காலணியை சார்ந்த போளுர் வரதன்,  திரு. ரங்கன் மாமாவும், திரு. சின்ன குழந்தை சித்தப்பாவும்  மூவரும் சம வயதுள்ளவர்கள், இவர்கள் மூவரும்தான், கரிக்காத்துாரில் முதல் தலைமுறை கல்வியாளர்கள், இவர்களுக்கு முன்பு வரையிலும் யாரும் கல்லுாரிக்கு சென்று படித்தது இல்லை கரிக்காத்துாரில்.

அரசியல் ஆர்வம்
     கல்லுாரி படிக்கும் காலத்தில், மாணவர் காங்கிரஸில் மாவட்ட தலைவராக இருந்திருக்கின்றார், அதுதான் அவர் அரசியலில் வகித்த முதல் பதவி. அன்றைய காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பறையர்களின் கட்சி என்றே பெயர் ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தில் அந்த அளவுக்கு பறையர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். காந்தியை தலைவராக ஏற்றுக் கொண்டாலும் அம்பேத்கர் மற்றும் அவரின் கொள்கையில் மிகுந்த மரியாதையும் ஈடுபாடும் குறையாமல் இருந்தது. அதுவும் கல்லுாரி மாணவர்களுக்கு அந்த காலத்தில் மிக அதிகமாகவே இருந்த காலம் அது.

திரு வரதனுக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட தந்தையின் ஆளுமை மிக முக்கிய காரணமாக இருந்தது. அவரைப் போலவே பேசவும், பிரச்சனையின் ஆழத்தையும் விளைவுகளையும் எளிதில் கணிக்கும் திரனும் இயல்பாகவே அவருக்கு தந்தையிடம் இருந்து வந்தது. தன் அரசியல் காலம் முழுவதும் மிகுந்த மதி நுட்பத்துடன் இருந்தார் என்றால் அதற்கு அவருடைய தந்தையின் ஆளுமை மிக முக்கிய காரணம். அதே நேரத்தில் யார் தவறு செய்தாலும் தவறு என்று தைரியமாக சுட்டி காட்டும் மனோதைரியம் அவருடன் கூட பிறந்த இயல்பாக இருந்தது அவரின் இறுதி காலம் வரையிலும்.
குடும்பம்
      சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார், அதுவும் புரட்சியாளர் அம்பேத்கரைப் போல அதில் அவருக்கு மிக ஆனந்தம். மற்றும் பெருமை, திருமதி. பிரேமா வரதன் அவருக்கு, சிறந்த வாழ்க்கை துணையாக இருந்து அவருடைய குடும்பம் மற்றும் அரசியல் பணிக்கு மிக சிறந்த பங்களிப்பை செய்துள்ளார். இவர்களுக்கு திரு. ராஜிவ் வரதன்  என்னும் ஒரே மகன் தற்போது அரசியலில் வளர்ந்து வரும் இளம் தலைவராக உருவாகிக் கொண்டு வருகின்றார்.

அரசியல் வாழ்வு

     திரு. வரதன் அவர்கள் முதன் முறையாக சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டடு அடைந்த முதல் வெற்றி 1991 ஸ்ரீ பெரும்புத்துார் தொகுதியில், அது ராஜிவ் காந்தி படுகொலை நிகழ்ந்த தொகுதி என்பதாலும், அந் நிகழ்வின் போது அவரும் உடன் இருந்தார் என்பதால், கரிக்காத்துார் கிராமத்தில் ராஜிவ் காந்தியுடன் போளுர் வரதனும் இறந்து விட்டார் என்றே பேசிக் கொண்டார்கள், மூன்று நாட்களுக்கு பிறகுதான் அவர் காயங்களுடன் தப்பித்தார் என்று தெரிந்து கரிக்காத்துார் நிம்மதியானது. 1991 தேர்தலில் 63,656 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று முதன் முறையாக சட்ட மன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்.

அதற்கு பிறகு 2001 – ல் செங்கம் தொகுதியில் போட்டியிட்டு 53,366 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், பின்னர் மீண்டும் 2006 –ல் செங்கம் தொகுதியில் போட்டியிட்டு 54,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று 3 முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் பொது செயலாளராக 3 முறை இருந்துள்ளார், தேசிய அளவில் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் மாநில உறுப்பினராகவும் இருந்திருக்கின்றார். தாழ்த்தப்பட்டோர் மாநில பிரிவின் தலைவராக இரண்டு முறை இருந்துள்ளார்.  தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவிக்கு இவரது பெயர் அடிபட்டு சாதியின் காரணமாக அது நிறைவேறாமலே போயிற்று.
     சுய மாரியாதை உணர்வு மிகுந்தவர் திரு. போளுர் வரதன், தன் சுயமரியாதை குறைவு படுவதை அவரால் எப்பொழுதும் தாங்கிக் கொள்ள இயலாது, கொதித்தெழுந்து விடுவார். ஒரு முறை  மாநில அளவில் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தன் சாதியை சொல்லி இழிவு படுத்தியதால் அவரை செறுப்பால் அடித்து விட்டு சிங்கம் போல் செறுக்குடன் சத்தியமூர்த்தி பவனில் இருந்து வெளியேறினார் என்று பெருமை பொங்க பேசுவார்கள் கரிக்காத்துாரில்.  
     அவர் சென்னையில் இருந்து கரிக்காத்துாருக்கு வந்தால், அன்று ஊரே திருவிழா கோலம் பூண்டிருக்கும், எல்லோரும் அவரை சென்று பார்ப்பார்கள், அனைவரையும் நலம் விசாரிப்பார். தான் ஊரில் இல்லையென்றாலும் ஊரில் உள்ளவர்களின் பிரச்சனைகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பார், தந்தையைப் போலவே அதற்கான தீர்வையும் சொல்லுவார். அவர் தலைமையில் கரிக்காத்துார் காலணிக்கு மாரியம்மன் கோயில் கட்டப்பட்டு குட முழுக்கும் கம்பீரமாக நடத்தப்பட்டது. அதே போல் அவருடைய குல சாமியான மதுரைவீரன் சாமி கோயிலுக்கும் விழா கொண்டாடுவார் வருடந்தோறும். அவருடைய மறைவுக்குப் பின் அவர் மகன் ராஜிவ் வரதன் மதுரை வீரன் கோயிலை கட்டி  குட முழுக்கும் நிகழ்த்தினார். அவரும் வரதனைப் போலவே உறவுகளை ஆதரித்தும் அனுசரித்தும் நடந்து கொள்வது பராட்டுக்குரியதாக இருக்கின்றது. 

     ஊர் தலைவர்கள் மற்றும் மேட்டுக் குடிகளும் அவரை வந்து சந்திப்பார்கள், அவரிடம் உதவி கேட்பார்கள் செய்வார், ஆனால் கோயில், குட முழுக்கு போன்ற செயல்களுக்கு அவரிடம் உதவி கேட்டாலும் அவர் செய்தது இல்லை, காரணம் கேட்டால், என் மக்கள் வெளியே நின்று சாமி கும்பிடும் கோயிலுக்கு நான்  என் பணத்தை செலவு செய்ய மாட்டேன் என்று கறாராக பேசுவார்.
     அவர் ஊருக்கு வரும் போதெல்லாம் சலவை செய்தது போல் புத்தம் புதிதாக இருக்கும் ரூபாயைத்தான் தருவார், நான் கூட ஒரு முறை அவரிடம் கேட்டிருக்கின்றேன், எப்பொழுதும் புது ரூபாயாக தருகின்றீர்களே எப்படி மாமா என்று, அதற்க்கு அவர், நம்மிடம் பணம் என்று கேட்டு வருகின்றவர்களுக்கு எவ்வளவு கொடுத்தோம் என்பது முக்கியமில்லை, எப்படி கொடுத்தோம் என்றுதான் அவர்கள் நினைப்பார்கள், புது நோட்டாக இருந்தால் அது அவர்களை கௌரவ படுத்தியது போல இருக்கும் என்று சொல்லுவார்.
     செங்கம் தாலுக்காவில் இருந்த தண்டராம் பட்டு செங்கத்திலிருந்து மிகுந்த தொலைவு இருந்ததால், அவர்தான் அதற்க்கு தீர்வாக தண்டராம்பட்டுவை தனி தாலுக்காவாக அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று முன் மொழிந்தவர், பின்னாளில் அதன் பெருமையை திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தண்டராம் பட்டுவை சேர்ந்த ஏ.வா. வேலு பெற்றுக் கொண்டார், அந்த வகையில் தண்டராம் பட்டு தாலுக்கா கோரிக்கையை முன் மொழிந்த திரு. வரதன் திராவிட முன்னேற்ற கழகத்தால் மறைக்கப்பட்டார்.
போளுரில் உள்ள செய்யாற்றின் குறுக்கே, தடுப்பனை கட்ட வேண்டும் என்று சட்ட சபையில் பேசினார், பின் அது குறித்து எதுவும் பேசாமல் அதைியாக இருந்து விட்டார், காரணம் கேட்டதற்க்கு, அணை கட்டுவதால், நிலவுடைமையாளர்களுக்கு பயன் போய் சேறும், நிலமற்றவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும், மீண்டும் அவர்களின் நிலத்தில் போய் கூலி வேலை செய்ய வேண்டும், அது  என் சமூகத்தை தலை குனிய வைக்கும், அதை நான் செய்ய மாட்டேன் என்பார்.
     ஒரு முறை போளுரில் வன்னியர்கள் தெருவில் பொதுக்கூட்டத்தில் பேசும் போது மிக துணிச்சலாய், நான் பறையன்தான், என் அப்பா மாட்டு கறி கொண்டுவருவார், அதை சாப்பிட்டுத்தான் நான் வளர்ந்தேன், எனவே என்னிடம் தைரியமும், துணிச்சலுமும்  அதிகம் என்று பேசியிருக்கின்றார், அதை கேள்வி பட்டதும், அந்த தாலுக்காவில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் அவரை கொண்டாடி இருக்கின்றனர்,
     அதே போல், கரிக்காத்துார் ஏரிக்கரையில் கீழ் உள்ள நிலம் முழுவதும் தனது சொந்தகளுக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார், அதை நிகழ்த்திக் காட்டினார், அது அவரை பெருமை கொள்ளும் நிகழ்வு. அதே கரிக்காத்துார் ஏரியில் இரண்டு ஏரிகள் கலக்கும் இடத்தில் வெள்ளையர்கள் காலத்தில் கட்டிய பாலம் ஒன்று இருந்தது. அந்த பாலத்தை இடித்து, மீண்டும் புது பாலத்தை கட்ட ஆதிக்க சாதியினரும், அரசு அதிகாரிகளும் ஒப்பந்த காரர்களும் திட்டம் தீட்டிய போது அதனை தடுத்து, கரிக்காத்துார் சேரி மக்களுக்கு ஏரி தண்ணீர் கிடைக்க காரணமாக இருந்தவர். அவர். செங்கம் தொகுதியில் பழங்குடிகளுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு பல திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டார். பழங்குடிகள் அவரை மிக பெருமையாக பேசியதை கேட்டும் இருக்கின்றேன். 


  ( செங்கம் தொகுதியில் மகளிர் சுய உதவி குழு உறுப்பிணர்களுக்கு நிதி உதவி அளித்த போது )
     அவருடைய சட்ட அறிவு மிக நுட்பமானது, மிக சிக்கலான பிரச்சனைகளுக்கும் எளிதாக அதே நேரத்தில் நுனுக்கமான தீர்வுகளையும், பலருக்கும் சொல்லியிருக்கின்றார். அதை அனைவருமே பெருமையாக சொல்லுவார்கள்.
     திருவண்ணாமலை, வேலுார் மாவட்டத்தில், காங்கிரஸ் அடிமட்ட தொண்டன் வரைக்கும் அவரோடு நெருக்கமான தொடர்பு இருந்தது. அவர்மீது மிகுந்த மரியாதையும் இருந்தது. சேரி மக்களிமும், பிற சாதியினரிடமும் அவர் கட்சி ரீதியாக நெருக்கமான உறவு வைத்திருந்தார். அவரிடம் திருமண அழைப்பிதழ் கட்சிகாரன் கொடுத்தால் அவசியம் திருமணத்திற்கு வருவார். அதை போல நிறைய நிகழ்வை சொல்லிக் கொண்டு போகலாம். 

     இறுதியாய், ஒரு சிறு கிராமத்தில் இருந்து , விளிம்பு நிலை மக்களில் இருந்து அரசியல் வானில் நட்சத்திரமாய் ஜொலித்த, போளுர் வரதன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாகவே தன் வாழ்நாள் முழுவதும் இருந்திருக்கின்றார். அவரின் மரணம் 27.01.2011 அன்று நிகழ்ந்தது. அதுவரையிலும் அவர், தன் மக்களின் தலை நிமிர்ந்த வாழ்வுக்காவே வாழ்ந்தார். அந்த வகையில் கரிக்காத்துார் மக்களை பெருமை படுத்திய முக்கியமான மற்றும் முதல் அரசியல் ஆளுமை திரு. போளுர் வரதன். 
( இந்த கட்டுரைக்கான பெரும்பாலான தகவல்கள் கரிக்காத்துார் சேரி மக்களின் வாய்மொழி பதிவு மற்றும் போளுர் வரதனின் மகன் திரு. ராஜிவ் வரதன், அவரது அண்ணன் மகன் திரு. கமலநாதன் அவரிடம் இருந்து பெறப்பட்டது. புகைப்படங்களை தந்தவரும் திரு. கமலநாதன் தான் இவர்களுக்கு நன்றி.)

Sunday, December 20, 2015

இயக்கமாய் மாற வேண்டிய இலவச இரவுப் பள்ளிகள்

ஒவ்வோராண்டும் தமிழக நிதி நிலை அறிக்கையில் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடும் அளவு குறைந்து கொண்டே வருவதும், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையை திட்டமிட்டே குறைத்துக் கொண்டு வருவதும், காலியாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை நிரப்பாமல் காலந்தாழ்த்திக் கொண்டு வருகின்றது. இது யாருடைய கல்வியை பாதிக்கும் செயல் என்று என்றேனும் நாம் எண்ணிப் பார்த்திருப்போமா?

உண்மையில் நமது கல்வி முறை ஏழை மக்களுக்கு எதிராகவும், பணக்காரர்களுக்கு ஆதரவாகவும் உள்ளது என்பதை அனைவரும் உணருவார்கள். அரசாங்கமே தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கின்ற விதத்தில்தான் உள்ளது. ஏழைகள் அதிகம் பயன்படுத்துகின்ற, அரசுப் பள்ளிகளிகளில் விளிம்பு மக்களின் குழந்தைகள்தான் அதிகம் படிக்கின்றனர்.
அவர்கள் தனியார் பள்ளிகளில் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவர்களோடும், தேர்வு முறைகளோடும் போட்டி போடுகின்ற நிலையில்தான் இன்றும் உள்ளனர்.

மேலும் நமது வாழ்க்கை முறையில் திரைப்படங்களும், தொலைக்காட்சியும், கிரிக்கெட்டும் ஒரு அங்கமாகிப் போனதால், அரசு பள்ளியில் பயிலும் மாணவனுக்கு பள்ளிப் படிப்போடு வீடுகளில் படிக்க வசதியும் வாய்ப்பும் இல்லாமல் போகின்றது, இது ஏழை மாணவர்களின்  தேர்ச்சி நிலையை பாதிக்கும் செயலாகவே இருந்து கொண்டு வருகின்றது.
குறிப்பாக சேரிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும், கிராமப்புற மாணவனுக்கு இரவுகளில் தகப்பனின் குடியும், வீடுகளில் தொலைக்காட்சி நீள் தொடர்களின் ஒலிபரப்பும், மாணவனின் இரவு நேர படிப்பை பெருமளவில் பாதிப்பதால் அவனால் இரவு நேரத்தில் வீடுகளில் படிக்க முடிவதில்லை, இதனால் தாழ்த்தப்பட்ட மாணவனின் கல்வி நிலை உயரமுடியாமல் தேர்ச்சி பெற முடியாததாலும், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தியும், தோல்வியுறுகின்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றான் பின் ஆனாக இருந்தால்  அவன் உடலுழைப்புத் தொழிலில் ஈடுபட வேண்டிய நிலைமையும், பெண்ணாக இருந்தால் திருமணம் செய்து கொடுக்கும் நிலையும்தான் பெரும்பாலும் நிகழ்கின்றது நமது நாட்டில்,

இந்த நிலையை தவிர்க்க ஒவ்வொரு சேரிகள் தோறும், இலவச இரவுப் பள்ளிகளை ஆரம்பித்து அதில் மாணவ மாணவிகளுக்கு பயிற்சியும், படிக்க வாய்ப்பும் அளிக்க வேண்டும், இதனால் தலித்  கிராமப்புற மாணவ மாணவிகளின் கல்வித் தரம் உயரும். இதனை ஒரு இயக்கமாகவே செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கின்றது.

சேரிகளில் உள்ள அரசியல் இயக்கம் அல்லது கட்சிகள், சமூக இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள், அரசுப் பணியில் இருப்போர் கூட இதனை பொறுப்பேற்று செய்ய வேண்டும், இதனால் அரசியல் கல்வியும் அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு கிடைத்து தெளிவான அரசியல் புரிதலோடு வளர்வார்கள்.. கல்வி நிலையும் உயர்கின்ற வாய்ப்பு இயல்பாகவே அமைகின்றது.

வேலுார் மாவட்டத்தில் உள்ள தளபதி கிருஸ்ணசாமி இலவச இரவுப் பள்ளி கூட்டமைப்பு, வேலுார் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா மற்றும் அதனை சுற்றியுள்ள 25 கிராமங்களில் சேரிகள் தோறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கென்று இலவச இரவுப் பள்ளியை நடத்தி வருகின்றது சுமார் 25 ஆண்டு காலமாக, இந்த பள்ளியில் படிக்கின்ற மாணவர்களே, பள்ளிப் படிப்பை முடிந்தது பள்ளி ஆசிரியர்களாக தன்னார்வத்துடன் பொறுப்பேற்று ஆர்வத்துடன் நடத்திக் கொண்டு வருகின்றார்கள். இதனை நானே நேரில் பார்த்து வியந்திருக்கின்றேன்.

அதே போல திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் ஒன்றியத்தில் உள்ள கரந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள 10 கிராமங்களில் 50 ஆண்டுக்கும் மேலாக இலவச இரவுப் பள்ளிகள் தன்னெழுச்சியாக  நடந்து கொண்டு வருகின்றது, இந்த கிராமங்களில் தலித் மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கின்றது, கல்லுாரியில் பயிலும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றது, மேலும் அரசு பணியில் உள்ள தலித்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றது.

கல்வி மட்டுமே சமத்துவத்தை கொண்டு வரும் கருவியாக இருக்கும், ஒரு சமூகம் கல்வியில் பின் தங்கியிருப்பது அந்த சமூகத்தின் வளர்ச்சியை பின்னுக்கு இழுக்கும் செயலாகவே இருக்கின்றது, எனவே இந்த நிலை நீடிக்காமல் இருப்பதற்கு, சேரிகள்தோறும் இலவச இரவுப் பள்ளிகளை இயக்கமாக கொண்டு செல்லவேண்டிய அவசியம் இருக்கின்றது. அந்த பணி இன்றைக்கு முதன்மையாக பணியாக முன்னெடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கின்றது.

Tuesday, December 15, 2015

ஆயிரம் ரூபாய் இயக்கம்

இந்திய அரசு, குடிமக்களின் நலன் பேனும் அரசு என்னும் நிலையில் இருந்து மாறி முகவான்மை அரசாக முழுவதும் மாறிக்கொண்டிருக்கும் இந்த நிலையில், விளிம்பு நிலை மக்கள் இன்னும் ஏழைகளாக இருப்பதற்கான திட்டங்கள் ஏதும் இல்லாமலே ஏழைகளாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் அரசு மற்றும் அரசு திட்டங்களால், மற்றும் சாதிநாயகம் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களால்.


ஏழைகள் சம்பாதிக்கும், பணம் குறைவாக இருந்தாலும் அதனை செலவழிக்கும் விதம் மிக வேகமாக இருப்பதால் அவர்கள் ஏழைகளாகவே இருக்கின்றனர் அதற்கான காரணங்கள் பல இருந்தாலும் முதல் காரணம். அவர்கள் நுகர்வு கலாச்சாரத்தின் பிடியில் சிக்கி கொண்டுள்ளனர். தமக்கு வேண்டிய பொருள் எது என்பதை தீர்மானிக்கும் திறன் இல்லாமல் ஊடகங்களின் விளம்பரப்படுத்தப்படும்  பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்கள் அத்தனையும் தமக்கான சுகவாழ்வுக்கு அவசியமான பொருள் என்றே கருதி வாங்குகின்றனர். இந்த நிலைப்பாடு தலித் மக்களின் மத்தியில் மிக அதிக அளவில் இருக்கின்றது,

இதன் விளைவாக அவர்கள் சம்பாதிக்கும் பணம் முழுவதும் பெருநிறுவனங்களுக்கே சென்று சேர்கின்றது. இதனால் தலித்துகள் பொருளாதாரத்தில் உயர வழி இல்லாமல் போகின்றது. எனவே இதனை தடுக்க வேண்டும். அதற்கான செயல்திட்டம் ஒவ்வொரு சேரியிலும் உருவாக வேண்டும். அதற்கான செயல்திட்டத்தின் பெயர்தான் “ ஆயிரம் ரூபாய் இயக்கம்” 

ஒவ்வொரு சேரியிலும் உள்ள குடும்பத்திலிருந்து ஒரு குடும்பம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் உறுப்பினர் கட்டணமாக வசூலிக்க வேண்டும். அவ்வாறு வசூலித்த பணத்தை கொண்டு ஒரு கூட்டுறவு கடையை உருவாக்க வேண்டும், அதன் உறுப்பினர்களாக சேரி மக்களுக்கு தேவையான பொருட்கள் அந்த கூட்டுறவு கடையில் விற்பனைக்கு வைக்க வேண்டும். அதன் விற்பனையில் கிடைக்கும் லாபம் மற்றும் முகவான்மை கழிவு, கூடுதல் லாபம் என அத்தனையும் தலித் மக்களுக்கே சென்று சேர வேண்டும். அதன்வழியாக தலித் மக்களுக்கு வேலை வாய்ப்புகளும், வணிக நிறுவனங்களும் உருவாகும். இது குறித்து மேலதிக விவாதத்தையும் கருத்துக்களையும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன்.

பேச. 9150724997

Monday, November 2, 2015

நாங்கள் தலித்துகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை - திராவிட கட்சிகள்

இளவரசன் படுகொலை அதையொட்டிய சேரிகளின் எரிப்பு, அன்மையில் கோகுல்ராஜ் கொலை , மற்றும் சேரிகள் எரிப்பு, கௌரவ கொலைகள் போன்ற நிகழ்வுகளில் கவனம் குவியாமல் இருப்பதன் மூலம் ஆளும் கட்சி தான் தலித்துகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை என்னும் நிலைப்பாட்டை முன் மொழிந்து இடைசாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வாக்கு வங்கியை குறிவைத்து செயல் படுவதைப் போலவே,
நமக்கு நாமே என்னும் பயணத்திட்டத்தை முன்னெடுத்து தேர்தல் பணிகளை முடக்கிவிடும் இளைய தளபதியோ, இதுவரைக்கும் ஒரு சேரி பகுதியில்யில் கூட தண்ணீர் குடித்ததில்லை,சேரிக்குள் சென்று வாக்கு சேகரித்தது இல்லை, அவர்களின் பிரச்சனை என்ன என்று கேட்டதில்லை,  குடிசையைப் போய் பார்த்ததில்லை, சேரி மக்களின் பிரச்சனையை பேசவில்லை, ஏன் இதுவரையிலும் அவர் அம்பேத்கர் சிலைக்கோ, இமானுவேல் சேகரன் சிலைக்கோ, ராவ்பகதுார் எல்.சி. குருசாமி சிலைக்கோ மாலை அணிவித்தது இல்லை. 
ஆளும் கட்சியையொட்டி, ஆளும் கட்சியாக துடிக்கும் திராவிட முன்னேற்ற கழகமும் தாங்கள் தலித்துகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை என்னும் செய்தியைத்தான் பிற்படுத்தப்பட்ட மற்றும் இடைச்சாதி ஏன் தமிழ் சாதி சமூகத்துக்கு சொல்கின்றார். ஏனெனில் தலித்துகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால், பிற்பட்ட மற்றும் மிக பிற்பட்ட சாதியினர் தன் கட்சிக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள். அவ்வாறாயின்  அது தன் கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்று அஞ்சுகின்றார்.
இந்நிலையில் தலித் அரசியல் கட்சிகள் கூட்டணி அரசியல் பற்றி பேசுவதும், அதற்கான முயற்சிப்பதும், அதற்கென வெற்றிபெறும் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று தங்களை தாங்களே மன அமைதி படுத்திக் கொள்வதும்,  தங்கள் மக்களை இந்த கட்சிகள் புறக்கணிக்கின்றன என்பது தெரிந்தேதான் நடக்கின்றது. அவ்வாறாயின் எப்படி தலைநிமிர்ந்த வாழ்வை நாம் எதிர்பார்க்க இயலும். ஒடுக்கபட்டவர்களின் கையில் எப்படி அரசியல் அதிகாரம் வரும். 
தமிழ்நாட்டின் மொத்த வாக்கு வங்கியில் 21 சதவிகிதம் வாங்கி வங்கியை வைத்திருக்கும் தலித் மக்களை திராவிட பேராய கட்சிகள் புறக்கணிக்கும் நிலையில் இருக்கும் போது, தலித் அரசியல் கட்சிகளால் ஏன் திராவிட கட்சிகளை புறக்கணித்து  தங்களின் மக்களிடம் உள்ள வாக்கு வங்கியை ஒருங்கினைத்து தேர்தலை சந்திக்கும் திராணி இல்லை என்றே நிணைக்கத் தோன்றுகின்றது தற்போது .

Sunday, October 11, 2015

தலித்துகளின் வாக்கு மட்டும் வேண்டும் அவர்கள் வாழ வேண்டாமா?


நாட்டில் இன்றுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு வகையில் ஒருமித்து செயல்படுகின்றன. அது தலித்துகளின் வாழ்க்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றன. அது தலித்து மக்கள் இந்த நாட்டில் எந்த வகையிலும் தலைநிமிர்ந்து வாழகூடாது ஆனால் அதே நேரத்தில் அவர்களின் வாக்குகள் மட்டும் வேண்டும். என்னும் எண்ணம் மட்டும் இருக்கின்றது அனைத்து அரசியல் கட்சிகளிடமும், இந்திய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி.

அன்மைய நிகழ்வுகள் இதை நிருபிக்கின்றன. இளவரசன் மரணம், அதற்க்கு முன் நிகழ்ந்த சாதிய வெறியாட்டத்தில் 3 கிராமங்கள் அழிந்தது, கோகுல்ராஜ் மரணம் அதற்கு காரணமானவர்களின் அரசியல் பின்புலம் மற்றும் கொங்கு மண்டலத்திலுள்ள வெள்ளால கவுண்டர்களின் வாக்கு வங்கியை காப்பாற்ற அரசு கடைபிடிக்கும் மெத்தனம் இவற்றையெல்லாம் பார்க்கும் போது தலித்துகள் இன்னும் தங்களின் வாக்கை அரசியலாக்கும் யுக்தி தெரியாதவர்களாகவே இருக்கின்றார்கள் என்பது மட்டும் தெரிகின்றது.

இல்லையெனில் மற்ற சாதியினரின் வாக்கு வங்கியை காப்பாற்ற துடிக்கும் அரசியல் கட்சிகள் தலித்துகளின் வாக்கு வங்கி விஷயத்தில் மட்டும் அக்கறை காட்ட மறுப்பதற்க்கு காரணம், அனைத்து அரசியல் கட்சிகளில் இருக்கும் தலித்துகள் எந்த நிலையிலும் தங்களின் கட்சியை விட்டு போக மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான்.


ஆக தலித்துகள் தங்களை பிற அரசியல் கட்சிகளில் இனைத்துக் கொண்டிருக்கும் வரை தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை என்பது உண்மையாகிக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் 

Saturday, October 10, 2015

அரசியல் அதிகாரம் மட்டும் போதுமா?

இப்பொழுது அனைத்து அரசியல் கட்சியும் தேர்தல் காய்ச்சல் பிடித்து தனக்கான அணி, தனக்கான வாக்கு வங்கியை தக்க வைக்கும் அல்லது அதிகரிக்கும் யுக்தியை  பற்றியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் மக்களைப் பற்றி சிந்திக்கும் கட்சியாக எதுவும் இல்லை.

எல்லா அரசியல் கட்சிகளுமே உள்ளுர் முதலாளியில் இருந்து பண்ணாட்டு முதலாளிக்கு ஆதரவாகத்தான் ஆட்சியை நடத்துகின்றனரே ஒழிய தன் நாட்டு மக்களுக்கு ஆதராவாக ஆட்சியை நடத்தவில்லை, வறுமையை ஒழிக்க எந்த செயல்திட்டமும் இல்லை, 

கனினிமயம், காவிமயம் இரண்டும்தான் இன்றைக்கு முக்கிய முழக்கமாக இருக்கின்றது. இரண்டுமே ஏழைகளுக்கு எதிரானவை. இவை பற்றி எந்த அரசியல் கட்சியும் பேசுவதில்லை, நாடே இன்று கொள்ளை போய்கொன்டிருக்கின்றது, நாட்டில் உள்ள வளங்கள் யாவும் வெள்ளையர் ஆட்சியில் இருந்ததை விட அதிக அளவில் உலகமயத்தால் ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கான செயல் திட்டங்கள் எதுவும் இல்லாமல் ஆட்சி அதிகாரம் பற்றியே அனைத்து அரசியல் கட்சிகளும் கனவு கான்கின்றன. 

தண்ணீர் வளம் குடிநீர் வணிகமாகிக்கொண்டிருக்கின்றது அதற்கான மாற்று திட்டம் இல்லை, இயற்கை வளம் அனைத்தும் மேலைநாடுகளுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கின்றன, அதற்கான எதிர்புகள் கவனம் ஈர்க்கும் வகையில் இல்லை, மன்னையும் மக்களையும் அழிக்கும் 
  • கூடங்குளம் அனுமின் திட்டம்
  • கல்பாக்கம் அனுமின் திட்டம்
  • நியூட்ரினோ ஆய்வு திட்டம்
  • காவிரி படுகை மீத்தேன் திட்டம்
  • சேது கால்வாய் திட்டம்
  • கெய்ல் குழாய் திட்டம்  என எத்தனையோ வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்தாலும் இவற்றிற்கான பலன் மக்களுக்கானதா,  என்றால் இவற்றிற்கு பின் இருக்கும் பெரு நிறுவனங்களின் சுரண்டல்  என்பது அணைவருக்கும் தெரியும்.

இன்றும் நாட்டில் உள்ள பல பிரச்சினைகள் அதிலும் குறிப்பாக ஏழை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலும், கவனிக்கப்படாமலும் இருக்கின்றன. 
  • விவசாயம் அழிந்து கொண்டிருப்பது
  • விவசாய நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு குத்தகை தருவத
  • பட்டியலின சாதி மக்களுக்கான சலுகைகளும், வேலை வாய்ப்பும் கிடைக்காமல் இருப்பது,
  • கவுரவ கொலைகள் பெருகிக் கொண்டிருப்பது, 
  • வறுமை அதிகரித்துக் கொண்டிருப்பது,
  • ஏழைகள் ஏழைகளாகிக்கொண்டிருப்பது,
  • மின்சாரத் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டிருப்பது
  • குடிநீர் தட்டுப்பாடு
  • வன வளம் குறைந்து கொண்டிருப்பது
  • போன்ற முக்கிய பிரச்சனைகளைப் பற்றி எந்த அரசியல் கட்சிகளும் இதுவரைக்கும் தமது நிலைப்பாடு என்ன என்று கூறவில்லை. 
மாறாக தமக்கு அதிகாரத்தில் இருக்கும் ஆசையை மட்டும் பல்வேறு வழிகளில் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கின்றன. மக்கள் மட்டும் இவர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும் ஆனால் இவர்களின் பிரச்சனைகளை நாங்கள் தலையிடவேண்டும் என்னும் போக்கு அரசியல் கட்சிகளிடம் அதிகரித்து வருவது நல்லதில்லை. 

Wednesday, April 15, 2015

அண்ணலின் சிலைக்கு மாலை கொள்கைக்கு பாடை

அண்ணலின் சிலைக்கு மாலை கொள்கைக்கு பாடை
                                               
      ஆண்டுதோறும் அண்ணலின் பிறந்த நாளான ஏப்ரல் 14 மற்றும் நினைவு நாளான டிசம்பர் 6 ஆகிய இரு  நாட்களில் அண்ணலின் சிலைக்கு மாலை சூடும் நிகழ்வு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களாலும், தலித் அரசியல் கட்சி தலைவர்களாலும், சமூக செயல்பாட்டாளர்கள், மற்றும் அண்ணலின் மீது ஆர்வம் கொண்டவர்களாலும் நிகழ்த்தப்படும் நிகழ்வாகவே இந்தியா முழுமைக்கும் உள்ளது. தமிழகத்தில் மிக அதிகமான அளவில்
      அண்ணலின் சிலைக்கு மாலை சூடும் நிகழ்வு என்பது அரசியல், சமூக, தளத்தில் தனக்கான இருத்தலை உலகுக்கு தெரியப்படுத்தும் ஒரு எளிய சடங்காகத்தான் இங்குள்ள ஊடகங்களும் வெளிப்படுத்துகின்றன.    மாலையிடும் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரின் மனோபாவமும் தனக்கான இருத்தலை உலகுக்கு தெரியப்படுத்தும் விதமாகவே                                                                
 உள்ளது.
      இதனை வேறு விதமாக சொல்வதென்றால் ஆண்டுக்கு இரு முறை அண்ணலை நினைத்துக் கொள்கின்றோம், மற்ற நாட்களில் அவரை வசதியாய் மறந்து விடுகின்றோம். அவர் சொல்லிச் சென்ற “ கற்பி, ஒன்று சேர், கிளர்ச்சி செய் ” இன்றைக்கு  தலி்த் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் மனதில் இருந்தும் சமூக செயல்பாட்டாளர்கள் மனதில் இருந்தும், சமூக ஆர்வலர்கள் மனதில் இருந்தும்  மறைந்து போய் விட்டது.
ஆனால் பிற சாதியினர் இந்த மூன்று கோட்பாடுகளையும் உள் வாங்கிக் கொண்டு தனக்கான இருத்தலை அம்பேத்கரை எதிர்த்துக் கொண்டு அவரின் முழக்கமான கற்பி, ஒன்றுசேர், கிளர்சி செய் என்பதை தாம் சார்ந்த சாதியிலுள்ளோரிடம் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதுதான் இன்றைய சாதிய அரசியலிலும், சமூக அரசியலிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளை நம்பியே தலித் குழந்தைகளின் கல்வி உள்ளது. ஆனால் இன்று அரசு பள்ளிகளை அரசே திட்டமிட்டு எண்ணிக்கையில் குறைத்துக் கொண்டு வருகின்றது. கல்வி மட்டுமே தலித் சமூகத்தில் மிகப்பெரும் சொத்தாக இன்றும் கருதப்பட்டு வருகின்ற சூழலில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், அவற்றின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என என்றாவது நாம் அரசுக்கு கோரிக்கை வைத்திருப்போமா? அல்லது போராடித்தான் இருப்போமா?
தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் மிகுந்துள்ள இன்றைய நிலையில் சேரியில் உள்ள குழந்தைகள் தங்களது வீட்டில் படிப்பதற்கான சூழல் மிக அருகிப் போய் உள்ளது, இதனை தவிர்க்கவும், தலித் குழந்தைகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், சேரிகள் தோறும் இலவச படிப்பு மையத்தை ஏன் இதுவரை எந்த அரசியல் கட்சியும், தலைவர்களும், சிந்தனையாளர்களும், அண்ணலின் சிலைக்கு மாலையிட்டு தான் தலித் சமூகத்தில் மிகப்பெரும் ஓர் ஆளுமை என காட்டிக் கொள்ள முயற்சிக்கும் எவரும் செயல்படுத்தவில்லை,
ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் எண்ணிக்கை மிக குறைந்த அளவிலேயே உள்ளது பள்ளி கல்வித் துறையிலும், உயர் கல்வித் துறையிலும் அதை அதிகப்படுத்த இதுவரையிலும் யாரும் குரல் கொடுக்கவில்லை. பட்டியல் இனத்தை சேர்ந்த மாணவி, மாணவர்களுக்கென்று, தனி பள்ளிகள், விடுதிகள் இருப்பது போல பண்ணிரெண்டாம் வகுப்புக்கு மேல் பட்டியல் இன மாணவ மாணவிகள் பயில்வதற்கென்று தனி கல்லுாரிகளோ, பல்கலை கழகங்களோ இல்லை, இதனால் பண்ணிரெண்டாம் வகுப்புக்கு மேல் பயில்வதில் பட்டியல் இனத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பெரும் உளவியல் சிக்களும் சமூக நெருக்கடிகளும் நேர்கின்றது,
இதனை களைவதற்காக, பட்டியல் இன சாதி மக்கள் படிப்பதற்கென தனி கல்லுாரி மற்றும் பல்கலை கழகம் காலத்தின் கட்டாயமாகின்றது, இதை எந்த பட்டியல் இன சாதி தலைவரும், கட்சியும் இதுவரை கோரிக்கையாக்காமல் இருப்பது ஏன், கற்பதற்க்கும், கற்பிப்பதற்க்கும் யாரும் இல்லாமல், இடமும் இல்லாமல் பட்டியல் இன மாணவர்களின் எண்ணிக்கை கல்வி தரத்தில் எப்படி உயர இயலும்.
“ அடிமையிடம் போய் நீ அடிமை என்று சொல் மற்றவற்றை அவன் பார்த்துக் கொள்வான் ” என்னும் அண்ணலின் பொன்மொழிக்கு ஏற்ப இன்றைய சூழலில் உலகமயம், தாரளமயம், மற்றும் தனியார் மய கொள்கைகளால் முதலில் பாதிக்கப்படுவது ஏழை எளிய சேரி மக்களாக இருக்கின்றனர், இந்த பாதிப்பில் இருந்து மீண்டுவரவும், தங்களை பொருளாதாரத்தில் உயர்த்திக் கொள்ளவும், தலித் மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கென நிறுவனங்கள் உருவாகாமல் இருப்பதால் தலித்துகள் பொருளாதாரத்தில் இன்னும் முன்னேற இயலவில்லை.
அண்ணலின் சிலைக்கு மாலையிட்டு தங்களை தாழ்த்தப்பட்ட மக்களின் ஏகோபித்த பிரதிநிதியாக காட்டிக்கொள்ள முனையும் தலைவர்கள் ஏன் தலித்துகளின் மேம்பாட்டுக்கென நிறுவனங்களை உருவாக்கி பொருளாதார உயர்வுக்கு வழிகாட்டவில்லை. சேரிகள் தோறும் அம்பேத்கர் சிலைகளை வைத்திருக்கும் தலித் மக்கள் இதுவரையிலும் தங்களை ஓர் அணியில் ஒன்றுபட்டு, ஒரு பெரும் அரசியல் சக்தியாக நிற்க்க இயலவில்லை தமிழ்நாட்டில் இதுவரையிலும். 
சேரிகள் தோறும் அரசியல் கட்சிகளாய் பிரிந்திருக்கும் தலித் மக்கள், இதுவரையிலும் தங்களின் வாக்கு வலிமையை உணர்ந்து ஓரணியில் திரண்டு நிற்க்க செய்ய இயலவில்லை எந்த தலித் தலைமையினாலும். ஒடுக்கு முறைகளுக்கு எதிராக திரண்டு ஒன்றுபட்டு நிற்க தெரியவில்லை.
எங்கு எந்த வண்கொடுமை நேர்ந்தாலும், நாளை அது நமக்கும் நேரிடும் என்ற விழிப்புணர்வு கூட இல்லாமல் இருக்கின்றனர். பின் பாதிக்கப்பட்டதும் புலம்புகின்றனர். தலித் மக்களிடையே தலித் அரசியல் கட்சி தலைவர்கள் நிகழ்த்துவது ஒப்பாரி அரசியலாக இருக்கின்றது. உரிமை அரசியலாக இல்லை. விழிப்புணர்வு அரசியலாக இல்லை.
சேரிகளில் படுகொலைகள் நிகழ்ந்த பின்புதான் அது அரசியல் ஆக்கப்படுகின்றது. படுகொலைகள் நிகழும் முன் தடுப்பதற்கான செயல்திட்டம் இல்லாமல் நாளொன்றுக்கு இரண்டு தலித்துகளை படுகொலைகளால் இழந்து கொண்டிருக்கின்றோம் என்ற புரிதல்கூட இல்லாமல் சிலைக்கு மாலையிட்டு தங்களை பெரும் தலைவர்களாக காட்டிக்கொள்ளும் புகழ் போதை தலைமையை என்ன சொல்வது.
இறுதியாக, இந்துவாக பிறந்தேன், இந்துவாக சாகமாட்டேன். என் சமூகத்தை இழிநிலையில் விட்டு செல்லமாட்டேன் என சூளுரைத்து, இந்து மதம் என்பது பிறப்பின் அடிப்படையில் மக்களை பிரித்து வைத்து இழிவுபடுத்துகின்ற மதம், எனவே அதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை, சகோதரத்துவம் கிடைக்காது என்பதனால், பிறப்பின் அடிப்படையில் உயிரினங்களை பிரித்து பார்க்காமல், அனைத்து உயிர்களிடமும் அன்பை போதித்து. சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போதிக்கின்ற பௌத்த மார்கத்தை தேர்ந்தெடுத்து பௌத்தம் தழுவினார். எனது வாழ்வின் இறுதிவரைக்கும் நான் இந்த பணியை தொடர்ந்து செய்வேன் என்றும் சபதம் செய்தார்.
இந்து சமுய கோயில்களை மையமாக வைத்து கட்டமைக்கப்படும் பொருளாதாரத்தினால் நிலவுடைமை சாதிகள், மற்றும், பார்பணியர்கள் மட்டுமே பயன்பெறுகின்றனர். இந்து கோயில்களுக்கு செல்வதனால் தலித்துகளுக்கு எந்த பயனும் இல்லை, மாறாக அவர்கள் பாடுபட்டு சேர்த்த செல்வம் யாவும் கோயிலை மையப்படுத்திய சமய சடங்குகள் என்ற பெயரில் செலவழித்து விட்டு ஏழைகளாகவே தங்களது வாழ்வை தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்.
உதாரணமாக ஆண்டுக்கு 100 கோடிக்கும் மேல் ஐயப்பன் வழிபாட்டில் தமிழ்நாட்டில் இருந்து கேரளத்துக்கு வரும் இலாபமாக கணிக்கப்பட்டிருக்கின்றது. இவற்றில் சேரிகளில் இருந்துதான் ஐயப்பன் கோயிலுக்கு செல்லுவோர் அதிகமாக இருக்கின்றனர் இவர்களுக்கு, இவர்களுடைய இந்த பக்தியை புத்தரின் பேரில் திசை திருப்பவில்லை, அவ்வாறாக திசை திருப்பியிருந்தால் இருக்கும் இடத்திலிருந்தே தியானம், பௌத்த வழிபாடு மூலமாக மன அமைதிபெற்றிருப்பார். சேரி மக்களின் பொருளாதாரம் அவர்களின் வாழ்வியல் செயல்பாட்டிற்க்கு உதவியாக இருந்திருக்கும். இதைத்தான் அண்ணலும் “கடவுலுக்கு செலுத்தும் காணிக்கையை உங்கள் பிள்ளைகளின் கல்விக்கு செலவிடுங்கள்” என்றும் முன் மொழிந்திருக்கின்றார்.
அவரின் மறைவுக்கு பிறகு நாம் யாரும் அந்த வேலையை செய்யவில்லை, சுயமரியாதை இல்லாத இந்து மத சகதியில் உழன்றுகொண்டு பெருமை பேசிக்கொண்டிருப்பது என்பது பௌத்த மார்க்கம் தீர்வு என்று சொன்ன அண்ணலை நாம் இழிவுபடுத்துவதற்கு சமம் என்பதை இங்கு யாரும் உணரவில்லை, தலித் மக்களுக்கும் உணர்த்தவில்லை. ஆனால் அண்ணல் உருவாக்கித்தந்த சட்டங்களின் மூலமும், இட ஒதுக்கீட்டின் மூலமும் பயனை அனுபவிக்கவும், மட்டும் நமக்கு அண்ணல் தேவைப்படுகின்றார் இதுதான் இன்றைக்கு யதரார்தமான உண்மை.
 அண்ணலின் சிலைக்கு மாலையிட்டு தங்களை தலித் மக்களின் ஆகசிறந்த ஆளுமைகள் என காட்டிக் கொள்ளும் எவரும் முதலில், பௌத்தம் தழுவட்டும், அதற்கு பின் தன் சார்ந்தவர்களை பௌத்தம் ஏற்க வைக்கட்டும், இந்து மத கோட்பாட்டின் படி பிறப்பின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற இழிவான நிலையில் இருந்து, பௌத்தம் தழுவுவது மட்டுமே நம்மை சம நிலைக்கு உயர்த்தும் என்பதாலே அண்ணல் பௌத்தம் ஏற்றார்.
இந்து மதத்தில் இருந்து கொண்டு ஒரு தலித் ஒரு மனிதனை நோக்கும் போது, அவர் நமக்கு மேல் உள்ள சாதியா அல்லது கீழ் உள்ள சாதியா என்ற  கேள்வியும் பாகுபாடான எண்ணமும் மட்டுமே நிலைத்து நிற்க்கும். ஆனால் பௌத்த மார்கத்தின்படி மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் சமமானவர்கள் என்ற எண்ணம் உருவாகும். அண்ணல் போதித்த அல்லது தழுவிய பௌத்த மார்கமே சமத்துவமானவர்கள் என்ற நிலைக்கு நம்மை உயர்த்தும், அதை ஏன் இங்கு செய்வதற்க்கு யாரும் இல்லை.
உலகின் மிகசிறந்த சிந்தனையாளர், அறிவாளி, படிப்பாளர் என்றெல்லாம் அயல்நாடுகளில் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கரை, அவரின் கொள்கைகளை மதித்துவிட்டு பிறர் போற்றவும், பராட்டவும் வேண்டும் என்பதற்கா அண்ணலின் சிலைக்கு மாலையிட்டு தங்களை அடையாளப்படுத்துவது சுய போதையும் புகழ்போதையும் தலைக்கேறிய செயல்தானே.
ஆண்டுக்கு இருமுறை அண்ணலின் சிலைக்கு மாலையிடுவோர், ஏன் இதுவரை சேரிகள் தோறும்  ஆண்டுக்கு இருமுறை தான் சார்ந்தவர்களையும் தன் மக்களையும் இந்து மதத்தில் இருந்து வெளியேற்றி, பௌத்தம் தழுவச் செய்ய இயலவில்லை. அவ்வாறு செய்திருந்தால் இந்நேரம் இந்து மதம் என்கின்ற ஒரு மதமே இருந்திருக்காது. நம்மை பின்பற்றி சாதியக் கொடுமையையும் தீண்டாமை கொடுமையை அனுபவித்து வரும் அனைவரும் பௌத்தம் தழுவி சமத்துவத்தை நிலைநாட்டி இருப்பார்கள். பௌத்தம் தழுவுவதை ஒரு செயல்திட்டமாக ஏன் எந்த தலித் கட்சியும் இயக்கமும் முன்னெடுக்கவில்லை என்பதே எனது கேள்வி, அம்பேத்கரின் சிலைக்கு மாலைசூடுவது இல்லை. அவரின் பௌத்தம் ஏற்க்கும்  செயலை தொடர்ந்து செய்யாத அல்லது ஆதரிக்காத  எவருக்கும் அண்ணலின் சிலைக்கு மாலைசூடும் தகுதியில்லை.

      இறுதியாக அண்ணலை அவமானப்படுத்த வெளியில் யாரும் இல்லை இந்தியாவிலும் தமிழகத்திலும் இன்னும் இந்து மதத்தில் இருக்கும்.  தலித்துகளைத் தவிர என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது. 

Sunday, November 23, 2014

சேரி ரெண்டு பட்டால்…




ர் ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்றொரு பழமொழி உண்டு. ஊரில் தன் பெருமையை காட்டிக் கொள்வதற்காக, இரண்டு குழுக்களும், அல்லது கோஷ்டிகளும் இரண்டு முறை ஊர் திருவிழாவினை நடத்துவார்கள். இரண்டு முறை கூழ் ஊற்றுவார்கள். இரண்டு முறை தெருகூத்து அல்லது நாடகம் நடத்துவார்கள். இதனால் இதையே வாழ்க்கையாக கொண்டிருக்கின்ற தெருக்கூத்து அல்லது நாடகக் கலைஞர்களுக்கு இருமுறை வாய்ப்பு கிடைக்கும்.


     அதைப்போலவே இன்று அரசியல் களத்திலும் தமிழகம் எங்கிலும் உள்ள சேரிகள் இரண்டு மூன்று என பல துண்டுகளாக துண்டு பட்டு கிடக்கின்றது. வரலாற்றில் தமிழகத்தில் உள்ள அணைத்து சமுக இயக்கத்திலும், மற்றும் அரசியல் கட்சிகளின் வரலாற்றை எடுத்துக் கொண்டாலும், அனைத்திலும் தலித்துகளின் பங்களிப்பு மிகுதியாகவே இருந்திருக்கின்றது.
     1915 – ல்  துவங்கப்பட்ட பார்பனர் அல்லாதோர் இயக்கம் துவங்கி அதற்க்குப்பின் 1917 ல் துவங்கப்பட்ட நீதிக்கட்சி,  வெள்ளையர்களால் துவங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி என்று சொல்லப்படுகின்ற பேராயக்கட்சி, மற்றும் பொதுவுடமை கட்சி, திராவிட கட்சிகள் என அனைத்து கட்சிகளிலும், அரசியல் அதிகாரத்தில் தங்களுக்கும் பங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்களை இணைத்து பணிசெய்து கொண்டிருந்தனர், இருக்கின்றனர்.
    

ஆரம்ப காலத்தில் நீதி கட்சியில் படித்த தலித்துகள் தங்களை பெருமளவில் இணைத்துக் கொண்டு பங்காற்றியிருக்கின்றனர்... அதற்கு பின் வந்த திராவிட இயக்கத்திலும், தலித்துகள் தங்களை பெருமளவில் இணைத்துக் கொண்டு களப்பணியாற்றினார்கள்...

    பேராய கட்சிக்கு ஒரு காலத்தில் தமிழகத்தில்  தீண்டத்தகாதவர்களின் கட்சி என்றே பெயர் இருந்திருக்கின்றது...  காந்தி, நேரு, பட்டேல், போன்ற பார்பன, பணியா தலைவர்கள்... சொல்லுக்கு செத்து மடிந்தது தலித்துகளாகவே இருந்திருக்கின்றனர்.... அவர்களுக்குப் பிறகு பொதுவுடைமை கட்சி வந்த போது, அதிலும் உயிர் நீத்தவர்களும் களப்பணி செய்து கடைசி வரை தொண்டனாக இருந்தவர்களும் தலித்துகள் தான், தலைவர்களாக பார்பணர்களும், பணியாக்களும் தங்களை நிலை நிறுத்திக் கொண்டு நிறுவனமயமாக்கினர் அந்த கட்சிகளை.

    திராவிட முன்னேற்ற கழகத்தின், சின்னமே  ( மறைந்த தலித் தலைவர் திரு. கோவிந்தசாமி அவர்களின் உதயசூரியன் பத்திரிகையின் முகப்பு ) தலித்துகளின் சின்னம்தான்... அந்த கட்சியிலும் ஆரம்ப காலங்களில் பெருமளவு தன்னை இணைத்துக் கொண்டு களப்பணியாற்றியவர்களும் பலியானவர்களும் தலித்துகள்தான்... அதில் தலைவர்களாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டவர்கள்  பிற்படுத்தப்பட்ட சாதியினர்...
அடுத்து வந்த அணைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் பெருவாரியாக இணைந்ததும், இருப்பதும் தலித்துகள்தான்... ஆனால் அந்த கட்சிக்கு இப்போழுது  தேவர்களின் கட்சி என்ற  பெயரும் வந்து விட்டது...

      மதிமுக வில் முதல் பலியானதும் தலித்துதான்... ஆனால் அந்த கட்சியின் தலைவர் நாயுடு... அவர் தமிழர்களின் நலன் குறித்து பேசுவார், ஆனால் தலித்துகளின் நலன் குறித்து எதுவும் பேசமாட்டார்....தேமுதிகாவில் கூட முதல் பலி தலித்துதான்... அவருடைய கட்சியில் உள்ள இளைஞர்கள் பெரும்பாலும் தலித்துகள்தான்... ஆனால் அவருக்கு தலித்துகளின் பிரச்சனையே தெரியாது...


இங்கு சொல்ல வந்த செய்தி தலித்துகள் அந்த கட்சியில் இருப்பதல்ல, தலித்துகளைப் போலவே மற்ற சாதியினரும் அந்த அந்த கட்சிகளில் பெருமளவில் தங்களை இணைத்துக் கொண்டு ஆரம்ப காலங்களில் செயல்பட்டவர்கள்தான், காலப்போக்கில் அவர்களிடம் இரண்டு விதமான மாற்றங்கள் நிகழ்ந்தது... அவர்களில் பெரும்பாலோனோர் ஏதேனும் ஒரு பதவியை பெற்றுக்கொண்டு தலைமைக்கு நெருக்கமானார்கள்... மாவட்ட செயலாளர்கள் ஆனார்கள்... மந்திரி ஆனார்கள்.. இது எதுவும் நடக்க வில்லை அல்லது அந்த கட்சியில் தங்களின் சாதிக்கு முக்கியத்துவம் இல்லை என்றால் மற்ற கட்சிகளுக்கு தாவினார்கள்....

ஆனால் தலித்துகள் மட்டுமே தாங்கள் கட்சி மற்றும் தலைவர் மீது கொண்ட விசுவாசத்திற்காக, அந்த கட்சி தொடர்ந்து  தங்களுக்கு அநீதி இழைத்தாலும், பலியிட்டாலும் தொடர்ந்து  அதே கட்சியில் தொடர்வது  ஏன்...
இவர்களுக்கு ஏன் தலித் கட்சிகள் மீது நம்பிக்கை வருவதில்லை, இன்று மற்ற கட்சிகளில் இருக்கும் தலித்துகள்  தலித்கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டாலே 45 சட்ட மன்ற உறுப்பினர்களும் நமக்கானவர்களாக இருப்பார்களே... தலித் கட்சிகளுக்கு திரும்ப மறந்த தலித்துகளால் அவர்களுக்கும் அவர்களது சமுகத்துக்கும் என்ன பயன்...?
இந்த கேள்வியை தலித் சமூகத்தை பார்த்து தலித் கட்சிகளும், கட்சி தலைமையும் முன்வைக்கும் அதே நேரத்தில், ஒரு சாதாரண தலித்தாக இருந்து 3 கேள்விகளை தலித் அரசியல் கட்சிகள் மற்றும் தலித் தலைமையிடம் வைக்க வேண்டிய தேவையுள்ளது.
இன்றைக்கு தேர்தலில் பெரும்பான்மை கவனத்தை ஈர்த்த தலித் அரசியல் கட்சிகளாக இருப்பவை
1.   விடுதலைச் சிறுத்தைகள்
2.   குடியரசு கட்சி ( செ.கு. தமிழரசன்)
3.   புரட்சி பாரதம்
4.   சமூக சமத்துவப்படை
5.   பகுஜன் சமாஜ் பார்ட்டி ( தேசிய அங்கிகாரம் பெற்ற ஒரே தலித் கட்சி )
6.   புதிய தமிழகம்
7.   தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்
8.   தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு ஆகிய பெரிய கட்சிகளுடன் உதிரிக்கு ஒன்றிரண்டு அரசியல் கட்சிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பட்டியலில் சில கட்சிகள் விடுபட்டும் போயிருக்கலாம், தலித் அரசியல் கட்சிகளை பட்டியலிடுவதல்ல இந்த கட்டுரையின் நோக்கம், தலித்துகளின் கனவான அரசியல்அதிகாரத்தை நோக்கி தலித் அரசியல் கட்சிகள் ஏன் நகர்வதில்லை, என்பதுவும், இத்தனை கட்சிகள் இருந்தும், ஏன் ஒரு தலித் கட்சியும் மாநில அளவில் தேர்தல் ஆணையத்தின் அங்கிகாரத்தை பெற இயலவில்லையே ஏன் என்பதுதான்.
   2011 – தேசிய மக்கள் தொகையின் கணக்கெடுப்பின்படி இந்திய அளவில் தலித் மக்களின் சராசரி 16 சதமானத்திலிருந்து 19 சதமானம் வரை இருப்பதாகவும், தமிழகத்தில் மட்டுமே தேசிய சராசரி சதமானத்தை விட அதிகமான அளவில் தலித் மக்களின் எண்ணிக்கை இருப்பதாகவும் சொல்கின்றது. அவ்வாறு எனில் மற்ற பிற சாதி மக்களின் வாக்குகளை விட தலித்துகளின் வாக்கு அதிகமாக இருக்கின்றது என்றுதானே பொருள். இந்த பின்புலத்தில் ஏன் தலித் கட்சிகள் சிந்திப்பதில்லை,
பொதுவாக தேர்தலில் வெற்றி தோல்விகள் எதனடிப்படையில் நிகழ்கின்றது என்றால்,
1.   அனுதாப அலை
2.   ஆதரவு அலை
3.   எதிர்ப்பு அலை
4.   கூட்டணி பலம் ஆகிய காரணங்கள் சொல்லப்பட்டாலும்,
சொல்லப்படாத மற்றொரு முக்கியமான காரணம் தலித்துகளின் வாக்குகளை பிரிப்பது,
ஏன் என்றால் மக்கள் தொகையில் தனித்து அதிக எண்ணிக்கையில் தலித்துகள் உள்ளனர் என்றால் அவர்களின் வாக்கு எண்ணிக்கையும் தனித்து அதிக எண்ணிக்கையில்தான் இருக்கும், அத்தகைய தனித்து அதிக எண்ணிக்கையில் இருக்கும் தலித்துகளின் வாக்குகளை பிரிப்பதற்காகவே மாநில அளவில் உள்ள கட்சிகளும், தேசிய கட்சிகளும் ஏதேனும் ஒரு தலித் கட்சியினை தங்களின் கூட்டணியில் எப்போதும் வைத்திருக்கும், அதனால் அந்த கட்சிக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, தலித்துகளின் பெரும்பான்மை வாக்கு வங்கியை தன் பங்குக்கு கூறுபோடும் ஆதாயமும், தேர்தல் காலத்தில் கட்சி பணி செய்யவும், கூட்டமாய் கூட வரவும், கொடி நாட்டவும் தலித்துகளை எடுபிடி ஏவலாளாக பயன்படுத்திக் கொள்ளும்
     அடிப்படையில் தமிழக அரசியலை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் 3 விதமாக புரிந்து கொள்ளலாம், தேசிய கட்சிகளின் அரசியல், திராவிட கட்சிகளில் அரசியல், மண்ணின் மைந்தர்களின் அல்லது தலித்துகளின்  அரசியல்,
தேசிய கட்சிகளின் அரசியல் என்பது வல்லான்மை அரசியல், இன்னும் எளிமையாய் சொல்வதென்றால், ஏகாதிபத்திய அரசியல், பெரு முதலாளிகளின் அரசியல், மாநில நலனோ, மக்களின் நலனோ அதில் முதன்மையாக இருப்பதில்லை, அவைகள் எப்பொழுதும் தேசத்தின் நலன் என்றே முழங்குவார்கள், தேசமென்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமா அதில் வாழும் மக்கள் இல்லையா, (வனங்கள், மற்றும கடல், மலை கிடையாதா? என்றால் இல்லை என்பார்கள் இவையெல்லா வற்றையும் பணமாக்கும் நோக்கோடு செயல்படுவார்கள்,)  இது அவர்களுக்கு புரியாது, புரிய வைக்கவும் இயலாது.
திராவிட கட்சிகளின் அரசியல் என்பது வந்தேரிகளின் அரசியல் அல்லது வடுகர்களின் அரசியல், இன்னும் எளிமையாக சொல்வதென்றால் நிலவுடைமையாளர்கள் சிறு மற்றும் குறு முதலாளிகளின் அரசியல், மணல் அரசியல், மபியா அரசியல்  
தலித் கட்சி என்பது நிலமற்ற வாழ்வாதாரம் ஏதுமற்ற உடலுழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்ட ஏழை எளிய மக்களின் அரசியல், இன்னும் தமிழகத்தில் 80 சதமான அளவிலான தலித்துகள் கிராமங்களில்தான் வாழ்ந்து வருகின்றனர்.
தேசிய கட்சிகளின் அடையாளமாக அல்லது வாக்கு வங்கிகளாக   பெருநகரங்களும், மாநகராட்சிகளும் உள்ளன, திராவிட கட்சிகளின் அடையாளமாக நகர்புறமும், சிறுநகரங்களும் உள்ளன, தலித் கட்சிகளின் அடையாளமாக கிராமப்புறங்கள் குறிப்பாக சேரிகள் மட்டுமே உள்ளன. இன்னும் எளிமையாக இதனை சொல்ல வேண்டும் என்றால், தேசிய கட்சிகளில்  பணக்காரர்களும், திராவிட கட்சிகளில் நடுத்தர மக்களும் தலித் கட்சிகளில் ஏழை, மிகவும் ஏழை மக்கள் மட்டுமே இருக்க இயலும்,
ஆனால் இன்றைய நிலையில் தலித் மக்கள் திராவிட கட்சிகளை தங்களின் முன்னோடியாக கொண்டு அவர்களைப் போலவே அரசியல் நடத்துகின்றனர், நிலவுடைமையாளர்களின் அரசியலை நிலவுடைமையாளர்கள்தான் நிகழ்த்த இயலும், நிலமற்றவர்களின் அரசியலை நிலமற்றவர்கள்தான் நிகழ்த்த இயலும்,
ஆனால் தலித்து அரசியல் கட்சிகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில்  நிலவுடைமையாளர்களின் அரசியலை நிலமற்றவர்களிடம் நிகழ்த்துகின்றனர், இந்த போக்கு தங்களின் வாக்கு வங்கியிடம் இருந்து தங்களை அன்னியப்படுத்தும் போக்கு என்பது அவர்களுக்கு புரிவதில்லை, காரணம் பெருமுதலாளியிடம் எடுபிடி வேலைசெய்யும் ஏவலனும் தன்னை பெருமுதலாளியாகவே கருதிக்கொள்வான் ஏழை எளியவரை சந்திக்கும் போது என்பார்களே அதைப்போலத்தான், இந்த போக்கும்.
மாநில அளவில் ஒரு அரசியல் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கிகாரம் வேண்டும் எனில், அந்த கட்சி சட்டமன்றத்தில் தனது வேட்பாளராக 15 நபரை கொண்டிருக்க வேண்டும் பாராளுமன்றத்தில் 2 நபரை கொண்டிருக்க வேண்டும்,அல்லது  வாக்கு சதமானத்தில் மாநில அளவில் 6 சதமானமும், தேசிய அளவில் 2 சதமானமும் கொண்டிருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி.
நாடு சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் நிறைவுற்றும் தமிழகத்தில் ஒரு தலித் கட்சியும் தேர்தல் ஆணையத்தின் மாநில அங்கிகாரத்தை ஏன் பெற இயலவில்லை என்றால் தனக்கான நண்பன் யார் எதிரியார் என்ற அரசியல் புரிதல் தலித் அரசியல் கட்சிகளுக்கு இல்லை எனவே அவர்களால் அரசியல் தளத்தில் சாதிக்க இயலவில்லை என்றே எண்ண வேண்டியுள்ளது.
உதாரணமாக அரசு மற்றும் அரசியல்வாதிகளின் மனோபாவமும். கிராமங்களில் உள்ள ஆண்டைகளின் மனோபாவமும் ஒன்றாகவே இருக்கும், அது தலித்துகள் தாங்கள் கொடுப்பதை பெற்றுக் கொள்ள வேண்டும், தங்களுக்கான உரிமை என்றோ, சம பங்கு என்றோ எப்போதும் பேசக்கூடாது என்ற போக்கு அது, ஏன் எனில் ஆண்டைகளில் இருந்துதான் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் வருகின்றனர், இவர்களுடன் கூட்டணி வைக்கும் தலித் அரசியல் கட்சிகளிடமும் அவர்கள் இதே போக்கில்தான் இருப்பார்கள், இத்தனை தொகுதி, இந்த இடம், விருப்பமாக இருந்தால் பெற்றுக்கொள்ளுங்கள் என்று, கூட்டணி பேசும் போதே நிபந்தனையுடனும் அதிகாரத்துடனும் பேசுகின்ற நிலை என்றால்,
தேர்தல் களத்தில் தலித்துகளுக்கு  கூட்டணி கட்சி  எதுவும் தேர்தல் பணியாற்றாது, தலித்துகள் மட்டுமே தேர்தல் பணி செய்ய வேண்டும், அதே தலித் மற்ற தொகுதியிலும் கூட்டணி கட்சிக்காக தேர்தல் பணி செய்ய வேண்டும், தலித்துகளை வெற்றி பெற வைக்ககூடாது என்ற உள்ளடி அரசியலில் எதிர்கட்சிக்கு ஆதரவளித்து வெற்றி பெற வைப்பதும் நடக்கும் வெற்றி பெறுவதற்க்கே இவ்வளவு போராட்டம் என்றால் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்பது எல்லாம் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகத்தான் அமையும் வேறு ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை,
இவ்வாறு ஆண்டைகளிடம் அடிமைப் பட்டு தலித் கட்சிகள் கூட்டணி வைப்பதை விட மாற்று சேரி மக்களிடம் கூட்டணி வையுங்கள் தலித் அரசியல் கட்சி தலைவர்களே, உங்களுக்கு அதிகாரம் கிடைக்கும்,
எவ்வாறு எனில் தற்போதுள்ள சட்டமன்ற தனி தொகுதிகள் 46 அவை,
1.       பொன்னேரி – திருவள்ளுர்
2.       பூந்தமல்லி – திருவள்ளுர்
3.       திரு.வி.கா நகர். - சென்னை
4.       எழும்பூர் – சென்னை
5.       ஸ்ரீ பெரும்புத்துார் – காஞ்சிபுரம்
6.       மதுராந்தகம் – காஞ்சிபுரம்
7.       செய்யூர் – காஞ்சிபுரம்
8.       அரக்கோணம் – வேலுார்
9.       கே.வி.குப்பம் – வேலுார்
10.   குடியாத்தம் – வேலுார்
11.   ஊத்தங்கரை – கிருஷ்ணகிரி
12.   அருர் – தர்மபுரி
13.   செங்கம் – திருவண்ணாமலை
14.   வந்தவாசி – திருவண்ணாமலை
15.   திண்டிவனம் – விழுப்புரம்
16.   வானுார் – விழுப்புரம்
17.   கள்ளக்குறிச்சி – விழுப்புரம்
18.   கெங்கவள்ளி – சேலம்
19.   ஆத்துார் – சேலம்
20.   ஏற்காடு – சேலம் ( பழங்குடி)
21.   ராசிபுரம் – நாமக்கல்
22.   சேந்தமங்களம் – நாமக்கல்
23.   பவாணிசாகர் – ஈரோடு
24.   தாராபுரம் - ஈரோடு
25.   அவினாசி – திருப்பூர்
26.   கூடலுார் – நீலகிரி
27.   வால்பாறை – கோயம்புத்துார்
28.   நிலக்கோட்டை – திண்டுக்கல்
29.   கிருஷ்ணராயபுரம் – கருர்
30.   துறையூர் – திருச்சி
31.   பெரம்பலுார் – பெரம்பலுார்
32.   திட்டக்குடி – கடலுார்
33.   காட்டுமன்னார் கோயில் – கடலுார்
34.   சீர்காழி – நாகப்பட்டினம்
35.   கீழ்வேலுார் – நாகப்பட்டினம்
36.   திருத்துறைப்பூண்டி – திருவாருர்
37.   திருவிடைமருதுார் – தஞ்சாவூர்
38.   கந்தர்வ கோட்டை – புதுக்கோட்டை
39.   மானாமதுரை – சிவகங்கை
40.   சோழவந்தான் – மதுரை
41.   பெரியகுளம் – தேனி
42.   ஸ்ரீ வில்லிபுத்துார் – விருதுநகர்
43.   பரமகுடி – ராமனாதபுரம்
44.   ஒட்டபிடாரம் – துாத்துக்குடி
45.   சங்கரன்கோவில் – திருநெல்வேலி
46.   வாசுதேவநல்லுார் – திருநெல்வேலி
இந்த 45 தனித்தொகுதிகளில் தங்களுக்கென 15 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மாநில அங்கிகாரம் கிடைத்துவிடும்தானே, இந்த தொகுதிகளில் ஏதோ ஒன்றோ இரண்டோ அல்லது அதிகபட்சமாக ஒன்பதோ பத்தோ தானே திராவிட கட்சிகளிடம் கூட்டணி வைத்தால் கிடைக்கும், மாறாக பொது தொகுதியையா தலித் கட்சிகளுக்கு ஒதுக்கி வெற்றி பெற வைக்கப் போகின்றார்கள் திராவிட கட்சிகள்.
மேலே பட்டியல் இட்டுள்ள தலித் கட்சிகள்தானே தங்களுக்குள் ஒன்றையொன்று போட்டியாக கருதி இதே 45 தனித்தொகுதிகளிலும் தலித் மக்களிடம் தங்களுக்காக வாக்கு சேகரிப்பார்கள், அல்லது நிலவுமையாளர்களின் கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தலித்துக்கு வாக்கு சேகரிப்பார்கள் மாறாக தலித் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி பேசி 45 தொகுதிகளையும் பகிர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் போட்டியிடாமல் புரிந்துணர்வோடும் ஆதரவோடும் போட்டியிட்டால் அந்த தொகுதியில் உள்ள மொத்த தலித்துகளின் வாக்கும் சிதறாமல் பிற தலித் கட்சிகளின் ஆதரவோடு போட்டியிடுகின்ற வேட்பாளருக்குத்தானே கிடைக்கும். இதைஏன் செய்வதில்லை தமிழகத்தில் உள்ள தலித் கட்சிகள், சொந்த சகோதரனோடு ஒத்துப்போவதை விட ஆண்டைகளின் அரசியல் கட்சி தலைவர்களிடம் விசுவாசம் காட்டுவது எளிதாக இருக்கின்றதா என்ன? பேசி தீர்க்க இயலாத பிரச்சனை ஏதேனும் உள்ளதா  சகோதர கட்சிகளிடம் தலித் தலைமைகளுக்கு.?
பிற சாதியினரின் வாக்குகள் இருந்தால்தான் வெற்றி பெற இயலும் என்போருக்கு, தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும், நிறுத்தும் தலித் வேட்பாளருக்கு பிற சாதியினரின் வாக்கு வங்கி பிரிந்து பிரிந்து  வாக்குகளாக மாறுகின்றது, ஆனால் தலித் கட்சிகளின் கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு, தலித்  வாக்குகள் பிரியாமல் விழுவதால் பெரும்பாண்மை கிடைக்கும், அல்லது குறைந்தது 6  சதமானத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்பது எளியவர்களுக்கும் புரியும் உண்மையில்லையா? இது ஏன் தலித் அரசியல் கட்சிகளுக்கு புரியவில்லை.
தொகுதி சீரமைப்பு என்னும் பெயரில் தலித்துகளின் வாக்கு வங்கியை சிதைக்கும் விதமாக அரசு முடிவெடுத்து செயல்பட்டாலும், 500 வாக்குகள் ஒரு கிராமத்தில் உள்ளது என்றால் அவறறில் 100 வாக்குகள் சேரி மக்களின் வாக்குகளாகத்தான் இன்னமும் இருக்கின்றது. 400 வாக்குகளை மாநில கட்சிகள், தேசிய கட்சிகள், பிற சாதியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர்கள் பிரிக்கும் போது சேரி மக்களின் 100 வாக்குகளை பிரிக்காமல் பெறும்  தலித் கட்சிகளே வெற்றி பெற பெரு வாய்ப்பு உள்ளது என்பது ஏன் புரிவதில்லை?
மூன்றாவதாக இதுவரை தனித்தொகுதிகளில் நிறுத்தப்படும் நிலவுடைமையாளர்களின் கட்சி வேட்பாளர்கள் யாராவது தலித்துகளுக்காக, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி சட்டமன்றத்திலோ, பொது வெளியிலே குரல் கொடுத்து இருக்கின்றனரா? அவர்களால் தலித்துகளுக்கு எள்முனையாவது நன்மை நிகழ்ந்து இருக்கின்றதா? இந்த நிலையில் பொது கட்சிகளில் இருந்து தனித்தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்துவதை சட்டத்தின் வழி நின்று தடைசெய்வதற்க்கு தலித் கட்சிகள் ஒன்றினைந்தோ அல்லது தனித்தோ ஏன் போராடவில்லை.? குறைந்தபட்சம் தனித்தொகுதிகளிலாவது தலித் கட்சிகள் மட்டும் போட்டியிட்டு தனக்கான பெரும்பான்மை, நிருபிக்கலாம், அல்லது திட்டங்களி்ல் முன்னுரிமை பெற இயலும் அல்லவா? இதை ஏன் செய்வதில்லை, ?
கூட்டணி கூட்டணி என்று மீண்டும் மீண்டும் நிலவுடைமையாளர்களின் அரசியல் கட்சிகளையே சார்ந்து இருப்பது ஏன்? திராவிட கட்சிகளின் அல்லது மாநில கட்சிகள் தலித் கட்சிகளின் கூட்டணி வைப்பது என்பது சேரிமக்களின் வாக்குகளை பிரிக்கும் சூழ்ச்சியில்லையா? இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த உண்மை தெரிந்தும் தெரியாதது போல இருக்கப்போகின்றனவோ தலித் அரசியல் கட்சிகள்.

இரவல் செருப்பை விட வெறுங்காலில் நடப்பது சுயமரியாதை மிகுந்தது என்று தமிழகத்தின் சேரிகளில் இருக்கும் ஏழைகளுக்கு புரிகின்றது, தலித் தலைமைகளுக்கு எப்போது புரியுமோ? இறுதியாக ஒன்று, ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பார்கள், அதைப்போலவே சேரி ரெண்டு பட்டால் நிலவுடைமை அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டமாக அமைகின்றது. இதை புரிந்து கொண்டு சேரிகளெல்லாம் ஒன்றுபட்டு நிலமற்றவர்களுக்கு கொண்டாட்டம் நிகழ்வது வரும் சட்டமன்ற தேர்தலில் தலித் அரசியல் கட்சிகளின் தலைமையின் கைகளில்தான் உள்ளது.



இதையும் படியுங்கள்